Wednesday, January 22, 2014

கபால சல்லிய சிகிச்சை (Cranial Surgery)

கபால சல்லிய சிகிச்சை (Cranial Surgery)
மகாகவி காளிதாசன் காலத்திலே, மாளவ தேசத்து அரசனாக தாரா நகரத்திலிருந்த ஒரு அரசனின் பெயர் போஜராஜன். இவன் 1200 வருடங்களுக்கு முன் இருந்தவன். இந்த போஜன் அரசனின் காலத்தில்தான் கல்வி நிலை வெகுவாக வளர்ந்துள்ளது. அதனால்தான், சரித்திர ஆசிரியர்கள், இவனை “சரஸ்வதியின் தந்தை” என்கிறார்கள். இந்த போஜராஜனே செய்த வைத்திய நூல் ஒன்றும் உள்ளது. இவன் சமஸ்தானத்தில்தான் மகாகவி காளிதாசன் முதலிய கவிரத்தினங்கள் உருவாகியதும். “போஜபிரபந்தம்” என்பது இந்த போஜராஜனைப் பற்றி எடுத்துக் கூறும் நூல்.

போஜன் ஒருகாலத்தில் அவனின் தலையில் ஏற்பட்ட ஒரு பெருந்தலைவலியால் வருந்தினான். வைத்தியர்கள் எல்லாம் ஒன்றுசேர்ந்தும் தகுந்த மருத்துவம் செய்ய முடியவில்லை. மருந்து மருத்துவத்தில் (ஔஷதம்) குணப்படுத்த முடியாததால், சல்லிய சாஸ்திர மருத்துவர்கள் (Surgeons) இருவர் போஜனின் அரண்மனைக்கு வந்து, அவனின் தலைவலியை குணப்படுத்த முடியும் என்று கூறி, அரசனுக்கு, ‘சம்மோகனி’ என்னும் ஔஷதமான மயக்க மருந்து (a kind of Chloroform) கொடுத்து, அவனின் மண்டையோட்டை பிரித்து, மூளையில் இருந்த விஷத்தை நீக்கி, மறுபடியும் அதேபோல மண்டையோட்டை சேர்த்தனர். தையலுக்குப்பின் ‘சந்தானகரணி’யிட்டு ‘சஞ்சீவி’ என்னும் மருந்தை உள்ளுக்குள் கொடுத்து, அவனின் உயிரும், அறிவும் உதிக்கும்படி செய்தனர். இவ்வாறு போஜபிரபந்தத்தில் சொல்லப் பட்டுள்ளது.

‘சம்மோகனி’ என்பது தற்போதைய ஆங்கில மருத்துவத்தில் குளோரபாம் (Chloroform) போல மயக்கமுண்டாக்கும் மருந்து. இது குளோரோபாம் என்ற தற்கால மயக்க மருந்தைக் காட்டிலும் மிகச் சிறந்ததாம். தற்கால குளோரோபாம் அபாயமுள்ளது. ஆனால் சம்மோகனி ஒரு பகல்காலம் வரை அபாயம் ஏதும் செய்யாதாம். வேண்டியபோது சஞ்சீவினியைப் கொடுத்தால் சம்மோகனி தன் பலத்தை இழந்துவிடுமாம். ஆனால், குளோரோபாம் அதிகமானால் உயிருக்கும் ஆபத்து ஏற்பட அதிகவாய்ப்புகள் உண்டு. கபால சல்லியம் என்னும் மண்டையோட்டை பிளந்து அறுவைச் சிகிச்சை (Cranial Surgery) செய்வதை ஐரோப்பியர்கள்  தாங்களே தற்காலத்தில் கண்டுபிடித்ததாகச் சொல்லிக் கொள்கிறார்கள். ஆனால் இங்கு 1200 வருடங்களுக்கு முன்னரே அது நடைமுறையில் இருந்திருக்கிறது.

Cranial surgery = Craniotomy is a surgery involving opening the skull temporarily, allowing an operation to be performed on or around the underlying brain.


இதேபோல் மற்றொரு சம்பவமும் உண்டு. கௌதம புத்திரருடைய வைத்திய பண்டிதனாக விளங்கிய ஜீவகனும் அநேக கபால சல்லிய சிகிச்சைகளைச் (Cranial Surgery) செய்துள்ளான் என பௌத்த நூல்கள் கூறுகின்றன. 

No comments:

Post a Comment