Sunday, December 23, 2018

ஒரே நேரத்தில் இரண்டு ஈபி



ஒரே நேரத்தில் இரண்டு ஈபி மனுக்கள் போட முடியுமா?
Sait Chunilal Moolchand என்பவருக்கு வியாபாரக் கணக்கு வழக்குகளில் வர வேண்டிய பாக்கி உள்ளதாக, Bethia Venkanna and Chundrapu Lovaraju என்ற இரண்டு பிரதிவாதிகள் மீது ஓஎஸ் வழக்கை 1934-ல் காகிநாடா சப் கோர்ட்டில் போட்டு டிகிரி வாங்கி விட்டார். மொத்த டிகிரி ரூ.19,000/-க்கு. அதில் முதல் பிரதிவாதி பெத்தையா வெங்கண்ணா Madras Act IV of 1938 (Madras Agriculturists Relief Act 1938) ன் படி வட்டிப் பணத்தை தள்ளுபடி பெற்று விட்டார். எனவே 1-வது பிரதிவாதி மீது ரூ.15,000/-க்கு (வட்டி இல்லாமல்) மட்டுமே டிகிரி ஆனது. 2-ம் பிரதிவாதி மீது ரூ.19,000/-க்கு (மொத்த அசல், வட்டிக்கு) டிகிரி ஆகிறது. (அதாவது மொத்த டிகிரியான ரூ.19,000-த்தில், ரூ.15,000 என்ற அசல் தொகையை இரண்டு பேர் சேர்ந்தும், ரூ.4,000 ஆன வட்டியை 1-ம் பிரதிவாதி தனியே கொடுக்க வேண்டும் என்றும் கீழ்கோர்ட் தீர்ப்பு).
1956ல் சேட் இந்த டிகிரியை எக்சிகியூட் செய்கிறார். 1-ம் பிரதிவாதி லோவராஜூ மீது ஈபி போட்டு, அவர் சொத்தை அட்டாச் செய்து ஏலத்துக்கு கொண்டு வருகிறார்.
அநத ஈபி நிலுவையில் இருக்கும் போதே, சேட், மற்றொரு ஈபி போட்டு, 2-ம் பிரதிவாதி பெத்தையா வெங்கண்ணா மீது ரூ.19,000/- ஆன முழு டிகிரி பணத்தையும் கேட்டு அவரின் கார்கோ பைபர் பேல்களை (ஏற்றுமதிக்கு வைத்திருந்த சரக்கை) ஜப்தி செய்து விட்டார்.
எனவே 2-ம் பிரதிவாதி பெத்தையா வெங்கண்ணா ஈபி கோர்ட்டில் ஒரு மனுவைப் போடுகிறார். அதில், மொத்த டிகிரியே ரூ.19,000 ம்தான். அதில் 1-ம் பிரதிவாதி மீது ஏற்கனவே ரூ.15,000 க்கு ஈபி போட்டு அவர் சொத்தை அட்டாச் செய்து ஏலத்துக்கு கொண்டு வந்து நிலுவையில் உள்ளது. எனவே மீதி உள்ள ரூ.4,000 க்கு மட்டுமே என் மீது ஈபி போட முடியும் என்று ஆட்சேபனை தெரிவித்து மனு போட்டார். அதை ஈபி கோர்ட் தள்ளுபடி செய்து விட்டது.
அதை எதிர்த்து, 2-ம் பிரதிவாதி, ஐகோர்ட்டுக்கு அப்பீல் போகிறார். அங்கு ஒரு சிறு விஷயம் மட்டுமே அலசப் படுகிறது. “ஒரே நேரத்தில், ஒரு டிகிரியில் உள்ள இரண்டு பிரதிவாதிகள் மீது, வேறு வேறு ஈபி போட முடியுமா? என்பதே கேள்வி
அதைப்பற்றி இதுவரை ஒரு வழக்குத் தீர்ப்பும் (1957 வரை) முடிவாகவில்லை என்று ஐகோர்ட் சொல்கிறது. எனவே இருக்கும் தீர்ப்புகளை வைத்து ஒரு முடிவுக்கு வரலாம் என்று ஐகோர்ட் நினைக்கிறது.
ஏற்கனவே முதலில் 1-வது பிரதிவாதி மீது போட்ட ஈபி-ல் ரூ.15,000 கேட்டு விட்டதால், மீதி இருக்கும் ரூ.4,000 க்கு மட்டுமே 2-ம் பிரதிவாதி மீது கேட்க முடியும் என்றும், மொத்த டிகிரி தொகையான ரூ.19,000 க்கும் கேட்க முடியாது என்பது 2-ம் பிரதிவாதியின் வாதம்.
பொதுவாக, டிகிரி வாங்கியவர், ஒரே நேரத்தில் இரண்டு பிரதிவாதிகள் மீது வேறு வேறு ஈபி போட முடியும். அதற்காக கோர்ட்டின் முன் அனுமதியும் தேவையில்லை.
சிபிசி ஆர்டர் 21 ரூல் 11(2)(சி)ல் டிகிரி வாங்கியவர் ஒரு தகவலைச் சொல்ல வேண்டும். அதில், “இதுவரை வசூல் செய்த பணம் எவ்வளவு” என்று குறிப்பிட வேண்டும். ஏற்கனவே ஈபி நிலுவையில் இருந்தால், அது வசூல் செய்த பணம் என்று எடுத்துக் கொள்ள முடியாது.
சிபிசி-ல் ஒரே நேரத்தில் இரண்டு ஈபி-கள் போடலாம். சிபிசி ஆர்டர் 21 ரூல் 30-ல் இதைப் பற்றி சொல்லி உள்ளது. ஒரே நேரத்தில் ஒருவர் மீது, அவரை அரஸ்ட் செய்யவும், அவரின் சொத்துக்களை அட்டாச் செய்யவும் தனித் தனி ஈபி மனுக்களைப் போடலாம் தவறில்லை என்று சொல்லி உள்ளது.
Om Prakash v. Tahera Begam, AIR 1955 All 382 என்ற வழக்கில், சிபிசி-ல் தடை இல்லை என்றால், ஒரே நேரத்தில் பல ஈபி-களை ஒருவர் மீதே போடலாம் என்று அந்த தீர்ப்பில் சொல்லப் பட்டுள்ளது.
It is only quite common that not only in suits but also in execution petitions all possible lines of fact and law are explored by parties concerned to gain success for themselves at the cost of the opposite party.
Consequently, if the law were to force a decree-holder to treat an execution petition which he has filed for a certain amount as equivalent to having realised the amount, it would be like forcing him to count the chickens before they are hatched.
எனவே 2-ம் பிரதிவாதியான இந்த அப்பீல் வழக்கைப் போட்டவர், வசூல் ஆகாத பணத்தை, வசூல் ஆன கணக்கில் எடுத்துக் கொள்ள வேண்டும் என நினைத்து கேட்பதை ஏற்க முடியாது. அவரின் அப்பீல் தள்ளுபடி செய்யப்படுகிறது.
**


கோபார்சனரி என்னும் பூர்வீகச் சொத்துக்களில் வாரிசு உரிமை:

கோபார்சனரி (Coparcenary) என்னும் பூர்வீகச் சொத்துக்களில் வாரிசு உரிமை:

1956 சட்டத்தின் பிரிவு 6ஐ – 2005ல் திருத்தி விட்டார்கள். (இந்த திருத்தல் சட்டத்தின்படி மகன்களைப் போலவே மகள்களுக்கும் சரி சம பங்கு உண்டு என்று திருத்தப்பட்டுள்ளது).

2005 திருத்தல் சட்டத்தின் படி புதிய பிரிவு 6:

(1) இந்து மித்தாக்சரா கூட்டு குடும்பத்தில், 2005 திருத்தல் சட்டம் வந்த பின்னர், மகனைப் போலவே மகளுக்கு பிறப்பால் சம பங்கு உண்டு.

இந்த 2005 சட்டத்துக்குப் பின்னர், இந்து மித்தாச்சரா கூட்டுக் குடும்பம் என்பது மகனையும், மகளையும் சேர்த்தே குறிக்கும்.

ஆனால், 20.12.2004 தேதிக்கு முன்னர், அந்த கூட்டுக் குடும்பச் சொத்தை அப்போது உள்ள கோபார்சனர்கள் பாகம் செய்து கொண்டிருந்தாலும், விற்பனை செய்து இருந்தாலும், மகள் அதில் பங்கு கேட்க முடியாது.

(2) அவ்வாறு மகளுக்கு கூட்டுக் குடும்பச் சொத்தில் உள்ள அவளின் பாகத்தை, அவள் தன் வாழ்நாளில் உயில் போன்றவைகள் மூலம் எழுதி வைக்கும் அதிகாரம் அவளுக்கு உண்டு.

(3) 2005 திருத்தல் சட்டம் வந்த பின்னர், ஒரு இந்து ஆண் தனது கூட்டுக் குடும்ப சொத்தை விட்டு விட்டு இறந்திருந்தால், அதில் இறந்த அவருக்கு உள்ள பங்கு மட்டும், அவரின் வாரிசுகளுக்கு இன்டஸ்டேட் அல்லது டெஸ்டமெண்டரி வழி மூலம் கிடைக்கும். (அவரின் பங்கு, மீதி இருக்கும் கோபார்சனர்களுக்கு போய் சேராது).

இந்த கோபார்சனர் இறந்த விட்ட நிலையில், அங்கு ஒரு கற்பனை பாகம் நடத்தி, அந்த பாகப்பிரிவினையில், இறந்த கோபார்சனருக்கு ஒரு பங்கும், உயிருடன் இருக்கும் மற்ற கோபார்சனர்களுக்கு தலைக்கு ஒரு பங்கும் பிரித்துக் கொள்ள வேண்டும். இறந்த கோபார்சனரின் பங்கு மட்டும், அவரின் வாரிசுகளுக்கு இன்டஸ்டேட் அல்லது டெஸ்டமெண்டரி முறையில் கிடைக்கும். அதாவது இறந்தவரின் கோபார்சனரி பங்கு, மற்ற கோபார்சனர்களுக்கு போகாது; (1956-க்கு முன்னர் இறந்தவரின் கோபார்சனரி பங்கு, உயிருடன் இருக்கும் மற்ற கோபார்சனர்களுக்கே போய் சேரும், மாறாக இறந்தவரின் வாரிசுகளுக்குப் போகாது என்ற நிலை இருந்தது).

எனவே 2005 திருத்தல் சட்டத்துக்குப் பின்னர், ஒரு கோபார்சனர் இறந்து விட்டால், கற்பனை பாகப் பிரிவினையில், இறந்த கோபார்சனருக்கும், அவரின் மகன்கள், மகள்கள் எல்லாரும் தலைக்கு ஒரு பங்கு என்ற விகிதத்தில் எடுத்துக் கொள்வர். 1956 சட்டப்படி, இறந்த கோபார்சனரும், அவரின் மகன்களும் மட்டுமே எடுத்துக் கொண்டனர். (2005 திருத்தல் சட்டப்படி, அதில் மகளையும் இப்போது சேர்த்துக் கொண்டனர்).

எனவே, மகனைப் போலவே மகளும் ஒரு கோபார்சனர் பங்குதாரர் ஆகி விட்டார்.

