Wednesday, December 30, 2015

ப்ருஹத் ஸாம ராகம்

ப்ருஹத் ஸாம ராகம்
ஸ்ரீ கிருஷ்ணன், அர்ச்சுனனிடம் சொல்கிறார்;
"நான்  ராகங்களில் ப்ருஹத் ஸாமம்; 
கவிதைகளில் காயத்திரி; 
மாதங்களில் மார்கழி; 
பருவங்களில் வசந்தம்."
 
எல்லா உயர்வான விஷயங்களிலும் நான் உயர்ந்தவன் என்பதை ஸ்ரீகிருஷ்ணர் இப்படிக் கூறுகிறார்:
 
"ராகங்களில் இந்த ப்ருஹத் ஸாமம்”  
ஒரு இனிமையான ராகம்; இந்த ராகத்தை இரவில்தான் பாடுவார்கள்; கேட்க அவ்வளவு இனிமையாய் இருக்குமாம்; இது சாமவேதத்தில் உள்ளது; இதை இறைவனுக்காக தேவர்கள் இசைப்பார்களாம்;
 
“மந்திரங்களில் நான் காயத்திரி” 
மந்திரங்களிலேயே இது முக்கியமானது; இந்த மந்திரத்தின் ஆசிரியர் பிரம்மா; இந்த மந்திரத்தை ஜபிப்பதால் ஒருவன் சித்தி அடைந்து, இறை நிலையில் நுழைய முடியுமாம்.
 
“மாதங்களில் நான் மார்கழி”
12 மாதங்களிலும், ஏன் இந்த மார்கழியை மட்டும் ஸ்ரீகிருஷ்ணர் தேர்ந்திருக்கிறார்? இந்தியாவில் மார்கழி மாதத்தில் பயிர்களெல்லாம் விளைந்து அறுவடை செய்யப்படுமாம். இந்த மாதமே வெப்பமும் இல்லாமல், கடுங்குளிரும் இல்லாமல் மித குளிர் உள்ள காலம்; நாம் காஷ்மீர், ஊட்டி போவது இந்த குளிரை அனுபவிக்கத்தான். அது நமக்கு வருடத்தில் ஒருமாதமான மார்கழியில் வருகிறது. உண்மையில் அந்த மாதத்தில் நாம் வீட்டை விட்டு வெளியே போய், வெட்டவெளியில் ஒருமுறையேனும் அந்த மார்கழிக் குளிரை அனுபவிக்க வேண்டும்.
 
“பருவங்களில் நான் வசந்தம்”
இந்த மார்கழி போலவே, வசந்தமும் பருவகாலத்தில் சிறப்புப் பெற்றது. வசந்தகாலத்தில் தாவரங்கள் எல்லாம் பூக்கள் பூத்து குலுங்கும்; எல்லா தாவரங்களும் சந்தோஷமாக இருக்கும் காலமே இந்த வசந்தகாலம்; ஸ்ரீகிருஷ்ணனின் லீலைகள் இந்த வசந்தகாலத்தில்தான் நடந்தனவாம்; மகாகவி காளிதாஸ் இந்த வசந்தகாலத்தை தன் ருதுவம்சம் என்று நூலில் வெகு விமரிசையாகப் பாடியுள்ளார். வாய்ப்பு கிடைப்பவர்கள் படிக்கலாம்.
 
அந்த பகவத்கீதையின் பாடல்:
"ப்ருஹத்ஸாம ததா ஸாம்நாம் காயத்ரீ சந்தஸாமஹம்
மாஸானாம் மர்கசீர் ஷோ  (அ)ஹம்ருதூனாம் குஸூமாகர:"
 
ப்ருஹத்ஸாம = ப்ருஹத்ஸாமம் என்ற சாமவேதப் பாட்டு;
ததா = அதனுடன்;
ஸாம்நாம் = சாம வேதப்பாட்டு;
காயத்ரீ = காயத்ரி மந்திரம்;
சந்தஸாம் = கவிதை;
அஹம் = நான்;
மாஸானாம் = மாதங்களில்;
மார்கசீர்ஷோ அஹம் = நான் மார்கழி;
ருதூணாம் = பருவ காலங்களில்;
குஸூமாகர = வசந்த காலம்;
.

