Thursday, January 27, 2022

Pari delicto principle பேரி டெலிக்டோ கொள்கை

 Pari delicto principle

1961-ல் சென்னை ஐகோர்ட்டில் நடந்த வழக்கு.

ஒருவர், தனக்கு ஏற்கனவே ஒரு மனைவி உயிருடன் இருக்கும்போது, இன்னொரு பெண்ணைத் திருமணம் செய்து கொள்கிறார். அவர்களுக்குள் கருத்து வேறுபாடு ஏற்படுகிறது. இரண்டாவது மனைவி ஜீவனாம்சம் கேட்டு வழக்குப் போடுகிறார். 

அதை எதிர்பார்த்த கணவர், சிவில் கோர்ட்டில், அவருக்கும், 2-வது மனைவி என்று சொல்லப்படுவருக்கும் எந்த சட்டபூர்வ திருமணமும் நடக்கவில்லை என்று தீர்ப்புக் கேட்டு சிவில் வழக்குப் போடுகிறார்.

கீழ்கோர்ட், அவர் கேட்டபடி வழக்கை அவருக்கு சாதகமாக தீர்ப்புக் கொடுத்து விடுகிறது.

ஆனால், முதல் அப்பீல் கோர்ட்டில், அவரின் வழக்கை தள்ளுபடி ஆகி விட்டது. காரணம் - சட்ட முறைப்படி திருமணம் நடக்கவில்லை என்றாலும், இருவரும் கணவன் மனைவியாக வாழ்ந்திருக்கிறார்கள். கணவன், இந்த திருமணத்தை சட்டப்படி நடத்திக் கொள்ளவில்லை. அவரும் தவறி விட்டார். தன் தவறையே தனக்குச் சாதகமாக பயன்படுத்திக் கொள்ள முடியாது என்பதே சட்டவிதி. அதையே Pari delicto principle (பேரி டெலிக்டோ கொள்கை) என்று சட்டம் சொல்கிறது.

பேரி டெலிக்டோ (Pari delicto) என்ற வார்த்தை ஒரு லத்தீன் வார்த்தை. இதன்படி, இருவருமே தவறி இழைத்த நிலையில் இருக்கும் போது, அதில் ஒருவர் மட்டும் அந்த தவறை, தனக்குச் சாதகமாக ஆக்கிக் கொள்ள முடியாது என்பதே அதன் சாரம்.

இவர்கள் திருமணம் செய்து கொண்டதாக சொல்லும் காலத்தில், இருதார மணத் தடை சட்டம் 1949 நடைமுறையில் இருந்த காலம். அந்த சட்டத்தின்படி, முதல் மனைவி உயிருடன் இருக்கும் போது, மறு திருமணம் செய்ய முடியாது என்ற சட்டம் 1949-ல் கொண்டு வரப்பட்ட சட்டமாகும்.

பின்னர், 1955-ல் இந்து திருமணச் சட்டம் கொண்டு வரப்பட்டது. அந்த சட்டம் வந்த பின்னர் 1949 சட்டம் ரத்து ஆகி விட்டது. 1955 சட்டத்தின்படி, முதல் மனைவி உயிருடன் இருக்கும் போது, 2-வது மனைவியை திருமணம் செய்ய முடியாது. அப்படி செய்திருந்தால், அந்த திருமணம் சட்டப்படி செல்லாது என்கிறது 1955 இந்து திருமணச் சட்டம்.

இந்த தீர்ப்பை எதிர்த்து, அவர் ஐகோர்ட்டுக்கு அப்பீல் வருகிறார்.