இறந்தவருக்கு மகனோ, மகளோ ஏற்கனவே இறந்து விட்டால், அவரின் பிள்ளைகள், கோபார்சனரி முறைப்படி அந்த தகப்பனின்/தாயின் பங்கை பெற்றுக் கொள்வார்கள்.

இதேபோல், இறந்தவரின் மகன்/மகள் இறந்து, அவரின் பிள்ளைகள் இருந்தால், அவர்களும், அதேபோல கோபார்சனரி முறைப்படி அந்த பாட்டன்/பாட்டி பங்கைப் பெறுவார்கள்.

(4) 2005 திருத்தல் சட்டத்துக்குப் பின்னர், பாயஸ் ஆப்ளிகேஷன் (Pious obligation) என்ற முறை ஒழிக்கப்பட்டது. அதாவது, தந்தையின்/பாட்டனின்/ பூட்டனின் கடனை அவரின் மகன்/ பேரன்/ கொள்ளுப் பேரன் கொடுக்க வேண்டும் என்று இருந்தது. 2005க்கு பின்னர் ஏற்பட்ட இந்த வகையான கடனை, அவரின் மகன்/பேரன்/கொள்ளுப்பேரன் கொடுக்க வேண்டிய சட்டக் கட்டாயம் இல்லை.

ஆனாலும், 2005 சட்டம் வருவதற்கு முன்னர் ஏற்பட்ட கடனை, கொடுத்தாக வேண்டும்.

(5) 2005 சட்டம் வருவதற்கு முன்னர், அதாவது 20.12.2004 தேதிக்கு முன்னர், ஒரு கோபார்சனர் இறந்து விட்டிருந்தால், அப்போது ஒரு கற்பனை பாகப் பிரிவினை நடந்து, அவரின் மகன், பேரன் இவர்களுக்கு கோபார்சனரி சொத்தை பாகம் பிரித்துக் கொண்டு இருப்பார்கள். அப்படி பாகம் நடந்து இருந்தால், அந்த சொத்தில் மகளுக்கு பங்கு என்ற இந்த திருத்தல் சட்டம் செல்லாது.

பாகப்பிரிவினை என்று இங்கு சொல்வது – பதிவு செய்யப்பட்ட பாகப் பிரிவினைப் பத்திரங்கள் மட்டுமே. (வாய்மொழி பாகப் பிரிவினை செல்லாது; கூர்சீட்டு முறையில் பாகம் பிரித்துக் கொண்டாலும் செல்லாது; கோர்ட்டில் பாக வழக்குப் போட்டிருந்தாலும் செல்லாது; கோர்ட் வழக்கில் பைனல் டிகிரி கொடுத்திருந்தால் மட்டுமே அந்த பாகம் செல்லும்).

குறிப்பு: இந்த 2005 திருத்தல் சட்டம் வருவதற்கு முன்பே, ஆந்திரா, மகாராஷ்டிரா, தமிழ்நாடு இவைகள் ஒரு திருத்தல் சட்டம் கொண்டு வந்து, அதன்படி மகள்களுக்கும் கோபார்சனரி கூட்டுக் குடும்பச் சொத்தில் சம பங்கு கொடுத்து விட்டது.

அதன்படி தமிழ்நாடு திருத்தல் சட்டம் 1989ல் கொண்டு வந்தது. அதன்படி, ஒரு ஆண் கோபார்சனர் (தகப்பன் என்று வைத்துக் கொள்வோம்) இறந்து விட்டால், அவர் இறக்கும் போது, மகனை மட்டும் கோபார்சனர் என்று நினைக்காமல், மகளையும் ஒரு கோபார்சனர் என்று நினைத்து, அவளுக்கும் ஒரு கோபார்சனரி பங்கு ஒதுக்க வேண்டும் என்று தமிழ்நாடு திருத்தல் சட்டம் சொல்கிறது. அதில், 1989-க்கு முன்னர் திருமணம் நடந்து கணவர் வீடு சென்ற பெண்ணை கோபார்சனர் என்று ஏற்றுக் கொள்ளவில்லை; திருமணம் ஆகாமல் பிறந்த வீட்டிலேயே இருக்கும் பெண்ணை மட்டுமே கோபார்சனர் என்று ஏற்றுக் கொண்டது; இதை ஒட்டியேதான் 2005 மத்திய அரசின் திருத்தல் சட்டம் வந்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது).

கோபார்சனரி சொத்தும், மகளின் உரிமையும் – ஒரு விளக்கம்:

1956-க்கு முன்னர், பழைய இந்து தர்ம சட்டமே அமலில் இருந்து வந்தது. அதன்படி பெண்களுக்கு சொத்தில் எந்த உரிமையும் கொடுக்கவில்லை. அதாவது, வாரிசு முறைப்படி ஒரு பெண்ணுக்கு சொத்தே கிடைக்காது. அவளாகவே தன் சேமிப்பைக் கொண்டு சொத்து வாங்கி வைத்துக் கொள்ளலாம். யாராவது உறவினர் அவளின் திருமணத்தின் போதோ, பின்னரோ, ஒரு சொத்தை அவளுக்கு சீதனமாக (செட்டில்மெண்டாக) கொடுக்கலாம். அதை சீதனச் சொத்து என்பர். அதன்படி, 1956-க்கு முன்னர் ஒரு பெண்ணுக்கு அவள் கிரயம் வாங்கிய சொத்தும், சீதனமாகக் கிடைத்த சொத்தும் மட்டுமே வைத்துக் கொள்ள முடியும். அவளின் தகப்பன், தாய், பாட்டன், பாட்டி சொத்துக்கள் எப்போதும் வாரிசு முறைப்படி கிடைக்காது. (ஏனென்றால், அவள் பிறந்த வீட்டிலேயே வாழும் பெண் இல்லை; புகுந்த வீட்டில் வாழும் பெண்). இதுதான் 1956-க்கு முன்னர் இருந்த பெண்களின் நிலை.

ஒரு ஆணின் சொத்தை அவரின் மகன், பேரன், கொள்ளுப்பேரன் மட்டுமே சர்வைவர்ஷிப் (Survivorship) என்ற முறையில் அடைந்து கொள்வர். (அதாவது உயிருடன் இருக்கும் மகன், பேரன், இறந்த ஆணின் சொத்தை அடைவதை சர்வைவர்ஷிப் என்பர்). இதைத்தான் கோபார்சனரி சொத்து என்பர். இதில் அந்த ஆண்களின் மனைவி, மகள் போன்ற எந்தப் பெண்ணுக்கும் பங்கு கொடுக்க மாட்டார்கள். அதாவது சர்வைவர்ஷிப் முறைபடி பங்கு கொடுக்க மாட்டார்கள். அப்படி இறந்த ஒரு கோபார்சனரின் விதவை மனைவியை மற்ற கோபார்சனர்கள் பாதுகாத்து (உணவு, உடை, இருப்பிடம் கொடுத்து) வர வேண்டும். அது அவர்களின் சட்டக் கடமை. இப்படி இருந்த நிலையில், ஒரு கோபார்சனர் இறந்து விட்டால், அவரின் விதவை மனைவி, மற்ற கோபார்சனர்களை (பங்காளிகளை) நம்பியே இருக்க வேண்டிய நிலை இருந்து வந்தது. 1937-ல் இதை மாற்ற நினைத்து ஒரு புது சட்டத்தை கொண்டு வருகிறார்கள். அது கோபார்சனரி சொத்துக்களில் விதவையின் பங்கு உரிமைச் சட்டம் 1937 என்று கொண்டு வந்தார்கள். அதன்படி, ஒரு கோபார்சனரி ஆண் இறந்து விட்டால், அவரின் விதவை மனைவி, அந்த இறந்த கணவரின் கோபார்சனரி பங்கை எடுத்துக் கொள்ளலாம் என்றும், அதை அவள், அவளின் வாழ் நாள் வரை ஆண்டு அனுபவித்து வரலாம் என்றும், ஆனாலும் அவள் அந்தப் பங்கை விற்பனை செய்ய முடியாது என்றும், (அப்படியே விற்பனை செய்தாலும், அது அவளின் வாழ்நாள் வரைதான் செல்லும் என்றும்), அவள் வாழ்நாளுக்குப் பின்னர், அந்தப் பங்கு சொத்தானது, அவளின் இறந்த கணவனின் மற்ற தாயாதிகள் என்னும் பங்காளிகளுக்குப் போய் சேரும் என்றும் சொல்லப்பட்டுள்ளது. இப்படியாக, விதவைகளை மட்டும் ஓரளவு பாதுகாத்தார்கள். முழுவதுமாக சொத்து உரிமை கொடுக்கவில்லை.

பின்னர், 1956-ல் பழைய இந்து சட்டத்தையே மாற்றி, பழைய பழக்க வழக்கங்களையும் மாற்றி, புதிய சட்டத்தைக் கொண்டு வந்தார்கள். அதன்படி, 1956-க்கு பின்னர் ஒரு ஆண் சம்பாதித்த சொத்தில், அவரின் இறப்புக்குப் பின்னர், அவரின் எல்லா வாரிசுகளுக்கும் (மகன், மகள் உட்பட, மனைவி, தாய் இவர்களுக்கும்) சம பங்கு கொடுத்து விட்டார்கள். பெண் சம்பாதித்த சொத்தில், அவள் இறப்புக்குப்பின்னர், அவளின் கணவர், மகன், மகள் இவர்களுக்கு சம பங்கு கொடுத்து விட்டார்கள்).   ஆனால், பூர்வீக சொத்து என்று சொல்லும் கோபார்சனரி சொத்துக்களில் ஒரளவு சீர்திருத்தம் செய்தார்கள். அதை முழுமையாகச் செய்யவில்லை என்றே சொல்ல வேண்டும். 1956 இந்து வாரிசு உரிமை சட்டம், பழைய பிரிவு 6 இப்படியான கோபார்சனரி சொத்துக்களைப் பற்றிச் சொல்கிறது.

1956 சட்டத்தின் பழைய பிரிவு 6-ல் கோபார்சனரி சொத்துக்கள்:

1956 சட்டம் வருவதற்கு முன்னர், ஒரு ஆணின் கையில் இருந்த சொத்துக்கள் அனைத்தும் கோபார்சனரி சொத்துக்களே. ஒரு ஆண் 1956-க்கு முன்னர் இறந்து விட்டால், அது அவரின் மகன், பேரன், கொள்ளுப்பேரன் இவர்களுக்கு மட்டுமே கோபார்சனர்கள் என்ற முறையில் பிறப்பால் பங்கு உரிமை அவர்களுக்கே போய் சேர்ந்து விடும். அதில் பெண்களுக்கு (மனைவிகள், மகள்கள், தாய்கள்) இவர்களுக்கு ஒன்றுமே கிடைக்காது. இந்த நிலையை 1956 சட்டம் பிரிவு 6 ஒரளவு மாற்றியது. அதன்படி, ஒரு கோபார்சனர் ஆண் இறந்து விட்டால், அப்போது இறந்தவருக்கும் அவரின் மகன், பேரன் இவர்களுக்குள் ஒரு கற்பனை பாகப் பிரிவினை செய்து கொள்ளவேண்டும் என்றும், அதில் இறந்த கோபார்சனருக்கு ஒரு பங்கு கிடைக்கும். அந்தப் பங்கை அவரின் தனிச் சொத்தாகக் கருதி, அவரின் மனைவி, மகள், மகன், இறந்த மகன், மகள் இவர்களின் குழந்தைகள் இவர்கள் பெற்றுக் கொள்ள வேண்டும் என்று கூறி உள்ளது. இதில் இறந்த கோபார்சனரி ஆணின் பங்கு மட்டுமே அவரின் மனைவி, மகள் இவர்களுக்குக் கிடைக்கும். அது ஒரு சிறு பங்குதான். ஆனால் மற்ற கோபார்சனர்கள் என்று சொல்லும் இறந்தவரின் மகன், பேரன், கொள்ளுப் பேரன் இவர்களுக்கு பெரிய பங்கு கிடைத்துவிடும் நிலை இருந்தது.