Sunday, December 27, 2015

ஜல்லிக்கட்டு

தமிழ்நாட்டில் எல்லா ஊர்களிலும் ஐயனார் (அய்யனார்) கோயில் இருக்கிறது; இங்கு திருவிழாக்கள் நடக்கும்; ஒவ்வொரு வருடமும் நடத்த முடியாது என்பதால், வசதிக்காக ஒவ்வொரு மூன்று வருடங்களுக்கும் ஒருமுறை மிகச் சிறப்பாக நடத்துவர்; இந்த திருவிழாவில் ஒருநாள், “மாடு பிடி விழா” நடக்கும்; நீர் இல்லாத குளம், கண்மாய், வயல்வெளி இவைகளில், இதற்கென பழக்கப்படுத்தப்பட்ட மாடுகளை கொண்டு வந்து, ஒவ்வொரு மாட்டையும் ஒரு நீண்ட பெரிய கயிறு கொண்டு (இதை வடம் என்பர், இது தேர்வடம் போன்றது) அந்த மாட்டின் கழுத்தில் கட்டிவிடுவர்; அந்த மாடு அந்தப் பெரிய மைதானத்தை ஒரு வட்டம் சுற்றிவர வேண்டும்; இதற்குள் மாடு பிடிக்கும் இளைஞர்கள் அதை விரட்டி விரட்டி அதன் தோளை அமுக்கி, கொம்பை அமுக்கி, அதை கீழே சாய்த்து விடுவர்; இது கொஞ்சம் பாதுகாப்பான விளையாட்டு என்று இளைஞர்கள் நம்புவதால், இதை எல்லா ஊர்களிலும் (மதுரை பகுதியிலும் அதைத் தாண்டிய தென் தமிழகத்திலும்) திருவிழாவாகவே நடத்துவர்;
இந்த மாடுபிடி விழாவை “எருது கட்டு” என்பர்; எருதை கயிற்றால் அதன் கழுத்தில் கட்டி ஓடவிட்டு அதை அடக்குவது; பின்னர், இந்த மாடுபிடி விளையாட்டில் சுவாரசியம் இல்லை என்று நினைத்திருப்பர்; மாட்டின் கயிற்றை அவிழ்த்துவிட்டு ஓடவிட்டு அதை அடக்குவதே வீரம் என்று நினைத்திருப்பர்; எனவே கயிறு இல்லாத மாட்டை அடக்குவது என்பது பாம்புடன் விளையாடுவது போல! இந்த விளையாட்டை ஜல்லிக்கட்டு என்ற பெயரில் ஒருசில பகுதிகளில் பிரபலப்படுத்தினர்; இதைப் பார்க்க உள்ளூர் மக்கள், வெளியூர் மக்கள், வெளிநாட்டு மக்கள் வருகை அதிகரித்தவுடன் மீடியாவும் துணைக்குச் சேர்ந்து கொண்டது; இது கொஞ்சம் ஆபத்தான விளையாட்டாக இருந்தாலும், தனி மாடும், தனி வீரனும், நேருக்கு நேர் மோதும் விளையாட்டல்ல இது; ஒரு மாட்டை அதன் கயிற்றை அவிழ்த்து விட்டால், அதை சுற்றி நூறு வீரர்கள் இருப்பர்; அது ஓட்டமெடுக்கும் போது அதை தொடர்ந்து கூட்டமாக சென்று அந்த மாட்டை அமுக்கி பிடிப்பர்; இதில் சில மாடுகளை இளைஞர்கள் பிடிப்பர்; சில மாடுகள் இளைஞர்களை மருத்துவமனைக்கு அனுப்பிவிடும்;
இது இல்லாமல், ஒவ்வொரு பொங்கல் பண்டிகையின் போதும், ஒவ்வொருவர் வீட்டிலும், (ஒரு சிலர் வீட்டில் மட்டும்), இளம் காளையின் கழுத்தில் வேட்டி, துண்டு, கரும்பு, பணம் இவைகளைக் கட்டிவிட்டு, “என் காளையை யார் அடக்குகிறாரோ அவர் அந்தப் பரிசுப் பொருள்களை எடுத்துக் கொள்ளலாம்” என்ற அறிவிப்போடு அந்த இளம் காளையை விரட்டி விடுவார்: இதுவும் இளைஞர்கள் மத்தியில் பிரபலமான விளையாட்டானது; இது இல்லாமல், சிறுவர்களின் வீரத்துக்காக, ஆக்ரோஷமாக முட்டும் ஆட்டுக் கிடாய்களை, கன்றுக் குட்டிகளை இவ்வாறு விரட்டி விடுவர்; இது ஆரம்ப நிலை வீரவிளையாட்டு; தென் தமிழகத்தில் வாழ்ந்த, வாழ்கிற எல்லோருக்கும் இது தெரிந்த ஒன்றுதான்;
ஜல்லிக்கட்டு;
இந்த ஜல்லிக் கட்டு மாடுபிடி விளையாட்டு தேவையா இல்லையா என்பது பற்றி பல விவாதங்கள் உண்டு; இன்னும் கொஞ்ச காலத்துக்கு இந்த ஜல்லிக்கட்டின் மீதுள்ள மோகம் தொடரும்; அடுத்துவரும் தலைமுறைகளில் இது ஒரு தேவையில்லாத விளையாட்டு என்று அந்த தலைமுறை மறந்துவிடும்;  
இப்போதுள்ள தலைமுறைக்கு இது வீர விளையாட்டு; ஏனென்றால் மாடு பிடிக்கும் விரர்கள் இருக்கிறார்கள்; இவர்களின் எண்ணிக்கை சுருங்கும் காலத்தில் இது மறைந்துவிடும்;
ஜல்லிக்கட்டுக்கு தடை
இப்படி மாட்டைப் பிடிப்பது, அந்த மாட்டை வதை செய்வது போன்றது என சென்னை ஐகோர்ட்டின் கிளையான மதுரை ஐகோர்ட்டில் ஒரு ரிட் வழக்கு வருகிறது: அதன் மீது 2006ல் நடந்த ரிட் அப்பீல் வழக்கில், எப்படி பாதுகாப்பாக ஜல்லிக்கட்டை நடத்த வேண்டும் என சில நிபந்தனைகளை கோர்ட் விதிக்கிறது; ஆனால் அதன்மீது சுப்ரீம் கோர்ட்டில் அப்பீல் செய்யப்பட்டது:
தமிழக அரசு 2009ல் ஒரு சட்டம் கொண்டுவருகிறது; The Tamil Nadu Regulation of Jallikattu Act, 2009: இதில் ஜல்லிக்கட்டு நடத்த சில கட்டுப்பாடுகள் சட்டமாக்கப்பட்டன; இந்த சட்டத்தை எதிர்த்தும் சுப்ரீம் கோர்ட்டில் வழக்கு தொடுக்கப்பட்டது;
சுப்ரீம்கோர்ட்டில் இந்த வழக்குகள் நிலுவையில் இருக்கும்போதே, மத்திய அரசு ஒரு புதிய நோட்டிபிகேஷனை 2011ல் கொண்டு வருகிறது; அதன்படி, ஏற்கனவே விலங்குகளை கொடுமைப்படுத்த தடை சட்டம் 1960 உள்ளது; The Prevention of Cruelty to Animal Act, 1960; இதில் விலங்குகள் என்று உள்ள விளக்கத்தில் “எருது-Bull” என்ற வார்த்தை இல்லை; எனவே இந்த புதிய நோட்டிபிகேஷனில் இந்த “எருது” என்ற வார்த்தையை சேர்த்து விட்டது மத்திய அரசு; எனவே இந்த புதிய நோட்டிபிகேஷன் சட்டப்படி எருதுகளை கொடுமைப்படுத்தும் எந்த விளையாட்டும் தடை செய்யப் பட்டது; சுப்ரீம் கோர்ட்டும் இந்த புதிய நோட்டிபிகேஷனின் படி, தமிழக அரசு ஏற்கனவே கொண்டுவந்த சட்டமான ஜல்லிக்கட்டு சட்டம் 2009 செல்லாது என அறிவித்தது; ஏனென்றால், இந்த விலங்குகளை கொடுமைப்படுவது என்ற வகை சட்டங்களை மத்திய அரசும் இயற்றலாம், மாநில அரசும் இயற்றலாம்; இவ்வாறு இரண்டு அரசுகளும் ஒரு சட்டத்தை இயற்றி இருந்தால், அதில் ஒன்றுக்கொன்று முரண்பாடுகள் இருந்தால், மத்திய அரசின் சட்டமே செல்லுபடியாகும்; மாநில அரசின் சட்டம் அந்தவகையில் செல்லாத நிலையில் இருக்கும்; (பார்க்க; இந்திய அரசியல் சாசனச் சட்டம் ஆர்ட்டிகிள்: 254ஐ);
எனவே சுப்ரீம் கோர்ட் தீர்ப்பின்படி, எருது என்பது 1960 விலங்குகள் கொடுமை தடை சட்டத்தில் உள்ளதால், (மத்திய அரசின் 2001ன் புதிய நோட்டிபிகேஷனின்படி) எருதுகளை கொடுமைப்படுத்த முடியாது; தமிழக அரசின் ஜல்லிக்கட்டு சட்டமும் செல்லாத நிலையில் இருக்கிறது;
ஒருவேளை மத்திய அரசு, 1960ன் விலங்குகளை கொடுமைப்படுத்த தடை சட்டத்தில் (The Prevention of Cruelty to Animals Act, 1960) உள்ள எருது-Bull  என்ற வார்த்தையை நீக்கி விட்டால், தமிழ்நாடு ஜல்லிக்கட்டு சட்டம் 2009 சட்டம் புத்துயிர் பெற்றுவிடும்;
இன்று இந்தப் பிரச்சனை வேகமாகத் தெரிகிறது; இனி வரும் காலங்களில் இது ஒரு அவசியமில்லாத பிரச்சனையாக ஆகிவிடக் கூடும்;
**

Saturday, December 26, 2015

மில்லியனும் பில்லியனும்


Million and Billion

‘mille’ means Thousand;
Mille-one  means Million;
5 numbers = Ten thousand;
6 numbers = One Lakh;
7 numbers = 10 lakh or 1 million; (1,000,000)
8 numbers = 1 crore
10 numbers == 1 billion (100 crores)

Million x million = billion (1,000,000,000,000)

5 = பத்தாயிரம்;
6 = லட்சம்;
7 = மில்லியன்;
8 = கோடி;
10 = பில்லியன்;


Wednesday, December 16, 2015

அதிக விலைக்கு விற்கப்பட்ட சொத்து

உலகத்திலேயே அதிக விலைக்கு விற்கப்பட்ட வீடு
பாரீஸில் உள்ள Chateau Louis XIV  இந்த மேன்சன் தான் உலகிலேயே அதிக விலைக்கு விற்கப்பட்ட வீடு; இதன் விலை $301 மில்லியன்; (ஒரு மில்லியன் என்பது பத்து லட்சம், அதாவது முப்பது கோடியே பத்து லட்சம் டாலர்; அதாவது ஒரு டாலர் 65 ரூபாய், அதாவது 1800 கோடி ரூபாய்க்கு விலைக்கு வாங்கி உள்ளார்); ஒரு சொத்து 1,800 கோடிக்கு விற்பனை செய்தது உலக சாதனையாம்; இதை வாங்கியவர் அவர் பெயரைச் சொல்லவில்லை (Anonymous); ஒருவேளை கண்-வைத்து விடுவார்கள் என்று பெயரை ரகசியமாக வைத்துக் கொண்டிருப்பாரோ?

