Sunday, August 3, 2014

கனவில் வந்த முருகன்

கனவில் வந்த முருகன்: (Privy Council Case):

சுமார் 170 வருடங்களுக்கு முன்னர், 1841-ல் சேலம் மாவட்டத்திலுள்ள களிப்பட்டா? (Kalipatta) என்ற ஊரில் லக்ஷ்மண கவுண்டர் என்பவர் வசித்து வந்தார். இவர் வருடம் தவறாமல் பழனி முருகனை தரிசித்து வருபவர். இவர் ஏழை. ஒரு சிறு குடிசையில் வசித்து வந்தார். ஒருநாள், இவர் கனவில், பழனி முருகக் கடவுள் தோன்றி, 'என் சிலையை உன் வீட்டில் வைத்து வணங்கு; உனக்கு நான் வருங்காலத்தை உரைப்பேன்' என்று கூறினாராம். அதன்படி இவரும் சுப்பிரமணியக் கடவுளின் சிலையை வீட்டில் பிரதிஷ்டை செய்து, பழனி முருகனுக்கு எப்படி பூஜைகள் நடக்குமோ அப்படியே அவரும் செய்திருக்கிறார். அதன்படி இவர் சாமியாரும் ஆகிவிட்டார். மக்கள் கூட்டம் வந்தது. கோயில் போல வழிபாடுகள், பூஜைகள் நடத்தினார். ஸ்ரீசுப்பிரமணியக் கடவுளுக்கு இவரே பூஜாரி. காணிக்கைப் பணம் பெருகியது. பெரிய வீட்டைக் கட்டிக் கொண்டார். சாமிக்கும் பெரிய கட்டிடம் கட்டிவிட்டார். பொதுமக்கள் தினமும் சாமி தரிசனத்துக்கு வந்தனர். அதற்கு கட்டணமும் வசூலிக்கப்பட்டது. சக்திவாய்ந்த தெய்வமாக ஸ்ரீசுப்பிரமணிய சுவாமி விளங்கினார்.

கோயிலின் கற்பகிரகத்தில் யாருக்கும் அனுமதியில்லை. அதையடுத்த பகுதிக்கு கட்டணம் உண்டு. அதை அடுத்த பகுதியில் இருந்து இலவசமாக தரிசனம் செய்யலாம்.

அவரின் பேரன் காலத்தில், இப்போது ஒரு பிரச்சனை வருகிறது. இந்த கோயில் பொதுக்கோயிலே என்றும் எல்லோரும் சாமியை பக்கத்தில் தரிசிக்க உரிமையுண்டு என்று வழக்குப் போடுகிறார்கள். சேலம் சப் கோர்ட் நீதிபதி, இந்தக் கோயில் தனியார் கோயிலே என்று கூறி வழக்கைத் தள்ளுபடி செய்து விட்டார். அதை எதிர்த்து சென்னை மாகாண ஐகோர்ட்டில் அப்பீல் வழக்கு. ஐகோர்ட் பெஞ்சில் அப்பீல் வழக்கு. அதில் ஜஸ்டிஸ் அப்துல் ரஹூம் மற்றும் ஜஸ்டிஸ் ஓல்டுபீல்டு (Mr. Justice Abdul Rahim and Mr. Justice Oldfield) இருவரும் 1919ல் இதை விசாரித்தனர். ஜஸ்டிஸ் அப்துல் ரஹூம் இது பொதுக் கோயில் என்றும், ஜஸ்டிஸ் ஓல்டுபீல்டு இது தனியார் கோயில் என்றும் முடிவுக்கு வருகிறார்கள்

மறுபடியும் மதராஸ் ஐகோர்ட்டின் லெட்டர்ஸ் பேடண்ட் (Letters Patent Appeal) அப்பீல் வழக்காக மாறி நடக்கிறது. LPA அப்பீலில் முழு பெஞ்ச் விசாரனை (Full Bench sitting). அந்த நீதிபதிகள் மூவர்; Mr.Justice Sadasiva Ayyar, Mr. Justice Seshagiri Ayyar and Mr. Justice Burn. மூன்று நீதிபதிகளும் தனித்தனியே ஜட்ஜ்மெண்ட் எழுதிய போதிலும், அது ஒரு பொதுக்கோயில்தான் என்று தீர்ப்பு வழங்கினர்.

அந்த Full Bench தீர்ப்பை எதிர்த்து லண்டனில் உள்ள பிரைவி கவுன்சில் Privy Council மேல்முறையீடுக்கு போனார்கள்.
அங்கு ஒரு வாதத்தை வைத்தார்கள். இது தனியாரின் தனிப்பட்ட கோயில். அதனால்தான் இங்கு பூஜாரி என்று பிராமணர் அல்லாத ஒருவர் பூஜை செய்கிறார் என்று சொன்னார்கள். ஆனாலும், சென்னை மாகாணத்திலுள்ள பல பொதுக் கோயில்களில், பிராமணர் அல்லாத பூஜாரிகள் உள்ளனர் என்று கூறி, இந்த கோயில் பொதுக் கோயில்தான் (Public Temple) என்று தீர்ப்புக் கூறியது.

(இந்த பிரைவி கவுன்சில் தீர்ப்பு லண்டனில் 22.11.1923ல் வழங்கப்பட்டது.
(Privy Council Appeal No.45 of 1922; in Pujari Lakshmana Goundan and another vs. Subramania Ayyar and others, reported in Madras 1923 UKPC 82 dated 22.11.1923.
ஸ்ரீசுப்பிரமணியசுவாமியும் இந்தத் தீர்ப்பை ஏற்றுக் கொண்டார் என்றே நினைக்கிறேன்.

.

No comments:

Post a Comment