இதை மாற்றி, ஆந்திரா மாநிலம் 1987-ல் மகளையும் ஒரு கோபார்சனர் என்று சேர்த்துக் கொள்ள வேண்டும் என்றும், பெண் என்ற காரணத்துக்காக  அவளை ஒதுக்கி விடக்கூடாது என்று 1956 சட்டத்தில் ஒரு திருத்தத்தைக் கொண்டு வந்தது. இது சரியான அணுகுமுறை என்று நினைத்த தமிழ்நாடு அரசும் அதையே அப்படியே ஏற்றுக் கொண்டு 1989-ல் தமிழ்நாடு திருத்தல் சட்டம் கொண்டு வந்தது. அதன்படி, மகளையும் கோபார்சனர் என்று ஏற்றுக் கொண்டு அவளுக்கும் கோபார்சனரி என்னும் பூர்வீகச் சொத்தில், மகனைப் போலவே சரி சம பங்கு கொடுத்தது. ஆனாலும், திருமணம் ஆகி கணவர் வீட்டுக்குச் சென்றவரை எப்படி கோபார்சனர் என்று ஏற்றுக் கொள்ளமுடியும் என்ற தர்க்கவாதம் காரணமாக, திருமணம் ஆகாமல் பிறந்த வீட்டில் இருக்கும் பெண்ணையே கோபார்சனர் என்று ஏற்றுக் கொண்டு, அவளுக்கும் மகனைப் போலவே சரிசம பங்கு கொடுத்தது.

இதற்குப்பின்னர், இந்த முறை சரியாக இருப்பதைக் கண்ட மத்திய அரசு, இந்து வாரிசு உரிமை திருத்தல் சட்டம் 2005ஐ கொண்டு வந்தது. அதில் மகளும் கோபார்சனர் என்றும், அவள் க்கும் மகனைப் போலவே சம பங்கு உண்டு என்று சட்டத்தை திருத்தியது.

**

இந்து வாரிசு உரிமைச் சட்டம் 1956

இந்து சக்சஷன் சட்டம் 1956

1) இந்த சட்டத்தின் பெயர்:
“இந்து சக்சஷன் சட்டம் 1956”.

இந்துக்கள் யார் யார்:
2) (1) இந்தச் சட்டம்,  இந்துக்கள் அனைவருக்கும் பொருந்தும். (இந்து என்பது வீரசைவர், லிங்காயத்துக்கள், பிரமோ, பிரார்த்தனா, ஆர்ய சமாஜ் பிரிவுகளைச் சேர்ந்தவர்களையும் குறிக்கும்).

புத்த, ஜைன, சீக்கிய, மதத்தினரும் இந்துக்களே.

முஸ்லீம், கிறிஸ்தவர், பார்சி, யூதர் அல்லாதவரும் இந்துக்களே (அவர்கள் இந்து மத பழக்க வழக்கங்களை கொண்டிருந்தால்).

பெற்றோர் இருவரும் இந்துக்களாக இருந்தால், அவர்களின் சட்டபூர்வ குழந்தைகள், சட்டபூர்வமற்ற குழந்தைகள் இந்துக்களே.

பெற்றோர் இருவரில் ஒருவர் இந்துவாக இருந்தால், அவரின் சட்டபூர்வ குழந்தைகள், சட்டபூர்வமற்ற குழந்தைகள் இந்துக்களே. (ஆனால் அவர்களை இந்துக்களின் குழந்தைகளாக வளர்க்கப்பட்டு இருக்க வேண்டும்).

வேறு மதத்தில் இருந்து, இந்து மதத்துக்கு மாறியவர்களும் இந்துக்களே.

(2) ஷெட்யூல் டிரைப்புகள் என்னும் ஆதிவாசி பழங்குடிகள் இந்துக்கள் இல்லை. (அரசியல் சாசன சட்டம் ஆர்ட்டிகிள் 366 உள் பிரிவு 25-ன்படி). அரசு அவர்களை இந்துக்கள் என்று அரசிதழில் வெளியிட்டு இருக்க வேண்டும்.

(3) இந்த சட்டப்படி இந்துக்கள் என்று இதில் குறிப்பிடுவது, மேலே சொன்னவர்களைத்தான் குறிக்கும்.

(பாண்டிச்சேரியில் 1.10.1963 முதல் பிரான்ஸ் குடியுரிமையில் இருந்து விலகி வந்தவர்களும் இந்துக்கள் என்றே கருதப்படுவர்).

3) பொருள் விளக்கங்கள்:

ஆக்னேட்  உறவு என்றால் – ஒரே ஆண்வழியில் வந்தவர்களுக்கு இடையே உள்ள உறவு.

அலியசந்தான சட்டம் என்பது – இந்தச் சட்டம் வரவில்லை என்றால், அவர்களுக்கு மதராஸ் அலியசந்தான சட்டம் 1949 யார் யாருக்குப் பொருந்துமோ அவர்கள்.

காக்னேட் உறவு என்றால் – ஒரே ஆண் வழியில் வராத உறவுகள்.

பழக்க வழக்கம் என்பது – தொடர்ந்து பல காலமாக, ஒரே மாதிரி, ஒரு கூட்டத்துக்கு மக்களுக்குள், அல்லது ஒரு குடும்பத்துக்குள் இருந்து வரும் பழக்க வழக்கம். (ஆனால் அப்படியான பழக்க வழக்கம், பொது நீதிக்கு எதிரானதாக இருக்கக் கூடாது).

முழு ரத்த உறவு என்பது – ஒருவருக்கு அவரின் ஒரே மனைவி மூலம் பிறந்த குழந்தைகளுக்குள் உள்ள உறவு.

அரை ரத்த உறவு என்பது – ஒருவருக்கு அவரின் வேறு வேறு மனைவிகள் மூலம் பிறந்த குழந்தைகளுக்குள் உள்ள உறவு.

கர்ப்ப உறவு என்பது – ஒரு பெண்ணின் பல கணவர்களின் பிள்ளைகளுக்கு இடையே உள்ள உறவு.

வாரிசு என்பது – இறந்தவரின் சொத்துக்களில் உரிமை பெறக்கூடிய உரிமை உள்ளவர்கள்.

இன்டஸ்டேட் என்பது – ஒருவர் உயில் ஏதும் எழுதிவைக்காமல், தன் சொத்தை விட்டு விட்டு இறந்தவர்.

மருமக்கள் தாயம் சட்டம் என்றால் – இந்த சட்டம் வராமல் இருந்திருந்தால், அவர்களுக்கு மதராஸ் மருமக்கதாயம் சட்டம் 1932 மற்றும் திருவாங்கூர் நாயர் சட்டம்  போன்றவை அமலில் இருக்கும் நபர்கள்.

நம்பூதிரி சட்டம் என்பது – மதராஸ் நம்பூதிரி சட்டம் 1932 அமலில் இருக்கும் நபர்கள்.

இந்த சட்டத்தில் ஆண் என்று சொல்லும் இடங்களில் எல்லாம் பெண் என்றும் பொருள் கொள்ள வேண்டும். (குறிப்பிட்டுச் சொல்லாதவரை).

4) இந்தச் சட்டம் எவைகளைப் பாதிக்கும், எவைகளை பாதிக்காது;

(1) பழைய இந்து சட்டத்தில் உள்ள பழைய பழக்க வழக்கங்களை இந்த சட்டம் செல்லாது என அறிவிக்கிறது.

(2) பழைய இந்து சட்டத்தில் எவை எவை எல்லாம், இந்த சட்டத்துக்கு எதிராக உள்ளதோ அவைகளும் இந்த சட்டப்படி செல்லாது.

5) சில சொத்துக்களுக்கு இந்த சட்டம் செல்லாது:

(1) இந்தியன் சக்சஷன் சட்டம் 1925-ல், பிரிவு 21-ல் சிறப்பு திருமணச் சட்டம் 1954-ல் சொல்லப்பட்டவை இந்த சட்டத்துக்கு பொருந்தாது. (அதாவது, இந்துக்களாக இருந்தும், அவர்கள் சிறப்பு திருமணச் சட்டத்தில் திருமணம் செய்திருந்தால், அவர்களின் பிள்ளைகளுக்கு, வாரிசு சொத்துப் பிரச்சனையில், இந்த இந்து சக்சஷன் சட்டம் 1956 பொருந்தாது).

(2) ஏற்கனவே மன்னர்களாக இருந்தவர்களின் சொத்துக்கள் அவர்களின் மூத்த மகனுக்கே வாரிசுப்படி செல்லும் என்ற நிலை இருந்தது. அவ்வாறு அதை இந்திய அரசும் அனுமதித்து இருக்கும் பட்சத்தில், அந்தச் சொத்துக்களுக்கு, இந்த இந்து சக்சஷன் சட்டம் 1956 பொருந்தாது.

(3) கேரளாவில் உள்ள வள்ளியம்மா தம்பிரான் கோயிலகம் எஸ்டேட் சொத்துக்களுக்கு, இந்தச் சட்டம் பொருந்தாது.
**

