Monday, October 31, 2016

இதோபதேசம்-1

இதோபதேசம்-1
பீனிக்ஸ் பறவை: Phoenix or Phenix: கிரேக்க இதிகாசத்தில் இதைப் பற்றிய பெருமை பேசப்பட்டுள்ளது; நூறு ஆண்டுகளுக்கு மேல் வாழும் பறவை; வானில் உயரத்தில் பறந்து கொண்டே இருக்கும்; தரை இறங்காது; நூறு ஆண்டுகள் கடந்து, ஒரு நேரத்தில்  நெருப்பில் குதித்துச் சாம்பலாகும்; அந்த சாம்பலில் இருந்தே மறுபடியும் உயிர்த்தெழும்; இது சூரியனைத் தேடிப் பயணிக்கும் என்று கிரேக்க இதிகாசத்தில் சொல்லப் பட்டுள்ளது; இதிகாசத்தில் இது 1400 ஆண்டுகளுக்கு மேலும் வாழும் பறவை என்று சொல்லப் பட்டுள்ளது; இந்துக்களின் இதிகாசத்தில் இதை கருடனுக்கு ஒப்பிடுவர்;
இரானிய இதிகாசத்தில் இதை Homa or Huma என்கிறார்கள்; இந்த ஒரே பறவையிலேயே ஆணும் பெண்ணும் கலந்து ஒரே பறவையாகவே இருக்குமாம்!
இந்தப் பெயர் கொண்ட பெண்மணியான ஹூமா அபதின் Huma Abedin அமெரிக்க அதிபர் தேர்தல் பிரச்சாரத்தில், கிளாரி கிளின்டனுக்கு 24 மணி நேரமும் கூடவே இருந்து உதவி வந்தவர்; இப்போது தலைவலி ஆகி விட்டார்;
கிளாரி கிளின்டனுக்கு அரசியல் உதவியாளராக வெகுகாலம் ஹூமா இருக்கிறார்; எப்போதும் கூடவே இருப்பார்: இவரின் தந்தை பழைய பிரிட்டீஸ் இந்தியாவில் டெல்லி பகுதியைச் சேர்ந்தவர்; இவரின் தாயார் பழைய பிரிட்டீஸ் இந்தியாவின் பாகிஸ்தான் பகுதியைச் சேர்ந்தவர்; இந்தப் பெண் பிறந்து அவரின் 2-வது வயதில் அந்தக் குடும்பம் சவுதி அரேபியா சென்று விட்டது; பெற்றோர்களும் பெரிய படிப்பாளிகள்; பின்னர் இந்தப் பெண், அவரின் 18 வயதில், பட்டப் படிப்புக்காக அமெரிக்காவில் உள்ள பெனிசில்வேனியா பல்கலையில் பி.எச்.டி பட்டம் பெறுகிறார்; பல மொழிப் புலமை கொண்ட பெண்; பெரிய அறிவாளியும் கூட! அமெரிக்க அதிபர் மாளிகையான ஒயிட் ஹவுஸில் வேலைக்குச் சேருகிறார்; அப்படியே கிளாரி கிளின்டனுக்கு உதவியாளராக இதுவரை பணியாற்றி வருகிறார்;
கிளாரி கிளின்டனும், “ஹூமா எனது இன்னொரு மகள்” என்று வாஞ்சையுடன் குறிப்பிட்டுள்ளார்; ஹூமா, அங்கு வசிக்கும் அந்தோனி வெய்னர் என்ற யூத இளைஞரை திருமணம் செய்கிறார்; இந்த திருமணத்தை, குடும்ப உறுப்பினர் என்ற முறையில், அதிபர் கிளன்டன் நடத்தி வைத்தார்;
கிளாரி கிளின்டனின் ஈமெயில் வேலைகளை இந்த ஹூமா உதவி வருகிறார்; 2012-ல் லிபியாவில் நடந்த பென்கசியில் உள்ள அமெரிக்க தூதரகத் தாக்குதலில் அமெரிக்க தூதர் கொல்லப்படுகிறார்: அதில் கிளாரி கிளின்டன் பொறுப்பாக செயல்படவில்லை என அவர் மீது தொடர்ந்து குற்றம் சாட்டப்படுகிறது; அதில் அரசாங்க ஈமெயில் கணக்கில் மெயில்கள் அனுப்பாமல் கிளாரியின் தனி ஈமெயில் கணக்கிலிருந்து தகவல் அனுப்பி, பாதுகாப்புக்கு பங்கமாக இருந்ததாக குற்றம் சாட்டப்படுகிறது; எனவே அந்த ஈமெயில்களை போலீஸ் பார்வையிட்டு அதில் குறைகள் ஒன்றும் இல்லை என்றும், தனியார் ஈமெயில் கணக்கில் அனுப்பியது தவறான செயல் என்று மட்டும் குறை சொல்லி விட்டுவிட்டது;
ஆனால் இப்போது, தேர்தல் நேரத்தில் மறுபடியும் தூசு தட்டி அந்தப் பிரச்சனை மீண்டும் எடுக்கப்படுகிறது; மேலும் சில ஈமெயில்களை பார்வையிட உத்தரவு இட்டது: ஏனென்றால், இந்த ஈமெயில்களில் சில சிறுவயது பெண்களுக்கு அசிங்கமான படங்கள் அனுப்ப பட்டதாகவும் புகார்;
அந்த ஈமெயிலில் ஹூமாவுக்கு எந்த தொடர்பும் இல்லாதபோதிலும், அவரின் கணவர் அந்தோனி வெய்னருக்கு தொடர்பு இருக்கும் என நினைக்கின்றனர்; ஏனென்றால், ஏற்கனவே இந்த அந்தோனி அப்படிப்பட்ட செயல்களில் ஈடுபட்டிருக்கிறார்; அவரும் பொறுப்பான எம்.பி.யாக இருந்தவர்; ஆனாலும் அவரின் ட்விட்டர் கணக்கில் சில சிறு வயது பெண்களுக்கு அசிங்கமான படங்களை அனுப்பி மாட்டிக் கொண்டார்; இருந்தாலும், அவரின் மனைவியான ஹூமா கணவரை மன்னித்து அவருடன் இதுவரை வாழ்ந்து வந்தார்;
ஆனால், இப்போதும் அதை தொடர்ந்து ஒரு பெண்ணுக்கு இவரின் அசிங்கமான படத்தை அனுப்பியது தெரிந்ததால், அவருடன் வாழாமல் விலகி விட்டார்; அவர்களுக்கு நான்கு வயதில் ஒரு மகன் இருக்கிறான்;
இப்போது, கிளாரி ஈ-மெயில் விவகாரம் தேர்தல் நேரத்தில் சூடு பிடித்து, கிளாரிக்கு இருக்கும் ஓட்டு எண்ணிக்கை குறைய வாய்ப்பு உள்ளதாக சிலர் கருதுகின்றனர்;
மனைவி கம்யூட்டரை கணவன் உபயோகப்படுத்துவது சாதாரண விஷயம்தான்! ஆனால், அரசாங்க விவகாரத்தில் இப்படி இருக்க கூடாது என்றும், அமெரிக்க பாதுகாப்பு விஷயத்தில் கிளாரியின் உதவியாளரான ஹூமா இப்படி நடந்து கொண்டது தவறு என்றும் எதிர் கட்சி வேட்பாளரான டொனால்டு ஆதரவாளர்கள் போர்கொடி தூக்குகின்றனர்;
அமெரிக்க எப்.பி.ஐ. என்னும் புலனாய்வு ஏஜென்சியின் தலைவர் ஜேம்ஸ் காமே, இதை தேர்தல் நேரத்தில் பெரிதாகப் பேசி வருவது தேர்தல் நடவடிக்கைகளையும், தேர்தல் தர்ம நியாத்திற்கும் எதிரான செயல் என்று கிளின்டன் கட்சி ஆதரவாளர்கள் கூறி வருகின்றனர்;
ஹூமா என்ற பீனிக்ஸ் பறவை மறுபடியும் புத்துயிர் பெற்று கிளாரியுடன் சேர்ந்து பணியாற்றுவாரா என்று தேர்தலுக்குப் பின்னர் பார்க்கலாம்!

