Monday, July 21, 2014

நினைவுகள்-15

ரெவின்யூ ஸ்டாம்ப்
(Revenue Stamp)
இந்த ரெவின்யூ ஸ்டாம்புகள் இந்தியாவில் இரண்டே இரண்டு விஷயங்களுக்கு மட்டுமே உபயோகிக்கப் படுகிறது.

1)புராமிசரி நோட் கடன் வாங்கும்போது, கடன் வாங்கியவர் எழுதிக் கொடுக்கும் புராமிசரி நோட்டில் இந்த ஸ்டாம்பை ஒட்ட வேண்டும்.
2)எந்த பணத்தையாவது யாரிடமிருந்தாவது வாங்கும்போது அதற்கான ரசீது கொடுக்க வேண்டுமென்றால், அப்போதும் அந்த ரசீதில் இந்த ரூ.1/- ரெவின்யூ ஸ்டாம்ப் ஒட்டி, ரசீதை கொடுக்க வேண்டும்.

ரசீது (Receipts)
மாதச் சம்பளம் வாங்குபவர் இதை அதிகமாக உபயோகிப்பார்கள். அலுவலகங்களில் ரசீது கொடுக்கும்போது இந்த ரெவின்யூ ஸ்டாம்ப் ஒட்டிய ரசீதை கொடுப்பார்கள்.

மத்திய அரசின் சட்டப்படி, ரசீதுகளுக்கு (Receipts), அதாவது யாரிடமாவது எதற்காகவாது பணம் வாங்கினால், அதை ஒப்புக்கொண்டு எழுதிக் கொடுக்கும் ரசீதுகளுக்கு, இந்த சட்டப்படி ரூ.1/- மதிப்புள்ள ரெவின்யூ ஸ்டாம்பை ஒட்ட வேண்டும். அதுவும், அந்த பணமதிப்பு ரூ.5,000/-க்கு மேல் இருந்தால் அந்த ரசீதில் ரெவின்யூ ஸ்டாம்பை ஒட்ட வேண்டும். அதற்கு குறைவான மதிப்புள்ள தொகைக்கு ரசீது கொடுத்தால், அதற்கு ரெவின்யூ ஸ்டாம்பை ஒட்டத் தேவையில்லை. வெறும், ஸ்டாம்ப் இல்லாத ரசீதை கொடுக்கலாம். (இதற்கு முன்பு இருந்த பழைய சட்டப்படி ரூ.500/-க்கு மேல் உள்ள தொகைக்கே 20காசு ரெவின்யூ ஸ்டாம்பை ஒட்ட வேண்டும். அதனால், ரெவின்யூ ஸ்டாம்ப் அதிகமாக புழக்கத்தில் இருந்தது.)

ஸ்டாம்ப் ஒட்ட வேண்டிய ரசீதுக்கு, அதை ஒட்டாமல் வாங்கி இருந்தாலும், பரவாயில்லை. எங்காவது அதை சாட்சியமாக கொடுக்க நேர்ந்தால் அப்போது அதற்கு ரூ.10/- அபராதமாக கட்டி அதை சரிசெய்தும் கொள்ளலாம். சட்டப்படி அது செல்லும்.

புராமிசரி நோட்டு கடன் (Promissory Note)
புராமிசரி நோட் கடனுக்கு, கடன் எவ்வளவு தொகையாக இருந்தாலும், (கோடிக்குமேல் இருந்தாலும்), ஒரு ரூபாய் ரெவின்யூ ஸ்டாம்ப் ஒட்டினால் போதும். (அந்தச் சட்டத்தின்படி வெறும் 25 காசு ரெவின்யூ ஸ்டாம்ப் ஒட்டினால் போதும் என்று சட்டம் சொல்லி உள்ள போதிலும், அவ்வாறான 25 காசு ஸ்டாம்புகளை அரசு அச்சடிக்கவில்லை. எனவே ஒருரூபாய் ஸ்டாம்ப் ஒட்டி எழுதி வாங்கிக் கொள்ளலாம்.)

இந்த ரெவின்யூ ஸ்டாம்ப் ஒட்டாமல் வாங்கிய புரோநோட்டு சட்டப்படி செல்லாது. எந்த கோர்ட்டிலும் வழக்கும் போடவும் முடியாது. அபராதம் கட்டினாலும் அதை ஏற்க முடியாது. எனவே புரோநோட் விஷயத்தில் சர்வ ஜாக்கிரதையாக இருக்க வேண்டும்.

.

No comments:

Post a Comment