Saturday, December 22, 2018

Malicious prosecution


Malicious prosecution
Badduri Chandra Reddy and another v. Pammi Rami Reddy and others,
Judgment Dated 27 August, 1954 by Andhra  High Court
Citation: AIR 1955 AP 229
இது சிவில் அப்பீல் வழக்கு. ஓ.எஸ் வழக்கின் டிகிரியை எதிர்த்து, அதில் பிரதிவாதிகளாக இருப்பவர்கள் கொண்ட வந்த அப்பீல் வழக்கு.
வழக்கின் விபரம்: 1-வது பிரதிவாதியின் மனைவி ராமம்மா என்பவர் 1948-ல் இறந்து விடுகிறார். அவரின் கணவரும் மற்றவர்களும் ஒரு கிரிமினல் புகார் கொடுக்கிறார்கள். அதில் வாதியும் மற்றவர்களும் சேர்ந்து அந்தப் பெண்மணியை கொலை செய்து விட்டதாக புகார். அவள் இறந்தது homicidal violence என்று புகார் பதிவாகிறது. ஐபிசி செக்‌ஷன் 302-ன்படி வழக்கு செசன்ஸ் கோர்ட்டுக்கு வருகிறது. குற்றவாளிகளாக இந்த சிவில் வழக்கின் வாதி மீதும் அவரைச் சார்ந்த மற்ற ஐந்து பேர்கள் மீதும் கிரிமினல் வழக்கு. குண்டூர் செசன்ஸ் கோர்ட்டில் நடக்கிறது. அதில், இறந்த ராமம்மா தலையில் அடிபட்ட இறக்கிறார். அது அவள் வீட்டுக்குள் நடக்கிறது. மாவு அரைப்பதற்காக திருகை இருக்கும் இடத்துக்குச் செல்லும்போது, தவறி விழுந்து, ஒரு கடப்பா கல்லில் மோதி அதனால் தலையில் மண்டை ஓடு முறிவு ஏற்பட்டு இறக்கிறார். குற்றவாளிகளின் தாக்குதலால் இறக்கவில்லை என்றும், எனவே குற்றவாளிகளை விடுதலை செய்தாவகும் சொல்லி செசன்ஸ் கோர்ட் தீர்ப்பு வருகிறது.
செசன்ஸ் கோர்ட் தீர்ப்பு வந்தவுடன், அதில் குற்றவாளிகளாக இருந்து, இப்போது நிரபராதிகள் என கோர்ட் தீர்ப்பு வந்தவுடன், அதில் ஒரு குற்றவாளியாக சொல்லப்பட்டவர், ஒரு சிவில் வழக்கை அந்த இறந்த பெண்மணியின் கணவர் மற்றும் சிலர் மீது போடுகிறார். பொய்யான தகவலைகளைச் சொல்லி இவர்களை அந்த கொலை வழக்கில் மாட்டி விட்டு விட்டதாகவும், இயற்கையாக இறந்த பெண்மணியை, கொலை செய்து விட்டதாக போலீஸூக்குச் சொல்லி, பொய்யாக மாட்டி விட்டதாகவும், உண்மைக்கு புறம்பாக malice என்ற கெட்ட எண்ணத்துடன் செயல்பட்டு, அவருக்கு தேவையில்லாத அலைச்சலும், மன உளைச்சலையும் கொடுத்தற்காக, நஷ்ட ஈடாக ரூ.5,250/- கேட்டு சிவில் வழக்கை போடுகிறார்.
ஆனால் பிரதிவாதிகளோ, (இறந்த பெண்மணியின் கணவரும், மற்றவர்களும்) நாங்கள் வேண்டுமென்றே கெட்ட எண்ணத்தில் வாதி மீது பொய் புகார் கொடுக்கவில்லை. அந்தப் பெண்மணி இறக்கும் போது, இவர்கள்தான் அந்த வீட்டின் உள்ளே இருந்து வெளியே வந்தவர்கள் என்று மட்டும் தான் போலீஸூக்குச் சொன்னோம். போலீஸ் தான் கிரிமினல் வழக்குப் போட்டது. எங்களுக்கு அவர்கள் மீது சந்தேகம் இருப்பதாக மட்டுமே சொன்னோம். கொலையை நாங்கள் நேரில் பார்க்கவும் இல்லை; அப்படி நேரில் பார்த்ததாகச் சொல்லவும் இல்லை. எனவே இந்த மான நஷ்ட வழக்கு தேவையில்லாதது என்று பிரதிவாதிகள் வாதம் செய்கிறார்கள்.
சிவில் வழக்கை விசாரித்த கீழ்கோர்ட், 1-வது பிரதிவாதி மீது உள்ள வழக்கை தள்ளுபடி செய்கிறது. மற்ற இரண்டு பிரதிவாதிகளும் தலா ரூ.3,250 மற்றும் 750/- வாதிக்கு நஷ்ட ஈடாக கொடுக்க வேண்டும் என்று தீர்ப்புச் சொல்கிறது. சிவில் நீதிபதி, “இறந்த அந்த பெண்மணி, விழுந்ததால் காயம் ஏற்பட்டதாகச் சொல்ல முடியாது என்றும், ஏதோ ஒரு பெரிய கல் போன்ற பொருளைக் கொண்டு தாக்கியதால் தான் அந்தப் பெண்மணி இறந்து இருக்கக் கூடும்” என்றும் 2, 3 பிரதிவாதிகள் சொல்லி, அதை நம்பி, கணவரான 1-ம் பிரதிவாதி போலிஸில் புகார் கொடுத்துள்ளார்” என தன் தீர்ப்பில் ஒரு இடத்தில் சுட்டிக் காட்டி உள்ளார்.
மேலும், 2, 3 பிரதிவாதிகள் சொல்லித் தான், இறந்த பெண்மணியின் கணவரான 1-ம் பிரதிவாதி போலிஸில் புகார் கொடுத்துள்ளார். எனவே அவர் மீது எந்த தவறும் இல்லை. 2, 3 பிரதிவாதிகள்தான் தூண்டி விட்டு இந்த புகாரை அளிக்க வைத்துள்ளார்கள் என்றும் முடிவு செய்கிறார்.
எனவே பொய் வழக்கு போட்டதாக 2,3 பிரதிவாதிகள் மீது நஷ்ட ஈடு கொடுக்க வேண்டியவர்கள் என முடிவு செய்கிறார் சிவில் கோர்ட்டின் நீதிபதி.
அதை எதிர்த்து பிரதிவாதிகள் ஐகோர்ட்டில் அப்பீல் செய்கிறார்கள்.
ஐகோர்ட்டில், பிரதிவாதிகளின் வாதம் என்னவென்றால், “இவர்கள் prosecutor இல்லை. அதாவது இவர்கள் கிரிமினல் வழக்குப் போடவில்லை. போலீஸ்தான் போடுகிறது. இவர்களுக்கு உள்ள சந்தேகத்தை போலிஸிடம் தெரிவித்தார்கள். அவ்வளவே. பொய் வழக்குப் போட்டால் மட்டுமே நஷ்ட ஈடு கொடுக்க வேண்டும். இதில் பொய் வழக்கு என்ற பேச்சே எழவில்லை என்கிறார்கள். அதற்கு ஆதரவாக Narasinga Rao v Muthayya Pillay, 26 Mad 362 என்ற முன் வழக்கை காண்பிக்கிறார்கள். அதில், போலீஸூக்கு தகவல் கொடுத்ததை, பொய் வழக்கு போட்டதாகச் சொல்ல முடியாது என்று தீர்ப்பாகி உள்ளது.
மற்றும் ஒரு பிரைவி கவுன்சில் வழக்கையும் மேற்கோள் காட்டுகிறார்கள், Gaya Prasad v. Bhagat Singh, 35 Ind App 189 (PC) இதிலும் மேற்சொன்ன வழக்கை குறிப்பிட்டுச் சொல்லி உள்ளார்கள். பிரைவி கவுன்சில் வழக்கில், “இந்தியாவில் போலிஸ் மட்டுமே கிரிமினல் விசாரனைகளை நடத்தும் அதிகாரம் கொண்டது. அவர்களின் விசாரனையின் முடிவில் யாரை குற்றம் சுமத்த முடியுமோ, அவர்களையே குற்றம் சுமத்துவர். இதில் வெளி நபர்களோ, சாட்சிகளோ ஒன்றும் செய்ய முடியாது” என்று தெளிவு படுத்தி உள்ளனர்.
ஆனால் இந்த வழக்கில், “பொய் என்று தெரிந்தே, பொய்யான தகவலை, போலீஸூக்கு சொல்லி உள்ளார்கள்” என்பதே. அவர்கள் போலிஸைத் தூண்டி இந்த வழக்கைப் போட வைத்திருக்கிறார்கள் என்றும் சொல்கிறார். அப்படி மாட்டி விட்டு கோர்ட் வரை போய் விட்டது.
வழக்கை போலிஸ்தான் போடும். அதில் சந்தேகம் இல்லை. ஆனால், பொய்யான சாட்சியமும், தகவலும் ஒரு பொய்யான கிரிமினல் வழக்கை, போடுவதற்கு அவர்கள் துணை இருந்தார்கள் என்று சொல்கிறார் வாதி.
மேலே சொன்ன நரசிங்க ராவ் வழக்கில், ஒரு புகாரை அளிப்பவரை, பொய் வழக்குக்கு துணை போனார் என்று malicious prosecution செய்தார் என்று நஷ்ட ஈடு கேட்க முடியாது என்று சொல்லி உள்ளது.
எனவே, ஏதோ அவருக்குத் தெரிந்த விஷயம் உண்மை என்று நம்பி, போலிஸ் புகார் கொடுத்தால், அவரை பொய் வழக்குக்கு துணை போனார் என்று சிவில் வழக்கு போட முடியாது என்று பல கோர்ட்டுகள் தீர்ப்பில் சொல்லி உள்ளன.
புகார் கொடுப்பவர் என்ன புகார் சொன்னாலும், அதை போலிஸ், மாஜிஸ்டிரேட் விசாரித்து, தகுதி இருந்தால் மட்டுமே வழக்குப் போடுவர். எனவே புகார் கொடுத்தவர்தான் சட்டத்தின் சக்கரத்தை உருட்டி விட்டார் என்று எடுத்துக் கொள்ள முடியாது. சட்டத்தை நடைமுறைப் படுத்துவது போலீஸூம் மாஜிஸ்டிரேட்டும் தான். என்று Periya Goundan v. Kuppa Goundan என்ற வழக்கில் தீர்ப்பு உள்ளது.
சிந்து கோர்ட் ஒரு வழக்கில், யார் ஒருவர் பொய் வழக்குப் போட துணை போகிறாரோ அவர் அந்த குற்றத்தைச் செய்தவர் ஆகிறார் என்று சொல்லி உள்ளது. ஏனென்றால் அவர் கொடுத்த வாக்குமூலமே அந்த வழக்கை போடுவதற்கு காரணம் ஆகிறது.
இந்த வழக்கில் அவ்வாறு நடக்கவில்லை. இவர்கள் யாரும் புகார் கொடுக்கவில்லை. தகவல்களை மட்டுமே சொல்லி உள்ளனர். அதை நம்பி, அவரின் கணவர் புகார் கொடுத்துள்ளார். எனவே இவர்கள் தகவல் கொடுத்ததாகச் சொல்ல முடியாது. இறந்த பெண்மணியின் கணவர்தான் (1-ம் பிரதிவாதிதான்) புகார் கொடுத்துள்ளார். எனவே இவர்களை (2,3 பிரதிவாதிகள்) Prosecutor என்று கருத இடமில்லை. இவர்களை, வேண்டுமென்றே புகார் கொடுத்தவர்கள் என்றும் கூறி விட முடியாது.
எனவே அப்பீல் வழக்கு இவர்களுக்கு சாதகமாக தீர்ப்பு ஆகிறது. அசல் வழக்கு தள்ளுபடி ஆகிறது.
**