இதற்கு முன் மிக அதிகமாக விற்கப்பட்ட சொத்து 2011ல் லண்டனில் உள்ள penthouse பென்ட்ஹவுஸ்; இது 221 மில்லியன் டாலருக்கு விலை போனதாம்;

Tuesday, December 8, 2015

ரயிலே... ரயிலே...

ரயில்வேக்கு ஒரு சிறிய வேண்டுகோள்

மழைக்கு ரயிலை ரத்து செய்து நிறுத்துவது என்பது சின்னக் குழந்தைகளின் விளையாட்டுப்போல இருப்பது வருத்தமாக உள்ளது; ரயில் தண்டவாளத்தில்தான் ஓடுகிறது; அதற்கு ஒன்றும் பிரச்சனை ஏற்பட வாய்ப்பில்லை; ரயில் தண்டவாளங்களில் தண்ணீர் என்ற ஒரு காரணத்தால் மட்டுமே ரயில் ஓடுவதில்லை; மற்றொரு காரணம் பாலங்கள் உடைந்து விட்டது;

ரயில் நிலையங்களை கட்டுவது, ரயிலில் உணவை கொடுக்க மொபைல் போனில் முன்பதிவு செய்வது, ரயில் நிலையங்களில் வை-பை வசதி செய்வது எல்லாம் தேவைதான்; ஆனால் ரயிலும் ஓடவேண்டுமே?

ரயில்வே முதலாளியே, இனி போடும் ரயில் தண்டவாளங்களை ஐந்தடி உயரத்துக்கு மேல் போடுங்கள்; குட்டி குட்டி பாலங்களை ஸ்டிராங்காக கட்டுங்கள்; பெரிய ஆற்றைக் கடக்கும் பாலங்களை மிக மிக மிக உயரமான பாலங்களாக கட்டுங்கள்; குறைந்த பட்சம், ஒரு ரயில் பாதையாவது, "எப்போதும் ரயில் ஓடும்" என்ற நிலையை ஏற்படுத்தினால், உலகிலேயே இந்திய ரயில்வேதான் மிகப்பெரிய நிறுவனம் என்ற பெயரை சொல்லிக் கொள்வதில் நாம் பெருமைப்பட்டுக் கொள்ளலாம்;

மேகம் கருக்கும்போதே, ரயிலை நிறுத்துவது அபத்தம்; அவமானமும் கூட; இனி வரும் காலங்களில் ரயிலை பறக்க விடுவோம்!

_____________ 

ஆரஞ்சு பழங்கள்

ஆரஞ்சு பழங்கள்

மகாராஷ்டிர மாநிலத்தின் முக்கிய பகுதியான நாக்பூரில் இந்த ஆரஞ்சு பழங்கள் அதிகமாக விளைவிக்கப்படுகிறது; அதை விற்பனை செய்ய சிரமப்பட்டிருக்கிறார்கள்; மகாராஷ்டிரா அரசு ஒரு புதிய முயற்சியை மேற்கொண்டுள்ளது; விளையும் ஆரஞ்சுப் பழங்களை எல்லாம் ஐடி கம்பெனிகளில் ஸ்டால்கள் அமைத்து அங்கேயே விற்பனை செய்யும் முயற்சியை மேற்கொண்டது; இந்த முயற்சி வெற்றி பெற்று மிக அதிகமாக விற்பனை ஆகிஉள்ளதாம்;


எதையும் வாங்குபவனிடம்தானே விற்க வேண்டும்; அதுதானே மார்கெட்டிங் தந்திரம்!

கேன் குடிநீர்

கேன் குடிநீர் காலச்சாரம்

கேன் குடிநீர் குடிக்கும் பழக்கம் நமக்கு எப்போது வந்தது என்று நினைவுக்கு வரமாட்டேன் என்கிறது; நினைவு தெரிந்த நாளிலிருந்தே “கேன் வாட்டர்தான்” என்ற பெருமையும் நமக்கு உண்டு;

இந்த கேன் கொடுத்து கேன் வாங்கிக் கொள்வது அன்றாட எல்லா வீடுகளிலும் நடக்கும் சென்னை கலாச்சாரம்; பழைய காலங்களில், ரயில்வரும்போது ஒரு சாவி வளையத்தை டிரைவரிடம் கொடுத்துவிட்டு இன்னொரு சாவி வளையத்தை டிரைவரிடமிருந்து வாங்கிக் கொள்வது பார்ப்பதற்கு வேடிக்கையாகவும் த்ரிலிங்காகவும் இருக்கும்; இப்போது நான் கேன் கொடுத்து கேன் வாங்குவது இந்த முறைதான்; பாட்டிலில் பால் வாங்கும்போது கூட இதே கொடுக்கல்-வாங்கல் கலாச்சாரம்தான்;

கேன் தண்ணீர் வெள்ளையாக இருக்கும்; சில கம்பெனி தண்ணீ சற்று இனிப்பாகவும் இருக்கும்; இதில் பழகிவிட்டால், வேறு தண்ணீர் குடிக்கவே பிடிக்காது; நீரைக் காய்ச்சி குடிக்க வேண்டும் என்று அறிவுரை கூறும் டாக்டரும் இந்த வெள்ளையாக உள்ள கேன் தண்ணீர்தான் குடிக்கிறார்; இப்படியாக சென்னையே இந்த கேன் தண்ணீருக்கு அடிமை;

இப்போதுதான், வெள்ளம் பெருக்கெடுத்த ஓடியதே; இனி எதற்கு கேன் தண்ணீர்? பேசாமல், அரசாங்கமே, ஏரித் தண்ணீரை சுத்தப்படுத்தி பைப்புகளில் குடிதண்ணீராகவே (நிஜமான குடிநீராக) விட்டால் இந்த பிளாஸ்டிக் கேனை விட்டொழித்து விடலாம்; இதனால் ஒரு லட்சம் குடும்பங்கள் பிழைத்துக் கொண்டிருக்கிறது என்று அல்ஜீப்ரா சொல்லாமல், அவர்களை வேண்டுமானால், ஏரித் தண்ணீரை சுத்தப்படுத்தும் வேலைக்கு வைத்துக் கொள்ளலாம்!

சென்னையில் குடிநீர் குழாயில் தானாக தண்ணீர் கொட்டும் நாள் எந்தநாளோ? வருண பகவான் கொடுத்தார்; ஆனால் அதை நாம் ஓட்டைக் கையில் வாங்கி ஒழுக விடுகிறோம்; இந்த பாவம் நம்மை சும்மா விடாது;

ஒரு பழைய பழமொழி; "ஆற்றோடு தண்ணீர் வழிந்து ஓடினாலும், நாய் நக்கித்தான் குடிக்கும்."

 ___________

Indian Citizen

இந்திய குடிமகன்

இந்திய அரசியலமைப்பு சட்டமும், இந்திய சிட்டிசன் சட்டமும் இந்திய குடிமகன் யார் என்று சொல்கிறது;

இந்திய அரசிலமைப்பு சட்டம்
இந்திய அரசியல் அமைப்புச் சட்டத்தின் ஆர்ட்டிகிள் 5 முதல் 11 வரை யார் யார் இந்திய சிட்டிசன் (இந்திய குடிமகன்) என்று சொல்கிறது;

ஆர்டிகிள்-5: (இந்தியாவில் பிறந்தவர்கள்)
(1) அரசியல் அமைப்பு சட்டம் நடைமுறைக்கு வரும்போது. யாரெல்லாம் இந்தியாவில் பிறந்திருந்தார்களோ அவர்கள் இந்திய குடிமகன்கள்; அல்லது
(2) அவர்களின் பெற்றோர்களில் ஒருவராவது இந்தியாவில் பிறந்திருந்தாலும், அவர்களின் பிள்ளைகள் இந்திய குடிமகன்கள்; அல்லது
(3) இந்த சட்டம் நடைமுறைக்கு வருவதற்கு ஐந்து வருடங்களுக்கு முன்பிருந்து, இந்தியாவில் யார் வசித்தாலும் அவரும் இந்திய குடிமகனே.

