Monday, October 13, 2014

நினைவுகள்-47

உடன்கட்டை:
அரசர்கள் வீரமரணம் அடைந்தால் அவர்களின் ராணிகள் தங்களை உடலையும் இறந்த கணவனின் உடலுடன் சேர்த்து தீக்கிரையாக்கிக் கொள்வர் என்று சொல்லப் பட்டது. சில சமயங்களில், தனியே தீ வளர்த்து அதில் தீக்கிரையாவர் என்றும் சொல்லப் பட்டது.

கணவனுக்குப் பின் வாழ்வு இல்லை என்றோ, அல்லது அவருக்குப் பின் தனக்கு தனியே வாழ விருப்பமில்லை என்றோ இதை செய்திருக்கலாம், காரணம் தெரியவில்லை. கட்டாய உடன்கட்டைகளும் ஏற்றப்பட்டன. ஒருவேளை கணவன் இல்லாமல் மனைவியை வாழவிடக் கூடாது என்று ஏதாவது உள் நோக்கத்துடன் இத்தகைய ஏற்பாடாக இருக்குமோ? இந்தப் பழக்கம் சமீப காலத்துக்கு முன்னரே பிரிட்டீஸ் அரசால் கைவிடப்பட்டது.

கணவன் அவ்வாறு உடன்கட்டை ஏறுவதில்லை. ஏன் என்றும் தெரியவில்லை.

ஆனால், மந்திரி இறந்தவுடன் அவரின் ஆண் நண்பர் (புலவர்) உடன்கட்டை ஏறினாராம்.

சோழராஜாவின் மந்திரியான சீனக்கராயன். இவரும் அவரின் நண்பர் புலவரும் மிக மிக நல்ல நண்பர்களாம். இந்த மந்திரி சீனக்கராயன் இறந்தபோது, மன்னன் தடுத்தும் கேட்காமல், இந்தப் புலவனும் அவனுடன் உடன்கட்டை ஏறினான். இந்தப் புலவர்தான் 'பொய்யாமொழிப் புலவர்.'

இவர்கள் நட்பு எப்படிப் பட்டது என்றால், மந்திரியுடன் அவரின் கட்டிலில் உட்கார்ந்து பேசிக் கொண்டிருந்தனர். புலவர் தூங்கிவிட்டார். மந்திரி வெளியே மாடத்துக்கு சென்றுவிட்டார். மந்திரியின் மனைவி வருகிறார். கணவர்தான் படுத்திருக்கிறார் என்று நினைத்து அவளும் அதே கட்டிலில் படுத்து விட்டார். கணவன் வந்து பார்க்கிறார். மனைவி இது தெரிந்து பதறி எழுந்திருக்கிறார். அப்போது மந்திரி 'எழுந்திருக்க வேண்டாம்.' என்று தடுத்துவிட்டார். நண்பனையும் எழுந்திருக்க வேண்டாம் நண்பரே, படும் என கூறிவிட்டு, அப்போது சொல்கிறார். “நீர், இந்த உலகில், எந்தப் பெண்ணையும் தாயாகவே பார்க்கிறவர். எனவே நீ எழுந்திருக்க வேண்டாம் என்று சொல்கிறார். அந்த வார்த்தை, 'செல்லக்கிடமின்'. செல்லவேண்டாம், படுத்திருங்கள்' என்று அதன் பொருள்.

அந்த மந்திரி இறந்தபோது, இந்த பொய்யாமொழிப்புலவர் இந்த சூழ்நிலையைச் சொல்லி, 'என்னை அன்று 'செல்லக்கிடமின்' என்று பெருந்தன்மையோடு சொன்ன என் உயிர் நண்பன் இறந்து, விண்ணுலகு செல்கிறான். நான் ஏன் இங்கு இருக்கவேண்டும், நானும் அவனுடனே செல்கிறேன்' என்று சொல்லிவிட்டு உடன்கட்டை ஏறி தீயில் கலந்தாராம்.

நட்பின் உச்சத்திற்கு இதையே உதாரணமாகச் சொல்வர்.





No comments:

Post a Comment