Friday, December 21, 2018

தந்தையே மகளுக்கு கார்டியன்


Madras High Court
G.Ponnaiah Asari v. Suppaiah Achari and others.
Citation: 158 Ind Cas 1 :: (1935) 68 MLJ 213
Judgment: Horace Owen Compton Beasley, Kt., C.J.
1935 காலக்கட்டங்களில் இராமநாதபுரம் மாவட்ட கோர்ட் மதுரையில் இருந்தது. மதுரையில் உள்ள இராமநாதபுரம் மாவட்ட கோர்ட்டுக்கு ஒரு வழக்கு வருகிறது. அதில், தன் மைனர் மகளைத் தன்னிடம் ஒப்படைக்கும்படி மைனர் பெண்ணின் தந்தையும், சகோதரனும் இந்த வழக்கை போடுகின்றனர்.
சுப்பையா ஆசாரிக்கு திருமணம் ஆகி, ஒரு மகனும் மகளும் இருக்கும் நிலையில் அவரின் மனைவி இறந்து விடுகிறார். பின்னர் சுப்பையா ஆசாரி வேறு ஒரு பெண்ணைத் திருமணம் செய்து கொள்கிறார். மூத்த மனைவியின் மகள் ஒரு வயதாக இருக்கும்போது மூத்த மனைவி இறந்து விடுகிறாள். இப்போது அந்த மகளுக்கு 13 வயது ஆகிறது.
மூத்த மனைவியின் சகோதரர்கள், இந்த மைனர் பெண்ணை கடத்திக் கொண்டு போய் விட்டார்கள். அவளிடம் அவள் தாயின் நகைகளும் உள்ளன. பாட்டியைப் பார்க்க வேண்டும் என்று அந்தச் சிறுமியிடம் சொல்லி நகைகளுடன் அவளை கடத்திச் சென்றுள்ளனர். அங்கு கொண்டு போய் அந்த மைனர் பெண்ணின் மாமன் மகனுக்குத் திருமணம் செய்து கொடுக்க ஏற்பாடும் செய்கிறார்கள். 13 வயதில் இருக்கும் மைனர் பெண்ணுக்கு திருமணம் செய்வது Child Marriage Act, 1929 சட்டப்படி குற்றமும் ஆகும்.  தகப்பன் இருக்கும்போது, அவனே அந்த மைனர் பெண்ணுக்கு சட்டப்படியான கார்டியன். எனவே மகளைத் தன்னிடம் ஒப்படைக்கு உத்தரவு கேட்டு மாவட்ட கோர்ட்டில் வழக்கு மனு கொடுக்கிறார்.
அந்த மைனர் பெண்ணுக்கு கோர்ட் மூலம் எந்த கார்டியனும் நியமிக்கவில்லை. அவ்வாறு கோர்ட் கார்டியன் நியமித்து இருக்காத போது, அவளின் தந்தை மட்டுமே இயற்கையில் கார்டியனாக இருக்க தகுதி உடையவர் என்பது தந்தையின் வாதம்.
வழக்கை விசாரித்த மாவட்ட கோர்ட், “அந்த மைனர் பெண்ணை, அவளின் தந்தையிடம் ஒப்படைக்க வேண்டும் என்றும், ஆனாலும், அவளின் தந்தை, அந்த பெண்ணை, ஒரு நான்கு மாதங்களுக்கு, தன் மாமன்கள், தாய் வழிப் பாட்டி இவர்களுடன் இருக்கும்படி அனுமதிக்க வேண்டும்” என்று தீர்ப்பு கூறினார்.  அந்த பெண்ணுக்கு 9 வயதுதான் ஆகிறது என்று தாய் மாமன்கள் சொல்கிறார்கள். பெண் வயதுக்கு வரும்போது, தாய்வழிப் பாட்டியிடம் இருப்பதே சிறந்தது என்பதால் அப்படிச் சொல்கிறார்கள். இப்படிச் சொல்வதால், மேலும் சிலகாலம் அந்தப் பெண்ணைத் தங்களுடனே வைத்துக் கொள்ள முடியும் என நினைக்கிறார்கள். ஆனால் அதில் உண்மையில்லை. அவளுக்கு 13 வயதாகிறது.
தந்தை கூறுகிறார், “இந்த வழக்கைப் போடுவதற்கு 15 நாட்களுக்கு முன்புவரை, மகள் தன்னிடமே இருந்து வந்ததாகவும், அதற்குப் பின்னர் தான் அவளை பொய் சொல்லி, தாய் மாமன்கள் அவர்களின் வீட்டுக்கு கூட்டிச் சென்றார்கள்” என்றும் சொல்கிறார். ஆனால் மாவட்ட நீதிபதி அது பொய்யான தகவல் என்றும் தன் தீர்ப்பில் கூறி உள்ளார்.
ஆனால் உண்மையில் இப்படித்தான் நடந்து இருக்க முடியும் என்று மாவட்ட நீதிபதி தன் கருத்தைச் சொல்லி உள்ளார். “இந்தப் பெண்ணுக்கு ஒரு வயது இருக்கும்போது, அவளின் தாய் இறந்து விடுகிறாள். அப்போது, இவளின் தகப்பனின் சம்மதத்தின் பேரில், இந்தப் பெண்ணை, அவளின் தாய்வழிப் பாட்டியும், தாய் மாமன்களும் அவர்களின் குடும்பத்துக்கு அழைத்துச் சென்று விட்டார்கள். அவள் அங்குதான் வசித்து வருகிறாள். அப்போது அவளின் தாய்க்கு திருமணத்தின் போது, தாய்வீட்டில் கொடுத்த நகைகளையும் சேர்த்து எடுத்துக் கொண்டு சென்றுள்ளனர். இந்தச் சூழ்நிலையில்தான், இவளின் தந்தை வேறு ஒரு பெண்ணை மறுமணம் செய்து கொள்கிறார். இரண்டாவது திருமணத்தின் மூலம் அவருக்கு நான்கு குழந்தைகள் இருக்கிறார்கள். இரண்டாவது மனைவி, அவளுக்குக் குழந்தைகள் பிறக்கும்போது, அவர்களுடன் இந்தச் சிறுமியையும் அந்த மாற்றந்தாய் சரியாக கவனிக்க முடியாது என்று கருதியே இந்த ஏற்பாட்டைச் செய்திருக்கலாம்,” என்று மாவட்ட நீதிபதி தன் கருத்தையும் சொல்லி உள்ளார்.
எனவே அந்தச் சிறுமி, தன் தாய்வழிப் பாட்டி வீட்டுக்கு தன் ஒரு வயதில் சென்றதில் இருந்தே அங்குதான் வளர்ந்து வருகிறார் என்றே கருத வேண்டும். அந்தச் சிறுமி, தன் தந்தையுடன் சேர்ந்து வசிக்கவில்லை. அந்தச் சிறுமியின் தாய்வழிப் பாட்டியும், தாய் மகன்களும் அவளை அன்புடனே வளர்த்து வருகிறார்கள். அவளுக்கு நகைகளும் செய்து கொடுத்துள்ளனர்.  அந்த சிறுமியைக் கோர்ட்டுக்கு வரவழைத்து அவளையும் ஒரு சாட்சியாக விசாரித்த போது, “நான் என் தந்தையுடன் சென்று வாழ விருப்பம் இல்லை” என்றும் சொல்லி உள்ளார். “எனக்கு, என் மாமன்கள், நகைகள் செய்து கொடுத்துள்ளார்கள், துணி மணிகள் வாங்கிக் கொடுக்கிறார்கள்”, என்றும் சொல்லி உள்ளாள். “நான், என் தந்தையை பார்த்தே இல்லை; அவரும் எப்போதும், நான் வசிக்கும் கிராமத்துக்கு என்னைப் பார்க்க வந்ததும் இல்லை; என் கூடப் பிறந்த என் சகோதரனும் என்னை வந்து பார்க்கவில்லை” என்று கூறுகிறாள்.
இவள் சிறுமிதான். ஏன் இவளின் சாட்சியத்தை ஏற்றுக் கொள்ளக் கூடாது? ஏற்கக் கூடிய சாட்சியமாகவே இருக்கிறது என்று மாவட்ட நீதிபதி முடிவு செய்கிறார். சிறுமியின் தாய் இறந்தபோது, இரண்டு குடும்பத்துக்கும் சரியான உறவு முறை இருக்கவில்லை என்றே தெரிகிறது என்று மாவட்ட நீதிபதி கருத்து தெரிவிக்கிறார்.
மாவட்ட நீதிபதி, இரண்டு முன் வழக்குகளை மேற்கோள் காட்டுகிறார்.
Mohideen Ibrahim Nachi v. Mohamed Ibrahim Sahib, (1915) ILR 39 Mad.608 : 30 MLJ 21.
Kode Atchayya v. Kosaraju Narahari, (1958) 120 IC 474.
இந்த முன் வழக்குகளில், “தந்தையே தன் மைனர் குழந்தைகளுக்கு இயற்கை கார்டியன் ஆவார்; இதை நிலையையும் உரிமையையும் மாற்ற முடியாது;  ஆனால், தந்தை தகுதி இல்லாதவராக இருந்தால் மட்டுமே கார்டியனாக இயங்க முடியாது; மேலும், தந்தை, இரண்டாவது திருமணம் செய்து கொண்டார் என்ற ஒரே காரணத்துக்காக அவர் கார்டியனாக இயங்கத் தகுதி இல்லாதவர் என்று கருதி விட முடியாது,” என்றும் அந்த தீர்ப்புகளில் சொல்லப் பட்டுள்ளது.
எனவே தந்தைதான் எப்போதும் கார்டியன் என்பதில் எந்த மாறுபட்ட கருத்தும் இல்லை; ஆனாலும் இதில் ஒரு முக்கியமான விஷயத்தையும் பார்க்க வேண்டும்; அது அந்த மைனரின் எதிர்கால நன்மை.
மற்றொரு வழக்கான, Battara v. Mohanlal Lallubai, (1922) 68 IC 518 என்ற வழக்கில், தந்தை கார்டியனாக இயங்க அனுமதி கேட்டுப் போட்ட வழக்கு தள்ளுபடி ஆகிறது. அந்த வழக்கில், மைனர் மகன், தன் பிரிந்து சென்ற தாயிடமே கடந்த ஐந்து வருடங்களாக வசித்து வருகிறான். அதை மைனரின் தகப்பனும் ஆட்சேபனை செய்யாமல் இருந்து இருக்கிறார். இப்போது திடீரென்று, கார்டியன் உரிமை கேட்டு வழக்குப் போட்டுள்ளார். மைனர் மகனின் நன்மையைக் கருதி, மைனரை அவனின் தந்தையிடம் ஒப்படைக்கவில்லை.
மற்றொரு வழக்கான, Mrs. Annie Besant v. Narayaniah (1914) LR 41 I.A.314 : ILR 38 Mad 807 : 27 MLJ 30 (PC); (1913) 25 MLJ 661 என்ற பிரபலமான வழக்காகும். இந்த வழக்கில், நாராயணையா என்பவர், தன் இரண்டு மகன்களையும் (ஜே.கிருஷ்ணமூர்த்தி, ஜே.நித்தியானந்தா) வளர்க்க முடியாமல் அல்லது அவர்களுக்கு நல்ல கல்வி அறிவு கொடுக்க முடியாமல் இருக்கும் சூழ்நிலையில், அன்னி பெசன்ட் அம்மையாரிடம் தன் இரண்டு குழந்தைகளையும் மதராஸ் பட்டிணத்தில் அடையாரில் உள்ள தியாசோபிகல் சொசைட்டியின் செகரட்டரியாக இருந்த அன்னி பெசன்ட் அம்மையாரிடம் ஒப்படைக்கிறார். அப்போது அந்தச் சிறுவர்களுக்கு முறைய 14, 11 வயதுகள். அந்த பெண்மணி அன்னி பெசன்ட் அந்தச் சிறுவர்கள் இருவரையும், லண்டனுக்கு அனுப்பி நல்ல கல்வியைக் கொடுக்கிறார். அப்போது, “இந்தக் குழந்தைகளை அன்னி பெசண்ட் அம்மணியே தத்து போல எடுத்துக் கொள்ளலாம் என்றும், தந்தை ஆகிய நான் எப்போதும் அதை கேள்வி கேட்கவோ, மகன்களின் மீது உரிமை கொண்டாடவோ மாட்டேன் என்றும், எனக்கு அவர்களின் கல்வி அறிவுதான் முக்கியம் என்றும் ஒரு பத்திரம் எழுதி அன்னி பெசன்ட் அம்மையாரிடம் ஏற்கனவே கொடுத்த இருக்கிறார். ஏனென்றால், தந்தையின் பாசத்தில், நன்றாக லண்டனில் படித்துக் கொண்டிருக்கும் குழந்தைகளை திரும்ப கேட்டு விடுவார் என்று நினைத்தார் அந்த அம்மணி. ஆனால் அதுவே நடந்து விட்டது. சிறுவர்கள் இருவரும் லண்டனில் மிகச் சிறந்த படிப்பாளிகளாக ஆகி விட்டார்கள். (அதில் ஒருவரின் பெயர் தான், பிரபலமான ஜேகே என்று சொல்லும் ஜே.கிருஷ்ணமூர்த்தி. பின்னர் அவர் எழுதிய தத்துவ அறிவுப் புத்தகங்கள் ஏராளம்). என்னதான் தன் பிள்ளைகளை வேறு ஒருவருக்கு கொடுத்து விட்டாலும், தந்தை பாசம் பொல்லாததுதான். அவர் செங்கல்பட்டு மாவட்ட கோர்ட்டில், தன் குழந்தைகளைத் தன்னுடன் ஒப்படைக்கும்படி வழக்கு போடுகிறார். அந்த வழக்கு, செங்கல்பட்டு கோர்ட்டில் நடந்து, மதராஸ் ஐகோர்ட்டில் நடந்து, பின்னர் லண்டனில் உள்ள பிரைவி கவுன்சில் வரை (உயர் அப்பீல் கோர்ட்) சென்றது. பிரைவி கவுன்சில் கோர்ட், அங்கு லண்டனில் படித்துக் கொண்டிருந்த அந்தச் சிறுவர்களை நேரில் கோர்ட்டுக்கு அழைத்து விசாரித்தும் இருக்கிறார்கள். அவர்களின் அறிவுத் திறமையை வியத்தும் உள்ளனர்.
“ஏதோ தந்தையின் ஆசையில், குழந்தைகளை வேறு ஒருவரிடம் ஒப்படைப்பது இயல்புதான். அதற்காக பாசமே இல்லை என்று சொல்லி விட முடியாது. அவரின் உரிமையை அதற்காக மறுக்கவும் முடியாது” என்று பிரைவி கவுன்சில் கருத்துச் சொல்லி உள்ளது. “A man may be in narrow circumstances, he may be negligent, injudicious and faulty as the father of minors; he may be a person from whom the discreet, the intelligent and the well disposed, exercising a private judgment, would wish his children to be, for their sakes and his own, removed; he may be all this without rendering himself liable to judicial interference, and in the main it is for obvious reasons well that it should be so.”
தந்தையிடம் குழந்தைகளை ஒப்படைக்க வேண்டுமா? இல்லையென்றால் அவர் கேபியஸ் கார்பஸ் ரிட் உரிமையை நாட முடியுமா? என்ற கேள்விகளுக்குப் பதிலாக, இங்கிலாந்து கோர்ட்டின் வேறு ஒரு வழக்கின் தீர்ப்பை பார்க்கிறார்கள். In re Agar Ellis, (1883) 24 Ch.D.317 at page 331. இது 1883-ல் நடந்த வழக்கு. இதில், குழந்தைகள், தன் முடிவை எடுக்கும் அறிவு வரும் வயதைத் தாண்டி விட்டால், அவர்களின் முடிவையும் கேட்க வேண்டும். அந்த வயதைத் தாண்டாத குழந்தையைப் பொருத்து, தந்தைதான் கார்டியன் என்ற சட்ட முடிவுக்கு கோர்ட் வர வேண்டும் என்று கூறி உள்ளது. தன் முடிவு எடுக்கும் அறிவு என்பது ஆண் குழந்தையாக இருந்தால் அவனுக்கு 14 வயதில் வரும்; அதே பெண் குழந்தையாக இருந்தால் அவளுக்கு 16 வயதில் வரும் என்று ஆங்கிலேய கோர்ட்டுகளின் முடிவு.
“But then there are cases where undoubtedly the Court declined to interfere on Habeas Corpus in order to interfere with it when it was of the age of discretion – the age of sixteen in the case of girls and the age of fourteen in the case of boys. For what reason is that? When an infant is so young as not to be able in the eyes of the law to exercise a discretion, then unless that infant is in the proper custody, that is to say the legal custody of the father or the guardian appointed, it is not in legal custody, and the very object of suing out a Habeas Corpus is to have it ascertained whether the person who is sought to be brought up is under duress or imprisonment; but nobody can be placed in the position of being under duress or imprisonment if he expresses a wish to remain where he is at the time the writ is issued, that is to say, provided the person is competent to express such a wish; and, if he does, it is the duty of law to regard it.”
இந்த அன்னி பெசன்ட் அம்மையாரின் வழக்கில், லண்டன் பிரைவி கவுன்சில் கோர்ட்டில் விசாரனை நடக்கும்போது, அந்த சிறுவர்கள் இருவரையும் அழைத்து நீதிபதிகள் பேசினார்கள். அப்போது பெரியவனுக்கு 18 வயதும், சின்னவனுக்கு 16 வயதும் ஆகிறது. பெரியவன் ஆக்ஸ்போர்டு யுனிவர்சிட்டியில் படிக்கும் விருப்பத்தில் இருக்கிறான். சின்னவன், இந்தியன் சிவில் சர்வீஸ் தேர்வு எழுதி இந்தியாவில் ஐசிஎஸ் அதிகாரி ஆகும் எண்ணத்தில் உள்ளான். அப்போது இரு சிறுவர்களும், Mr. G.S. அருண்டேல் என்பவரின் கண்காணிப்பில் உள்ளனர். அவர் கேம்பிரிட்ஜ் பட்டதாரி. மத்திய இந்து கல்லூரியில் பிரின்சிபலாக இருக்கிறார்.
எனவே கீழ்கோர்ட் கொடுத்த தீர்ப்பின் படியே, சிறுவர்கள் இருவரையும் தந்தையின் பொறுப்பிலேயே இருக்கும்படி பிரைவி கவுன்சில் உத்தரவு இட்டது.
**
இப்போது நாம் சுப்பையா ஆசாரியின் வழக்குக்கு வருவோம்.
மதுரையி்ல் உள்ள இராமநாதபுரம் மாவட்ட கோர்ட் தீர்ப்பு சரியே. தந்தையிடமே சிறுமி இருக்க வேண்டும். எனவே தாய் மாமன்கள் போட்ட அப்பீல் வழக்கு தள்ளுபடி ஆகிறது.
**



