Wednesday, October 28, 2020

தொண்டை மண்டலம்

 தொண்டை மண்டலம்

தொண்டை மண்டலம், கிழக்கே கடலும், மேற்கே பவள மலையும், வடக்கே வேங்கடமும், தெற்கே பினாகி நதியும் எல்லைகளாகக் கொண்டது.  இதன் தலைநகரம் காஞ்சிபுரம்.  சோழ நாட்டைச் சேர்ந்தது. 

நாகப்பட்டினத்தை சேர்ந்த சோழன் ஒரு முறை நாகலோகம் சென்று ,அங்கு நாக கன்னிகையை மணம் புரிந்து, அவள் வயிற்றில் பிறக்கும் மகனுக்கு தனது நாட்டில் பாதியை கொடுப்பதாக வாக்களித்து திரும்பி வந்தான்.   

அவள், “மகனை எப்படி உங்களிடம் அனுப்புவது” என்று நாககன்னிகை கேட்டாள்.  அதற்கு சோழன் “தன்னிடம் இருந்த தொண்டைக் கொடியை அடையாளமாக கட்டிக் கொண்டு வரச் சொல்” என்று சொன்னார்.  அவ்வாறு அவன் மகனும் தொண்டை செடியின் கட்டையை தெப்பமாகக் கட்டிக் கொண்டு, கடல் கடந்து வந்து சேர்ந்தான்.  

சோழன் அவனை வளர்த்து, இந்த தொண்டை மண்டலத்தை அவனுக்கு கொடுத்து முடிசூடினான்.  அவன் தொண்டை கொடி அணிந்து வந்ததால் இது தொண்டை மண்டலம் ஆனது.  இந்த நாட்டில் தான், திருவள்ளுவர், கச்சியப்பர், கம்பர், பரிமேலழகர், ஒட்டக்கூத்தர், ராமானுஜ ஆச்சாரியார், சேக்கிழார், இரட்டையர், அருணகிரிநாதர், பவணந்தி, படிக்காசுப் புலவர், அப்பைய தீட்சிதர், முதலிய தமிழ் அறிஞர்கள் உதித்தனர் அதியமான், கருப்பன், சடையப்ப முதலி, முதலிய பிரபுக்களும் உத்தம அரசர்களும் இங்கு இருந்தனர். தொண்டை நாட்டுப் பெருமையை படிக்காசுப் புலவர் “தொண்டை மண்டல சதகம்” என்று ஒரு நூலாக பாடியுள்ளார்.

“வேதம் உடைத்து மலைநாடு, மேதக்க சோழவள நாடு சோறுடைத்து, பூழியர்கோன் தென்னாடு முத்துடைத்து, தெண்ணீர் வயல் தொண்டை நன்னாடு சான்றோர் உடைத்து” என்று அவ்வையார் இந்த தொண்டை மண்டலத்தை புகழ்ந்து பாடியுள்ளார்.

**


No comments:

Post a Comment