Saturday, October 4, 2014

ஸூகே துக்கே ஸமே


கவலை கொள்பவன் யார்?
வாழ்க்கையின் பிரச்சனைகளை புரிந்து கொள்ளாதவன், உலகக் கவலையில் இருக்கிறான்.

மனிதனைப் போன்று வாழ்ந்து பிரச்சனைகளை தீர்க்காது, நாய், பூனை போன்று வாழ்ந்து மறைகிறான் என கர்க உபநிஷதம் சொல்கிறது.

உலக வாழ்வில், மனைவி, மக்கள், உறவினர் என்றே பற்றுக் கொள்கிறான். தன் குடும்பத்தை தன்னால் கரைசேர்க்க முடியும் என நம்புகிறான். அல்லது அந்தக் குடும்பம் தன்னை மரணத்திலிருந்து காப்பாற்றி விடும் என எண்ணிக் கொண்டிருக்கிறான்.

தன் குட்டிகளை மிருகங்கள் காக்கும். இந்தக் குணம் அல்லது குடும்பப் பற்று மிருகங்களிடமும் உள்ளது.

மனிதனும் இதே கவலையில் வாழ்கிறான். அதை தாண்டி, தான் எதற்காக மனிதப் பிறவி எடுத்தோம் என எண்ணியதில்லை. கடைசிவரை இந்தக் குழப்பத்திலேயே வாழ்ந்து மாய்கிறான்.

சிலர் மட்டுமே இதைத் தாண்டி வாழ்கின்றனர்.

எதற்குச் சாப்பிட வேண்டும் என்று கேட்டால், உயிர்வாழ சாப்பிட வேண்டும் என்பான். எதற்கு உயிர்வாழ வேண்டும் என்றால், சாப்பிட உயிர்வாழ வேண்டும் என்பான். எதையும் இவனால் செய்ய முடியாது. பிறர் செய்ததை அனுபவிப்பான்.

கல்விஅறிவு, ஞானம், பெரும்பதவி, இவையெல்லாம் வாழ்வின் சிக்கல்களைத் தீர்க்க உபயோகமற்றவை.

“ந யோத்ஸ்யே” (நான் போரிட மாட்டேன்!) என்று மறுத்த அர்ஜூனனுக்கு ஸ்ரீகிருஷ்ணன் யோசனை சொல்கிறான்.
“கவலைப்பட வேண்டாதவற்றுக்காக கவலைப் படாதே!
“நானும், நீயும், மன்னர்களும் இல்லாமல் இந்த முன் உலகம் இருந்ததில்லை; அதேபோல நாம் இல்லாமல் இந்தப் பின் உலகும் இருக்கப் போவதுமில்லை.
“நாம் சிறுவயதிலிருந்து இளமைக்கும், இளமையிலிருந்து முதுமைக்கும், முதுமையிலிருந்து மரணத்துக்கும் மாறித்தான் பயணிக்கிறோம். மரணத்திலிருந்து புதுஉடலுக்கு பயணமாகத்தான் போகிறோம்.
“அர்ஜூனா! இன்ப துன்பங்கள் நிலையற்றவை என்பதைக் கற்றுக் கொள். காலப்போக்கில் அவை மறையும் தன்மை கொண்டவை.
“புலன்களை வைத்து இன்பதுன்பங்களை அளக்காதே! மார்கழி குளிரில் குளிக்க வேண்டும் என்பது உன் கடமை என்றால் அதற்காக குளிக்கத் தயங்காதே.
“அர்ஜூனா, நீ போரில் மாய்ந்து மேலுலகை அடையலாம்; அல்லது வெற்றி பெற்று இவ்வுலகை ஆளலாம்; எது நடந்தாலும் உன் செயலை உறுதியுடன் செய்.
“வெற்றி பெறுவோம் என்ற நிச்சயமில்லாவிட்டாலும்கூடப் பரவாயில்லை, ‘அர்ஜூனன் போர்புரியக்கூடிய வீரன்தான்' என்று உன்னை பலர் போற்றுவர். போர்களத்தில் மரணம் ஏற்பட்டாலும், அந்தப் பேருடன் மேலுலகை அடையலாம்.
“எல்லாவற்றிலும்  லாப-நஷ்ட கணக்கு பார்க்காதே! உன் எல்லாச் செயலும், நான் சொன்னதற்காக நீ செய்கிறாய். எனக்காகச் செய்கிறாய். உன் பங்கு இதில் ஏதுமில்லை. உனக்கு கவலையும் இல்லை.

“ஸூகேதுக்கே ஸமே க்ருத்வா லாபாலாபௌ ஜயாஜயௌ...”
(சுகம் துக்கம் இவைகள் சமமே! லாப நஷ்டங்கள் சமமே! வெற்றி தோல்விகள் சமமே!)

இதுவே நான் உனக்குச் சொல்லும் சாங்கிய தத்துவம்.
(சங்கியம் என்றால் பொருள் ஆய்வு)







No comments:

Post a Comment