ஆர்டிகிள்-6: (பாகிஸ்தானிலிருந்து இந்தியாவுக்கு வந்தவர்கள்);
(1) ஏற்கனே இந்தியாவில் பிறந்தவர், அல்லது அவர்களின் பெற்றோர், பாட்டன்கள் ஏற்கனவே இந்தியாவில் பிறந்தவர்கள், இவர்களில் யாராவது பாகிஸ்தானிலிருந்து இந்தியாவுக்குள் வந்தவர்களும் இந்திய குடிமகன்களே.
(2) 1947 ஜூலை 17 லிருந்து (பாகிஸ்தானிலிருந்து வந்து) இந்தியாவுக்குள் வசிப்பவர் இந்திய குடிமகனே.
(3) இந்த தேதிக்கு பின், பாகிஸ்தானிலிருந்து இந்தியாவுக்குள் வந்து, தங்களை இந்திய குடிமகன் என்று பதிவு செய்து கொண்டவர்களும் இந்திய குடிமகன்களே.

ஆர்டிகிள்-7: (இந்தியாவிலிருந்து பாகிஸ்தானுக்கு போனவர்கள்):
1947 மார்ச் 1ம் தேதிக்கு பின்னர் இந்தியாவைவிட்டு, பாகிஸ்தானுக்கு போனவர்கள், இந்திய குடிமகன்கள் என்றே கருதப்படுவர்; (மறுபடியும் இந்தியாவில் மறு குடியேறும் எண்ணத்துடன் போனவர்கள்);

ஆர்டிகிள்-8; (வெளிநாடுகளில் வசிப்பவர்கள்);
வெளிநாடுகளில் வசிக்கும் இந்தியர்கள், தங்களை இந்தியக் குடிமகன்கள் என்று அங்குள்ள இந்திய தூதரகங்களில் பதிவு செய்து கொண்டவர்கள் அனைவரும் இந்திய குடிமகன்களே. (அல்லது அவர்களின் பெற்றோர், பாட்டன் அவ்வாறு பதிவு செய்து கொண்டிருந்தாலும் அவர்களின் பிள்ளைகளும் இந்திய குடிமகன்களே.)

ஆர்டிகிள்-9: (வேறு நாட்டின் குடியுரிமை பெற்றிருந்தால் அவர் இந்திய குடிமகன் அல்ல):

ஆர்டிகிள்-10: (இந்திய குடியுரிமை, இந்திய பார்லிமெண்டின் சட்டத்துக்கு உட்பட்டது)
இந்திய குடிமகன் என்பது, மேலே சொன்னவர்கள்தான் என்றாலும், இந்திய பார்லிமெண்ட் இயற்றும் சட்டங்களுக்கும் உட்பட்டது; (இந்திய சிட்டிசன்ஷிப் சட்டம் 1955க்கும் உட்பட்டதுதான் என்று விளங்கிக் கொள்வோம்).

ஆர்டிகிள்-11; பார்லிமெண்டின் அதிகாரம்;
இந்திய பார்லிமெண்ட் தனது அதிகாரத்தை உபயோகித்து, இந்திய குடியுரிமையை ரத்து செய்வதும், புதிய குடியுரிமையை வழங்குவதுமான அதிகாரம் உடையது.

இந்திய சிட்டிசன் சட்டம்
The Citizenship Act 1955.
இந்த சிட்டிசன்ஷிப் சட்டம் 1955 என்ற ஆரம்ப சட்டமானது, பலமுறை திருத்தம் செய்யப்பட்டுள்ளது; அவைகள் --
1)      சிட்டிசன்ஷிப் திருத்த சட்டம் 1986;2)      சிட்டிசன்ஷிப் திருத்த சட்டம் 1992;3)      சிட்டிசன்ஷிப் திருத்த சட்டம் 2003;4)      சிட்டிசன்ஷிப் திருத்த சட்டம் 2005;
இந்திய அரசியலமைப்பு சட்டம் ஆர்டிகிள்-9ன்படி ஒரு இந்தியன் வேறு ஒரு நாட்டின் குடியுரிமை பெற்றிருந்தால், அவர் இந்திய குடிமகன் அல்ல; அவர் இந்திய பாஸ்போர்டை வைத்திருக்க கூடாது; உடனடியாக சரண்டர் செய்துவிட வேண்டும்;

சில நாடுகள் (அமெரிக்கா போன்றவை) தன் மண்ணில் பிறந்தவர்களை இந்த நாட்டின் குடிமகனாக ஏற்றுக் கொள்கிறது; இதை jus soli அல்லது right of the soil என்று சொல்கிறார்கள்; இந்த மண்ணில் பிறந்தவன், இந்த மண்ணைச் சேர்ந்தவன் என்ற கொள்கை; (அமெரிக்காவின் கொள்கை இது);
மற்ற சில நாடுகள் (இந்தியா உட்பட) இரத்த உறவில்தான் குடிமகனாக இருக்க முடியும்; இந்திய குடிமகனின் மகன் இந்திய குடிமகன் ஆவான்; இதை jus sanguinis அல்லது right of blood என்கிறார்கள்;

சிட்டிசன்ஷிப் ரிஜிஸ்டிரேஷன்;
இந்தியக் குடிமகனாக பதிவு செய்து கொண்டும் குடிமகன் ஆகலாம்; இந்தியாவில் தொடர்ந்து ஆறு வருடங்களாக வாழும் வேறு நாட்டை சேர்ந்தவர், இந்தியாராக விரும்பினால் பதிவு செய்து கொண்டு இந்திய குடிமகன் ஆகலாம்;

திருமண உறவு மூலம் இந்திய குடிமகன் ஆகலாம்;
இந்திய குடிமகனை திருமணம் செய்து கொண்டு, இந்தியாவில் ஆறு வருடங்கள் வாழ்ந்தால், இந்திய குடிமகனாக ஆக முடியும்;
இந்திய குடிமகனின் மைனர் குழந்தைகள் இந்திய குடிமகன்களே;

இரண்டு வகை சிட்டிசன்ஷிப் ஆக இருக்க முடியுமா?
பொதுவாக இருக்க முடியாது; இந்திய குடிமகனாக இருப்பவர், வேறுஒரு நாட்டின் குடிமகனாகவும் இருக்க முடியாது;

ஆனால், 2005ம் ஆண்டு சிட்டிசன்ஷிப் திருத்த சட்டத்தின்படி, ஒரு புதிய முறை அறிமுகம் செய்து வைக்கப்பட்டது; OCI என்பது Overseas Citizenship of India. இதன்படி, அமெரிக்காவில் உள்ள ஒரு இந்தியருக்கு பிறந்த குழந்தை, அந்த நாட்டு சட்டப்படி அமெரிக்க குடிமகன் ஆகிவிடுகிறது; எனவே அவரின் பெற்றோர், அந்த குழந்தையை இந்தியாவுக்கு கூட்டிக் கொண்டுவர நினைத்தால், விசா பெற வேண்டும்; எனவே அந்த குழந்தைக்கு நிரந்தர விசா உரிமை கொடுத்து அதன்படி ஓசிஐ பாஸ்போர்ட் வழங்கி உள்ளது; இது உண்மையில் இந்திய பாஸ்போர்ட் போன்றது இல்லை; வாழ்நாள் விசா போன்ற உரிமை மட்டுமே;
**