இங்கு, பேரி டெலிக்டோ கொள்கைப்படி, ஒருவர் தனது தவறை, தனக்கு சாதகமாக ஆக்கிக் கொள்ள முடியாது என்பது உண்மைதான். ஆனாலும், அந்தக் காரணத்துக்காகவே, அவர் இந்த 2-வது திருமணம் சட்டப்படி செல்லாது என்று கேட்பதை மறுத்து விடவும் முடியாது என்றும், 1955 இந்து திருமணச் சட்டம் பிரிவு 11-ல் அவ்வாறு நடந்த திருமணம் செல்லாது எனக் கேட்கும் உரிமை உள்ளது என்றும் சென்னை ஐகோர்ட் சொல்லி உள்ளது.

எனவே கணவர், தனது 2-வது திருமணத்தை செல்லாது எனக் கேட்கும் வழக்கை அனுமதித்து தீர்ப்பு கூறி விட்டது.

Refer: The Madras High Court in DKR Chinnaswamy Sah vs Rajamba Bai, AIR 1961 Mad 325 : (1961) 1 MLJ 381.

**


Wednesday, January 26, 2022

இந்து விதவைகள் மறுமணச் சட்டம் 1856

 இந்து விதவைகள் மறுமணச் சட்டம் 1856 

(The HIndu Widows’ Remarriage Act XV of 1856).

கோவிந்த படையாச்சி என்பவர் சொத்தை விட்டு விட்டு இறந்து விடுகிறார். அவருக்கு ஒரு மனைவியும், ஒரு மகளும் உண்டு. இந்து கணவரின் சொத்தில் மனைவிக்கு ஆயுட்கால உரிமை உண்டு என்பதாலும், மகனும் இல்லை என்பதாலும், மனைவிக்கு அந்த சொத்துக் கிடைக்கிறது. ஆனால், அவள் அந்த சொத்தை வேறு ஒருவருக்கு கிரயத்துக்கு விற்று விடுகிறாள். பின்னர் சில காலம் கழித்து, வேறு ஒரு ஆடவரைத் திருமணம் செய்து கொள்கிறார். 

இப்போது, படையாச்சியின் மகள், “தந்தையின் சொத்தில், தாய்க்குப் பின்னர் தனக்கு கிடைக்க வேண்டிய சொத்துரிமை உள்ளது. ஆனால் அதை அவளின் தாய் விற்று விடுவதால், அந்த கிரயம் செல்லாது என்றும், தனக்கு உரிமை உள்ளது என்றும், தாய் வேறு திருமணம் செய்து கொண்டதால், அவளுக்கு கணவர் சொத்தி்ல் கிடைக்கும் உரிமையை இழந்து விடுகிறார் என்றும் சொல்லி, 1955-ல் சிவில் வழக்குப் போடுகிறார். 

அதை ஏற்றுக் கொண்ட முன்சீப் கோர்ட், மகளுக்கு சாதகமாகத் தீர்ப்பு வழங்குகிறது. சொத்தை கிரயம் வாங்கியவர் அந்த தீ்ர்ப்பை எதிர்த்து 1957-ல் மாவட்ட கோர்ட்டில் அப்பீல் செய்கிறார். அதுவும் கீழ்கோர்ட், தாய் கிரயம் செல்லாது என தீர்ப்பு கொடுத்தது சரியே என்றும், ஆனால், அவரின் தாய், மறு திருமணம் செய்தது Madras Act VI of 1949 படி செல்லாத திருமணம் என்றும் எனவே, மகள், அந்த சொத்தை திரும்ப கேட்க முடியாது என்றும் தீர்ப்புச் சொல்லி விட்டது.

அதை எதிர்த்து, மகள், சென்னை ஐகோர்ட்டுக்கு அப்பீல் செய்கிறார். Madras Act VI of 1949 நடைமுறைக்கு வந்த தேதி 23-3-1949. 1949 சட்டம் என்பது இருதார தடை சட்டம். அப்போது புதுக் கணவருக்கு ஏற்கனவே மனைவி உயிருடன் இருக்கிறாள். ஆனால், தாயும், அவளின் புதுக் கணவரும் மறு திருமணம் செய்து கொண்டது ஏப்ரல் 1949-ல். அதாவது 1949 சட்டம் வந்த பின்னர். ஆனாலும், சாட்சிகள் யாரும் சரியான தேதியைச் சொல்லவில்லை. இருந்தாலும், 1949 சட்டம் வந்தபின்னரே இருவரும் திருமணம் செய்து கொண்டனர் என்றே கீழ்கோர்டுகள் முடிவுக்கு வந்துவிட்டன. 

