Saturday, October 31, 2020

தாய் கார்டியனாக இருக்கலாமா

 தாய் கார்டியனாக இருக்கலாமா?

Jaganathan vs Vasudevan Chettiar AIR 2001 Mad 184

மாணிக்கம் செட்டியாரின் மகன்கள் பேரன்கள் இந்து கூட்டுக் குடும்பமாக இருக்கிறார்கள். இவர்கள் ஏகப்பட்ட வியாபாரம் செய்கிறார்கள். மிக அதிகமாக சொத்துக்கள் இருக்கின்றன. 1976-ல் இவர்களுக்குள் கருத்து வேறுபாடு ஏற்படுகிறது. ஒரு பேரன் இந்த பாகப் பிரிவினை வழக்கைப் போடுகிறான். 1977-ல் வாதி (ஒரு பேரன்) மைனராக இருக்கும்போதே அவனிடம் விடுதலை எழுதி வாங்கிக் கொள்கிறார்கள். அவன் அவ்வளவு உஷாராவன் இல்லை. அவனின் தாயார் அவனுக்கு கார்டியனாக இருந்து அந்த விடுதலைப் பத்திரத்தை எழுதிக் கொடுத்துள்ளார். பின்னர் மற்றவர்கள் சேர்ந்து 1977-ல் ஒரு பாகப் பிரிவினை பத்திரம் எழுதிக் கொண்டு சொத்துக்களை பிரித்துக் கொண்டனர். 

அந்த மைனர் பேரன், மேஜர் வயதை அடைந்தவுடன் பாக வழக்குப் போடுகிறான். அதில், அவனை ஏமாற்றி அந்த விடுதலைப் பத்திரம் எழுதி வாங்கப் பட்டுள்ளது என்றும், அவன் மைனராக இருந்தபோது, அவனின் தாயார் அவனுக்காக கார்டியனாக அதில் கையெழுத்து செய்துள்ளார் என்றும், அவனின் தாயார் அவனுக்கு கார்டியனாக இயங்க முடியாது (She is neither de facto guardian nor a natural guardian) என்றும் வழக்குப் போடுகிறான். தந்தை இருக்கும்போது, தாயார் இயற்கை கார்டியனாக இயங்க முடியாது என்று சொல்கிறான். 

மேலும் இது இந்து கூட்டுக் குடும்பச் சொத்து. இதை மகன் பேரன் என்ற வித்தியாசம் இல்லாமல் தலைக்கு ஒரு பங்கு என்றுதான் பிரித்து இருக்க வேண்டும். (per capita). மகன்களை மட்டும் வைத்த வகைக்கு ஒரு பங்கு என்று பிரித்து இருக்க கூடாது. (per stripes). எனவே இந்த பாகப்பிரிவினை இந்து சாஸ்திர சட்டத்துக்கு எதிரானது என்று வாதம். 

மேலும் இந்த பாக வழக்கை போட்ட பின்னர், பிரதிவாதிகள் சில சொத்துக்களை, இந்த கூட்டுக் குடும்ப பணத்தைக் கொண்டு, பினாபி பெயர்களில் வாங்கி உள்ளனர். அதிலும் தனக்கு பங்கு உண்டு என்று வாதம் செய்கிறான்.

ஆனால் பிரதிவாதிகள், இது மற்ற சகோதரர்களின் தூண்டுதலால் இந்த பாக வழக்கைப் வாதி போட்டுள்ளான் என்றும், ஏற்கனவே நடந்த பாகப் பிரிவினையை இப்போது மறுக்க முடியாது என்றும், பாகம் பிரிந்து விட்டதால், கூட்டுக் குடும்ப சொத்து என்று ஒன்று சட்டப்படி இல்லை என்றும், பாகப்பிரிவினை எல்லோரின் சம்மதத்தின் பேரிலேயே நடந்தது என்றும் சொல்கிறார்கள்.

தாயார் கார்டியனாக இயங்க முடியுமா?

பிரிவு 6 இந்து மைனாரிட்டி & கார்டியன்ஷிப் சட்டம் 1956-ன்படி தந்தை மட்டுமே இயற்கை கார்டியனாக இருக்க முடியும். தாயார் கார்டியனாக இருந்து எழுதிக் கொடுத்த விடுதலை பத்திரம் சட்டப்படி செல்லாத தன்மை ஆகி விடும் (void ab initio). இப்படிப்பட்ட சூழ்நிலையில் மைனர், மேஜர் வயதை அடைந்தவுடன் 12 வருடங்களில் அதை ரத்து செய்ய வழக்குப் போட முடியும். இது வாதியின் வாதம்.

பிரிவு 6 இந்து மைனாரிட்டி & கார்டியன்ஷிப் சட்டம் 1956 என்பது மைனரின் தனிச் சொத்துக்களுக்கு மட்டுமே செல்லும். அது, இந்து கூட்டுக் குடும்பச் சொத்துக்களுக்குச் செல்லாது. மேலும் சுப்ரீம் கோர்ட் தீர்ப்பின்படி, தாயும் இயற்கை கார்டியன்தான். அவர் மைனருக்காக கார்டியனாக செயல்பட்டதில் ஒன்றும் தவறில்லை என்று பிரதிவாதிகள் வாதம்.

இந்து மைனாரிட்டி & கார்டியன்ஷிப் சட்டம் 1956-ன் பிரிவு 4-ல் கார்டியன் யார் என்பதைப் பற்றிச் சொல்கிறது. 

“கார்டியன்” என்பது மைனரையும் அவனின் சொத்துக்களையும் பாதுகாப்பவர் என்றும், அதில் (1) இயற்கை பெற்றோர், (2) தந்தை அல்லது தாய் அவரின் உயில் மூலம் நியமிக்கப்பட்ட கார்டியன், (3) கோர்ட் மூலம் நியமிக்கப்பட்ட கார்டியன், (4) கோர்ட் ஆப் வார்ட்ஸ் சட்டத்தின் மூலம் நியமிக்கப்பட்ட கார்டியன், இவர்களும் கார்டியன் என்றே கருதப்படுவர் என்று சொல்லப்பட்டுள்ளது.