இந்தியா என்கிற பாரத்

இந்தியாவுக்கு என்ன பெயர் வைக்கலாம்?
இந்தியா என்னும் பெயரை மாற்றி பாரத் என்று வைக்க வேண்டும் என ஒரு இந்தியனுக்கு ஆசை வந்துவிட்டது; நிரஞ்சன் பட்வால் (from Maharashtra) என்ற ஒரு சமூக ஆர்வலர் தன் ஆசையை பொதுநல வழக்காக சுப்ரீம் கோர்ட்டில் தாக்கல் செய்தார்;
அவர் சொல்கிறார், “இந்திய அரசு சட்டம் 1935ஐ ரத்து செய்து இந்திய சுதந்திர சட்டம் 1947ஐ அமல்படுத்தியதும், நமது நாட்டுக்கு இந்தியா என்று பெயரிடப்பட்டுள்ளது; ஆனால் இந்திய நாட்டுக்கு பாரத், இந்துஸ்தான், இந்த், பாரத் வருஷ் என்பதுபோலதான் பெயரிடப்பட வேண்டும் என்பது இந்திய அரசியல் நிர்ணய சபையின் பரிந்துரையாகும். எனவே தற்போது சூட்டப்பட்டுள்ள இந்தியா என்ற பெயருக்கு பதிலாக மேற்குறிப்பிட்ட ஏதாவது ஒரு பெயரை இந்திய நாட்டின் பெயராக பயன்படுத்த வேண்டும்; அரசு, மற்றும் ஆட்சிப் பணிகளுக்காக இந்தியா என்ற பெயரை பயன்படுத்துவதை மத்திய அரசு நிறுத்துமாறு மத்திய அரசுக்கு அறிவுறுத்த வேண்டும்” என்று அவரின் மனுவில் கேட்கிறார்.
சுப்ரீம் கோர்ட்டின் தலைமை நீதிபதி எச்.எல்.தத்து, மற்றும் நீதிபதி அருண் மிஸ்ரா இவர்கள் அடங்கிய பெஞ்ச் முன்பு இந்த மனு ஏப்ரல் 25, 2015ல் விசாரணைக்கு வந்தது; மத்திய அரசுக்கும், மாநில அரசுகளுக்கும், யூனியன் பிரதேசங்களுக்கும் நோட்டீஸ் அனுப்பி பதில் கேட்டது;
இதில் மத்திய அரசு பதில் தாக்கல் செய்தது; அந்த பதிலில், “இந்தியா என்ற பெயரை பாரத் என்று மாற்றுவதற்கான சூழ்நிலை எதுவும் தற்போது ஏற்படவில்லை; இதுபோன்ற கோரிக்கை தற்போது தேவையற்ற ஒன்று; இந்திய அரசியல் சாசன சட்டத்தின் ஆர்ட்டிகிள் 1(1)ல் இந்தியா என்கிற பாரத் என்பது பல மாநிலங்களை உள்ளடக்கியது என்றே குறிப்படப்படுள்ளது; இந்திய அரசியல் சாசன சட்டத்தில் இந்த ஒருஇடத்தில்தான், இந்தியாவை ஆட்சிப்பணிக்கும் மற்ற நேரங்களிலும் பயன்படுத்த குறிப்பிடப்பட்டுள்ளது; எனவே இதை தள்ளுபடி செய்ய வேண்டும்” என கோரியது;
“There is no change in circumstances to consider any change in Article 1 of the Constitution of India.” Article 1(1) says, “India, that is Bharat, shall be a Union of States.” This is the only provision in Constitution on how this country be called or official and unofficial purposes.Regarding the country’s names were deliberated upon extensively by the Constituent Assembly during drafting of the Constitution and clauses in Article 1 were adopted unanimously. Bharat did not figure in the original draft of the Constitution and it was during debates that the Constituent Assembly considered names such as Bharat, Bharatbhumi, Bhartvarsh, India that is Bharat. Bharat that is India and Bharat as is known in English language India. It said there was no change in circumstances since the Constituent Assembly debated the issue to warrant a review.
இந்த சமூக ஆர்வலர் நிரஞ்சன் பட்வால் ஏற்கனவே இப்படி ஒரு பொதுநல மனுவை சுப்ரீம் கோர்ட்டில் தாக்கல் செய்திருந்தார்; ஆனால், முதலில் மத்திய அரசிடம் கோரிக்கை வைக்குமாறு சுப்ரீம் கோர்ட் அறிவுரை கூறி அந்த மனுவை தள்ளபடி செய்தது; ஆனால் மத்திய அரசு அவரின் கோரிக்கையை நிராகரித்தது; எனவே இந்த பொதுநல மனுவை மறுபடியும் தாக்கல் செய்திருக்கிறார்; நிரஞ்சனின் வக்கீலீன் வாதம் என்னவென்றால், “இந்தியா என்ற வார்த்தை பிரிட்டீஸ் நம்மை ஆண்ட போது உருவாக்கிய வார்த்தை; 1935 சட்டத்தை ரத்து செய்யும் போது இந்தியா என்ற வார்த்தையை உபயோகித்துள்ளனர் அவ்வளவே; காலங்காலமாக புராணங்களிலும் பாரத் என்ற வார்த்தையே உபயோகப்படுத்தப்பட்டுள்ளது;
“India was coined during colonial era and the country, historically and in scriptures, is called Bharat. India was used in Article 1 for reference, in order to repeal Government of India Act 1935 and Indian Independence Act 1947.”
புராண சரித்திரம்: சகுந்தலை வயிற்றில் துஷ்யந்தனுக்கு பிறந்த புத்திரன் பரதன்; இவன் ஆரிய தேசம் முழுவதையும் கட்டி ஆண்டமையால் இந்த தேசத்துக்கு பரதவருஷம் (பரதநாடு) என்று பெயர் வழங்கலாயிற்றாம்; இவனுடைய ஒன்பதாம் சந்ததி குரு என்ற மன்னர். குருவின் பதினான்காம் சந்ததி சந்தனு என்ற மன்னர்; சந்தனுவுக்கு நான்காம் சந்ததிகள்தான் பாண்டவர்கள்;
பரத கண்டம்: பாரதவருஷம் அல்லது பாரத கண்டம் என்பது விதேகம், ரேபதம், மத்தியம், பரதம் என நான்கு கண்டங்களை கொண்டது; விதேகம் என்பது இமயத்துக்கு மேற்கே உள்ள நாடு; ரேபதம் என்பது கிழக்கே உள்ள நாடு; மத்தியம் என்பது இமயத்துக்கும் விந்தியத்துக்கும் நடுவே உள்ள நாடு; பரதம் என்பது விந்தியத்துக்கு தெற்கே உள்ள நாடு;  இந்த நான்கும் சேர்ந்ததுதான் பாரத வருஷம் என்கிற பாரதநாடு;

**

Monday, December 7, 2015

தண்டகாரணியம் ஆன சென்னை!