எனவே, இறந்தவரின் மனைவி மறுதிருமணம் செய்து கொண்டால், கணவரின் சொத்தில் உரிமை கொண்டாட முடியாது. அதிலும், மனைவிக்கு கணவரின் சொத்தில் ஆயுட்கால உரிமை மட்டுமே இருக்கிறது. அதை அவள் கிரயம் செய்தாலும், அந்தக் கிரயம் அவளின் ஆயுட்காலம் வரை மட்டும் செல்லுபடியாகும். மனைவிக்கு கணவரின் சொத்தில் முழு உரிமை கிடையாது. எனவே மனைவியின் ஆயுட்காலத்துக்குப் பின்னர் அந்த சொத்து கணவரின் வாரிசுகளுக்குத் திரும்ப வந்து விடும். 

ஆனால் இந்த வழக்கில், தாய், மறுதிருமணம் செய்த போது, அவளின் புதுக் கணவருக்கு ஏற்கனவே ஒரு மனைவி உயிருடன் இருக்கிறாள். எனவே 1949 சட்டப்படி, இந்த மறுதிருமணம் செல்லாது. 1856 சட்டமான விதவைகள் மறு திருமணச் சட்டம் என்பது சட்டபூர்வமாக நடந்த விதவைகள் திருமணம் மட்டுமே. இங்கு அவ்வாறு நடக்கவில்லை. 

எனவே, மகள் அவளின் சொத்துரிமையை கேட்க முடியாது என்று சென்னை ஐகோரட் தீர்ப்பு சொல்லி விட்டது.

Refer: Madanavalli alias Sowbagyammal vs. Thangavelu Padayachi and others, AIR 1961 Mad 298 : (1961) 1 MLJ 140. 

**


Sunday, January 2, 2022

கச்சிமேமன், கோஸா முகமதியர் வழக்கம்:

கச்சிமேமன், கோஸா முகமதியர் வழக்கம்:

கச்சி மேமன் என்பவர்கள் கட்ச் பகுதியில் வசித்த இந்துக்கள். இவர்கள் பல காலங்களுக்கு முன்னரே முகமதிய மதத்துக்கு மாறி விட்டார்கள். இருந்தாலும், பழைய இந்து பழக்க வழக்கங்கள் சிலவற்றைப் பின்பற்றி வருகின்றனர். இதில் சொத்தில் உரிமை கோருவது இந்து வழக்கப்படியே இருப்பதாக சொல்கிறார்கள். அப்படியென்றால், அவர்கள் இந்து கூட்டு குடும்ப முறைப்படி சொத்தை அடைய முடியுமா என்ற சட்டக் கேள்வி 1920-ல் சென்னை உயர் நீதி மன்றத்தில் ஒரு வழக்கில் ஏற்படுகிறது. கச்சு பகுதியில் இருந்த மேமன் வகை மக்கள், படிப்படியாக, பிரிந்து மேற்கு கடற்கரை வரை பரவி வாழ்ந்து வந்தனர். மலபார் பகுதியிலும், பெங்கால் பகுதியில் வாழ்ந்தனர். அவர்களின் முந்தைய வரலாற்றின் படி, அவர்கள் லோனாஸ் Loannas என்னும் இந்து வியாபார சாதியான வைசிய சாதியைச் சேர்ந்தவர்கள். ஆனால் இவைகளை எல்லாம் உறுதி செய்யப் போதுமான ஆவணங்களோ, பதிவுகளோ இல்லை என்று சென்னை உயர் நீதிமன்றம் ஒரு வழக்கில் குறிப்பிட்டுள்ளது. 