“இயற்கை கார்டியன் என்றால் யார் என்று பிரிவு 4-சி-ல் சொல்லப்பட்டுள்ளது. அதன்படி, மைனரின் தனிச் சொத்துக்களுக்கும் (கூட்டுக் குடும்பச் சொத்துக்கள் அல்லாதவைகளுக்கு) மைனருக்கும் அவனின் தந்தைதான் இயற்கை கார்டியன் என்றும், தந்தைக்குப் பிறகு தாய் தான் இயற்கை கார்டியன் என்றும் சொல்லப் பட்டுள்ளது. 

ஆனாலும், ஐந்து வயதுக்கு உட்பட்ட குழந்தையாக இருந்தால், அவன் அல்லது அவள், அவனின் தாய் அரவணைப்பில்தான் (custody) இருக்க வேண்டும் என்றும் சொல்லப்பட்டுள்ளது.

மேலும், சட்டபூர்வமற்ற குழந்தையாக இருந்தால் (illegititmate child) முதலில் தாயும், பின்னர் தகப்பனும் இயற்கை கார்டியனாக இருப்பர்.

இந்து மைனாரிட்டி & கார்டியன்ஷிப் சட்டம் 1956-ல் பிரிவு 11-ல் தற்காலிக கார்டியன் (de facto guardian) யார் என்றும் சொல்லப்பட்டுள்ளது. யார் வேண்டுமானாலும் தற்காலிக கார்டியனாக இயங்க முடியும். ஆனால், அந்த தற்காலிக கார்டியன் மைனரின் சொத்துக்களை விற்கும் அதிகாரம் இல்லை. தற்காலிக கார்டியன் என்பது தந்தை, தாய் இல்லாத மற்ற உறவுகள் ஆகும்.

பிரிவு 12 மைனாரிட்டி & கார்டியன்ஷிப் சட்டத்தில், இந்து கூட்டுக் குடும்பச் சொத்தில் மைனருக்கு பங்கு இருந்தால், அதை விற்பனை செய்ய கார்டியன் யாரையும் நியமிக்க முடியாது. ஏனென்றால், அது கூட்டுக் குடும்பச் சொத்தின் கர்த்த்தா என்று மூத்த கோபார்சனரின் நிர்வாகத்தில் இருக்கும். 

ஆனாலும், இப்படிப்பட்ட கூட்டுக் குடும்பச் சொத்துக்கு, மைனருக்கு கார்டியனை நியமிக்கு ஐகோர்ட்டுக்கு அதிகாரம் உண்டு என்று அதே பிரிவு 12-ல் சொல்லப் பட்டுள்ளது. 

தாய் கார்டியனாக இயங்க முடியுமா?

தந்தை கார்டியனாக இயங்கும் நிலையில் இருக்கும்போது, தாய் கார்டியனாக இயங்க முடியாது. ஆனால், தந்தை பொறுப்பில்லாமல், மைனரின் சொத்துக்களை கவனிக்காமல் இருந்தால், தாய் கார்டியனாக இயங்கு முடியும். 

ஒரு வழக்கில், தந்தை இருக்கும்போது, தாய் கார்டியனாக இருந்து ஒரு சொத்தை விற்பனை செய்துள்ளார். ஆனால் அந்த கிரயப் பத்திரத்தில் தந்தை சாட்சிக் கையெழுத்தைப் போட்டுள்ளார். இருந்தாலும், இந்த கிரயம் செல்லாது என்று தீர்ப்பு கூறியுள்ளது. The sale was not merely voidable under Sec.8 but void, being outside the purview of that section.

எப்போது இயற்கை கார்டியன் மைனர் சொத்தை விற்கலாம்?

இயற்கை கார்டியன் மைனர் சொத்தை விற்கலாம் என்று சொன்னாலும், அதுவும், அவனின் அவசிய தேவைக்காக இருக்க வேண்டும். காரணம் இல்லாமல் சும்மா விற்று விட முடியாது. Only the legal guardian empowers to alienate a minor’s property, provided it is for the necessity or benefit of the minor or his estate.

தந்தை உயிருடன் இருக்கும்போது, தாய் ஏன் இயற்கை கார்டியனாக இயங்க முடியாது?

இந்தக் கேள்விக்கு சுப்ரீம்கோர்ட் 1999-ல் ஒரு அதி முக்கியத்துவம் வாய்ந்த தீர்ப்பைச் சொல்லி உள்ளது. அது Hariharan vs Reserve Bank of India. இந்த தீர்ப்பில்தான், தந்தை, தாய் என்ற பாகுபாடு பார்க்க முடியாது. தந்தை இருக்கும்போது, தாய் இயங்க முடியாது என்பது பாகுபாடு பார்க்கும் செயல். எனவே தந்தை கார்டியனாக இயங்கும் நிலையில் இருந்தாலும், தாயும் இயற்கை கார்டியன் என்பதாலும், அவளும் மைனரின் நலனில் அக்கறை உள்ளவள் என்பதால், அவளும் தனித்து இயற்கை கார்டியனாக இயங்க முடியும் என்று தீர்ப்புக் கொடுத்துள்ளது. இந்த தீர்ப்பானது, இதற்கு முன்னர் முடிவான பல வழக்குகளின் தீர்ப்பை பின்னுக்குத் தள்ளி விட்டது. (இதற்கு முன்னர் கொடுத்த தீர்ப்புகளில் எல்லாம், தந்தை உயிருடன் இருக்கும்போது, தாய் கார்டியனாக இயங்க முடியாது என்றும், தந்தை காலத்துக்குப் பின்னரே தாய் கார்டியனாக இருக்க முடியும் என்றும் தீர்ப்புகள் இருந்தன. இந்த நிலை இந்த வழக்கின் தீர்ப்பால் மாறி விட்டது).