Thursday, December 20, 2018

ரயில்வே சீசன் டிக்கெட் வழக்கு 1956-ல்


In Re: B.Matameswara Rao v. Unknown (Judgment on 16 January 1956)
Citation: 1957 Crl.LJ 44
1954ம் வருடம். விஜயவாடா ரயில் நிலையம். அங்கு ரயில் பிரயாணியாக வந்து கொண்டிருந்த ஒரு பயணியிடம், ரயில்வே டிக்கெட் பரிசோதகர் பயண சீட்டைக் கேட்கிறார். அவர் தன்னிடம் இருந்த ஒரு சீசன் டிக்கெட்டை எடுத்துக் கொடுக்கிறார். அது அவர் பெயரில் வாங்கப்பட்ட சீட்டு இல்லை என்று தெரிகிறது. அந்த சீசன் டிக்கெட்டில் உள்ள பெயரே தன்னுடைய பெயர் என்று அந்தப் பயணி கூறுகிறார். உண்மையில் அந்த நபர் அவர் அல்ல என்று தெரிய வருகிறது. எனவே விஜயவாடாவில் உள்ள ரயில்வே 1-ம் வகுப்பு மாஜிஸ்டிரேட் முன்னர் நிறுத்தப் படுகிறார். அவர் மீது, “ஆள் மாறாட்டம் செய்து ரயில்வேயை ஏமாற்றி குற்றத்துக்காக” வழக்குப் போடப் படுகிறது. அந்த நபர் குற்றத்தை ஏற்க மறுத்து வழக்கு நடத்துகிறார். வழக்கில் அவரே (வக்கீல் வைக்காமல்) வாதம் செய்கிறார்.
வழக்கு விஜயவாடவின் சப்-மாஜிஸ்டிரேட் கோர்ட்டுக்கு மாற்றி விசாரிக்கப் படுகிறது. இந்த பயணி மீது ரயில்வே சட்டம் பிரிவு 112 (பி) மற்றும் 114-ல் குற்றம் சுமத்தப்படுகிறது. பின்னர் இந்த வழக்கை, இந்தியன் பீனல் கோடு சட்டம் பிரிவு 419-ஆக திருத்தி குற்றம் சுமத்தப்படுகிறது. ஏற்கனவே அவருக்கு இந்தியன் ரயில்வே சட்டப்படியே சம்மன் அனுப்பப் பட்டது என்றும், ஐபிசி படி சம்மன் அனுப்பவில்லை என்றும், எனவே இந்த மாஜிஸ்டிரேட் கோர்ட் விசாரனை செய்யும் அதிகாரம் இல்லை என்றும் வாதம் செய்கிறார்.
ஐபிசி சட்டப்படி தன்னை விசாரிக்க முடியாது என்று அதை எதிர்த்து ஐகோர்ட்டில் அவரே ஆஜராகி அப்பீல் வழக்கை நடத்துகிறார்.
மேலும், ரயில்வே சட்டம் பிரிவு 137 மற்றும் ஐபிசி பிரிவு 21-ன்படி டிக்கெட் பரிசோதகர் ஒரு அரசு அதிகாரி இல்லை எனவும், எனவே அவர் ஐபிசி சட்டப்படி தன் மீது வழக்குத் தொடர முடியாது என்றும் வாதம் செய்கிறார்.
முதலில் சம்மன் அனுப்பும் போது ரயில்வே சட்டத்தை மட்டும் சொல்லி அனுப்பி இருந்தாலும், பின்னர் ஐபிசி சட்டப்படி வழக்கு தொடர்ந்தாலும், இதில் ஏதும் நடைமுறைத் தவறு இருப்பதாகத் தெரியவில்லை என்று ஐகோர்ட் அவரது வாதத்தை ஏற்க மறுக்கிறது.
ரயில்வே டிக்கெட் பரிசோதகர் ஒரு அரசு அதிகாரியா என்ற கேள்வியை எழுப்புகிறார். அவர் அரசு அதிகாரி இல்லை என்றால், அவரே புகார் கொடுத்திருப்பதால், அவரை விசாரிக்காமல்  தீர்ப்பு வழங்கியது தவறு என்றும் வாதம் செய்கிறார்.
இந்திய தண்டனைச் சட்டம் பிரிவு 21-ன்படி அவர் அரசு அதிகாரி இல்லை என்பதை ஏற்க முடியாது என்று ஐகோர்ட் சொல்கிறது. ரயில்வே சட்டம் பிரிவு 137-ன்படி ஒரு ரயில்வே ஊழியர் அரசு அதிகாரி இல்லை என்ற போதிலும், ஐபிசி சட்டம் அத்தியாயம் 9-ஐப் பொருத்தவரை அவர் ஒரு அரசு அதிகாரி தான். கிரிமினல் நடைமுறைச் சட்டத்தில் அரசு அதிகாரி யார் என்பதைப் பற்றி எந்த விளக்கமும் சொல்லவில்லை. இருந்தாலும், அந்த சட்டம் பிரிவு 4(2)-ல், ஐபிசியில் சொல்லப்பட்டுள்ள விளக்கங்களையே ரயில்வே சட்டங்களுக்கும் எடுத்துக் கொள்ளலாம் என்று சொல்லப்பட்டுள்ளது என்று ஐகோர்ட் சொல்லி விட்டது. எனவே ஐபிசி சட்டப்படி ரயில்வே ஊழியர் அரசு அதிகாரிதான். ரயில்வே என்பது மத்திய அரசின் சொத்து. எனவே அதன் ஊழியர்கள் அரசு சம்பளம் பெறுபவர்கள்தான். எனவே ரயில்வே சட்டத்தில் குறிப்பிட்ட சொல்லா விட்டாலும், ஐபிசி-ல் சொல்லி உள்ளபடியே, ரயில்வே ஊழியர் அரசு ஊழியர் என்றே எடுத்துக் கொள்ள வேண்டும். எனவே அவர் ஐபிசி சட்டப்படி வழக்குத் தொடுத்து இருப்பது சட்டப்படி சரியே என்று ஐகோர்ட் தீர்ப்பு கொடுத்து விட்டது.
மேலும், ஐபிசி சட்டப்படி வழக்கு தொடுத்தால், புகார் கொடுத்தவரை விசாரிக்க வேண்டும் என்ற கட்டாயம் உள்ளது. அந்த வழக்கில் அவ்வாறு புகார் கொடுத்தவரை விசாரிக்கவில்லை. இருந்தாலும், இது ஒரு நடைமுறை குறையே தவிர, சட்டக்குறை என்று எடுத்துக் கொள்ள முடியாது என்றும் ஐகோர்ட் சொல்லி விட்டது.
சீசன் டிக்கெட் வைத்திருப்பவரேதான் பயணம் செய்ய வேண்டும், மற்றவர் அதை உபயோகப்படுத்தி ரயில் பயணம் செய்யக் கூடாது என்று ரயில்வே சட்டத்தில் எங்கும் குறிப்பிட்டுச் சொல்லவில்லை என்பது உண்மைதான். ஆனால் இவரின் வழக்கோ, மற்றவரின் பயணச் சீட்டை உபயோகித்தார் என்பதையும் தாண்டி, அவரே நான் என்று ஆள்மாறாட்டம் செய்து உள்ளார் என்பதே வழக்கு. ஆள்மாறாட்டம் செய்வது இந்திய தண்டனைச் சட்டப்படி குற்றமே. எனவே ஐபிசி சட்டப்படி அவரைத் தண்டிப்பது சரியே என்று ஆந்திரா ஐகோர்ட் தீர்ப்பு கூறியது.
**

