Wednesday, December 18, 2013

அமிர்தமதனம்: (இந்த பிரபஞ்சம் தோன்றிய காட்சி):

அமிர்தமதனம்: (இந்த பிரபஞ்சம் தோன்றிய காட்சி):

இதன் பொருள் ‘அமிர்தம் கடைதல்’ எனப்படும். கிருதயுகத்திலே, தேவர்களும் அசுரர்களும் கூடி மந்தரத்தை மத்தாகவும், வாசுகியை தாம்பாகவும் (கயிறாகவும்) கொண்டு திருப்பாற்கடலை கடைந்தபோது, விஷம், லக்ஷ்மி, சந்திரன், தந்வந்திரி, உச்சைசிரவம், கவுஸ்துபம், பாரிஜாதம், ஐராவதம், கற்பகதரு, காமதேனு, அமிர்தம் இவைகள் திருப்பாற்கடலிலிருந்து எழுந்தன. 

மூலபிரகிருதி ஆகாய (Ether) ரூபமாகிக் கிடந்து, பின்னர் தடித்து வாயு (air) ரூபமாகிக் கிடந்து, பின்னர் தடித்து வைசுவாநரம் என்னும் அக்கினி (fire) ரூபமாய்க் கிடந்து, பரிணாம ரூப பிரமாண்டத்தை கண்ணுக்கு விஷயமாகிய தோற்றப் பிரபஞ்சமெல்லாம் உண்டானது இந்த அமிர்தத்தினாலேயேதான். இந்த உலகம் காரியபட்ட முறையையே (உருவான விதமே) அமிர்தமென பௌராணிகர்கள் குறிப்புரையால் கூறி போயுள்ளார்கள்.

கிருதயுகம் என்பதன் பொருள் பிரமாண்டம் சிருஷ்டி செய்யப்பட்ட யுகம் என்பது. மந்தரமென்பது ஆகாய மத்தியிலேயே கிடந்து தான் சுழலும்போது தன்சந்நிதிப் பட்ட சர்வாண்டங்களையும் தன்னுடே சுழலச் செய்வதாகிய ஒரு ‘சக்தியை’ அது கலங்காநிலையானதால் மலை என்று சொல்லப்பட்டது.

வாசுகி என்றது அண்டங்களையெல்லாம் தத்தம் நிலையில் நிறுத்துவதாகிய ஒரு சக்தியே. இவ்விரண்டு சக்திகளும் ஒன்று தன்பக்கம் கவர்வதும் மற்றது தனது நிலையே நாடுவதுமாக ஒன்றுக்கொண்டு தன் முண்மாறு கொண்டவை. (Attracting and Repealing).  

தேவர், அசுரர் எனக் கூறப்பட்டவை, முறையே ரசோகுண பிரவிருத்தி, தமோகுண பிரவிருத்தி. மேலே கூறப்பட்ட இரு சக்திகளையும், இந்த பிரவிருத்திகளுடன் எழுப்பி ஆட்டிய செய்தியே கடைதல் எனப்பட்டது. கடைதலால் ஏற்பட்ட கொடிய விஷ உஷ்ணமே விஷமெனப்பட்டது.

லஷ்மி என்றது இளமை அழகு முதலியவற்றை தரும் ஆற்றல். உச்சைசிரவம், ஐராவதம் என்பது முறையே குதிரை வடிவும் யானை வடிவும் உடையனவாய் உள்ள நக்ஷத்திர மண்டலத்துக்கு அப்பாலுள்ள இருதாரகாகணம்.

கவுஸ்துபம் என்றது சூரியனை. சூரியனுக்கு அண்டயோனி என்றும், சந்திரனுக்கு அப்ஜன் என்றும் பெயருண்டானது, இந்த திருப்பாற்கடலிடைப் பிறந்தமையை பற்றித்தான்.

ஆக, இவற்றால், இந்த அமிர்தமதன விஷயம் சிருஷ்டி கருமத்தை (The Birth of the Universe) குறித்ததே என்பது உறுதியாக நிச்சயிக்கப்படும்.

No comments:

Post a Comment