Saturday, May 14, 2016

மோர்கனாட்டிக் திருமணங்கள்

மோர்கனாட்டிக் திருமணங்கள் 
Morganatic marriages

இதை “இடதுகை கல்யாணம்” ‘Left-handed marriage’ என்று பரவலாகச் சொல்லிக் கொள்கிறார்கள். மணமகன், மணப்பெண்ணை, அவனின் இடது கையால், அவளின் வலது கையைப் பிடித்துக் கொண்டு திருமணம் செய்வது.
உயர்பிரிவைச் சேர்ந்தவன், குலத்தில் குறைந்த ஒரு பெண்ணைத் திருமணம் செய்வதைத்தான் இந்த பெயர்களில் சொல்லிக் கொள்கிறார்கள்.
இது இப்போது வந்த பிரச்சனை இல்லையாம். காலம்காலமாக இதை கடைப்பிடித்து வந்திருக்கிறார்களாம். அரச பரம்பரையைச் சேர்ந்த ஒரு ஆண், அதே பாரம்பரியத்தில் பிறந்த ஒரு பெண்ணைத்தான் திருமணம் செய்ய வேண்டுமாம். அப்போதுதான், அந்த பெண்ணுக்கு அவள் கணவனின் அரச பதவி, அரச போகம், அரச உரிமை, அரச சொத்துக்கள் கிடைக்குமாம். இல்லையென்றால், ஒரு “வைப்பாட்டி” நிலைதான்! அவளுக்கு பிறக்கும் குழந்தைகள் அரச பதவிக்கு வர முடியாதாம்.
ஒரு மன்னர், அதே பாரம்பரியத்தில் உள்ள ஒரு அரச குலத்துப் பெண்ணைத் திருமணம் செய்தால், அவள் “ராணி” என்ற அந்தஸ்த்தைப் பெறுவாள். ஆனால், மன்னர், ஒரு குறைந்த பிரிவைச் சேர்ந்த ஒரு பெண்ணைத் தன் மனைவியாக தேர்ந்தெடுத்தால், அவளுக்கு “ராணி” என்ற அந்தஸ்து கிடைக்காது. அவளுக்கு பிறக்கும் பிள்ளைகளும், அரச பதவி எதற்கும் வர முடியாது. இளவரசர் பட்டமும் கிடைக்காது.
அவ்வாறு திருமணம் செய்த அந்த பெண்ணுக்கு, எந்த அந்தஸ்தும் இல்லை என்பதால், மணமகனாகப் பார்த்து ஒரு சொத்தை, பணத்தை, பொருளை கொடுப்பார். அதைக் கொண்டு அந்தப் பெண்ணும் அவளுக்குப் பிறக்கும் பிள்ளைகளும் எடுத்துக் கொள்ளலாம். அதை அவன், அந்த திருமணம் நடந்த முடிந்த மறுநாள் காலையில் கொடுப்பானாம்! எனவே அதற்கு “காலை பரிசு” ‘Morning Gift’  என்று சொல்வார்களாம். அந்த லத்தீன் வார்த்தையில் இருந்து பிறந்த வார்த்தைதான் மோர்கனாடிக் திருமணம் என்று பெயர் வந்ததாம்.
ஜெர்மன் நாட்டில் முதன்முதலில் இந்த பழக்கம் இருந்திருக்கிறது. அது பின்னர் எல்லா ஐரோப்பிய நாடுகளிலும் பரவி விட்டது. இந்தியாவின் “வைப்பாட்டி” முறையும் இப்படித்தான் வந்திருக்குமோ?
செங்கிஸ்கான் மன்னர், தன்னுடைய தலைமை மனைவியான ராணி தவிர, இவ்வாறு பல மோர்கனாட்டிக் திருமணங்களை செய்திருக்கிறாராம்.
ஆண்கள் மட்டுமல்ல, ராயல் குடும்பத்தைச் சேர்ந்த பெண்மணிகளும் இந்த மோர்கனாடிக் திருமணங்களைச் செய்திருக்கிறார்கள். அரச குடும்ப பெண்கள், சாதாரண ஆண்களைத் திருமணம் செய்திருக்கின்றனர். ஒன்றாம் நெப்போலியனின் மனைவி ராஜகுடும்பத்தைச் சேர்ந்த மேரி லூயிஸ். ஒன்றாம் நெப்போலியன் இறந்தவுடன், இந்த ராணி, தன்னிடம் வேலை செய்து வந்த ஒரு சாதாரண நபரை, இந்த மோர்கனாட்டிக் முறைப்படி திருமணம் செய்து கொண்டதாக வரலாறு சொல்கிறது.
பிரான்ஸின் 2-ம் ஹென்றி மன்னருக்கு ஏற்கனவே காத்தரின் என்ற ஒரு மனைவி ராணி பதவியில் இருக்கும்போதே, டையானா என்ற 35 வயது விதவையுடன் கள்ள உறவு ஏற்பட்டு, அவளை தன் ராணி போலவே நடத்தி வந்தார் என்றும் வரலாறு சொல்கிறது.
ஜெர்மனியில், ஒரே குலத்தில் பிறந்த ஆண்-பெண்களுக்குள்தான் திருமணம் நடக்க வேண்டும் என்ற கட்டுப்பாடு கடுமையாக இருந்தது. இடதுகை திருமணங்கள் சட்டபூர்வமாக அங்கீகாரம் பெறவில்லை. இப்படி பல நாடுகளிலும் வேறு வேறு முறைகளில் நடந்து கொண்டிருக்கிறது.
இந்தியாவில், பழைய திருவாங்கூர் மாநிலத்தில், “மருமக்கள்-தாயம்” என்ற முறை இருந்து வந்திருக்கிறது. அங்குள்ள ராஜ பரம்பரைப் பெண்கள், நாயர் வகுப்பைச் சேர்ந்த ஆண்களைத்தான் திருமணம் செய்வார்கள். இங்கு பெண்கள்தான் குடும்பத்தின் தலைவி. அவரைச் சுற்றித் தான் அந்த குடும்பம் இயங்கும். அவர்களை தரவார்டு என்பர்.
தற்போதுள்ள ஜாதிகளுக்குள்ளேயே நடத்தும் திருமணங்களும், ஜாதிகளைத் தாண்டி நடக்கும் திருமணங்களும் இதன் அடிப்படையில்தானோ!

**

1 comment: