Saturday, October 18, 2014

நினைவுகள்-51

நம்பிக்கை என்பது முழுஅர்பணிப்பு.
நம்புகிறேன் என்பதே, ஏதோ ஒரளவு நம்புகிறேன் என்றுதான் நம்புகிறோம். முழுநம்பிக்கைதான் நம்பிக்கை என்பதன் முழுவடிவம்.

கடவுள், தனக்கு ஏதாவது அதிசயத்தைச் செய்தால், அந்தக்கடவுளையும், அவர் இருக்கிறார் என்பதையும் நம்புவதாகவும், இல்லையென்றால், நம்ப வாய்பில்லை என்றும் நினைக்கிறோம்.

கடவுள் நம்மிடம் அதிசயம் நிகழ்த்திக் காட்டித்தான் அவர் இருப்பதைச் சொல்ல வேண்டுமா? நிகழ்த்திக்காட்டுவதால் அவருக்கு இதில் என்ன லாபம்? கடவுள் இருக்கிறார் என்று அப்போதுதான் நான் நம்புவேன். உன்னை நம்ப வைத்து காசு பார்ப்பதற்கு அவர் என்ன மோடி மஸ்தான் வேலை செய்பவரா?
எல்லா மதங்களின் புனித நூல்களுமே, கொஞ்சம் அதிகமாகவே மிரட்டும் தொனியில் இதைச் சொல்லியுள்ளது.
“நீ என்னை நம்பு. என்னைத் தவிர வேறு எதையும் நம்பாதே.
“நான் உன்னை முழுவதுமாகக் காப்பாற்றும் ஒரே கடவுள்.
“நீ என்னிடம் முழுமையாகச் சரணடைய வேண்டும்.

இது ஏதோ பிசினஸ் அக்ரிமெண்ட் போல உள்ளதே?
ஆம் பிசினஸ் அக்ரிமெண்ட் தான்.
நாம் ஒரு பெரிய மனிதரைப் பார்க்கப் போனால், அவரிடம் நாம் காட்டும் மரியாதையே நம்மை அவரிடம் நெருங்கவிடும். அவரும் நெருங்குவார். இந்த மரியாதையை நாம் நம்பிக்கையுடன் செய்தால் காரியத்தை சாதித்துக் கொள்ளலாம்.
கடவுளுக்கு எதுக்கு இந்த ஆசை?
யார் மதித்தாலென்ன, மதிக்காவிட்டாலென்ன?
விருப்பு வெறுப்பு அற்றவனுக்கு மரியாதை அவசியமில்லைதான்.
அவன் மரியாதையை ‘நம்மிடம்’ கேட்கவில்லை.
நீ, நம்பி என்னிடம் சேர் என்கிறார்.
ஏன் நம்ப வேண்டும்?
பிரபஞ்ச முழுவதையும் என் ஆளுமையில் வைத்திருக்கிறேன். எல்லா அணுவில் என் இயக்கம் உள்ளது. முதலில் நீ அதை நம்பு. பின்னர், அதில் நான் இருப்பதை நம்பு. அதனுடன் உன் இயல்பை சேர்த்துக் கொள். உன் காரியம் நடந்துவிடும்.
ஒரு அணுவுக்குள் நீ வராமல், நான் வெளியேறி வந்து உனக்கு செயலாற்றுவது இயற்கைக்கு எதிரானது. நான் மந்திரவாதி போல உனக்கு அதிசயங்களை நிகழ்த்த மாட்டேன். ஆனால், என்னுள் நீ ஐக்கியமானால், நீ நானாவாய், நானும் நீயாவேன். இருவரும் Synchronize ஆகிவிடுவோம்.

ஸ்ரீகிருஷ்ணனுடன் விளையாடித் திரிந்த கோபிகைகள் (பெண்கள்) 16,000 பேர். இவர்களுடன் வேறு வேறு இடத்தில் தனித்தனியே கிருஷ்ணன் விளையாடிக் கொண்டிருக்கிறான். அது எப்படி முடியும் என்று கேட்கத் தோன்றும். ஆம், கிருஷ்ணன் ஒரே நேரத்தில் பல இடங்களில் பல கோபிகைகளுடன் வேறு வேறு விளையாட்டை விளையாடி இருக்கிறான். அவர்களுக்குத் தெரியாது. கிருஷ்ணன் நம்முடன் மட்டும்தான் விளையாடிக் கொண்டிருக்கிறான் என்று அவர்கள் நினைத்துக் கொள்கிறார்கள். அது மனித இயல்பு.

இதை வேறு ஒரு விளையாட்டு மூலம் விளக்கப்படுகிறது. யமுனை நதியில் குளிக்கும் கோபிகைகளின் உடைகளை எடுத்து மரத்தின் மீது வைத்து விடுகிறான் கிருஷ்ணன். அவர்கள் கெஞ்சியும் கொடுக்கவில்லை. என்னைக் கையெடுத்து தொழுது கொண்டு வந்தால் தருவேன் என்கிறான். அவர்களும் அப்படியே வந்து வாங்கியதாக கதை. கொஞ்சம் விரசமான கதையாகச் சொல்லப் பட்டுள்ளது. பூர்வ ஜென்மத்தில், இந்தக் கோபிகைகள் விஷ்ணுவின் அடியார்கள்.
இதில் நம்பிக்கையைப் பற்றி சொல்வதற்காக இந்தக் கதை சொல்லப் பட்டுள்ளது.
‘முழுவதுமாக என்னைச் சரணடை’ என்கிறார். யோசிக்காதே.
இங்கு கிருஷ்ணன் எதை உணர்த்தினான்?
“நீ எப்படி என்னைக் கருதிக் கொண்டு வழிபடுகிறாயோ அவ்வாறே நான் வருவேன்.
சிலர் என்னை மகன் என்கிறார்கள்.
சிலர் என்னை நண்பன் என்கிறார்கள்.
சிலர் என்னை எதிரி என்கிறார்கள்.
சிலர் என்னை காதலன் என்கிறார்கள்."

அவர்களின் மன ஓட்டத்துக்கு நான் ஈடுகொடுத்தால்தான் அவர்களின் ஆசையை நான் நிறைவேற்ற முடியும். எனவே நானும் அவ்வாறே ஆகிறேன்.
இதைத்தான் கோபிகைகளின் உடையை மறைத்து, பின் கொடுத்த விஷயத்திலும் சொல்லி உள்ளார். கிருஷ்ணன் பெண்களை அவ்வாறு பார்க்க ஆசைப்படவில்லை.
உன் விருப்பம் எதுவோ அதுவாக நான் மாறுவேன் என்கிறார்.
அப்படியென்றால், நாம் என்ன ஆசைப் படுகிறோமே அதுவாகவே கிருஷ்ணன் நம்மை நெருங்குகிறான்.
நாமும் கடவுளிடம் நம்பிக்கை வைப்போம், அதை தெளிவாக வைப்போம், அதையும் முழுவதுமாக வைப்போம்.
நிச்சயம் நம் கடவுள் நாம் நினைத்த்\தை, கேட்டதைக் கொடுப்பான். கொடுத்தாக வேண்டும்.
இதிலும் ஏதோ விஞ்ஞானம் இருப்பதாகவே தெரிகிறது.

இதுவும் வாழும் வழிதான்.

No comments:

Post a Comment