சென்னை தண்டகாரணியம் ஆனது!
இசுவாகுவின் மகனுக்கு தண்டன் என்று பெயர்இவன்தன் தந்தையின் பேச்சைக் கேட்காமல் முரட்டுத்தனமாக திரிந்தான்எனவே இவனின் தந்தை இசுவாகுஇவனைவிந்திய மலைப் பகுதிக்கு ஓடிப் போகுமாறு விரட்டி விட்டான்
அங்கிருந்து விந்திய மலைப் பகுதிக்குச் சென்ற தண்டன்தன்னுடன் வந்தவர்களைக் கொண்டுமதுமந்தம் என்னும் ஒரு பட்டணத்தை உருவாக்கி விட்டான்அதை அவனே ஆண்டும் வருகிறான்
இந்த விந்திய மலைப் பகுதியில்தான் சுக்கிரன் இருக்கிறார்அவரைப் போய்ப் பார்த்த தண்டன்அவருக்கு சீடனாகி விட்டான்இருந்தாலும் தண்டனுக்கு உள்ள கோணல்புத்தி மாறவில்லைசுக்கிரனின் மகள் அரசை என்னும் அழகிஇவளைப் பார்த்து இவள்மீது ஆசை கொள்கிறான்  அதனால் அவளைப் பலவந்தப்படுத்தியும் விட்டான்இதை அறிந்து சுக்கிரனுக்கு அவன்மீது கோபம் வருகிறது
“தந்தைக்கு அடங்காத பிள்ளை எங்கும், யாரிடமும் அடங்க மாட்டான்போல!”
சுக்கிரன் இவனுக்கு சாபம் இடுகிறார்; "உன் பட்டணம் முழுவதும் மண்-மழை பொழிந்து உன் பட்டணமே அழியட்டும்" என்கிறார்அதன்படி மண் மழையாகப் பெய்துஅவனின் பட்டணம் அழிந்து விட்டதுஅதுதான் தண்டகாரணியம் என்று பெயராம்இதை தட்சிண தேசம் என்றும் சொல்கிறார்கள்;
சென்னை மழையும் இப்படி ஏதாவது ஒரு சாபத்தால் வந்ததாக இருக்குமோ?

_______

ஆமாம், சென்னையாம் பெரிய சென்னை!!!

சென்னை வெள்ளம்
சென்னை என்றாலே இனி பயப்படும்படி செய்துவிட்டது இந்த கனமழை; யாருமே எதிர்பார்க்கவில்லை இப்படி வெள்ளம் வரும்என்று; ஏதோ மழை பெய்யும்; அல்லது புயல் அடிக்கும்; டிராபிக் இருக்கும்; பால் கிடைக்காது; பேப்பர் கிடைக்காது; ஒன்றிரண்டு ட்ரெயின் ஓடாது; பள்ளி, கல்லூரி விடுமுறை அறிவிப்பு; அதுவும் இரண்டு நாட்களுக்குத்தான்; இதை எல்லாவற்றையும் டீவியில் பார்த்துக் கொண்டே வீட்டுக்குள் முடங்கி இருப்போம்; இதெல்லாம் விளையாட்டாவே நமக்கு தெரிந்தது; இதுதான் பழைய சென்னை வாழ்க்கை;

இனி சென்னை இப்படி இருக்காது; ஒன்று சென்னை இருக்கும், அல்லது இல்லாமலும் போகும்; இதுதான் இன்றைய நிலை; சென்னையைச் சுற்றி இவ்வளவு ஏரிகள் இருக்கும் என்றே தெரியவேயில்லை; அவைகள் இவ்வளவு தண்ணீரை கக்கும் என்றும் தெரியவில்லை; சென்னை மக்களை துவைத்து பிழிந்து காயப்போட்டு விட்டது;

பொதுவாக, கடலில் உள்ள நீரானது, சூரிய வெப்பத்தால் ஆவியாகி மேலே போய் மழையாகப் பெய்கிறது என்றுதான் விஞ்ஞானம் நமக்குச் சொல்லிக் கொடுத்தது; அப்படியென்றால், இவ்வளவு மழைநீரையும் மேகம் எங்கு ஒளித்து வைத்திருந்தது; மேகங்கள் ஏதோ சதி செய்திருக்கிறது;

சென்னையின் முப்பது வருட வளர்ச்சியை மூன்றே நாளில் குலைத்துவிட்டது; அவமானம்!! எல்லோருக்கும் அவர்கள்மீதே வெறுப்பு; காரணம் தெரியவில்லை; எதுவும் இல்லை என்ற கோபம் இல்லை; எது இருந்தும் இல்லாமல்போன சோகம்; கோபம் இன்னும் தணியவே மாட்டேன் என்கிறது;
**



Monday, November 30, 2015

போப்பின் வருத்தம்

இந்த ஆண்டு கிறிஸ்துமஸ் சந்தோஷமாக இருக்குமா? போப் கவலை!

போப் வருத்தப்படுகிறார்; எங்கு பார்த்தாலும் சண்டை; உலகில் ஒரு பக்கமும் அமைதியாக இருப்பதாகத் தெரியவில்லை; கிறிஸ்துமஸ் நெருங்கி விட்டது; விளக்குகளை ஏற்ற வேண்டும்; கொண்டாடத்தை ஆரம்பிக்க வேண்டும்; 

ஆனால் எல்லோரும் சண்டையில் (போரில்) இருந்தால் எப்படி ஆரம்பிப்பது? எல்லாமே போலித்தனமான போராகவே இருக்கிறது; எதற்கு சண்டை என்றே தெரியவில்லை; ஏன் இப்படி இந்த உலகம் மாறிவிட்டது? இந்த உலகத்துக்கு அமைதி பற்றிய எண்ணமே இல்லையா? இல்லை அதைப்பற்றி புரிந்து கொள்ளவில்லையா? பாவம் மனிதர்கள்!

வாட்டிகன் நகரில் பிரசங்கம் செய்தபோது, போப்பாண்டவர் தெரிவித்த கவலையான வார்த்தைகள்.....

சைனா புல்லட் ரயில்

புல்லட் ரயில்
சைனாவின் வட-மேற்குப் பகுதியில் உள்ள ஜின்சாங்க் பகுதியிலிருந்து இரான் வரை செல்லும் புல்லட் ரயிலை விடுவதற்கு சைனா தயாராகிறது; இந்த அதிவேக ரயில், கசகஸ்தான், கிரிகிஸ்தான், உஸ்பெஸ்கிஷ்தான், துர்க்மெனிஸ்தான் வழியாக இராக்கின் டெஹ்ரான் நகருக்கு வந்து செல்லுமாம்; இது பொருள்களை ஏற்றிச் செல்ல வசதியாக இருக்கும் என சைனா ரயில் கம்பெனியின் தலைமை என்ஜினியர் சொல்கிறார்;

கோணல் புத்தி


ரஷ்யாவில் உள்ள 22 வயது வாலிபருக்கு திருமணம் ஆகவில்லை; எந்த பெண்ணையும் திருமணம் செய்து கொள்ளவும் பிடிக்கவில்லையாம்; ஆனாலும் வாழ்க்கை போரடித்ததாம்; கோணல் புத்தி வேலை செய்தது; ஒரு Pizza பிசா-வை வாங்கி, அதை திருமணம் செய்து கொள்ளலாம் என நினைக்கிறார்; ஏன் என்று கேட்டால், இந்த பிசா நம்மை வெறுக்காது; ஆனால் மனிதர்களுக்குள் இருக்கும் உறவில் அன்பு-வெறுப்பு இவைகள் மாறி மாறி இருந்து கொண்டே இருக்கின்றன; அது அன்றாட வாழ்க்கையை பாதிக்கிறது என்கிறது; பீசாவுடன் வாழ்ந்து விட்டால் இந்த மனித வெறுப்பு எல்லாம் இல்லாமல் வாழலாம் என நினைத்தாராம்; எத்தனை நாளைக்கு பீசாவை திங்காமல் வைத்திருப்பான் என்று தெரியவில்லையே! ஆனால் அரசு அதிகாரிகள் இந்த திருமணத்துக்கு அனுமதி கொடுக்கவில்லையாம்; நல்ல வேளை பீசா தப்பித்தது; 






Thursday, November 26, 2015

மொபைல் போன் பேச்சும் இனி ஆதாரமே!

மொபைல் போன் பேச்சும் ஒரு ஆதாரமே!