இதேபோலவே, கோசாஸ் Khojahs என்ற முகமதியர்களும் ஒரு காலத்தில் இந்துக்களாக இருந்தனர் என்றும், அவர்களும் அதே இந்து பழக்க வழக்கத்தை கடைப்பிடித்து வந்தனர் என்றும் சொல்லப்படுகிறது. எனவே கச்சு மேமன்ஸ் மற்றும் கோசாஸ் ஆகிய இரு பிரிவுகளுக்கு ஒரே மாதிரியான முறைகளே இருந்தன. ஆனால், இந்து சாஸ்திர சட்டமானது அவர்களுக்கு எவ்வளவு தூரம் பொருந்தி வரும் என்று தெரியவில்லை. 

ஆனால், இதைப் பற்றி முதன் முதலில் 1847-ல் ஒரு வழக்கு வந்துள்ளது. அது Hirbae vs Sonabae; Rahimatbae vs Haji Jussap; and the case of Khojas and Memons (1847) Perry’s O.C. 110 at pp 115, 128 : 4 Ind. Dec. (O.S.) 100 at p.105. இந்த வழக்கின் முடிவு 1847ல் சொல்லப்பட்டது. அதில் கோசாஸ், மற்றும் கச்சி மேமன் முகமதியர்களின் சொத்தின் வாரிசு உரிமைகளில், முகமதிய சட்டத்திலும் மாறுபட்டு உள்ளது என்பது ஒப்புக் கொள்ளப்பட்டது. Sir Erskine Perry C.J. என்ற தலைமை நீதிபதி தனது தீர்ப்பில், கச்சி மேனன் மக்களில், இந்துக்களைப் போலவே, பெண்ணுக்கு சொத்துரிமை கொடுக்கவில்லை என்ற நிலை இருந்ததாகக் கூறுகிறார். ஆனாலும், குரானுக்கு எதிராக ஒரு வழக்கம் (custom) இருக்குமானால், அது செல்லாது என்பது குரானில் சொல்லி உள்ளது. ஆனாலும், அவர் ஒரு முடிவுக்க வருகிறார். “ஒரு வழக்கத்தை, கிழக்கத்திய நாட்டினர் (பிரிட்டீஸ் அல்லாதவர்) தொடர்ந்து கடைப்பிடிக்கப் பட்டு வந்தால், பிரிட்டீஸ் கோர்ட் ஆப் ஜஸ்டிஸ் அதை ஏற்றுக் கொள்கிறது” என்கிறார். ஆனால் அது சட்டத்தை மீறியதாக இருக்க கூடாது என்கிறார். எனவே அந்த வழக்கில் ஒரு முகமதியப் பெண், சொத்துரிமை கேட்பதை மறுத்து விடுகிறார். அவ்வாறு பெண்களுக்கு சொத்துரிமை இல்லாமல், கச்சு மேமன், கோசாஸ் மக்களிடம் இருக்கும் வழக்கமானது பல காலமாக பின்பற்றி வரும் வழக்கம் என்பதால், அதை மறுக்கிறார். 

மற்றொரு வழக்கான Gangbai vs Tavar Mulla, 1 BHCR 71 என்ற வழக்கில், ஒரு கோஸா முகமதியப் பெண் தனது சொத்துக்களை சாரிட்டியாக (தர்மமாக) தனது உயிலில் எழுதி வைத்ததை சட்டப்படி செல்லாது எனத் தீர்ப்பு கூறி உள்ளது. தலைமை நீதிபதி Sausse CJ தனது தீர்ப்பில், “கோஜா சாதியினர், முகமதிய மதத்தை பின்பற்றி வந்தாலும், சொத்துரிமையைப் பொருத்து அவர்கள் இந்து மதச் சொத்து வாரிசுரிமையையே பின்பற்றி வந்துள்ளனர்” என்று குறிப்பிடுகிறார். 