**

Friday, October 28, 2016

கந்தரலங்காரம்-9

கந்தரலங்காரம்-9

தேன் என்று பாகு என்று உவமிக்க ஒணா மொழித் தெய்வவள்ளி
கோன் அன்று எனக்கு உபதேசித்தது ஒன்று உண்டு கூறவற்றோ
வான் அன்று, கால் அன்று, தீ அன்று, நீ அன்று, மண்ணும் அன்று,
தான் அன்று, நான் அன்று, அசரீரி அன்று, சரீரி அன்றே!

(தேன் என்றும், பாகு என்றும் உவமை சொல்ல முடியாத இனிய சொல்லை உடைய தெய்வ கன்னியாகிய வள்ளியின் பதி (கணவர்) ஆகிய முருகா, நீ எனக்கு அந்நாளில் உபதேசம் செய்தது என்னவென்று என்னால் கூறமுடியவில்லையே! "அது வான் என்னும் வானமும் இல்லை, கால் என்னும் காற்றும் இல்லை, தீ என்னும் நெருப்பும் இல்லை, நீர் என்னும் சலமும் இல்லை, மண் என்னும் பூமியும் இல்லை, தான் என்னும் நாம் இல்லை, நான் என்னும் நானும் இல்லை, அசரீரி என்னும் சரீரம் இல்லாத பொருள் இல்லை, சரீரி என்னும் (தொடும் பொருள்) இல்லையே!)
(அருணகிரிநாதர் அருளிய கந்தரலங்காரம் பாடல்-9)
**


கந்தரலங்காரம்-8

கந்தரலங்காரம்-8

ஒளியில் விளைந்த உயர் ஞான பூதரத்து உச்சியின் மேல்
அளியில் விளைந்த ஒர் ஆனந்தத் தேனை அநாதியிலே
வெளியில் விளைந்த வெறும் பாழைப் பெற்ற வெறுந் தனியைத்
தெளிய விளம்பியவா, முகம் ஆறுடைத் தேசிகனே!