மொபைல் போன் பேச்சை மொபைலிலேயே டேப் செய்து வைத்திருந்ததை ஒரு சட்ட ஆதாரமாக எடுத்துக் கொள்ளலாமா வேண்டாமா என்ற கேள்வி சுப்ரீம் கோர்ட்டில் ஒரு வழக்கில் எழுந்தது; ஒரு சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்த வழக்கில், இந்த பிரச்சனை ஏற்பட்டது;

குற்றவாளிக்கும் அந்த சிறுமி வீட்டாருக்கும் ஏற்கனவே சொத்துப் பிரச்சனை இருந்து வந்தது; அதனால், அந்த குற்றவாளிமீது இந்த பொய் வழக்கை போட்டிருப்பதாக குற்றவாளி சொல்கிறார்; அதற்கு ஆதாரமாக மொபைல் போனில் பேசிய பேச்சை டேப் செய்யப்பட்டு அந்த சீடியை ஆதாரமாக கொடுக்கிறார் குற்றவாளி; அதை கீழ்கோர்ட்டுகள் ஏற்றுக் கொள்ளவில்லை.

சுப்ரீம் கோர்ட், இந்த சீடி ஆதாரத்தை ஏற்றுக் கொண்டது; அது உண்மையான ஆட்கள் பேசிய குரல்தானா என்று மட்டும் பரிசோதித்துக் கொண்டால் போதும்; அதை ஒரு ஆதாரமாக எடுத்துக் கொள்ளலாம் என்று சுப்ரீம் கோர்ட் இந்த வாரம் தீர்ப்பளித்துள்ளது;
குற்றவாளி, இந்த டேப்பை கோர்ட்டுக்கு கொடுத்து, அவர் இந்த வழக்கில் நிரபராதி என்று வாதாடுகிறார்;

எனவே இனி டேப் செய்யப்பட்ட சீடிக்களை ஒரு ஆதாரமாக ஏற்றுக் கொள்ளலாம் என முடிவாகி உள்ளது; இதையே கீழ்கோர்ட்டுகளும் பின்பற்றலாம்;



Sunday, November 22, 2015

சிறு தெய்வத்தின் சொத்து (minor Deity)

சிறுதெய்வம், தன் பெயரில் நிலம் வைத்துக் கொண்டு விவசாயம் பார்க்கலாமா?

கோயில்களில் உள்ள சாமியும் மனிதனைப் போலவே சொத்துக்களை வாங்கி வைத்துக் கொள்ளலாம்; இதை சட்டம் அங்கீகரிக்கிறது; சாமியும் உயிருள்ள மனிதனைப் போலவே "living person" என்றே சட்டம கருதுகிறது; எனவேதான் எல்லாக் கோயில்களிலும் உள்ள சாமிகள் பெயரில் நிறைய சொத்துக்கள் இருக்கின்றன; வங்கிக் கணக்குகள் இருக்கின்றன; ஆபரணங்கள் இருக்கின்றன; 

ஆனால் இப்போது புதுமையாக ஒரு பிரச்சனையை சுப்ரீம் கோர்ட் அணுகி உள்ளது!

ஒரு கோவிலில் பெரிய சாமி இருக்கும்; அதுதான் தலைமை கடவுள்; அந்த கோவில் அந்த சாமிக்காக ஏற்பட்டது; ஆனாலும் அந்த கோவிலில் துணை கடவுள்கள் இருப்பார்கள்; இவர்களுக்கு சொத்து எதுவும் இருக்காது; பெரிய கடவுளுக்கு கிடைக்கும் வருமானத்தில், இந்த சின்ன கடவுளுக்கும் பூஜைகள் நடக்கும் அவ்வளவே!

இந்த சின்ன கடவுள்கள் சொத்து ஏதும் வாங்கமுடியுமா? அதன் பெயரில் சொத்துக்களை வைத்திருக்க முடியுமா? என்ற கேள்விகள் சுப்ரீம் கோர்ட்டில் ஒரு வழக்கில் எழுப்பப் பட்டது;

ஏற்கனவே அலகாபாத் ஐகோர்ட்டில் நடந்த ராமர் கோயில் வழக்கில், சிறு தேவதைகள் பெயரில் (Minor Deity) மூன்றில் ஒரு பங்கு உரிமை உள்ளதை கோர்ட் அங்கீகரித்துள்ளது; 

ஆனால் ராஜஸ்தான் ஐகோர்ட் ஒரு வழக்கில், இந்த சின்ன தெய்வங்கள் பெயரில் இருந்த விவசாய நிலங்களை அது வைத்து பயிர் செய்ய முடியாது; நிலங்களை வைத்திருக்க அந்த சிறு தெய்வங்களுக்கு உரிமை இல்லை என்றும் அதை அரசு எடுத்துக் கொள்ளலாம் என்றும் தீர்ப்பு கூறியது;  

இப்போது இந்த வழக்கு சுப்ரீம் கோர்ட்டுக்கு வந்துவிட்டது; 

அந்த ராஜஸ்தான் வழக்கில் உள்ள நிலத்தை அந்த சிறு தெய்வத்துக்கு பூஜை செய்யும் பூஜாரி விவசாயம் செய்து வருகிறார்; அதில் வரும் வரும்படியைக் கொண்டு பூஜை செய்கிறாராம்;

சுப்ரீம் கோர்ட் என்ன தீர்ப்பு சொல்லப்போகிறது என்று தெரியவில்லை;
பொறுத்திருப்போம்;
**

Saturday, November 21, 2015

சாம்பெட்ரி Champetry

சாம்பெட்ரி Champetry

சாம்பெட்ரி Champetry  என்ற வார்த்தை கோர்ட்டுகளில் மட்டுமே பயன்படுத்தப்படும் வார்த்தை; ஒரு வழக்கை நானே முடித்து தருகிறேன்; அதற்கான செலவையும் நானே பார்த்துக் கொள்கிறேன்; கேஸ் ஜெயித்தவுடன் அந்த சொத்தில் எனக்கு இவ்வளவு பங்கு கொடுத்துவிட வேண்டும்; அல்லது இவ்வளவு பணம் கொடுத்துவிட வேண்டும் என்று சட்டத்துக்கு புறம்பாக ஒரு ஒப்பந்தத்தை செய்து கொள்வதை சாம்பெட்ரி என்கிறார்கள்; அமெரிக்காவில் இப்படி ஒரு அக்ரிமெண்டை போட்டுக் கொள்ளலாம்; ஆனால் பிரிட்டனிலும், இந்தியாவிலும் இது தவறு;

நாம், இந்தியாவில், ஆங்கிலேய கோர்ட் முறையையே பின்பற்றி வருகிறோம்; இதில் வக்கீல் தொழில் என்பது ஒரு புனிதமானது என்றே கூறப்பட்டுள்ளது; பணம் சம்பாதிக்க இங்கு வரக்கூடாது என்பதே அதன் உண்மையான அர்த்தம்; அப்படியென்றால்? உண்மையிலேயே இந்த சமுதாயத்துக்கு ஏதாவது நன்மை செய்ய வேண்டும் என்று நினைப்பவர்கள் மட்டுமே இந்த வக்கீல் தொழிலைச் செய்ய வேண்டும் என்று சொல்லப்பட்டுள்ளது; எனவே ஒரு வழக்குக்கு எவ்வளவு பீஸ் கொடுக்க வேண்டும் என்று எங்கும் வரையறை செய்யவில்லை;

