Thursday, September 16, 2021

மகன்களில் பலவகை

மகன்களில் பலவகை:

இந்து சாஸ்திரத்தில் மகன்களுக்கு அதி முக்கியத்துவம் கொடுக்கப்பட்டது. 

அதனாலேயே பூர்வீகச் சொத்தில் மகன்கள், பேரன்கள், கொள்ளுப் பேரன்களுக்கு மட்டுமே அவர்களின் பிறப்பால் சொத்துரிமை கிடைத்து வந்தது. அந்த வீட்டில் பிறந்த மகளுக்கு பூர்வீகச் சொத்தில் எந்த சொத்துரிமையும் கொடுக்கப்படவில்லை. 

ஒரு மகன், தனது தந்தைக்கும், பாட்டனுக்கும், முப்பாட்டனுக்கும், அப்படியாக ஏழு தலைமுறைக்கு "சிரதா" (Sraddha) என்ற கர்ம காரியம் செய்ய உரிமை உள்ளவன் என்கிறது இந்து சாஸ்திரம். தனது ஆண் வழி மூதாதையர் சொர்க்கம் செல்ல வேண்டுமானால், அல்லது அவரது ஆன்மா இறைவன் அடி சேர வேண்டுமானால், இந்த பூமியில் உள்ள அவரின் மகன், பேரன், கொள்ளுப் பேரன் என ஏழு தலைமுறை ஆண்கள் கர்ம காரியம் செய்ய வேண்டும். அதாவது மூதாதையருக்கு பிண்டம் கொடுக்க வேண்டும். 

ஆனால், அப்படிப்பட்ட மகன், சாஸ்திரப்படி திருமணம் செய்த மனைவி மூலம் பிறந்தவனாக இருக்க வேண்டும். 

12 வகை மகன்கள்:

மகன்களின் வகைகளாக 12 வகை மகன்களைக் கூறுகிறது ஸ்மிருதி என்னும் இந்து தர்ம சாஸ்திரம். அதில் முதல் வகை மகன் எல்லா உரிமையும் பெறுவான். அந்த முதல் வகை மகனை அவுரசா (Aurasa) என்பர். ஒரே ஜாதியில் உள்ள பெண்ணை, சாஸ்திர முறைப்படி திருமணம் செய்து பிறந்த மகனை அவுரசா என்ற வகையை சேர்ந்த மகன் என்பர். அவுரசா என்பதற்கு மார்பில் பிறந்தவன் என்று பொருளாம். இவனே சட்டபூர்வ மகன்.

1) அவுசரசா மகன் (Aurasa son) = சட்டபூர்வ மகன்.

2) தத்தகா மகன் (Dattaka son) = வளர்ப்பு மகன்.

3) கிருத்திம மகன் (Kritrma son) = தத்து எடுக்காமல் பிரியத்துடன் வளர்க்கும் மகன்.

4) சத்ரஷா மகன் (Kshetraja son) = கணவனின் அனுமதியுடன், மனைவி, வேறு ஒருவருக்கு பெற்றுக் கொண்ட மகன். (குந்தி, பாண்டவர்களில் தர்மன், பீமன், அர்ச்சுனன் ஆகியோரைப் பெற்றது போல).

5) குதஜா மகன் (Gudhaja son) = மனைவி இரகசியமாக பெற்றுக் கொண்ட மகன் (குந்தி, கர்ணனைப் பெற்றது போல).

6) கனினா மகன் (Kanina son) = ஒரு கன்னிப் பெண்ணுடன் இரகசிய உறவு வைத்துப் பெற்றுக் கொண்ட மகன். (வியாசரை சத்தியவதி பெற்றது போல).

7) புத்திரக புத்திரன் (Putrika putra) = வளர்ப்பு மகளின் மகனை, தன் மகனாக ஏற்றுக் கொள்வது.

8) சகொதஜா மகன் (Sahodhaja son) = திருமணம் செய்யும் போதே மனைவி கர்ப்பமாக இருந்து அதனால் பெற்ற மகனை, தன் மகனாக ஏற்றுக் கொள்வது.

9) கிர்தா மகன் (Krita son) = பணத்துக்காக மகனை வாங்குவது. (தவிட்டுக்கு வாங்குவதாக வேடிக்கையாக பேசிக் கொள்வர்).

10) கிருத்திர்மா மகன் (Kritrima son) = அனாதையானவனை மகனாக ஏற்றுக் கொள்வது.

11) சுயம்மாததா மகன் (Svayamadatta son) = அனாதையாக விடப்பட்டவன், தானே ஒரு தந்தையை தேடிக் கொள்வது.

12) பௌராம்பவ மகன் (Paunarbhava son) = கணவனால் கைவிடப்பட்ட பெண் மூலம், விதவையான பெண் மூலம், பெற்றுக் கொள்ளும் மகன்.

13) அப்விதா மகன் (Apuviddha son ) = கைவிடப்பட்டவனை தனக்கான மகனாக ஏற்பது.

14) நிசாத் மகன் (Nishad son) = பிராமணன், ஒரு சூத்திரப் பெண் மூலம் பெற்றுக் கொண்ட மகன். 

**



No comments:

Post a Comment