Saturday, January 18, 2014

பொல்லாப்பிள்ளையாரும் நம்பியும்

பொல்லாப்பிள்ளையாரும் நம்பியும்
நம்பியாண்டார் நம்பி என்பவர் திருநாரையூரிலே அவதரித்த ஆதி சைவப் பிராமணர். இவரின் தந்தையார், அங்குள்ள பிள்ளையாருக்கு தினமும் பூஜை செய்து பிள்ளையாருக்கு நைவேத்தியம் செய்து வருவார்.
ஒருநாள் தந்தையார் வெளியூர் செல்ல வேண்டி இருந்ததாம். அவரின் மகன் நம்பியாண்டார் நம்பியோ மிகச் சிறுவன்.
இவர் சிறுவராக இருக்கும்போது ஒருநாள் இவருடைய தந்தையார் இவரையழைத்து, ‘இன்றைக்கு நான் ஓர் ஊருக்குப் போகவேண்டி இருத்தலால், பொல்லாப்பிள்ளையார் கோயில் பூஜையை நான் நடத்துவதுபோல் சென்று நீயே நடத்திவருவாய்’ என கட்டளையிட்டார்.
அவ்வாறே நம்பியாண்டார் விதிமுறைப்படி பூஜைசெய்து நைவேத்தியத்தைப் பிள்ளையார் திருவமுது செய்வார் (உண்பார்) என நினைத்து “எம்பெருமானே திருவமுது செய்தருள வேண்டும்” என வேண்டிநின்றார் சிறுவன் நம்பி.
ஆனால் பிள்ளையார் திருவமுது எடுத்துக் கொள்ளவில்லை. திருவமுது செய்யாதிருப்பதைக் கண்டு, நம்பியாண்டார் மனம் வெதும்பி, ‘எம்பெருமானே! அடியேன் யாது தவறு செய்தேன்’ என்று அழுதுகொண்டு தமது தலையைக் கல்லிலே மோதப் புகுந்தார்.
உடனே பிள்ளையார், “நம்பி, பொறு” என்று தடுத்து அந்த நைவேத்தியத்தை திருவமுது செய்தருளினார்.
பின்னொருநாள் சோழராஜன் முன்னிலையிலேயே இவ்வற்புதம் நிகழ்ந்தது.
இந்த நம்பியாண்டாரே திருத்தொண்டர் சரித்திரமாகிய ‘திருவந்தாதி’ பாடியவர். தேவாரத்திருமுறை கண்டவரும் இவரே.


No comments:

Post a Comment