(ஒளி என்னும் பரஞ்சோதியில் உண்டாகிய உயர்வான ஞான மலையின் உச்சியில், உன் அருளினால் உண்டான ஒப்பற்ற ஆனந்தத் தேன் என்னும் பேரின்பத்தை, அநாதி என்னும் சுத்த வெளியான சிவனிடத்தில், வெறும் பாழை என்னும் சுத்தப் பிரணவத்தை, தெளிவாக விளக்கிச் சொல்லிய ஆறு முகங்கள் கொண்ட தேசிகன் என்னும் என் குருமூர்த்தியே கந்தா!)
(அருணகிரிநாதர் அருளிய கந்தரலங்காரம் பாடல்-8)

**

கந்தரலங்காரம்-7

கந்தரலங்காரம்-7

சளத்தில் பிணிபட்டு அசட்டுக் கிரியைக்குள் தவிக்கும் என் தன்
உளத்தில் ப்ரமத்தைத் தவிர்ப்பாய், அவுணர் உரத்து உதிரக்
குளத்தில் குதித்துக் குளித்துக் களித்துக் குடித்து வெற்றிக்
களத்தில் செருக்கிக் கழுது ஆட  வேல் தொட்ட காவலனே!

(சளம் என்னும் இந்த மாயப் பொய் வாழ்வில் சிக்கிக் கொண்டு, அசட்டுக் கிரியை என்னும் இந்த இழிவான தொழிலினுள்ளே கிடந்து, தவிக்கும் எனது உள்ளத்தில், ப்ரமம் என்னும் மயக்கத்தை நீங்குவாய் கந்தா! அவுணர் என்னும் அரக்கர்களின் மார்பிலிருந்து சொரியும் ரத்தக் குளத்தில் குதித்து, அதில் குளித்து, அதனால் துள்ளி ஆனந்தக் கூத்தாடி, அதைக் குடித்து, அந்த வெற்றிக் களத்தில் செருக்கு கொண்டு, கழுது என்னும் பேய்கள் ஆடும்படி, உன் வேலைச் செலுத்தி என்னைக் காப்பாற்று கந்தா!)
(அருணகிரிநாதரின் கந்தரலங்காரம் பாடல்-7)

**

கந்தரலங்காரம்-6

கந்தரலங்காரம்-6

பெரும் பைம் புனத்தினுள் சிற்றேனல் காக்கின்ற பேதை கொங்கை
விரும்பும் குமரனை மெய் அன்பினால் மெல்ல மெல்ல உள்ள
அரும்பும் தனிப் பரமானந்தம் தித்தித்து அறிந்த அன்றே
கரும்பும் துவர்த்துச் செந்தேனும் புளித்து அறக் கைத்ததுவே!

(பெரும் பைம் புனம் என்னும் பரந்த பச்சை காட்டில், சிற்றேனல் என்னும் சிறு தினைக் கதிர்களைக் காக்கின்ற பேதை வள்ளியின் கொங்கைகளை விரும்பும் குமரக் கடவுளே! மெய் அன்பினால், மெல்ல மெல்ல உன்னை நினைக்க, உன் தோற்றம் அரும்பி, எனக்குப் பேரின்பம் தோன்றும்! அப்போது, எனக்கு கரும்பும் துவர்க்கும், செந்நிறந் தேனும் புளித்துக் கசக்குமே!
(அருணகிரிநாதர் அருளிய கந்தரலங்காரம் பாடல்-6)

**

கந்தரலங்காரம்-5

கந்தரலங்காரம்-5

திருந்தப் புவனங்கள் ஈன்ற பொற் பாவை திரு முலைப் பாலை
அருந்திச் சரவணப் பூந்தொட்டில் ஏறி அறுவர் கொங்கை
விரும்பிக் கடல் அழக் குன்று அழச் சூர் அழ விம்மி அழும்
குருந்தைக் குறிஞ்சிக் கிழவன் என்று ஓதும் குவலயமே!

(புவனங்கள் என்னும் இந்த பிரபஞ்சம் உய்யும்படி அவைகளைத் தோற்றுவித்த பொற்பாவை போன்ற உமாதேவியின் திருமுலைப் பாலை அருந்தி, சரவணப் பொய்கையில் பூந்தொட்டிலில் குழந்தையாகக் கிடந்து, கார்த்திகைப் பெண்கள் என்னும் ஆறு பெண்களின் பால் உண்ண விரும்பி, கடல் அழ, குன்று அழ, சூரன் கலங்கி அழ, குருந்தை என்னும் பச்சிளம் குழந்தையாக விம்மி அழும் குறிஞ்சிக் கிழவன் என்று உலகம் (குவலயம்) துதிபாடும்  மலைநாட்டுக் கிழவனே கந்தா!)
(அருணகிரிநாதர் அருளிய கந்தரலங்காரம் பாடல்-5)

**

கந்தரலங்காரம்-4

கந்தரலங்காரம்-4

ஓர ஒட்டார், ஒன்றை உன்ன ஒட்டார், மலர் இட்டுத் தாள்
சேர ஒட்டார், ஐவர் செய்வது என் யான், சென்று  தேவர் உய்யச்
சோர நிட்டூரனைச் சூரனைக் காருடல் சோரிக் கக்கக்
கூர கட்டாரி இட்டு இமைப் பொழுதினில் கொன்றவனே!