மற்றொரு வழக்கான, Mulbai BHCR 276 page 284 என்ற வழக்கில், 1866-ல் கூறியுள்ள தீர்ப்பில், ஒரு கோஷா பெண்மணி வாரிசு இல்லாமல் இறந்து விடுகிறார். அவரின் சொத்துக்களை நிர்வகிக்கும் உரிமையை அவளின் சகோதரன், கோர்ட்டில் Letters of Administration கேட்கிறார். அதில், அந்த இறந்த பெண்மணி, அந்த சொத்தை, அவளின் இறந்த கணவரிடமிருந்து வாரிசாகப் பெற்று இருப்பதால், அவளின் இறப்புக்குப் பின்னர் அந்தச் சொத்து அவளின் கணவரின் வாரிசுகளையே சேரும் என்றும், அவளின் உறவுகளான அவளின் சகோதரனுக்குப் போகாது என்றும் தீர்ப்பு உள்ளது. இது குரானுக்கு எதிரானதாக இருந்த போதும், தொடர் பழக்க வழக்கத்தின் அடிப்படையில் இருப்பதால், அதுவும் சட்டத்துக்கு புறம்பாக இல்லாததால் கோர்ட் அதை ஏற்கிறது என்று சொல்லி உள்ளது. 

எனவே, கோசாஸ் இனத்தவர், இந்து சட்ட திட்டங்களின்படி நடந்து கொள்கிறார்கள் என்று ஏற்க முடியாது. ஆனால், அவர்கள் தானாகவே ஒரு பழக்க வழக்கத்தை ஏற்படுத்தி அதன்படி நடந்து வருகின்றனர். எனவே அவர்களை இந்துக்கள் என்றோ, இந்து சட்டப்படி நடக்கின்றனர் என்றோ எடுத்துக் கொள்ள முடியாது. கோசாஸ் இன மக்கள், இந்துக்கள் கடைப்பிடிக்கும் நடை முறைகளை, அவர்களும் கடைப்பிடிக்கிறார்கள் அவ்வளவே. மற்ற விஷயங்களில் அவர்கள் முகமதியர்களாகவே இருந்து வருகின்றனர். 

மற்றொரு வழக்கான Shivaji Hasam vs Datu Mavji Kohja 12 BHCR 281 pp.202 என்ற வழக்கானது 1847-ல் நடந்த வழக்கு. இதில், பழக்க வழக்கத்தை நிரூபிக்க போதிய சாட்சியம் இல்லை என்றாலும், அவர்கள்/ கோஸா முகமதியர்கள், இந்துக்களின் பழக்க வழக்கத்தை அடிப்படையாகக் கொண்டு, சொத்துரிமை வைத்துள்ளனர் என்றே எடுத்துக் கொள்ள வேண்டும் என்று தீர்ப்புச் சொல்லி உள்ளனர். கோஸா முகமதிய குடும்பத்தில் மூன்று சகோதரர்கள் இருக்க, அதில் மூத்தவர் மற்றவர்களுக்கு கார்டியனாக இருந்தது செல்லும் என்று சொல்லி உள்ளது. இது இந்து முறைப்படியான கூட்டுக் குடும்பத்தில் அவ்வாறு மூத்தவர் குடும்பத் தலைவராக இருப்பார் என்பதை ஒத்து இருக்கிறது. 

எனவே மதராஸ் பிரசிடென்சியில் அதுவரை கோர்ட்டுகள், கோஸா முகதியர்கள், இந்து வாரிசு உரிமை முறையை பின்பற்றி அதே போன்ற பழக்க வழக்கத்தை கொண்டிருப்பதை ஏற்றுக் கொண்டிருக்கின்றனர். 