பழைய காலத்தில், (பிரிட்டீஸ் ஆட்சியில்), கோர்ட்டில் ஆஜராகும் வக்கீல்களுக்கு ஒரு கறுப்பு அங்கி கொடுத்திருப்பார்கள்; ஓவர் கோட்டுடன், இந்த வக்கீல் அங்கியையும் அணிந்து கொண்டுதான் கோர்ட்டுக்குச் செல்ல வேண்டும்; இதை இப்போது கவுன் என்று சாதாரணமாகச் சொல்கிறார்கள்; உண்மையில் அதன் பெயர் ரோப்ஸ் Robes; இந்த ரோப்ஸ்க்கு, முன்பக்கம் பட்டன் இருக்காது, பெரிய கைகள் இருக்கும்; இதன் முன்பக்கம் இரண்டு ரிப்பன்கள் தொங்கும்; பட்டனுக்குப் பதிலாக அதை இழுத்து கட்டிக் கொள்ள வேண்டும்; அது ஒரு நிரந்தர உடை இல்லை என்பதால் இப்படி செய்திருப்பார்கள் என நினைக்கிறேன்; இது இல்லாமல், மேலும் ஒரு சிறப்பு உண்டு; அந்த ரோப்ஸ்க்கு பின் பக்கத்தில் வரிவரியாக துணியை மடக்கி வைத்து ஒரு அடுக்குபோல தைத்திருப்பார்கள்; சாதாரண வக்கீல் இத்தகைய அடுக்க வைத்த ரோப்ஸ் கவுனைத்தான் போட வேண்டும்; சீனியர் வக்கீல் அல்லது பாரிஸ்டர் பட்டம் பெற்ற வக்கீல்கள் அணியும் ரோப்ஸ்-ல் இந்த அடுக்குக்குப்பதிலாக ஒரு மேலே ஒரு ப்ளாப் துணியும் இருக்கும்;

இவைகள் எல்லாம் இல்லாமல், இந்த ரோப்ஸ்க்கு பின் பக்கத்தில் ஒரு சிறிய பையை தைத்து அதை தொங்க விட்டிருப்பார்கள்; பார்ப்பதற்கு பழங்கால பாட்டிகள் வைத்திருக்கும் சுருக்குப்பை போலவே இது இருக்கும்; இந்த பையில்தான் வழக்குக்கு வருபவர்கள் தான் கொடுக்க நினைக்கும் பணத்தை போட்டுவிட்டு செல்வார்களாம்; அது எவ்வளவு என்று அந்த வக்கீலுக்குத் தெரியாது; ஏனென்றால் அந்த பை, அவரின் கவுனுக்கு பின்பக்கம் இருக்கும்; அவர் சாம்பருக்கு (அறைக்கு) சென்றபின்னரே அந்த கவுனைக் கழற்றி அதிலுள்ள பணத்தை எடுத்துக் கொள்ள வேண்டுமாம்; இதன் சிறப்பு என்னவென்றால் – யார் எவ்வளவு பணம் கொடுக்கிறார்கள் என்று தெரியாமலேயே எல்லோருக்கும் ஒரே மாதிரியான தன் சட்ட வாதத்தை செய்ய வேண்டும் என்ற உயர்ந்த, உன்னத நீதி இங்கு பின்பற்றப்படுகிறது; ஏழையாக இருந்தாலும், பணக்காரனாக இருந்தாலும், வக்கீல் ஒரே கண்ணோட்டத்துடன் வழக்கை நடத்த வேண்டும் என்ற உயரிய கோட்பாடு எடுத்துச் சொல்லப்பட்டுள்ளது;

ஆனால், இப்போது இந்த பையை காணவில்லை; கவுன் இருக்கிறது; கோட்பாடும் இல்லாமல் போய்விட்டது; வக்கீலுக்கு பீஸ் கொடுக்க பயந்து கொண்டே கோர்ட்டுக்கு போகமுடியாமல் தவிப்பவர்கள் ஏராளம்;

வக்கீலுக்கு எவ்வளவு பீஸ் கொடுக்க வேண்டும் என சில விதிமுறைகள் இருந்தாலும் அவை நடைமுறையில் சாத்தியமில்லாமல் போய்விடுகின்றன;

அமெரிக்காவில், இதற்கு ஒரு புதிய வழிமுறையை கண்டுபிடித்து உள்ளார்கள்; வக்கீலுக்கு மார்க் போடுவது; அவர் எவ்வளவு பீஸ் வாங்குவார்; எப்படி சட்டம் தெரிந்துள்ளார்; கோர்ட்டில் அவரின் வாதம் எப்படி இருக்கும்; கேஸ் கொடுத்தவரிடம் எப்படி அன்பாக நடந்து கொள்வார் என்று பல விஷயங்களை வைத்து அவருக்கு மார்க் உண்டு; அதை அவரிடம் கேஸ் நடத்திய பார்ட்டிகளே சொல்ல வேண்டும்; இந்த வக்கீலிடம் என் அனுபவம் எப்படி இருந்தது என்று; அதை வெப் சைட்டில் போட்டு விடுவார்கள்; எந்த வக்கீல் நல்ல வக்கீல் என்றும், எந்த வக்கீல் அநியாய பீஸ் வாங்கும் வக்கீல் என்றும் ஊருக்கே வெளிச்சம் போட்டு காட்டிவிடும்;

இங்கும் வக்கீல்களை மதிப்பீடு செய்யும் முறை இதேபோல வந்தால், அதன் புனித தன்மை காப்பாற்றப்பட்டுவிடும் என்றே நம்புகிறேன்.
                   _________________


சோசியல் பாய்காட் தடை சட்டம்

ஊரை விட்டு ஒதுக்கி வைத்தல்
அதிகமான ஊர்களில் இந்த பழக்கமான “ஊரைவிட்டு ஒதுக்கிவைத்தல்”  இன்னும் உள்ளது; இதை ஒரு தண்டனையாக கொடுக்கப்படுகிறது; தன் பஞ்சாயத்து தீர்ப்பை மதிக்காமல் இருப்பவர்களுக்கு இந்த தீர்ப்பை அந்த பஞ்சாயத்தின் தலைவர் வழங்குவார்; ஏமாந்தவர்கள், துணை ஆட்கள் இல்லாதவர்கள் இவர்களை மட்டும் இப்படி பழிவாங்கிவிடுவர்; ஆள், அம்பாரம் இருப்பவர்களை இந்த பஞ்சாயத்து ஒன்றும் செய்துவிடாது; அவர்களுக்கு இந்த ப்ஞ்சாயத்து வாலை ஆட்டிக் காண்பிக்கும்;
இது ஒருவகையில் கொடுமைதான்; சில குடும்பங்கள் இந்த தண்டனையை அனுபவிக்க முடியாமல் மடிந்தும் இருக்கிறது; ஊரிலேயே வாழவும் முடியாமல் போய் உள்ளது;
இதற்கெல்லாம் முடிவு கட்டும் விதமாக, மகாராஷ்டிர அரசு ஒரு புதிய சட்டத்தை கொண்டுவரப் போகிறது; அந்த சட்டப்படி, இப்படிப்பட்ட பஞ்சாயத்து தீர்ப்புகள் “சட்டப்படி செல்லாது” என்றும் அந்த தீர்ப்பை கொடுப்பது “தண்டனைக்குறிய குற்றம் ஆகும்” என்று ஒரு சட்டத்தை கொண்டுவருகிறது; அதன்படி, எந்த பஞ்சாயத்தாவது இப்படி, ஊரை விட்டு ஒதுக்கி வைக்கும் தீர்ப்பை கொடுத்தால், அதில் சம்மந்தப்பட்ட பஞ்சாயத்து தலைவர்களுக்கு 5 லட்சம் ரூபாய் அபராதமும், ஏழு வருட் சிறை தண்டனையும் உண்டு;
இந்த சட்டத்துக்குப் பெயர் Maharastra Prohibition of Social Boycott Act, 2015. இந்த சட்ட வரைவை (Draft) அரசு வெப்-சைட்டிலும் வெளியிட்டு கருத்து கேட்டுள்ளது;
தமிழக அரசும் அதை பார்த்து ஒரு புதிய சோசியல் பாய்காட் தடை சட்டத்தை கொண்டுவரலாம்; ஏற்கனவே இருக்கிறதா என்று தெரியவில்லை; இல்லை என்றே நினைக்கிறேன்;
                                               _______________