(ஓர ஒட்டார் = ஒன்றை ஆராய விட மாட்டார்; உன்ன ஒட்டார்  = ஒன்றை எண்ண விட மாட்டார்; மலர் இட்டு உனது திருவடியைச் சேர விடமாட்டார்; ஐவர் என்னும் ஐம்புலன்களாகிய பகைவர்கள் இப்படி என்னை துன்பப் படுத்துகிறார்கள்; அடியேன் என்ன செய்வது? தேவர்கள் பிழைப்பதற்காக, சேர நிட்டூரச் சூரன் என்னும் கள்வனும் கொடியவனுமாகிய சூரன் என்பவனை, அவனின் கார் உடல் என்னும் கரிய உடலை, ரத்தம் கக்கும்படி (சோரி கக்க), கூரிய உன் வேல் கொண்டு, ஒரு இமைப் பொழுதினில் கொன்றவனே முருகா!)
(அருணகிரிநாதர் அருளிய கந்தரலங்காரம் பாடல்-4)

**

கந்தரலங்காரம்-3

கந்தரலங்காரம்-3

தேர் அணி இட்டுப் புரம் எரித்தான் மகன் செங்கையில் வேல்
கூர் அணி இட்டு அணுவாகிக் கிரௌஞ்சம் குலைந்து அரக்கர்
நேர் அணி இட்டு வளைந்த கடகம் நெளிந்து சூர்ப்
பேர் அணி கெட்டது தேவேந்த்ர லோகம் பிழைத்ததுவே!

(தேர் அணி என்னும் தேர்ப் படைகளைக் கொண்டு புரம் என்னும் முப்புரத்தையும் எரித்தவனான சிவபெருமானின் மகனான முருகனின் சிவந்த கையில் உள்ள வேலாயுதத்தின் கூரிய நுனியானது, சீறிச் சென்று, கிரௌஞ்சம் என்னும் பெரும் மலையை, அணு அணுவாக தூள் தூளாக்கி பொடியாக்கி தகர்த்து, அரக்கர்கள் நேராக அணி வகுத்து நின்ற அவர்களின் சேனையை நெளித்தது; அதனால் சூரனின் பெரிய படை அழிந்தது; அதனால் தேவேந்திர லோகமே பிழைத்தது!)
(அருணகிரிநாதர் அருளிய கந்தரலங்காரம் பாடல்-3)

**

கந்தரலங்காரம்-2

கந்தரலங்காரம்-2

அழித்துப் பிறக்க ஒட்டா அயில் வேலன் கவியை அன்பால்
எழுத்துப் பிழையறக் கற்கின்றிலீர்! ஏரி மூண்டது என்ன
விழித்துப் புகை எழப் பொங்கு வெண் கூற்றன் விடும் கயிற்றால்
கழுத்தில் சுருக்கிட்டு இழுக்கும் அன்றோ கவி கற்கின்றதே!

(அடுத்த பிறவிகள் வேண்டும் என்ற ஆசையை அழித்து, மீண்டும் பிறவி எடுக்க விடாமல், அயில் வேலன் என்னும் கூரான  வேலாயுதத்தை உடைய கடவுளைப் பற்றிய கவிதையை, அன்போடு, எழுத்துப் பிழை இல்லாமல் ஓதிவர விருப்பமில்லாமல் இருக்கின்றீர்கள்!  ஏரி என்னும் நெருப்பு பற்றி எரிவது போல, கண்களை உருட்டி விழித்து, புகை எழுமாறு கொதிக்கின்ற, வெம் கூற்றன் என்னும் கொடிய யமன் விடும் கயிற்றால், கழுத்தில் சுருக்கு மாட்டி, உங்களை இழுப்பான் யமன்! எனவே நீங்கள் (முருகனைத் தவிர) வேறு கவிகளை ஓதலாமா?)
(அருணகிரிநாதர் அருளிய கந்தரலங்காரம் பாடல்-2)

**

கந்தரலங்காரம்-1

கந்தரலங்காரம்-1

பேற்றைத் தவம் சற்றும் இல்லாத வென்னைப் பிரபஞ்சம் என்னும்
சேற்றைக் கழிய வழிவிட்டவா! செஞ்சடா  அடவி மேல்
ஆற்றைப் பணியை இதழியைத் தும்பையை அம்புலியின்
கீற்றைப் புனைந்த பெருமான் குமாரன் க்ருபாகரனே!