Wednesday, December 19, 2018

நதி நீர் அரசுக்குச் சொந்தமா?


நதி நீர் அரசுக்குச் சொந்தமா?
சின்னப்பன் செட்டி v. செக்ரட்டரி ஆப் ஸ்டேட் ஆப் இந்தியா
Chinnappan Chetty v. The Secretary of State for India. (1919) 36 MLJ 124
மதராஸ் ஐகோர்ட்டின் முன்பு ஒரு வழக்கு வருகிறது. மருதார் நதி என்பது அரசுக்குச் சொந்தமான மலையில் உருவாகி நிலப்பரப்புக்கு வந்து ரயத் நிலங்களின் வழியாக ஓடுகிறது. அது கன்னிவாடி ஜமின்தாரின் நிலங்கள் வழியாகச் செல்கிறது.
கன்னிவாடி ஜமின்தார் இந்த நதியின் நீரை தன் நிலங்களுக்கு எந்த வரியும் இல்லாமல் இலவசமாக உபயோகித்துக் கொள்ளலாமா என்பதே கேள்வி. ஜமின்தாரின் நிலங்களில் வழியாக நதி ஓடுவதால், அந்த பகுதியில் உள்ள மருதார் நதி நீரை அவர் உபயோகப் படுத்த அவருக்கு உரிமை உண்டு என்று ஜமின்தார் சொல்கிறார். அதற்கு அரசு வரி செலுத்த வேண்டிய அவசியம் இல்லை என்கிறார்.
The Madras Irrigation Cess Act, VII of 1865 as amended by Act V of 1900. இந்த சட்டத்தின் படி, அரசுக்கு சொந்தமான நதி நீரை பாசனத்துக்கு உபயோகிக்கும் நிலத்தின் உரிமையாளர் நீர் வரி செலுத்த வேண்டும் என்று அரசு கேட்கிறது.  ஜமின்தார் மறுக்கிறார். “என் நிலத்திற்குள் ஓடும் நதியின் நீரை என் நிலத்துக்கு பாசனத்துக்கு பயன்படுத்த, நான் ஏன் அரசுக்கு நீர் வரி செலுத்த வேண்டும்?” என்பது அவரின் வாதம்.
மேற்படி சட்டப்படி, நதிகள், ஓடைகள், வாய்க்கால்கள், குளங்கள், இவைகளை அரசு ஏற்படுத்தி இருந்தால், அதன் நீரை பாசனத்துக்கு பயன்படுத்தும் நில உரிமையாளர் நீர் வரி செலுத்த வேண்டும் என்பது சட்ட விதி.
எல்லா பொது ரோடுகளும், தெருக்களும், சந்துகளும், பாதை வழிகளும், பாலங்களும், மதகுகளும், கடலின் படுகைகளும், துறைமுக முகத்துவாரங்களும், நதிகளும், நீர் ஓடைகளும், நலா, ஏரி, குளம், குட்டை, இவைகளில் ஓடும் நீரும், கிடக்கும் நீரும்  - இவைகளை உபயோகப்படுத்தும் நில உரிமையாளர்  வரி செலுத்த வேண்டும் என்பது சட்டம்.
ஆனால் ஜமின்தாரின் ஆட்சேபனையைப் பொறுத்து இதுவரை சரியான சட்டம் ஏதும் இருப்பதாக தெரிவில்லை. ஜமின் சொத்துக்கு நடுவில் ஓடும் ஆறுகள் ஜமினுக்கு சொந்தம் என Kandukuri Mahalakshmamma Garu v. The Secretary of State for India, (1910) ILR 34 Mad. 295 என்ற வழக்கில் தீர்ப்பாகச் சொல்லப் பட்டுள்ளது. ஆனால் மற்றொரு வழக்கான The Secretary of State for India v. Ambalavana Pandara Sannadhi (1917) ILR 40 Mad 886 என்ற வழக்கில் இந்த கருத்துக்கு மாறாக தீர்ப்பு கூறப்பட்டுள்ளது.
ஆறுகளும், நீரோடைகளும் அரசுக்கு சொந்தம் என Act VII of 1865 சட்டத்தில் கூறப்பட்டுள்ளது. இயற்கையாக உள்ள நதிகளின் நீரை மக்களின் சமுதாய பணிகளுக்கு ஏற்ப பகிர்ந்து அளிக்க வேண்டியது அரசின் கடமை.
ஆங்கிலேயர் நாட்டில் உள்ள நதிகளின் நிலைமை வேறு. இந்தியாவில் உள்ள நதிகளின் நிலைமே வேறு. அங்குள்ள சட்டத்தை இங்கு அமல் படுத்த முடியாது. எனவே நதிகள் அரசுக்குச் சொந்தம் என ஏற்கமுடியாது. பாசனம் செய்பவர்களின் உரிமை மேலானதே.
ஒரு நதியை அரசு செலவில் உருவாக்காமல் இருந்தாலும், அதன் நீரை பயன்படுத்த நீர் வரி விதிக்க அரசுக்கு உரிமை உண்டு என்பதில் சந்தேகம் இல்லை. ஆனாலும் வேறு ஒரு வழக்கில், அரசு செலவு செய்து கட்டிய ஏரிகள் குளங்கள் இவைகளின் நீருக்கு மட்டுமே நீர் வரி விதிக்க முடியும் என்றும் சொல்லி உள்ளது. அரசு எந்தச் செலவும் செய்யாமல் தானே உருவாகி ஓடி வரும் நதியின் நீருக்கு அரசு நீர் வரி விதிக்க முடியாது என்று பொருள்.
நதியின் "நிலம்" வேண்டுமானால் அரசுக்கு சொந்தமாக இருக்கலாம். அதில் ஓடி வரும் நீர், அந்த அந்த நிலத்தின் பகுதியில் உள்ள நில உரிமையாளர்களுக்கு சொந்தம். அதாவது நதி ஓடும் "நிலம்" அரசுக்குச் சொந்தம். நதியில் "ஓடும் நீர்" அங்கு உள்ள நிலத்தின் உரிமையாளருக்குச் சொந்தம்.
நதியில் ஓடும் நீர், ஒரு மாதத்தில் ஒரு நேரத்தில் அதன் கரையில் மேல் எழும். மறு நேரத்தில் கரைக்கு உள் அடங்கிப் போகும். எப்போதெல்லாம் நீர் பெருக்கு இருக்கிறதோ அந்த நிலப்பகுதிவரை நதியின் நிலம் என்று கணக்கில் கொள்ள வேண்டும்.
நதிக்கரை வரை அதை ஒட்டி உள்ள நிலத்தின் உரிமையாளருக்குச் சொந்தம் என்பதே நியதி. அது நதியை ஒட்டி உள்ள நிலத்தின் உரிமையாளருக்கு உள்ள ஈஸ்மெண்டரி உரிமையும் ஆகும்.
ஆனாலும், நதியின் நீரை மட்டுமே அதை ஒட்டி உள்ள நிலத்தின் உரிமையாளர்கள் பாசனத்துக்கு பயன்படுத்திக் கொள்ள ஈஸ்மெண்டரி உரிமை உள்ளது. அந்த நதியின் நீர் அவருக்கு உரிமை இல்லை. அந்த நீர் "ஒரு சொத்து" என்று அவர் உரிமை கொண்டாட முடியாது.
எனவே ஓடும் நதி நீர் அரசுக்குச் சொந்தம் என்பதில் 1865 சட்டத்தின் படி சரியே. ஆனாலும் அந்த நதியின் படுகை என்னும் கரை பகுதி அதை ஒட்டி உள்ள நிலத்தின் உரிமையாளருக்கு உள்ள ஈஸ்மெண்டரி உரிமை ஆகும். அவரின் நிலத்தில் இருந்து நதிக்கு போக வரவும், நீர் இறைத்துக் கொள்ளவும் உள்ள ஈஸ்மெண்டரி உரிமை ஆகும்.
**