அடுத்து,

பாகப்பிரிவினைப் பத்திரத்தில் ஏமாற்றி கையெழுத்துப் பெறப்பட்டதா?

தந்தையும் பாகப் பத்திரத்தில் கையெழுத்துப் போட்டுள்ளார். மைனருக்காக, தாயும் கார்டியனாக இருந்துள்ளார். எனவே இதில் ஏமாற்று வேலை ஏதும் நடக்கவில்லை. மைனரின் நன்மையை பாதுகாக்க இரண்டு இயற்கை கார்டியனும் இருந்திருக்கிறார்கள். அவர்கள் மைனருக்கு எதிராக செயல்பட்டார்கள் என்று எந்த சாட்சியமும் இல்லாதபோது, அந்த பாகப் பிரிவினை நியாயமாகவே நடந்ததாக கருத வேண்டும். 

சென்னை ஐகோர்ட்டின் முழு பெஞ்ச் தீர்ப்பான Sankaranarayanan vs Kandasami, AIR 1956 Mad 670 என்ற வழக்கில் மைனருக்காக கார்டியன் கையெழுத்துச் செய்து ஒரு பத்திரத்தை எழுதிக் கொடுத்திருந்தால், அந்த மைனர் மேஜர் வயதை அடைந்த மூன்று வருடங்களுக்குள் அதை கேள்வி கேட்டு வழக்குப் போட உரிமையுண்டு. ஏனென்றால் அது ஒரு voidable transaction. அவ்வாறு வழக்குப் போடவில்லை என்றால், அந்த பத்திரம் செல்லும் தன்மை கொண்டதாக மாறிவிடும் என்று தீர்ப்புக் கூறி உள்ளது. 

ஆனால், மைனரை காண்பிக்காமல், மைனரின் சொத்தை விற்பனை செய்திருந்தால், அதாவது, மைனருக்காக கார்டியன் யாரும் கையெழுத்துப் போடாமல் மைனரின் சொத்தை அல்லது மைனருக்கு உரிமை உள்ள சொத்தை விற்பனை செய்திருந்தால், அதை அந்த மைனர் மேஜர் வயதை அடைந்த 12 வருடங்களில் வழக்குப் போடும் உரிமை அவனுக்கு உண்டு. ஏனென்றால், அந்த கிரயம் சட்டப்படியான கிரயம் இல்லை Sale is void in nature.

ஆக, மைனருக்காக கார்டியன் கையெழுத்துப் போட்டு விற்பனை செய்திருந்தால், அது Voidable Sale. எனவே அதை மைனர் மேஜர் வயதை அடைந்த மூன்று வருடங்களில் வழக்குப் போடும் உரிமை உண்டு. இங்கு மைனருக்காக கார்டியன் கையெழுத்துப் போடுவதை eo-nominee என்று சட்டம் சொல்கிறது. அதாவது மைனருக்காக ஒருவர் இயங்கினார் என்று பொருள்.

ஆனால், மைனருக்காக யாரும் கார்டியனாக இல்லாமல் மைனரின் சொத்தை விற்று இருந்தால், அது செல்லாத கிரயம். Void transaction. எனவே மைனர், மேஜர் வயதை அடைந்த 12 வருடங்களுக்குள் வழக்குப் போட உரிமை உண்டு. 

இந்த வழக்கில், தாய் கார்டியனாக இருந்துள்ளார், எனவே அவர் மைனருக்காக இயங்க முடியும் என்றும், ஈயோ-நாமினி ஒப்புக் கொண்ட பத்திரத்தை, மூன்று வருடங்களில் மட்டுமே கேள்வி கேட்க முடியும் என்பதால், இந்த வாதி தாக்கல் செய்த வழக்கு செல்லாது என்று சென்னை ஐகோர்ட் தீர்ப்பு கூறி உள்ளது. 


Friday, October 30, 2020

நாராயணன்

 நாராயணன்

விஷ்ணுவின் பெயர். நாரம் என்றால் நீர் என்று பொருள். நீரில் தோன்றியதால் நாராயணன் என்று பெயர். 

இந்த பிரபஞ்சம் தோன்றுவதற்கு முன் இருந்த பிரபஞ்சமானது முழுவதும் அப்பு உருவமாக (முழுதும் நீராக) மகா பிரளயம் வந்து சூழ்ந்து விட்டது. அவ்வாறு பிரபஞ்சம் முழுவதும் நீரால் ஒடுங்கி விட்டது (குறைந்து ஒற்றைப் புள்ளியாகி விட்டது). அந்த நீரில் இருந்து, விஷ்ணு இந்த இப்போதுள்ள பிரபஞ்சத்தைத் தோற்றுவித்தார் என்பதால், அந்த விஷ்ணுவை நாராயணன் என்று அழைக்கிறார்கள்.

நாரம் என்பது இந்த பிரபஞ்சத்தின் மூலப்பகுதி. அது சுற்றி ஆடும் தன்மை கொண்டது. அது எப்படி என்றால், சர்ப்பம் (பாம்பு) வடிவினை ஒத்து இருக்கும். அதன் சக்தி பாகமானது சங்கின் வடிவத்தை ஒத்து இருக்கும். எனவேதான், இந்த பிரபஞ்சத்தை பாம்பின் வடிவாக (சுற்றிச் சுழன்று ஆடும் தன்மை கொண்டதால்)  கொண்டு, ஆதிசேஷன் என்னும் பாம்பை உவமை ஆக்கி, அதில் சக்தி வடிவாக உள்ள சங்கின் வடிவம் கொண்ட நாராயணன் அதில் துயில் கொள்வதாகச் சொல்வர். 

இந்தப் பிரபஞ்சம் ஒடுங்கும் போது (முழுவதும் இல்லாமல் போகும்போது) அது அந்த சங்கின் வடிவுக்கும் ஒடுங்கி விடும். இந்த பிரபஞ்சம் மீண்டும் விரியும் போது, சங்கு வடிவில் சுற்றிச் சுழன்று விரிவடையும். (இந்தக் பௌதீகக் கொள்கையை இன்றுள்ள ஆராய்ச்சியாளர்களும் ஒப்புக் கொண்டுள்ளனர்). 

இவ்வாறு ஒடுங்கி எஞ்சி இருந்தது மீண்டும் விரிவடைவது என்ற நிலைக்கு ஆதி காரணமாக இருப்பது அந்த சங்கின் மூலப்பகுதிபோல இருப்பதுவே. எனவே அதை ஆதிசேஷன் என்று சொல்வர். அணுவானது, ஸ்தூல நிலையை விட்டு (இயல்பான உருவத்தை விட்டு) சூக்கும வடிவம் குறைந்து கொண்டே வரும் (வடிவம் இல்லா நிலை). அவ்வாறு சூக்கும வடிவம் ஏழாவது நிலையை அடையும்போது, இந்த மூல வடிவத்தைப் பெறுமாம். ஆறாவது நிலையில் கமல வடிவம் என்னும் தாமரை வடிவைப் பெறும். அங்கு சிருஷ்டி புருஷன் (பிறவி ஏற்படுத்துபவன்) பிரம்மா தோன்றுவான். இவ்வாறு நமது பூர்வ வேதாந்த சித்தாந்த அறிஞர்கள் கூறுகிறார்கள்.


பிரகஸ்பதி என்னும் வியாழன்

 பிரகஸ்பதி என்னும் வியாழன்

பிரம மானசன் மகன்களில் ஒருவன் அங்கிரசன். இந்த அங்கிரசன் மகனே வியாழன் என்னும் பிரகஸ்பதி. இந்த பிரகஸ்பதி, தேவர்களின் குரு. (அசுரர்களின் குருவாக இருப்பவர் சுக்கிரன்). 

இந்த பிரகஸ்பதியின் மனைவி பெயர் தாரை. ஒரு முறை, சந்திரன் இங்கு வந்து, இந்த பிரகஸ்பதியின் மனைவி தாரையைக் கடத்திக் கொண்டு சென்று விட்டான். எனவே பிரகஸ்பதிக்கும் சந்திரனுக்கும் பெரும் போர் மூண்டது. பிரமதேவர் இருவரையும் சமாதானம் செய்து வைக்க முயன்றார். அவர், தாரையை விட்டுவிடும்படி சந்திரனிடம் கேட்டுக் கொண்டார். ஆனால் அதற்குள் சந்திரனுக்கும், தாரைக்கும் ஒரு மகன் பிறந்து விடுகிறான். அவன் பெயரே புதன். 

சமாதானத்துக்குப் பின்னர், தாரை, பிரகஸ்பதியிடம் வந்து சேர்ந்தாள். புதன் என்பவன் சந்திரனுக்குப் பிறந்ததால், புதனை சந்திர அம்சமானவன் என்றும் சொல்வர். 

பிரகஸ்பதிக்கு என்று தனியே ஒரு மண்டலம் உள்ளது. அதை பிரகஸ்பதி மண்டலம் என்பர். இது பொன் (தங்கம்) போல இருப்பதால், இந்த பிரகஸ்பதியை, பீதகன் என்றும் பொன் என்றும் சொல்வர். இந்த பிரகஸ்பதி மண்டலத்தில் உள்ளவர்கள் மனிதரைப் போன்றே இருப்பார்களாம். ஆனால், அறிவில் மிகச் சிறந்தவர்களாம். இந்த பிரகஸ்பதி மண்டலம் என்பது இந்த பூமியை விட பல மடங்கு பெரிதாம். ஆனால், மிக லேசான கோள் என்கிறார்கள். இங்கு வசிப்பவர்கள் பறந்து செல்வது போல இருக்குமாம். அவர்களை தேவகணத்தினர் என்றும் சொல்வர். புராணங்களில், பிரகஸ்பதி மண்டலத்தை தேர் என்று வர்ணிக்கின்றனர். இந்த மண்டலத்தைச் சூழ்ந்துள்ள மண்டலங்களை வெள்ளைக் குதிரைகளாக கற்பனை செய்துள்ளனர். அவ்வாறு சூழ்ந்துள்ள மண்டலங்கள் மொத்தம் எட்டு என்கிறது இந்திய புராணங்கள். ஆனால் ஐரோப்பிய ஆராய்ச்சியாளர்கள் அதை ஐந்து என்று சொல்கிறார்கள்.

**

Thursday, October 29, 2020

நாரதர்

 நாரதர் 

நாரதர், இதற்கு முந்தைய கற்பத்தில் (இப்போதுள்ள பிரபஞ்சம் வருவதற்கு முன்னர் இருந்த பிரபஞ்சத்தில்) ஒரு கந்தருவனாகப் (தேவலோகத்தில்) பிறந்தார். அப்போது, பிரம சிரேஷ்டர் என்னும் ஒரு பிராமணர் செய்த யாகத்துக்கு வருகிறார். அங்கு, வீணை வாசித்து எல்லோரையும் வசியம் செய்கிறார். அவ்வாறு இவரின் திறமையைக் காண்பித்து ஒரு பெண்ணை வசியம் செய்து, அவளுடன் உறவும் கொண்டு விட்டார். இதைத் தெரிந்த அந்த பிராமணர், இந்த நாரதன் மீது கோபம் கொண்டு, “நீ சூத்திரனாகப் பிறப்பாய்” என்று சாபம் கொடுத்து விட்டார். அவ்வாறு சூத்திர குலத்தில் பிறந்து, மகா தவம் செய்து, பின்னர் வந்த கற்பத்தில் (பின்னர் தோன்றிய பிரபஞ்சத்தில்) பிரம மானசருக்கு மகனாகப் பிறக்கிறார்.

இந்த நாரதர், தட்ச பிரஜாபதியின் பிள்ளைகளுக்கு ஞான உபதேசம் செய்கிறார். அதனால், அவர்கள் குடும்ப வாழ்க்கையில் ஈடுபாடு கொள்ளாமல் ஆகி விட்டார்கள். வம்ச விருத்தி இல்லாமல் போய் விடுகிறது. இயற்கையின் சிருஷ்டிக்கு எதிராக, நாரதரின் நடவடிக்கை இருந்ததால், தட்சன் கோபம் கொண்டு, “நாரதரே, நீர் சந்ததி இல்லாமல், நிலை இல்லாமல் அலைந்து கொண்டு திரிவாய்” என்று சாபம் கொடுத்து விட்டார். பொதுவாக நாரதர் கலகத்தை உண்டு பண்ணும் குணம் உடையவர். அவர் இருக்கும் இடம் கலகம் ஏற்படும். 

இந்த சாபத்தால், மூன்று உலகங்களான திரிலோகத்திலும் நாரதர் எப்போதும் சுற்றிக் கொண்டே இருப்பார். தன் காதில் எதைக் கேட்டாலும், அதை தன்னுள்ளே வைத்துக் கொள்ள மாட்டார். வேறு ஒருவருக்குச் சொல்லி விடுவார். இதனால் இவர் எங்கு சென்று எதைச் சொன்னாலும் ஒரு பிரச்சனை வந்து விடும். இவர், தேவ சபை, இராஜ சபை, வேள்வி சபை ஆகிய எந்த இடத்துக்கும் அழைக்காமலேயே சென்று விடும் குணமுடையவர். 

இது இல்லாமல், சில நல்ல விஷயங்களையும் செய்வாராம். தனியாக எங்காவது மாட்டிக் கொண்டவருக்கும், திக்கற்று இருப்பவர்களுக்கும், உடனே அங்கு சென்று, அவர்களுக்கு உபாயங்கள் என்னும் அறிவுரைகளையும் உதவிகளையும் செய்யும் குணம் உடையவராம். பின்னர் நிகழ்வதை முன்கூட்டியே கண்டு சொல்லும் திறமையும் இருக்கிறதாம். தூதுவராகச் சென்று சாதுரியமாகப் பேசும் வல்லமை உடையவராம். வீணை வாசிப்பதில் இவருக்கு நிகரானவர் வேறு யாரும் இல்லையாம். 

இந்த நாரதரே, கிருஷ்ணனின் பிறப்பை முன்கூட்டியே, அவன் எதிரியான கம்சனுக்கு உணர்த்தினாராம். அதே போல, இராமாயணத்தை, வான்மீகிக்கு உரைத்தவரும் இவர்தானாம். இவர் ஒரு தேவ ரிஷி. எனவே இவர் சம்மந்தப்படாத புராணங்களே இருக்காது என்பர். 

**

Wednesday, October 28, 2020

தொண்டை மண்டலம்

 தொண்டை மண்டலம்

தொண்டை மண்டலம், கிழக்கே கடலும், மேற்கே பவள மலையும், வடக்கே வேங்கடமும், தெற்கே பினாகி நதியும் எல்லைகளாகக் கொண்டது.  இதன் தலைநகரம் காஞ்சிபுரம்.  சோழ நாட்டைச் சேர்ந்தது. 

நாகப்பட்டினத்தை சேர்ந்த சோழன் ஒரு முறை நாகலோகம் சென்று ,அங்கு நாக கன்னிகையை மணம் புரிந்து, அவள் வயிற்றில் பிறக்கும் மகனுக்கு தனது நாட்டில் பாதியை கொடுப்பதாக வாக்களித்து திரும்பி வந்தான்.   

அவள், “மகனை எப்படி உங்களிடம் அனுப்புவது” என்று நாககன்னிகை கேட்டாள்.  அதற்கு சோழன் “தன்னிடம் இருந்த தொண்டைக் கொடியை அடையாளமாக கட்டிக் கொண்டு வரச் சொல்” என்று சொன்னார்.  அவ்வாறு அவன் மகனும் தொண்டை செடியின் கட்டையை தெப்பமாகக் கட்டிக் கொண்டு, கடல் கடந்து வந்து சேர்ந்தான்.  

சோழன் அவனை வளர்த்து, இந்த தொண்டை மண்டலத்தை அவனுக்கு கொடுத்து முடிசூடினான்.  அவன் தொண்டை கொடி அணிந்து வந்ததால் இது தொண்டை மண்டலம் ஆனது.  இந்த நாட்டில் தான், திருவள்ளுவர், கச்சியப்பர், கம்பர், பரிமேலழகர், ஒட்டக்கூத்தர், ராமானுஜ ஆச்சாரியார், சேக்கிழார், இரட்டையர், அருணகிரிநாதர், பவணந்தி, படிக்காசுப் புலவர், அப்பைய தீட்சிதர், முதலிய தமிழ் அறிஞர்கள் உதித்தனர் அதியமான், கருப்பன், சடையப்ப முதலி, முதலிய பிரபுக்களும் உத்தம அரசர்களும் இங்கு இருந்தனர். தொண்டை நாட்டுப் பெருமையை படிக்காசுப் புலவர் “தொண்டை மண்டல சதகம்” என்று ஒரு நூலாக பாடியுள்ளார்.

“வேதம் உடைத்து மலைநாடு, மேதக்க சோழவள நாடு சோறுடைத்து, பூழியர்கோன் தென்னாடு முத்துடைத்து, தெண்ணீர் வயல் தொண்டை நன்னாடு சான்றோர் உடைத்து” என்று அவ்வையார் இந்த தொண்டை மண்டலத்தை புகழ்ந்து பாடியுள்ளார்.

**


Tuesday, October 27, 2020

திருவாலவாய்

 திருவாலவாய்


மதுரைக்கு மற்றொரு பெயர். திரு ஆலவாய். சர்ப்பம் (பாம்பு) வளைந்து எல்லை இட்டுக் கொடுத்த நகரம் என்பதால், இது திரு ஆலவாய் என்று பெயர் பெற்றது என்றும் சொல்வர். வடமொழியில் இதை ஆலாசியம் என்றும் சொல்வர். 


திருவாலவாய், சிவனின் தலம். சிவன், இங்கு 64 திருவிளையாடல்கள் நடத்திக் காட்டிய இடம். இங்குள்ள சிவனுக்குப் பெயர் சொக்கநாதர். அவர் மனைவிக்குப் பெயர் மீனாட்சி. இதைச் சிறப்பித்து, பரஞ்சோதி முனிவர் தமிழில் பாடிய புராணமே திருவிளையாடல் புராணம். வைகை நதிக்கரையில் உள்ளது. பாண்டியர்கள் காலத்தில் இங்குள்ள சிவாலயம் உருவாக்கப்பட்டது. 


மதுரை உருவாவதற்கு முன்னர், கடம்ப மரங்கள் நிறைந்த காடாக இருந்தது. எனவே இதைக் கடம்பவனம் என்றும் சொல்வர். இந்த கடம் வனத்தில்தான், முதன் முதலில் சிவன் வந்து இருந்தார். அவரை வழிபட தேவர்கள் அனைவரும் அங்கு கூடி விட்டனர். இதைக் கண்ட ஒரு வைசிய வியாபாரி, அதை பாண்டிய மன்னனுக்குக் கூற, மன்னரின் கனவிலும் சிவன் தோன்றி, தனக்கு அங்கு ஒரு ஆலயம் அமைக்கும்படியும், மன்னனுக்கு பெரிய அரண்மனையை ஏற்படுத்தும்படியும் கேட்டதால், பாண்டிய மன்னன், சிவனுக்கு ஆலயமும், பெரிய அரண்மனையும் ஏற்படுத்தி, அதற்கு மதுரை என்று பெயரும் வைத்தான் என்றும் சொல்வர். 

**


சிதம்பரம் தில்லை நடராஜர்

 சிதம்பரம்


பஞ்ச லிங்கங்களுள் ஆகாச லிங்கமாக உள்ள இடம் சிதம்பரம். 


பிண்டமும், பிரமாண்டமும் சமம் என்கிறது. பிண்டம் என்னும் இந்த உடலில் இடப்பக்க நாடியாகிய இடைக்கும், வலப்பக்க நாடியாகிய பிங்கலைக்கும், நடுவில் உள்ள சுழுமுனை நாடியும், பிரமாண்டத்தில் உள்ள நடு இடமான தில்லை என்னும் சிதம்பரம். இங்கு சிவன் ஆனந்த தாண்டவம் புரியும் இடம். 


உடலில் இருக்கும் இருதயம் புண்டரீக வீடு. இருதயத்தில் உள்ளே இருக்கும் பிரம்மமாகிய சிவம் ஆகாயம்.  இதேபோலவே புறத்தில் உள்ள பிரபஞ்ச நிகழ்வும். 


சிதம்பரத்திலே ஞானசபையில் சிவனும் சிவகாமி அம்மையாரும் ஆனந்த தாண்டவம் செய்தனர். சிதம்பரத்தில் எழுந்தருளியுள்ள சிவலிங்கப் பெருமானுக்கு வேத சிவ ஆகம விதிப்படி பூசை செய்பவர்கள் தில்லை வாழ் அந்தணர்கள் மட்டுமே. இவர்கள் ஆரம்பத்தில் மூவாயிரம் பேர் இருந்தனர். 


சிதம்பரம் என்பதன் பொருள் ஞான ஆகாசம். 

**


சஞ்சீவி மலை எங்கு உள்ளது

 சஞ்சீவி மலை எங்கு உள்ளது


சப்த தீவுகள் என்னும் ஏழு தீவுகளில் ஒன்று தான் சான்மலி தீவு. இந்த தீவு, சுரா சமுத்திரம் என்னும் கடலுக்கு நடுவில் உள்ளதாம். அங்கு முள் மரங்களான இலவ மரங்கள் அதிகம் இருக்குமாம். அதனால்தான் அந்த தீவுக்கு சான்மலி தீவு என்று பெயர் ஏற்பட்டதாம். 


குமுதம், உன்னதம், பலாஹம், துரோணம், கங்கம், மகிஷம், ககுத்துமான் என ஏழு மலைகள் அங்கு உள்ளனவாம். அங்குள்ள நதிகளுக்குப் பெயர்கள் யோனி, தோயை, விதிருஷ்ணை, சந்திரை, சுக்கிலை, விமோசினி, நிவர்த்தி என்னும் ஏழு நதிகள் உள்ளனவாம். 


இங்கு வசிப்பவர்கள் நிறத்தால் நான்கு பிரிவினர் என்பர். அவர்களை, கபிலர், அருணர், பீதர், கிருஷ்ணர் என்று நான்கு வகைப் படுத்தி உள்ளார். அவர்கள் வாயுவை கடவுளாக வழிபடுபவர்கள். 


அது இப்போதுள்ள ஆஸ்திரேலியா தீவாக இருக்கலாம் என்று ஆராய்ச்சியாளர்கள் முடிவு செய்துள்ளனர். அனுமன் இந்த தீவுக்கு வந்துதான், சஞ்சீவி மலையை பெயர்த்து எடுத்துக் கொண்டு வந்தார் என்று புராணம் சொல்கிறது. 


யமனின் தூதர்கள் இங்கு இருப்பார்கள் என்றும், பாவம் செய்தவர்களை இங்கு கொண்டு வந்து, இந்த முள் காடுகளில் புகுத்தி கொடுமைப்படுத்துவது நடக்கும் என்றும் ஒரு கதை உண்டு. 

**


சாங்கிய மதம்

 சாங்கியம்


ஏழு மதங்களில் இந்த சாங்கியமும் ஒன்று. கபிலர் ஏற்படுத்திய மதம் என்பர். இது ஒரு யோக மார்க்க நூல். இது இரண்டு வகைப்படும். நீரீச்சுவர சாங்கியம் என்றும், சேச்சுவர சாங்கியம் என்றும் சொல்வர். அத்வைத நடைமுறைகளைக் கூறுவது சேச்சுவர சாங்கியம். 


சாங்கிய மதத்தில், தத்துவங்களை 25 ஆக்கி உள்ளனர். மாயா பந்த பாசத்திலிருந்து நீங்குவதே முக்தி என்று கூறுகிறுத இந்த சாங்கிய மதம். மற்றொரு மதமான, வேதாதந்த மதம், பரமாத்மாவை விட வேறு ஒன்றும் இல்லை என்று சொல்கிறது. சாங்கிய மதம், பரமாத்மாவும், ஆன்மாவும் வேறு வேறு என்கிறது.

**


காயத்திரி மந்திரம்

 காயத்திரி மந்திரம்

சரஸ்வதி - பிரம்மாவின் மனைவி. இவரைப் பிரம்மாவே படைத்து மனைவியாக ஆக்கிக் கொண்டாராம். சரஸ்வதி வித்தைக்கு அதி தேவதை. இவரை சரஸ்வதி என்றும், சாரதாதேவி என்றும், காயத்திரி என்றும் அழைப்பர். இவர் நான்கு கைகளை உடையவர். ஒரு கையில் அட்சமாலையும், ஒரு கையில் கிளியும், ஒரு கையில் கமலம் என்னும் தாமரை மலரையும், ஒரு கையில் புத்தகத்தையும் வைத்திருப்பார். நான்கு வேதங்களும் இவரின் நான்கு கைகள் என்றும் சொல்வர். 


இவரின் உடலை ஒரு காரண காரியமாகச் சொல்வர். அதாவது, உபநிஷதம் இவரின் தலை என்றும், பிரமவித்தை இவரின் முகம் என்றும், இலக்கணமும், கணிதமும் இவரின் இரு கண்கள் என்றும், சங்கீத-சாகத்தியங்கள் இவரின் இரு தனங்கள் என்றும், ஸ்மிருதி இவரின் வயிறு என்றும், புராண-இதிகாசங்கள் இவரின் பாதங்கள் என்றும், ஓங்காரம் இவரின் யாழ் என்றும், கூறுவர்.


ஒரு யாகத்துக்கு, சரஸ்வதி வருவதற்கு காலதாமதம் செய்து விட்டார். உடனே கணவர் பிரம்மா கோபம் கொண்டு, ஒரு இடைச்சியை காயத்திரியாக ஆக்கி விட்டாராம். அவளையே தனது இரண்டாம் மனைவியாகவும் ஆக்கிக் கொண்டாராம். அதனால் கோபம் கொண்ட சரஸ்வதி, தேவர்களை எல்லாம் சபித்து விட்டாராம். அதனால்தான், தேவர்கள், தினமும், காலை மாலை இருவேளையிலும் காயத்திரி மந்திரத்தை சொல்லி வருகிறார்களாம். 


காயத்திரி மந்திரத்தில் உள்ள வர்ணனை, சிவனையும் குறிக்கும், அதே நேரத்தில் விஷ்ணுவையும் குறிப்பது போலவே இருக்குமாம். எனவே சைவர்களும், வைஷ்ணவர்களும் அதைத் தங்களுக்கு உரியதாகவே ஏற்றுக் கொள்வார்கள். 


வேதத்தைப் பசுவாகவும், அதன் சாரத்தை பாலாகவும் அடக்கி இருப்பது காயத்திரி மந்திரம் என்பர். எனவே தான் அதை இடைக்குல பெண்ணாக உருவகம் பண்ணினர் என்றும் சொல்கிறார்கள். ஒரு நதியின் பெயரும் காயத்திரி என்ற பெயரில் உள்ளது.

**


Monday, October 26, 2020

எஸ்டப்பல் Estoppel

 Estoppel எஸ்டப்பல்: 

மறுதலித்தல் அல்லது ஏற்கனவே சொன்னதை பின்னர் மறுப்பது:


"முன்னர் சொன்ன சொல்லை, பின்னொரு சந்தர்ப்பத்தில் மறுக்க முடியாது" -- இது ஒரு சட்டம். இதை "எஸ்டப்பல்"  Estoppel என்பர்.


உதாரணமாக--

ஒரு வழக்கில், ஒருவர், "இவர் என் மனைவி" என்று சொல்லி விட்டால், மற்றொரு சந்தர்ப்பத்தில் அல்லது மற்றொரு வழக்கில், "அவள் என் மனைவி இல்லை, அவள் என் வைப்பாட்டி" என்று மாற்றி சொல்ல முடியாது. ஏனென்றால், எஸ்டப்பல் என்ற சட்டத் தடை உள்ளது. 