(புண்ணியம் என்னும் பேரும், தவமும் சிறிதும் இல்லாத என்னை, பிரபஞ்சம் என்னும் இந்த சேறு நிறைந்த உலகிலிருந்து விலக வழி விட்டவனே! செம்மையான (சிவந்த) சடையை உடைய, காடு போல் உள்ள சடையில் கங்கையையும், பாம்பையும், கொன்றை மலரையும், தும்பை பூவையும், சந்திரனின் பிறையையும், அணிந்த பெருமானான சிவபெருமானின்  குமாரனான  கிருபாகரனே (முருகனே) உன்னை வணங்குகிறேன்!
(அருணகிரிநாதர் அருளிய கந்தரலங்காரம் பாடல்-1)

**

கந்தரலங்காரம் (காப்பு)

கந்தரலங்காரம் (காப்பு)

அடல் அருணைத் திருக்கோபுரத்தே அந்த வாயிலுக்கு
வடவருகில் சென்று கண்டு கொண்டேன்: வருவார் தலையில்
தட பட எனப் படு குட்டுடன் சர்க்கரை மொக்கிய கைக்
கட தட கும்பக் களிற்றுக்கு இளைய களிற்றிணையே!

(அடல் என்னும் வலிமை பொருந்திய அருணைத் திருக்கோபுரம் என்னும் திருவண்ணாமலைக் கோபுரத்திலே, அந்த வாயிலுக்கு வடக்கில் சென்று கண்டு கொண்டேன்; அங்கு வருபவர்கள் தலையில் தட பட என்று ஓசை எழும்படி தலையில் குட்டிக் கொண்டு, சர்க்கரையை வாயில் மொக்கிக் கொண்டு, அதன் கையோடு, கடதடக் கும்பக் களிறு என்னும் மதம் பொருந்திய அகன்ற மத்தகத்தை உடைய யானை முகக் கடவுளான விநாயகருக்கு  இளையவரான  யானை போன்ற சுப்பிரமணியக் கடவுளை கண்டு கொண்டேன்.)

(அருணகிரிநாதர் அருளியது)
**



Tuesday, October 25, 2016

திருவாரூர் மூலஸ்தானம்

திருவாரூர் மூலஸ்தானம் (தியாகராயப் பெருமான்)

“திருவாரூர் பிறந்தவர்களுக்கு எல்லாம் நான் அடியேன்” என்று சுந்தரர் உறுதி எடுத்து துதிக்கப்பட்ட தலமே இந்த திருவாரூர் மூலஸ்தானம்;

இந்திரனிடமிருந்து முசுகுந்த சக்கரவர்த்தி இந்த தியாகராயப் பெருமானைப் பெற்று ஸ்தாபித்த தலமாம்! சப்த ஸ்தலங்களில் இதுவும் ஒன்றாம்!

இந்த திருவாரூர் என்னும் நகர், சோழ மன்னர்களுக்கு வெகுகாலம் ராஜதானியாக (தலைநகராக) இருந்து வந்ததாம்; மனுநீதி சோழன் அரசு செய்யும் காலத்தில், தன் மகன் தேரில் செல்லும்போது ஒரு பசுவின் கன்றை, அவனின் தேர் சக்கரம் தெரியாமல் ஏற்றிக் கொன்றதால், அவனை அதே தேர்காலில் இட்டுக் கொன்று, அந்தப் பசுவின் துயர் தீர்த்தவன் மனுநீதிசோழன்;

அவனின் நேர்மைக்கண்டு இறந்த அந்த பசுவின் கன்றையும், சோழனின் மகனையும் உயிர்பித்தார் சிவன்; அத்தகைய கீர்த்தி பெற்ற தலமே திருவாரூர் மூலஸ்தானம்;

இங்கு குடிகொண்டிருக்கும் சுவாமியின் பெயர்: சுவாமி வன்மீகநாதர்: அம்மையின் பெயர்: அல்லியங்கோதை;



Friday, October 21, 2016

துர்க்கை

துர்க்கை:

துர்க்கை என்றால் துர்க்காதேவி; பார்வதி தேவிக்குக்குத்தான் இந்தப் ப
பெயர்;  துர்க்கன் என்னும் ஒரு பெரிய அசுரனைக் கொன்றதால் பார்வதி தேவிக்கு துர்க்கை என்று பெயர் ஏற்பட்டது;

துர்க்கன் என்னும் இந்த மகா அசுரன், தேவ லோகத்தில் அட்டகாசம் செய்கிறான்; இந்திரன் முதலிய எல்லாத் தேவர்களும்  தங்கள் பதவிகளை விட்டுவிட்டு ஓடி ஒளிந்து கொண்டனர்; அந்த அளவுக்கு அவனின் அட்டகாசம் கட்டுக்கடங்காமல் போய்விட்டது; தேவர்கள் எல்லோரும் சிவபெருமானிடம் முறையிடுகிறார்கள்; சிவனோ, பார்வதி தேவியைப் பார்க்கிறார்; பார்வதி தேவி, தானே அந்த அசுரனைக் கொல்வதாக  உறுதி கொள்கிறார்;

பார்வதிதேவி, தன்னிடம் இருக்கும்  “காலராத்திரி” என்னும் பாங்கிப் பெண்ணை ஏவுகிறார்; அவள் சென்று, அந்த அசுரனின் சேனைகளைப் பார்த்து பயந்து கொண்டு திரும்பி விடுகிறாள்;
பார்வதிதேவி, தானே போருக்கு போகிறார்: அந்த அசுரனின் சேனைகளை அழித்துவிட்டார்; அந்த அசுரன் மட்டும் மிஞ்சி இருக்கிறான்; அவன் ஒரு பெரிய மலையைப் போல உருவம் கொண்டு  சண்டைக்கு வருகிறான்; பார்வதிதேவி, அவனை, தன் நகங்களால் கீறி கிழித்து சிதைக்கிறார்; ஆனாலும், அவன் ஒரு பெரிய மகிஷம் (எருமைமாடு) போன்று உருவம் எடுத்து சண்டைக்கு வருகிறான்; அதையும் பார்வதிதேவி சிதைக்கிறார்;

பின்னர் அந்த அசுரன் தன் சுய உருவத்தில், பெரிய பெரிய ஆயுதங்களை எடுத்துக் கொண்டு சண்டைக்கு வருகிறான்; பார்வதிதேவியோ, ஒரு கணையை விட்டு (ஒரு ஆயுதம்) அவனின் மார்பை பிளக்கிறார்; அத்துடன் அவனின் கதை முடிகிறது;
தேவர்கள் மகிழ்கிறார்கள்! அந்த துர்க்கன் என்னும் அசுரனைக் கொன்றதால், பார்வதிதேவிக்கு “துர்க்கை அல்லது துர்க்காதேவி” என்று பெயர் ஏற்பட்டது;

போருக்குப் போகும் பார்வதிதேவி, எட்டு தோள்களுடனும், பதினெட்டு கைகளுடனும், சூலம், சக்கரம், கரகம் முதலிய ஆயுதங்களுடன், போருக்கு போனார்; இவருக்கு சிங்கவாகினி என்றும், கலையூர்தி என்றும் பலவாறு பெயர்கள் உண்டு; காளிதேவியும் இவர்தான் என்று சொல்பவர்களும் உண்டு;

“கெட்டவர்களை அழிக்க, கடவுளே நேரில் தோன்றி தீர்ப்பை எழுதுவான்போல!”

**

பிறங்குமால் மருகன் காக்க

பாம்பன் சுவாமிகள் அருளிய “சண்முக கவசம்”5

உறுதியாய் முன் கை தன்னை உமை இள மதலை காக்க
தறுகண் ஏறிடவே என் கைத் தலத்தை மா முருகன் காக்க
புறங்கையை அயிலோன் காக்க பொறிக் கர விரல்கள் பத்தும்
பிறங்குமால் மருகன் காக்க, பின் முதுகைச் சேய் காக்க!—(5)







துரோணாச்சாரியன்

துரோணாச்சாரியன்:

இவர் பரத்துவாச முனிவரின் புத்திரன்; அசுவத்தாமனின் தந்தை; இந்த துரோணாச்சாரியாருக்கு “கும்பன்” என்ற பட்டப் பெயரும் உண்டு; துரோணம் என்றால் கும்பம் என்று பொருள்;

பரத்துவாச முனிவர் பெரிய தவத்தில் இருக்கிறார்; அவர் தவத்தை அழிக்க நினைக்கிறான் இந்திரன்; இந்திர லோகத்தில் இருக்கும் பேரழகி மேனகையை அங்கு அனுப்பி வைத்து, பரத்துவாச முனிவரின் தவத்தை கலைக்க சொல்கிறான் இந்திரன்;

மேனகையின் அழகில் மயங்காதவர் யாருமில்லை! பரத்துவாசர் உட்பட! மயங்கி விட்டார்; அவள் வருவதைப் பார்த்தவுடனேயே மயங்கம் கொண்டார்; அவரின் விந்து ஒரு கும்பத்தில் விழுகிறது; அதுவே குழந்தையாகப் பிறக்கிறது; அவரே துரோணர் என்னும் துரோணாச்சாரியார்;

இந்த துரோணாச்சாரியாரிடம்தான், கௌரவர்கள், பாண்டவர்கள் இரு கூட்டத்தாரும், தங்களின் இளமை காலத்தில் வில் வித்தை கற்றனர்;
பாரதப்போரில், இந்த துரோணாச்சாரியார், திருஷ்டியுமன் என்பவனால் கொல்லப்படுகிறார்;

பாரதப்போரில், அசுவத்தாமன் என்று ஒரு யானையும் போர்களத்தில் உள்ளது; துரோணரின் மகன் பெயரும் அசுவத்தாமன்; அங்கு இருப்பவர்கள் (பாண்டவர்கள்) அசுவத்தாமன் இறந்தான் என்று சொல்லி சங்கை ஊதுகிறார்கள்;

பெற்றமனம் பித்துதானே! துரோணர் என்னும் அறிவுஜீவி, பாசத்தின் பிடியில் சிக்கிவிட்டார்; அசுவத்தாமன் என்றால் என் மகன்தானே என்று கருதிக் கொண்டு, வில்லை கீழே போட்டு மயங்கி விழுகிறார்; அப்போது அவரை கொன்றனர்;

“சுத்த வீரனைக் கொல்ல மாற்று வழியே சிறந்தபோல!”
(ஆம் என்கிறான் ஸ்ரீகிருஷ்ணன்).


எழில் குறிஞ்சிக் கோன் காக்க!

பாம்பன் சுவாமிகள் அருளிய “சண்முக கவசம்”--4

ஈசனாம் வாகுலேயன் எனது கந்தரத்தைக் காக்க
தேசுறு தோள் விலாவும் திருமகள் மருகன் காக்க
ஆசிலா மார்பை ஈராறு ஆயுதன் காக்க என் தன்
ஏசிலா முழங்கை தன்னை எழில் குறிஞ்சிக் கோன் காக்க! –(4)



திருவுடன் பிடரி தன்னை சிவசுப்பிரமணியன் காக்க!

பாம்பன் சுவாமிகள் அருளிய “சண்முக கவசம்”--3

இரு செவிகளையும் செவ்வேள் இயல்புடன் காக்க
வாயை முருகவேள் காக்க, நா பல் முழுதும் நல் குமரன் காக்க
துரிசறு கதுப்பை யானைத் துண்டனார் துணைவன் காக்க

திருவுடன் பிடரி தன்னை சிவசுப்பிரமணியன் காக்க! –(3) 



நாதனாம் கார்த்திகேயன் நாசியை நயந்து காக்க!

பாம்பன் சுவாமிகள் அருளிய “சண்முக கவசம்”

ஆதியாம் கயிலைச் செல்வன்  அணி நெற்றி தன்னைக் காக்க
தாது அவிழ் கடப்பந் தாரான் தான் இரு நுதலைக் காக்க
சோதியாம் தணிகை ஈசன் துரிசிலா விழியைக் காக்க
நாதனாம் கார்த்திகேயன் நாசியை நயந்து காக்க! –(2)



பாம்பன் சுவாமிகள் அருளிய “சண்முக கவசம்”

பாம்பன் சுவாமிகள் அருளிய “சண்முக கவசம்”

அண்டமாய் அவனி ஆகி அறிய வொணாப்
பொருள் அதாகித் தொண்டர்கள் குருவும் ஆகித்
துகள் அறு தெய்வம் ஆகி, எண் திசை போற்ற நின்ற
என் அருள் ஈசன் ஆன திண் திறல் சரவணன் தான்
தினமும் என் சிரசைக் காக்க! –(1)


Sunday, October 9, 2016

“I am not a baby killer”

“I am not a baby killer”--  mother cries.

அமெரிக்காவில், ஆறு வயது சிறுவன், தாயின் கொடுமையால் இறந்து விட்டதாக அல்லது கொலை செய்யப்பட்டதாக அந்த தாயை சட்டம் சிறையில் தள்ளுகிறது;

இந்த நிகழ்வு பெண்களின் வாழ்க்கைச் சோகத்தை விவரிப்பதால், இங்கு எழுத வேண்டிய முக்கியத்துவம் பெறுகிறது;

அவளின் 20 வயதில் அவளுக்குத் திருமணம் ஆகிறது; அவள் பெயர் பெர்கின்ஸ்; ஒரு ஆண் குழந்தைக்கு தாயாகிறாள்; என்ன பிரச்சனையோ தெரியவில்லை, அவசரப்பட்டு அந்தக் கணவனை விட்டு விலகி விடுகிறாள்; அவளும், மகனுமாக தனியே வசிக்கிறார்கள்; இந்த உலகில் பெண்கள் தனியே வசிப்பது என்பது கொஞ்சம் கடினமாக விஷயம்தான்; அதாவது தனது சொந்த பந்தங்கள் இல்லாமல், ஆதரவு இல்லாமல் தனியே வசிப்பது சிரமம்;

எப்படியோ, ஆறு ஆண்டுகள் ஓடிவிட்டன; அங்கு ஒரு "வீடு-இல்லாதவர் வசிக்கும் அரசு இல்லத்துக்குச்" செல்கிறாள்; அங்கு ஒரு வாலிபனைப் பார்க்கிறாள்; அவன் பெயர் ஸ்மித்; ஏதோ ஒரு ஈர்ப்பு; என்றாலும் அவனிடம் உறுதி கேட்கிறாள்; என்னையும் என் மகனையும் நன்றாகப் பாத்துக் கொள்வாய் என்ற உறுதி தெரிந்தால்தான் நான் உன்னுடன் வாழ்வேன் என்கிறாள்; அவன் சத்தியம் செய்கிறான்; “பொய் உலகில், சத்தியங்கள் பொய்யாகிவிடும்!”

அவளும் மகனும் அவனுடன் ஒரு வீட்டில் வசிக்கிறார்கள்; அவனை முன்னே பின்னே தெரியாது; அவன் குணம் தெரியாது; குலம் தெரியாது; வாழ்க்கை முறை தெரியாது; ஆண் என்ற ஒரு அடையாளத்தைத் தவிர!

ஒருநாள் இவளின் அன்பு மகன் இறக்கிறான் அல்லது கொலை செய்யப் படுகிறான்; இவளை போலீஸ் அள்ளிக் கொண்டு போகிறது; விசாரனை, விசாரனை; தானே தன் மகனை விளக்குமாற்றால் (துடைப்பத்தால்) அடித்ததாகவும் அதில் அவன் இறந்து விட்டான் என்றும் வாக்குமூலம் கொடுக்கிறாள்; இப்போது சிறையில் வாழ்க்கை!

