Saturday, April 12, 2014

பாஞ்சராத்திரம்: (ஐந்து ராத்திரி மந்திரம்)

பாஞ்சராத்திரம்: (ஐந்து ராத்திரி மந்திரம்)
ஆகமங்கள் என்பது ஈசுவரனால் அருளிச் செய்யப்பட்ட தந்திர சாஸ்திரங்கள் எனப்படும். அவை சைவ ஆகமங்கள், வைஷ்ணவ ஆகமங்கள் என இரு வகைப்படும்.

வைஷ்ணவ ஆகமங்கள்:
இதில் பாஞ்சராத்திரம், வைகானசம் என இரண்டு உண்டு. சேமகாசுரன் வேதங்களைச் சமுத்திரத்திற்கு நடுவில் கொண்டுபோய் மறைந்தான். அதை விஷ்ணு தன்னுடைய பூசார்ததமாக பூசாவிதயைச் சாண்டில்லிய ரிஷிக்கு ஐந்து ராத்திரியில் உபதேசித்தார். இதனால் இது 'பாஞ்சராத்திரம் எனப்படும்.
வைகானசம் என்பது துறவறம் முதலிய ஒழுக்கங்களையும், யோக ஞான சித்திகளையுங் கூறுவது.

சைவ ஆகமங்கள்;
காமியம் முதல் வாதுளம் ஈறாக 28-ம் சைவ ஆகமங்கள். இவை சதாசிவ மூர்த்தியினது ஈசான முகத்திலிருந்து தோற்றின. தத்துவ சொரூபமாகிய விக்கிரகங்கள், ஆலயங்கள், பூசைகள் என்னும் இவற்றின் உண்மைப் பொருள்கள் அந்த ஆகமங்களால் உணர்த்தப்படும்.

இந்த ஆகமங்கள் மந்திரம் எனவும், தந்திரம் எனவும், சித்தாந்தம் எனவும் பெயர் பெறும். ஒவ்வொன்றும் ஒவ்வொரு கோடியாக 28-ம் 28 கோடி கிரந்தங்களை உடையது. இதில் நான்கு பாதங்கள் உண்டு. அவை ஞானபாதம், யோகபாதம், கிரியாபாதம், சரியாபாதம் என்பன.

இவற்றில் ஞானபாதம் என்பது பதி, பசு, பாசம் என்னும் மூன்றின் ஸ்வரூபத்தையும், யோகபாதம் என்பது பிராணாயாமம் முதலிய சிவயோகத்தையும், கிரியாபாதம் என்பது மந்திரங்களின் உத்தாரணம், சந்தியாவந்தனம், பூஜை, ஜெபம், ஓமம் என்பவனவற்றையும், சரியாபாதம் பிராயசித்தம், சிராத்தம், சிவலிங்க இலக்கண முதலியவைகளையும் உபதேசிக்கும்.

ஆகமம் என்பது பரமாப்தரினின்றும் வந்தது எனப் பொருள்படும்.
இந்த ஆகமங்களுக்கு வழிநூல் நாரசிங்கம் முதல் விசுவாகன்மம் வரை உள்ள உப-ஆகமங்கள் 207 ஆகும்.

மூல ஆகமங்கள் 28-ம் வேதம் போலச் சிவனால் அருளிச் செய்யப்பட்டதால் சைவர்களுக்கு இரண்டும் முதல் நூல்களே.

No comments:

Post a Comment