Sunday, August 3, 2014

குழந்தை பிறந்ததா, இல்லையா?

குருநாதப் பிள்ளையின் உயில்:
குருநாதப் பிள்ளை 19.10.1864ல் (150 வருடத்திற்கு முன்னர்) ஒரு உயில் எழுதி வைத்துள்ளார்அவர் மிகவும் ஆபத்தான நோயால் பாதிக்கப் பட்டுள்ளதாகவும், அவருக்கு ஆண் குழந்தை இல்லை என்றும், இரண்டு பெண் குழந்தைகள் மட்டும் உள்ளனர் என்றும், மூத்த பெண் பிச்சாயிக்கு 7 வயது என்றும், இளையமகள் சின்னாத்தாளுக்கு 3 வயது நடக்கிறது என்றும், இவர்கள் இருவரும் அவரின் 4-வது மனைவி சிவகங்கைக்கு பிறந்தவர்கள் என்றும் தனது உயில் குறிப்பிட்டுள்ளார்

அதில், அவரின் இரண்டு மகள்களும் திருமணத்துக்குப் பின்னரும் அவர்களின் கணவருடன் இந்த சொத்தில் இருந்து பார்த்துக் கொள்ள வேண்டும் என்றும், அதில் வருமானங்களை மட்டும் அடைந்து அனுபவித்துக் கொள்ள வேண்டும் என்றும், அதை விற்பனை செய்வதற்கு உரிமை இல்லை என்றும் எழுதியுள்ளார். ஒருவேளை மகள்களுக்குள் மனஸ்தாபம் ஏற்பட்டு விட்டால், வருமானத்தை மட்டும் இரண்டாக பிரித்துக் கொள்ளலாம் என்றும் சொல்லி உள்ளார். அவர்களுக்கு பிறக்கும் குழந்தைகள் சொத்தை பூரணமாக அடைய உரிமை உண்டு என்று எழுதியுள்ளார். அவரின் மனைவிக்கு ஜீவனாம்ச உரிமை உள்ளதாகவும் எழுதியுள்ளார்.

பின்னர், அவர் சில நாட்களில் இறந்து விடுகிறார். அவரின் பெரிய மகள் பிச்சாயிக்கு திருமணம் ஆகி குழந்தை பிறக்கிறது. ஆனால், மகள் சின்னத்தாளுக்கு சுப்பராயன் என்பவரை திருமணம் செய்து வைக்கின்றனர். ஆனாலும் குழந்தை ஏதும் பிறக்காமல், சின்னத்தாள் 1885ல் இறந்துவிடுகிறார் என்கிறார்கள்.

இதற்கிடையில் இந்த சொத்துக்களை பிரித்துக் கொள்கிறார்கள்.
1885ல் மனவருத்தம் வருகிறது. பிச்சாயி வழக்கு போடுகிறார். உயில்படி, அவரின், 'குழந்தை இல்லாத இறந்த தங்கையின் சொத்து' தனக்கே வரும் என்று வாதாடுகிறார்.

ஆனால், இறந்த சின்னாத்தாளின் கணவர் சுப்பராயனோ, தனக்கும் சின்னாத்தாளுக்கும் ஒரு மகன் பிறந்து இறந்துவிட்டான் என்றும், எனவே தனக்கு பாதி பங்கு உண்டு என்றும் வாதாடுகிறார். மகளுக்கு குழந்தை பிறந்ததா என்பதை அவளின் தாய் சிவகங்கைக்கு தெரிந்திருக்கும் என்று ஐகோர்ட் கருதுகிறது. ஆனால் தாய்க்கு இந்த சொத்தில் ஜீவனாம்ச உரிமை கொடுக்கப் பட்டுள்ளதால் அவரின் சாட்சியத்தை நம்பி ஏற்கமுடியாது. வீட்டு வேலைக்காரிகளின் சாட்சியத்தையும் ஏற்க முடியாது. ஆனால் பக்கத்துவீட்டுக்காரர் சாட்சி சொல்லி உள்ளார். அவர் சாட்சியத்தின்படி, சின்னாத்தாளுக்கு குழந்தை பிறந்ததாகவும்அந்தக் குழந்தையை தன் பாட்டியுடன் விளையாடி கொண்டிருப்பதை பார்த்ததாகவும் சொல்லி உள்ளார்.

இறந்துபோன ஒருத்தி, குழந்தை பெற்றவளா? மலடியா? என்பதை ஊகிக்க வழியில்லை என கோர்ட் கருதுகிறது.

கீழ்கோர்ட், குழந்தை பிறக்கவில்லை என்றே தீர்ப்புச் சொல்கிறது. ஒருவேளை குழந்தை பிறந்திருந்தால் பாகப் பத்திரத்தில் குறிப்பிட்டிருப்பார்கள் என்றும் அவ்வாறு ஏதும் சொல்லாததால் குழந்தை இல்லை என்றே முடிவுக்கு வருவதாக சொல்லியுள்ளார்.

ஆனால் ஐகோர்ட், சாட்சிகள் சொல்வதை நம்பி, அவளுக்கு குழந்தை பிறந்திருக்கும் என்றே சொல்கிறது.

ஆனால் பிரைவி கவுன்சில் ஐகோர்ட்டின் தீர்ப்பை ஒப்புக்கொண்டு, குழந்தை உண்டு என்றே முடிவுக்கு வருகிறது.


(Gurusami Pillai and others vs Sivakami Ammal (Madras) 1895 UKPC 19 dated 30 March 1895.
.

No comments:

Post a Comment