பைபிளில்:

இயேசுநாதர், தன்னை சிலுவையில் அறைந்து தண்டிப்பதற்கு முதல்நாள், அவர் தன் சீடர்களுடன் இரவு உணவு அருந்தினார். அவருடன் மொத்தம் 13 பேர்கள் இரவு உணவு உண்டனர். இந்த நிகழ்வை த லாஸ்ட் சப்பர் (The Last Supper) என்று சொல்வார்கள். அப்போது இயேசுநாதர், "இந்த இரவு முடிவதற்குள் என்னை ஒருவன் மறுதலிபான் (அதாவது என்னை அவனுக்கு தெரியாது என்று சொல்வான்)" என்று சொன்னார். அதேபோலவே யூதாஸ் என்பவன் இயேசு நாதரை காட்டிக் கொடுத்தான். தனக்கும் ஏசுநாதரும் எந்த சம்பந்தமும் இல்லை என்று சொல்லிவிட்டான் அவன் அப்படி பேசியது சட்ட விதிகளின்படி எஸ்டபல் (Estoppel) வகையைச் சேரும்.


Estoppel என்ற மறுதலிக்கும் செயல் சார்ந்த இந்தச் சொல்லை வாய்மொழியாகவும் உறுதி கூறியிருக்கலாம்; அல்லது சொல்லாமல் செய்கைகள் மூலம் தெரிவித்திருக்கலாம்.


பைபிளில் ஒரு கதை உண்டு.

ஒருவன், தாய் மாமன் ஊருக்கு வருகிறான். அங்கு தாய்மாமனுக்கு இரண்டு பெண்கள். அதில் சிறியவள் மிக அழகாக இருப்பாள். பெரியவள் அவ்வளவு அழகில்லை. மாமனிடம், அவரின் சின்னப் பெண்ணை திருமணம் செய்து கொடுக்கும்படி கேட்பான். 


அவரோ, "மருமகனே! நீ, என் வீட்டில் ஐந்து வருடங்கள் ஆடு மேய்த்துக் கொண்டிருந்தால், என் சின்னப் பெண்ணை உனக்கு திருமணம் செய்து கொடுக்கிறேன்" என்று கூறுகிறார். இவனும் அதை நம்பி, 5 வருடங்கள் ஆடு மேய்க்கிறான்.


அன்று இரவில் இவனுக்குத் திருமணம் முடிந்தது. இரவில் ஒரு குடிசையில் மனைவியுடன் தனிமை. இருட்டில் ஒன்றும் தெரியவில்லை. விடிந்து பார்த்தால், அவள் சின்னப் பெண் இல்லை; மாமனாரின்  பெரியபெண். 


உடனே மாமனிடம் சென்று, "நீங்கள் என்னை ஏமாற்றி விட்டீர்கள்; நம்பிக்கை துரோகம் செய்துவிட்டீர்கள்; உங்களின் சின்னப் பெண்ணை திருமணம் செய்து கொடுப்பீர்கள் என்ற முழு நம்பிக்கையில்தான் நான் உங்களின் ஆடுகளை மேய்த்தேன்" என்ற புலம்புகிறான். 


மாமனோ, எதற்கும் கவலைப்படாமல், "மருமகனே! அதற்கென்ன, இன்னும் ஒரு ஐந்து வருடம் என் வீட்டு ஆடுகளை மேய்த்தால், சின்னப் பெண்ணையும் உங்களுக்கே திருமணம் செய்து கொடுக்கிறேன்; கவலைப் படாதீர்கள்" என்று சொல்லிவிட்டார். அவனும் அடுத்த 5 வருடத்திற்கு ஆடு மேய்கிறான்.... இப்படியாகப் போகிறது பைபிள் கதை.


"உனக்கு எனச் சொல்லிவிட்டு, பின், பேச்சை மாற்றக் கூடாது" என்பதைத்தான் எஸ்டாபெல்-Estoppel என்ற சட்டவிதி கூறுகிறது.


இதேபோல, 2009ல் லண்டனில் ஒரு வழக்கு:

டேவிட் என்பவர் பம்பரமாக வேலை செய்யும் ஒரு விவசாயி. 30 வருடங்களாக தன் பெரியப்பா மகனான பீட்டரின் பண்ணையில் வேலை பார்த்து வருகிறார். முழுப் பொறுப்பும் டேவிட்தான். சம்பளமெல்லாம் கிடையாது. 


பீட்டர் அவ்வப்போது, "எனக்குப் பின், இந்தப் பண்ணைக்கு நீதான் உரிமையாளன்" என்று டேவிட்டை குளிர்ச்சி ஊட்டிக் கொண்டிருப்பார். அதை நம்பிய டேவிட் மாடாக உழைத்தார். இப்படிச் சொல்லியே 2005ல் இறந்து விட்டார் பீட்டர். 


பீட்டர், உயிலும் எழுதி வைக்கவில்லை. பீட்டரின் இந்த உறுதிமொழியை வைத்து, வேலை பார்த்து வந்த டேவிட் இந்த சொத்துக்களை கேட்கிறார்.


 உயிருடன் இருக்கும்போதே, எனக்குத் தான் சொத்து என்று சொல்லி என்னை நம்ப வைத்துள்ளார். எனவே எஸ்டபெல் சட்டவிதிப்படி எனக்குத் தான் சொத்து கிடைக்க வேண்டும் என்று வாதாடுகிறார். கீழ்கோர்ட் இவர் சொல்வது சட்டப்படி சரியே என்று இவருக்கு சொத்தை கொடுத்துவிட்டது. ஆனால் அப்பீல் கோர்ட் மறுத்து விட்டது. எனவே டேவிட், ஹவுஸ் ஆப் லார்டு கோர்ட்டுக்கு (House of Lords) அப்பீல் செய்கிறார். 


லார்டு கோர்ட், "பீட்டர், நேரடியாகச் சொல்லி இருந்தாலும், மறைமுகமாகச்  சொல்லியிருந்தாலும், இது எஸ்டாபெல் என்ற சட்டவிதியின் கீழ் வரும். எனவே டேவிட்டுக்குத்தான் அந்தச் சொத்து என்று தீர்ப்பு கூறிவிட்டது.