மற்றொரு வழக்கான Rahimbhai Allubhai Hirabhai vs Gorbai, 12 BHCR 294 at page 304, என்ற வழக்கு 1875-ல் நடந்த வழக்கு. இதில், ஒரு கோஸா வியாபாரி சொத்துக்களை விட்டு விட்டு இறந்து விட்டார். அவருக்கு ஒரு மனைவி, தாய், மற்றும் திருமணம் ஆன ஒரு சகோதரி இருந்தனர். தீர்ப்பில், கோஸா பழக்க வழக்கப்படி, தாய் இந்த சொத்துக்களை நிர்வகிக்கும் பொறுப்பை பெறுவார் என்றும், அவர், இறந்தவரின் மனைவி, சகோதரி, இவர்களை விடவும் முன்னுரிமை பெற்றவர் என்றும் தீர்ப்பு உள்ளது. 

மற்றொரு வழக்கான Rahmatbai vs Hirbai, 3 B.34 : Ind. Dec.(N.S.) 23 என்ற வழக்கில் தீர்ப்பு 1877-ல் வந்தது. அதில், குழந்தை இல்லாமல் இறந்த கோஸா முகமதியருக்கு, அவரின் விதவை மனைவி, மற்றும் சகோதரி வாரிசாக வர முடியுமா என்ற கேள்வி எழுகிறது. அதில், பழக்க வழக்கம் ஏதும் இல்லாதபோது, இந்து வாரிசு உரிமையை இங்கு கொண்டு வரலாமா என்ற கேள்வி எழுந்தது. 
**

Saturday, January 1, 2022

புரோநோட்டின் காலக் கெடு


புரோநோட்டின் காலக் கெடு 

புராமிசரி நோட்டு எவ்வளவு காலம் செல்லுபடியாகும்?

ஒரு புராமிசரி நோட், அது எழுதிக் கொடுக்கப்பட்ட தேதியில் இருந்து மூன்று வருடங்களுக்கு மட்டுமே செல்லுபடியாகும். மூன்று வருடம் முடிந்து விட்டால், அந்த புரோநோட் செல்லாது என்பதால், அதைக் கொண்டு அந்தப் பணத்தை வசூல் செய்ய வழக்குப் போட முடியாது என்று இந்திய லிமிடேஷன் சட்டம் 1963 சொல்கிறது.

அப்படி மூன்று வருடம் முடியப் போகும் புராமிசரி நோட்டை உயிர் உண்டாக்க வேண்டும் என்றால், அதற்கு இரண்டு வழிமுறைகள் உள்ளதாக இந்திய லிமிடேசன் சட்டம் 1963 சொல்கிறது.

முதல் முறை:

ஆனாலும், அந்த மூன்று வருடங்களுக்குள், அந்த புரோமிசரி நோட்டை எழுதிக் கொடுத்தவர் (கடன் வாங்கியவர்) அந்த புரோநோட் கடனுக்காக ஏதாவது ஒரு அசல் தொகை அல்லது ஏதாவது ஒரு வட்டித் தொகை செலுத்தி, அவ்வாறு செலுத்தப்பட்டது என்று அந்த புராமிசரி நோட்டில், அல்லது அதன் பின்பக்கத்தில் எழுதி தேதியுடன் கையெழுத்துப் போட்டால், அந்தத் தேதியிலிருந்து மேலும் மூன்று வருடங்களுக்கு செல்லுபடியாகும். இப்படியாக எத்தனை முறை வேண்டுமானாலும் தொடரலாம்.