உண்மை வேறுவிதமாக இருக்கிறது; கொடுமைக்கார காதலனிடமிருந்து மீள்வதற்கு வழி தெரியாமல் இருந்திருக்கிறாள்; இப்போது கதறுகிறாள், “என் அன்பு மகனை நான் கொலை செய்யவில்லை” I am not a baby killer: “ஒருவேளை, நான் ஏற்கனவே என் காதலனிடமிருந்து தப்பிச் சென்றிருந்தால், என் குழந்தை இன்று உயிரோடு இருந்திருப்பான்என்று கதறல்!

என் காதலன் கெட்டவன் என்று முன்னரே தெரிந்தும் அவனுடன் தொடர்ந்து வசித்து வந்தது என் தவறுதான்! அப்போதே அவனை விட்டு வெளியேறி வந்திருந்தால், என் மகனை நான் இழந்திருக்க மாட்டேன் என்கிறாள்;

“இந்த ஒரு வருடமாக என் காதலனுடன் சேர்ந்து வாழ ஆரம்பித்தபோதே தெரிந்து கொண்டேன் அவன் நல்லவன் இல்லை என்று; எனக்கு அவனிடமிருந்து தப்பிச் செல்ல வழி தெரியவில்லை; வேறு வழியின்றி அவனுடன் வாழ வேண்டிய கட்டாயத்தில் இருந்தேன்; ஒரு நாள் என் மகனை, என் காதலன் அடித்து பாத்ரூமில் உள்ள கதவில் தலைகீழாக தொங்க விட்டிருந்தான்; என் உயிரே போய் விட்டது; அவனை திட்டி, என் மகனை இறக்கி விடும்படி கெஞ்சினேன்: அவன் என்னை மிரட்டினான்; பேசாமல் போய் சோபாவில் உட்கார்ந்து டிவியைப் பார்; அல்லது பைபிளைப் படி; உன் மகன் என்ன செய்தான் தெரியுமா? ஒரு பக்கெட்டில் கக்கூஸ் போய் இருக்கிறான்; அவனுக்கு எவ்வளவு கொழுப்பு? என்று உறுமுகிறான்; பெத்த மனம் கேட்கவில்லை; ஒருவாறு கெஞ்சி, தொங்க விடப் பட்டிருந்த என் ஆறு வயது மகனை இறக்கி, என்னுடன் கட்டிலில் படுக்க வைத்திருந்தேன்; மயங்கித் தூங்குகிறான் என்றுதான் நினைத்திருந்தேன்; கொஞ்ச நேரத்துக்குப் பின்னரே தெரிந்தது அவன் மூச்சு நின்றுவிட்டது என்பது; தூக்கிக் கொண்டு ஆஸ்பத்திரிக்கு ஓடினேன்; காப்பாற்ற முடியவில்லை;

என் மகனை இழந்து விட்டேன்; என்னைக் காப்பாற்றிக் கொள்ள, நானே கொலை செய்ததாக ஒப்புக் கொண்டு சிறையில் இருக்கிறேன்; ஆனாலும் போலீஸ் என் வாக்குமூலத்தை நம்பவில்லை; என் மகன் நோஞ்சானைப் போல இருப்பான்; அவனின் தகப்பனும் அப்படித்தான் இருந்தான்; நான் ஏதோ என் குழந்தையை சரியாக சாப்பாடு போட்டு கவனிக்கவில்லை என்றும் அருகில் உள்ள சுகாதார நிலையத்தில் காண்பிக்கவில்லை என்றும், அப்படி ஒரு வசதி இருந்தபோதும் அதை நான் உபயோகிக்காதது என் தவறு என்றும், என் அஜாக்கிரதையால் குழந்தை உடல்நலம் இல்லாமல் இருந்து வந்திருக்கிறது என்றும், சுகாதாரத்துறை குற்றம் சாட்டியது; மேலும் விசாரனையில் என் கம்யூட்டரை ஆராய்ந்து பார்த்தது; அதில் நான் ஏதோ போதை மருந்து உபயோகிப்பதாகவும் சந்தேகித்தது; என்ன சொல்வேன்? எல்லாக் கேள்விகளுக்கும் மௌனமே என்னிடமிருந்த பதில்கள்!
வீணாகப் போய்விட்டேன்; ஒரு "வீணாப் போனவனைத்" தேடி நானே என் தலையில் மண்ணை வாரிக் கொட்டிக் கொண்டேன்; இப்போது சிறையில்!

என் பிரச்சனையை அதில் உள்ள நியாயத்தை நீங்கள் என் நாற்காலியில் உட்கார்ந்து பார்த்தால் மட்டுமே, என் மீதுள்ள நியாயம் உங்களுக்கு விளங்கும்” என்று கதறுகிறாள்;
“Until you walk a mile in my shoes, you have no right to judge me.”

(எல்லோருக்கும் ஒரு நியாயம் கண்டிப்பாக இருக்கும்; ஆனால்  ஆரம்பத்தில் நீ முடிவெடுத்த தவறான செயலே மற்ற பின்விளைவுகளுக்கு அடிப்படைக் காரணம் என்பது உனக்கு புரியாதுதானே!)
**