Monday, September 27, 2021

உயில் புரபேட் செய்வதில் இரண்டு வகை உண்டு.

உயில் புரபேட் செய்வதில் இரண்டு வகை உண்டு.

Will Probate in Common Form
Will Probate in Solemn Form

ஒருவர் தனது சொத்துக்களை தன் வாழ்நாளுக்குப் பின்னர் யாருக்கு கொடுக்க வேண்டும் என்று நினைக்கிறாரோ, அவருக்கு உயில் எழுதி வைத்து விட்டுப் போகலாம். 

உயில் எழுதுவதற்கு பத்திரம் தேவையில்லை. அந்த உயிலை பதிவு செய்து வைக்க வேண்டும் என்ற கட்டாயமும் இல்லை. இரண்டு சாட்சிகள் மட்டும் கையெழுத்துப் போட்டு, ஒரு உயில் எழுதப் பட்டிருந்தால், அது போதும்.

ஆனால், சென்னை மாநகரத்தில் உள்ள அசையாச் சொத்தைப் பொறுத்து ஒரு உயில் எழுதி இருந்தாலும், அல்லது சென்னை அல்லாத வேறு இடத்தில் உள்ள சொத்தைப் பொறுத்து சென்னையில் அந்த உயிலை எழுதி இருந்தாலும், அந்த உயிலை, அவரின் ஆயுட்காலத்துக்குப் பின்னர், சென்னை ஐகோர்ட்டில் புரபேட் என்னும் ஆர்டர் பெற வேண்டும். புரபேட் என்பது, அந்த உயில் உண்மையில் அவர் எழுதிய உயில் தானா என்றும், நல்ல மனநிலையில் அப்போது இருந்தாரா என்றும், யாருடைய தூண்டுதலும் இல்லாமல் எழுதப்பட்ட உயில்தானா என்றும் விசாரித்து, பின்னர் கொடுக்கப்படும் உத்தரவு ஆகும். புரபேட் என்பதற்கு நிரூபிக்கப்பட்ட என்று பொருள் கொள்ளலாம். (Probate means Proved).

சென்னை தவிர மற்ற இடங்களில் உள்ள சொத்துக்களைப் பொறுத்து எழுதிய உயிலை, புரபேட் செய்ய வேண்டிய கட்டாயம் இல்லை. ஆனாலும், அந்த மாவட்ட கோர்ட்டில் புரபேட் செய்து கொள்ளலாம்.

புரபேட் செய்வதில் இரண்டு வகை உண்டு:
ஒன்று - சாதாரண புரபேட் முறை, மற்றொன்று சட்டபூர்வ முறை.
Common Form of Probate
Solemn Form of Probate

சாதாரண புரபேட் முறை: 
Will Probate in Common Form:

இதில் உயில் எழுதியவர் இறந்தவுடன், அந்த உயிலை ஐகோர்ட்டில் தாக்கல் செய்து, வேறு யாருக்கும் எந்த நோட்டீஸ் கொடுக்காமல், அதில் உள்ள சாட்சிகளை மட்டும் விசாரித்து, புரபேட் உத்தரவு கொடுப்பது. 

இதில், இந்த உயிலை யாராவது மறுக்கவோ, போலியாக எழுதியதாக தயாரித்து உயில் என்று சொல்லவோ வழி இல்லை. எப்போதாவது அந்து உயில் வெளியில் வந்தால், அப்போதுதான் தெரியும். அதன் பிறகே, சம்மந்தப்பட்டவர் கோர்ட்டுக்கு சென்று இந்த உயில் புரபேட் ஆர்டர் தவறாக கொடுக்கப் பட்டது என்று அதை ரத்து செய்ய முடியும். 

சட்டபூர்வ புரபேட் முறை:
Will Probate in Solemn Form:

இதில் உயில் எழுதியவர் இறந்தவுடன், அந்த உயிலை ஐகோர்ட்டில் தாக்கல் செய்து, அந்த உயில் எழுதாமல் விட்டிருந்தால், அந்த சொத்துக்கு யார் யார் வாரிசாக வருவார்களோ, அவர்களை எல்லாம் எதிரப் பார்ட்டியாக சேர்த்து, அவர்களுக்கும் கோர்ட் சம்மன் அனுப்பி, அவர்களின் எதிர்ப்பையும் கேட்டு, மேலும், செய்தித் தாள்களி்ல் விளம்பரம் செய்து, யாருக்காவது ஆட்சேபனை இருக்கிறதா என்று கேட்டு, பின்னர் முறைப்படி புரபேட் உத்தரவு கொடுப்பது.

இதில் அந்த உயிலை புரபேட் செய்யும் போதோ உலகத்துக்கு தெரியப்படுத்தி புரபேட் உத்தரவு வாங்குவது. இப்படி வாங்கி விட்டால், பின்நாளில், யாரும் அந்த உயிலை ஆட்சேபனை செய்ய முடியாது. 

இங்கிலாந்து சட்டம் & இந்திய சட்டம்:
இங்கிலாந்து சட்டப்பபடி, இந்த இரண்டு முறைகளும் இருந்தாலும், பொதுவாக இங்கிலாந்தில், சாதாண புரபேட் முறையிலேயே புரபேட் வாங்கி விடுவர். 

இந்தியாவிலும் அவ்வாறான சாதாரண புரபேட் முறையே நடைமுறை இருந்தது. இது பல சிக்கல்களை பின்னாளில் கொண்டு வந்ததால், இந்திய கோர்ட்டுகள் இப்போது, ச்ட்டபூர்வ புரபேட் முறைக்கு மாறி விட்டது.

**



No comments:

Post a Comment