Wednesday, January 22, 2014

ஆள் இல்லை எம்பெருமானே!

ஆள் இல்லை எம்பெருமானே!
சுந்தரமூர்த்தி நாயனார் அவர் மனைவி பரவையாருடன் திருவாரூரில் குடியிருந்தார்.

பக்கத்தில் உள்ள குண்டையூரில் வசிக்கும் குண்டையூர் கிழார் என்பவர் சுந்தரமூர்த்தி நாயனாருக்கு சாப்பாட்டுக்குத் தேவையான நெல் மணிகளை தினந்தோறும் அனுப்பி வைப்பாராம்.

ஒரு வருடம் மழையில்லாமல், விளைச்சல் இல்லையாம். எனவே நெல் விளையவில்லை. எனவே சுந்தரமூர்த்தி நாயனாருக்கு நெல் அனுப்ப முடியவில்லையாம். அதனால் குண்டையூர் கிழார் மிகுந்த வருத்தப்பட்டுக் கொண்டு இருந்திருக்கிறார்.

அன்றைய இரவு, சிவபெருமான், இந்தக் குண்டையூர் கிழார் கனவில் தோன்றி, "ஆரூரனுக்கு நெல்லு தந்தோம்" என்று கூறி மறைந்தார். (ஆரூரன் = இந்தத் திருவாரூர்காரனுக்கு);

காலையில் எழுத்து பார்த்தால், குண்டையூர் முழுவதும் நெல் குவியலாக உள்ளது. உடனே குண்டையூர் கிழார், சுந்தரமூர்த்தி நாயனாருக்கு செய்தியைச் சொல்லி, நெல் இருப்பதாகவும் வந்து எடுத்துச் செல்லும்படி சேதி சொல்லி அனுப்பினார்.

சுந்தரமூர்த்தி நாயனாரும் குண்டையூருக்கு வந்து பார்த்தார். மலைபோல குவிந்துள்ளது நெல்.

உடனே பக்கத்தில் உள்ள திருக்கோளிலி ஊரில் உள்ள சிவனின் கோயிலுக்குச் சென்று ஒரு பதிகம் பாடினார்.
"இவ்வளவு நெல்லை எனக்குக் கொடுத்திருக்கிறாயே! இதை நான் திருவாரூருக்கு எடுத்துச் செல்ல என்னிடம் ஆட்கள் இல்லையே! நீயே ஆட்களையும் அனுப்புவாயாக! என்று பாடுகிறார்.

"நீள நினைந்தடியேன் உமை நித்தலுங் கைதொழுவேன்
வாளன கண்மடவாள் அவள் வாடி வருந்தாமே
கோளிலி யெம்பெருமான் குண்டையூர்ச்சில நெல்லுப்பெற்றேன்
ஆளிலை யெம்பெருமா னேவை யட்டித்தரப் பணியே"


(நீள நினைந்து அடியேன், உம்மை நித்தலும் கை தொழுவேன்; வாள் என கண் மடவாள் (வாள் போன்ற கண்களை உடைய) என் மனைவி பரவை வாடி வருந்தாமே (வாடிப் போய்விடுவாளோ என்று நீ வருந்தி) கோளிலி எம் பெருமான் குண்டையூர்ச் சில நெல் பெற்றேன். (he acknowledges the receipt of paddy); எம்பெருமானே! இந்த நெல்லைக் கொண்டு செல்ல ஆள் இல்லையே! அட்டித்தர பணியே = கொண்டுபோய்ச் சேர்க்க கட்டளையிடுவாயாக)


No comments:

Post a Comment