இரட்டைத் தேர்தல் வழக்கு 1959


இரட்டைத் தேர்தல் வழக்கு 1959
R.Narasimha Reddy and another v. Bhoomaji and another
AIR 1959 AP 111
பூமாஜி என்பவரும் மற்றும் ஐந்து பேர்களும் ஆந்திராவில் உள்ள காஜவெல் இரட்டை வேட்பாளர் தேர்தலில் நிற்கிறார்கள். அதாவது அந்த தொகுதியில் இரண்டு பேரை ஒரே நேரத்தில் தேர்வு செய்ய வேண்டும். ஒன்று பொது வேட்பாளர் பதவி. மற்றொன்று ரிசர்வடு வேட்பாளர் பதவி. தேர்தல் 1957-ல் நடக்கிறது. ஆறு பேரும் தேர்தலில் நிற்க மனு கொடுத்து விட்டார்கள். வாபஸ் வாங்கும் நேரம் முடிந்த பின்னர், பூமாஜி என்ற வேட்பாளர், போட்டிலிருந்து விலகுவதாக மனு கொடுக்கிறார். எனவே அவரது மனுவை தேர்தல் அதிகாரி ஏற்றுக் கொள்ள முடியவில்லை. இதற்கிடையில், பூமாஜி பெயரும் தேர்தல் வேட்பாளர் பட்டியலில் அச்சிடப்பட்டு விடுகிறது.
நரசிம்ம ரெட்டி என்பவர் பொது வேட்பாளராக தேர்வு ஆகிறார். ரிசர்வடு வேட்பாளராக முத்தியால் ராவ் தேர்வாகிறார்.
இதற்கிடையில் தேர்தல் நடப்பதற்கு முன்னர், ஒரு புரளியைக் கிளப்பி விடுகிறார்கள். பூமாஜி மாற்றுக் கட்சி வேட்பாளரிடம் பணம் வாங்கிக் கொண்டு விலகி விடுவதாக இருந்தது. அதனால்தான் பூமாஜி அவரின் மனுவை வாபஸ் பெற இருந்தார். பணம் கைக்கு வந்து சேராததால், மனுவை வாபஸ் வாங்கவில்லை என்று பொது வெளியில் பேச்சை கசிய விட்டார்கள்.
தேர்தல் நாளான 4.3.1957-ல் வேட்பாளர் நரசிம்ம ரெட்டி ஓட்டுப் போடும் இடத்தில் இரண்டு காளை மாடுகளை கொண்டு வந்து நிறுத்தி விட்டார். வரும் வாக்காளர்களை, அதன் நெற்றியில் குங்குமம் வைத்து சத்தியம் செய்து போக வேண்டும் என்று கட்டாயப் படுத்தினர் என்றும், அவ்வாறு மாட்டின் நெற்றியில் குங்குமம் (Vermilion) வைத்தால் சத்தியத்துக்கு கட்டுப்பட்டு அவருக்கே ஓட்டுப் போடுவார்கள் என்று நினைத்து இதைச் செய்தார் என்றும் நரசிம்ம ரெட்டி மீது குற்றச் சாட்டை பூமாஜி வைக்கிறார். மேலும், தேர்தல் முறைகேடாக, ஓட்டுப் போடுபவர்களை வண்டி வைத்து அழைத்து வந்ததாகவும் குற்றச் சாட்டு. மேலும் பூமாஜி தேர்தல் பிரச்சாரத்துக்கு மேடை அமைத்து பேசும்போது, கலவரம் செய்து அதைக் கலைத்து விட்டார்கள் என்றும் குற்றச்சாட்டு.
மேலும், வென்ற வேட்பாளர் நரசிம்ம ரெட்டி ஒரு துண்டு பிரசுரம் விநியோகித்தார் என்றும், அதில் மற்றொரு கம்னியூஸ்ட் வேட்பாளரான ராமச்சந்திர ரெட்டியின் மனைவி வெளியிட்டது போல செய்து, அதில்  அவர் கம்னியூஸ்ட் கட்சியில் இருந்து ராமச்சந்திர ரெட்டியின் மனைவி விலகி விட்டதாகவும், எனவே அவரின் கணவருக்கு ஓட்டுப் போட வேண்டாம் என்றும் கூறி அந்த துண்டு பிரசுரத்தை வெளியிட்டார்கள் என்றும் குற்றச் சாட்டு.
மேலும் வெற்றி கொண்ட நரசிம்ம ரெட்டி ஏற்கனவே அரசின் PWD கான்டிராக்ட்டில் வேலை எடுத்துச் செய்வதாகவும் மற்றொரு குற்றச்சாட்டு.
இதை எல்லாம் கருத்தில் கொண்டு, தேர்தல் கோர்ட், வென்ற இருவரின் வெற்றியையும் ரத்து செய்கிறது. அதை எதிர்த்து ஐகோர்ட்டில் வழக்கு தாக்கல் செய்கிறார்கள்.
அதில், மாடுகளை கொண்டு வந்து நிறுத்தியது தேர்தலுக்கு மறுநாள் தான். எனவே அது தேர்தல் முறைகேட்டில் வராது என்று வாதம். ஒரே ஒரு சாட்சி மட்டும், “தேர்தல் அன்று சுமார் 70 கெஜ தூரத்தில் இரண்டு மாடுகளை கட்டி இருந்தார்கள் என்றும், அதில் இரண்டு மூன்று பேர் வந்து குங்குமப் பொட்டு வைத்துவிட்டுச் சென்றார்கள்” என்றும் கூறி இருக்கிறார்.  அவ்வாறு மாட்டின் நெற்றியில் குங்குமம் வைத்து விட்டு, அதை மீறி நடந்தால் பாவம் வரும் என்று அங்குள்ளவர்கள் நம்பி வருகிறார்கள் என்றும் கூறினார்.
தேர்தல் முறைகேடு நடந்ததாக சொல்பவரே அதை நிரூபிக்க வேண்டும் என்பது சட்ட விதி. வண்டி வைத்து வாக்காளரை கூட்டிக் கொண்டு வந்தார் என்பதில், அதனால் அவருக்கு விழ வேண்டிய ஓட்டு பாதித்தது என்றும் நிரூபிக்க வேண்டும். அப்படி என்றால்தான், The Representation of the People Act, Sec.100(D)(i) ன்படி அது தேர்தல் முறைகேடு ஆகும்.
PWD கான்டிராக்ட் விஷயம் என்னவென்றால், அவர் தேர்தலில் நிற்கும் முன்பே, அந்த கான்டிராக்ட்டை ரத்து செய்யும்படி லெட்டர் கொடுத்து இருக்கிறார்.  அவர் பெயரும் எடுக்கப்பட்டு உள்ளது. ஆனால் அத்துடன் எழுதிக் கொடுத்த பவர் பத்திரம் இன்னும் நடைமுறையில் உள்ளது. அதைக் கொண்டு புதுப்பித்துக் கொள்ளலாம் என்றும் கூறப்படுகிறது.
எனவே தேர்தல் அதிகாரி மொத்தமாக இரண்டு வேட்பாளர்களின் வெற்றியையும் ரத்து செய்தது சரி இல்லை. நரசிம்ம ரெட்டி வெற்றியை மட்டும் ஐகோர்ட் ரத்து செய்தது. ரிசர்வ்டு வேட்பாளர் முத்தயாலு ராவ் எந்த தேர்தல் முறைகேடும் இல்லாததால், அவரின் தேர்வை ரத்து செய்தது செல்லாது என்று ஐகோர்ட் அறிவித்தது.
**

Tuesday, December 18, 2018

Committal proceedings in Criminal cases


Committal proceedings in Criminal cases
ஆந்திராவில் மகாபட்டிணம் என்ற இடத்தில் உள்ள ஒரு காவல் நிலையத்தில் உள்ள சப்-இன்ஸ்பெக்டர், 1956-ல் ஒருவரை அழைத்து வந்து கம்பால் தொடர்ந்து அடிக்கிறார். அதில் அவர் இறந்து விடுகிறார். சப்-இன்ஸ்பெக்டர் மீது ஐபிசி 304 வழக்கு போடப் படுகிறது.
ஐபிசி 304 என்பது ஒருவரை கொலை செய்ய வேண்டும் என்ற நோக்கம் இல்லாமல், தன் செயலால் அவர் இறந்து விட்டால் அது கொலை குற்றம் ஆகும். Culpable homicide not amounting to murder.
Culpable homicide என்றால் மனிதனை சட்டத்துக்கு புறம்பாகக் கொல்வது. ஆனால் அது வேண்டுமென்றே செய்த மனிதக் கொலை அல்ல.
இந்த மாதிரி கொலை வழக்குகளை செசன்ஸ் கோர்ட்டே விசாரிக்கும். அதற்கு முன்னர் மாஜிஸ்டிரேட் கோர்ட்டில் சாட்சிகளை விசாரித்து, தக்க ஆதாரம் இருந்தால், அந்த வழக்கு செசன்ஸ் நீதிமன்றத்தால் விசாரிக்க வேண்டிய வழக்காக இருந்தால், அதை அந்த மாஜிஸ்டிரேட், செசன்ஸ் நீதிமன்றத்துக்கு விசாரனைக்கு அனுப்பி வைப்பார். இதை கமிட்டல் புரசீடிங் Committal Proceeding என்பர். பழைய கால ஜூரி முறை போன்றது. குற்றம் இருந்தால் வழக்கு விசாரனைக்கு வரும்.
இந்த வழக்கில், சப்-இன்ஸ்பெக்டர் குற்றவாளி. மாஜிஸ்டிரேட் எந்த நேரடி சாட்சிகளையும் விசாரிக்கவில்லை. ஏற்கனவே போலீஸ் விசாரனையில் கொடுத்த அறிக்கையை வைத்தே, செசன்ஸ் நீதிமன்றத்துக்கு விசாரனைக்கு அனுப்பி விட்டார் மாஜிஸ்டிரேட்.
இதை தவறு என்று ஐகோர்ட்டில் வழக்கு போடுகிறார் சப்-இன்ஸ்பெக்டர்.
சிஆர்பிசி பிரிவு 207-ஏ என்ற பிரிவு புதிதாக திருத்தல் சட்டம் 1955ன்படி சேர்க்கப்பட்டது.
அதன்படி, மாஜிஸ்டிரேட் எல்லா சாட்சிகளையும் விசாரித்து, குற்றம் நடந்திருக்கிறது என்ற முடிவுக்கு வந்தால், அதை வழக்கு விசாரனைக்காக செசன்ஸ் நீதிமன்றத்துக்கு அனுப்ப வேண்டும் என்று சொல்லப்பட்டுள்ளது.
அரசு தரப்பு எந்த நேரடி சாட்சிகளையும் ஆஜர் படுத்தவில்லை. எனவே விசாரிக்கவில்லை என்று சொல்ல முடியாது. மாஜிஸ்டிரேட் தன் முடிவாகவே எல்லா சாட்சிகளையும் வரவழைத்து விசாரிக்க வேண்டும் என்று எந்த கட்டாயமும் இல்லை. இருந்த போதிலும், அரசே சாட்சிகளை கோர்ட்டில் விசாரனைக்கு உட்படுத்தி இருக்க வேண்டும்.
இந்த வழக்கில், அரசு எந்த சாட்சிகளையும் பட்டியல் இட்டுக் கொடுக்கவில்லை. எனவே எந்த சாட்சியையும் விசாரிக்க முடியவில்லை.
எனவே சாட்சிகளை விசாரிக்காமல் விட்டது சட்டக் குறை என்று எடுத்துக் கொள்ள முடியாவிட்டாலும், அது சரியான அணுமுறை ஆகாது என்பதால், இந்த வழக்கை மறுபடியும் மாஜிஸ்டிரேட் கோர்ட் சாட்சி விசாரனைக்கு திரும்ப அனுப்பி விட்டது ஐகோர்ட்.
**