Tuesday, January 21, 2014

புலமையும் வறுமையும்:

புலமையும் வறுமையும்:
பெருஞ்சித்திரனார் ஓர் அற்புதக் கவிஞர். ஆனால் இவர் மிக்க வறுமையில் வாடினார்.
வள்ளல் குமணன் பெருமையை ஒரு புலவர் மூலம் கேள்விப்பட்டார்.
அந்தப் புலவரோ, குமணனிடம் சென்று தனது வறுமை நிலையை எடுத்துக்கூறி அவனிடம் செல்வத்தைப் பெற்று, அதைக் கொண்டு குபேரனைப் போல வாழ்கிறார்.

பெருஞ்சித்தினாரோ, மிகுந்த வறுமையில் உள்ளார். வள்ளல் குமணனைக் கேள்விப் பட்டவுடன் அவரிடம் சென்று, தன் வறுமையை தன் கவிப் புலமையால் தெரிவித்து, தனக்கு உடனடியாக செல்வம் கொடுக்கும்படி வேண்டுகிறார்.

அவரின் குடும்ப வறுமை நிலையை எடுத்துரைத்த விதம் இருக்கிறதே, அது கேட்போர் மனதை உருக்காமற் போகாது.

“பெரும்புகழ் படைத்த குமணா கேள்!
உனது வண்மையையும் அளப்பில் (அளவில்லாத) செல்வத்தினையும் ஒரு புலவர் மூலம் கேட்டு விரைந்து உன்னை வந்து அடைந்தேன்.

எனது வீட்டில் சாப்பிடுவதற்கு ஒரு உணவுப் பொருள் கூட இல்லை. அப்படி எந்த உணவும் இல்லாதபோதிலும், என் மனைவி என்னை விட்டு நீங்காமல் (விட்டுவிட்டுச் செல்லாமல்) என்னுடனேயே அந்த வீட்டிலேயே இருந்து வருகிறாள்.

என் மகன் பாலகன். அவன் குடுமியோ வெகுகாலம் எண்ணெயைக் காணாததால், குதிரைப் பிடர் மயிர் போல எப்போதும் பறந்து கொண்டிருக்கும்.

அந்தப் பாலகன் தாயிடம் பால்குடிக்க வேண்டிய வயதில் இருக்கிறான். அவன் தாய்பாலின்றித் திரங்கிய (சூம்பிய) தாய் முலையைப் வெகுநேரமாகச் சுவைத்துச் சுவைத்துக் கொண்டே இருப்பான். ஆனால் பாலே வராது. பால் வராவிட்டாலும், வரும் என்ற ஆசையால் அதை விடமாட்டான்.

கடைசியாக, பால் வாயில் வராததால் அதனை விடுவித்துவிட்டு வறுமையில் மூடிக் கிடக்கும் சோறடுகலத்தைத் (சோறு இருக்கும் பாத்திரத்தை) திறந்து பார்ப்பான். அங்கும் தன் பசிக்கு ஒன்றும் கிடைக்காது.

பின்னர் அவனின் தாயை அடைந்து அழுது அழுது வாடுவான்.
இவனின் அழுகையை நிறுத்த எண்ணிய தாயோ, “புலிவருகின்றது” என்று அச்சுறுத்துவாள். தணியாமை கண்டு (அவளுடைய இயலாமையால்) அப்புலியைக் காட்டுவாள். உன் தந்தைக்கு காணாதுகுன்றிய உன் மேனியினது அழகை எனக்குக் காட்டுவாய் என்று வினவுவாள்.

இத்தகைய என் கடும் வறுமைத் துன்பத்துக்கு முடிவு காணவே, வள்ளலாகிய உன்னை வந்து அடைந்தேன். நீ கொடுக்கும் பரிசை தந்து என்னைக் கடிது விடுப்பாயாக (விரைவாக அனுப்பி வைப்பாயாக)" என்று தன் வறுமையைக் கவியாகப் பாடினார்.



No comments:

Post a Comment