இரண்டாவது முறை:

மற்றொரு முறையாக, அந்த புரோநோட்டுக்கு பகுதி அசல் தொகையோ, அல்லது பகுதி வட்டித் தொகையோ செலுத்த முடியாத சூழ்நிலையில் இருந்தால், அதற்கும் ஒரு மாற்று வழியாக, ஒரு ஒப்பு உறுதிச் சீட்டு என்னும் Acknowledgment of Liability என்ற உறுதிமொழியை எழுதிக் கொடுக்கலாம். அந்த உறுதிமொழியானது, அந்த புரோமிசரி நோட்டுக்கு, இதுநாள் வரை இவ்வளவு தொகை பாக்கி உள்ளது என்பதை ஒப்புக் கொள்கிறேன் என்று அன்றைய தேதியிட்டு கையெழுத்துச் செய்து எழுதிக் கொடுக்க வேண்டும். அந்த புரோ நோட்டில் அதை எழுதத் தேவையில்லை. அதற்குப் பதிலாக தனியாக ஒரு கடிதம் கொடுத்தால் போதும். அப்படிக் கொடுக்கப்பட்ட தேதியில் இருந்து மேலும் மூன்று வருடங்களுக்குச் செல்லுபடியாகும்.

இதில் முதல் வகையை லிமிடேசன் ஆக்ட் 1963-ல் பிரிவு 19 சொல்கிறது. (இதில் கடனில் ஒரு சிறு தொகையை, அசலுக்காகவோ அல்லது வட்டிக்காகவே கொடுத்து, (Payement towards either part of principal money or part of interest due) காலத்தை நீட்டித்துக் கொள்வது). வெறும் 10 ரூபாய் கொடுத்தால்கூடப் போதுமானது.

இரண்டாம் வகையை அதே சட்டத்தின் பிரிவு 18 சொல்கிறது. (இதில் பணம் ஏதும் கொடுக்காமல், கடன் பாக்கியாகவே உள்ளது ஒப்புக் கொண்டு ஒப்புகை உறுதிமொழி (Acknowedgement of debt) எழுதிக் கொடுத்து, காலத்தை நீட்டித்துக் கொள்வது).

ஒரு குழப்பமான வழக்கு:

இந்த வழக்கு 1936-ல் நடந்த வழக்கு. இதில் ஒருவர் கடன் வாங்கி இருக்கிறார். அதற்கு புராமிசரி நோட் எழுதிக் கொடுத்திருக்கிறார். பின்னர் அசல் தொகை முழுவதும் கொடுத்து விட்டார். அதுவரை கொடுக்க வேண்டிய வட்டித் தொகை ரூ.200 வருகிறது. அதை அவரால் அன்று கொடுக்க முடியவில்லை. எனவே அந்த வட்டித் தொகைக்கு தனியே ஒரு புராமிசரி நோட் எழுதிக் கொடுக்கிறார்.  ஆனாலும் அந்த வட்டித் தொகையை கொடுக்க முடியவில்லை.

பணம் கொடுத்தவர் வழக்குப் போடுகிறார். கடன் வாங்கியவரின் வாதம் என்னவென்றால், இந்த வட்டிப் புரோநோட்டில் நான் பணம் ஏதும் வாங்கவில்லை. வட்டிக்காக எழுதிக் கொடுத்தது. ஆனால் அசல் வாங்கிய புரோநோட்டு மூன்று வருடங்களுக்கு மேல் ஆகிவிட்டதால், அந்த புரோநோட் காலாவதி ஆகிவிட்டது. எனவே வட்டிப் புரோநோட், லிமிடேசன் சட்டம் 1963-ன் பிரிவு 18-ன்படி Acknowldgement of liability என்னும் கடன் ஒப்புகை உறுதிமொழி ஆகாது என்று வாதம் செய்கிறார்.

ஏனென்றால், அந்த வட்டிப் புரோ நோட்டில், பழைய புரோ நோட் கடன் பாக்கி உள்ளது என்று ஒப்புகை செய்திருந்தால்தான், அது லிமிடேசன் சட்டம் பிரிவு 18-ன்படி ஒப்புகை ஆகும். ஆனால் இங்கு வட்டிக்கு எழுதிக் கொடுத்த புரோ நோட்டு, ரூ.200 பணம் கொடுக்க வேண்டும் என்று மட்டுமே எழுதப்பட்டுள்ளது. பழைய பாக்கி கடனாக இருக்கிறது என்று சொல்லி ஒப்புதல் உறுதிமொழி  (Acknowledgment of liability) ஏதும் அதில் எழுதிக் கொடுக்கவில்லை. எனவே இந்த வட்டிப் புரோ நோட் பிரிவு 18-ன் படி கடனின் காலத்தை நீட்டிக் கொடுக்காது. (அதாவது வட்டிப் புரோ நோட் மூன்று வருடங்களுக்கு உள் இருந்தாலும், அது பழைய புரோ நோட்டுக்கு எழுதிக் கொடுத்திருப்பதால், அதற்கு கால நீட்டிப்பு இல்லை என்று வாதம் செய்கிறார்.

இந்த 1963 லிமிடேசன் சட்டம் வருவதற்கு முன்னர் பழைய லிமிடேசன் சட்டம் நடைமுறையில் இருந்தது.  

முதன் முதலில் வந்த லிமிடேசன் சட்டம் Act XIV of 1859.

பின்னர் வந்த சட்டம் Act XIX of 1871.

இதைத் தொடர்ந்து வந்த சட்டம் Act 1877.

அதைத் தொடர்ந்து வந்த சட்டம் Act 1908

தற்போது நடைமுறையில் உள்ள சட்டம் 1963

இந்த வழக்கு 1936-ல் நடந்த வழக்கு. எனவே 1908 வருட லிமிடேசன் சட்டம் அப்போது நடைமுறையில் இருந்தது.

இதே பிரச்சனை போன்று மதராஸ் ஐகோர்ட்டில் ஒரு வழக்கு வந்தது. Muthiah Chettiar v. Kuttayan Chetty, (1917) 6 LW 790. இதில், புரோ நோட்டின் பாக்கிப் பணத்துகாக உண்டி சீட்டு எழுதி வாங்கிக் கொள்ளப்பட்டது. இதில் தீர்ப்பாக, உண்டி எழுதிக் கொடுத்தது, லிமிடேசன் சட்டம் பிரிவு 20-ன்படி பணம் ஒப்புக் கொள்ளப்பட்டதாக கருத முடியாது என்று சொல்லி விட்டது.

மதராஸ் ஐகோர்ட்டின் மற்றொரு வழக்கான Mackenzi v. Thiruvengadathan, (1886) ILR 9 Mad 271 என்ற வழக்கில் Justice Muthusamy Aiyar and Justice Brandt இருவரும், to the effect that the writing must show that the payment was made towards the debt in question… என்று சொல்லி உள்ளார்கள்.

இதிலிருந்து தெரிவது என்னவென்றால், வட்டிக்கு எழுதிக் கொடுத்த புரோ நோட், அது பழைய புரோநோட் கடனில் பாக்கி உள்ளது என்று தெளிவாகச் சொல்லி இருக்க வேண்டும். ஆனால் இந்த வழக்கில் அவ்வாறு சொல்லப் படவில்லை.

ஆனாலும், கடன் கொடுத்தவரின் வாதம் என்னவென்றால், பழைய புரோ நோட் கடனை தீர்த்து விட்டார். அதில் வட்டிப் பாக்கியை வட்டிப் புரோ நோட் எழுதிக் கொடுத்து தீர்த்து விட்டார் என்று தான் கருத வேண்டும். எனவே வட்டிப் புரோ நோட் தனியே இயங்கும் என்று வாதம் செய்கிறார்.

அவரின் வாதத்தை ஏற்றுக் கொண்ட ஐகோர்ட், இந்த வட்டிப் புரோ நோட் காலதாமதம் ஆகவில்லை என்றும், அந்தப் பணம் கொடுக்க வேண்டிய பணம் தான் என்று தீர்ப்பு சொல்லிவிட்டது.


**