Wednesday, December 19, 2018

இரட்டைத் தேர்தல் வழக்கு 1959


இரட்டைத் தேர்தல் வழக்கு 1959
R.Narasimha Reddy and another v. Bhoomaji and another
AIR 1959 AP 111
பூமாஜி என்பவரும் மற்றும் ஐந்து பேர்களும் ஆந்திராவில் உள்ள காஜவெல் இரட்டை வேட்பாளர் தேர்தலில் நிற்கிறார்கள். அதாவது அந்த தொகுதியில் இரண்டு பேரை ஒரே நேரத்தில் தேர்வு செய்ய வேண்டும். ஒன்று பொது வேட்பாளர் பதவி. மற்றொன்று ரிசர்வடு வேட்பாளர் பதவி. தேர்தல் 1957-ல் நடக்கிறது. ஆறு பேரும் தேர்தலில் நிற்க மனு கொடுத்து விட்டார்கள். வாபஸ் வாங்கும் நேரம் முடிந்த பின்னர், பூமாஜி என்ற வேட்பாளர், போட்டிலிருந்து விலகுவதாக மனு கொடுக்கிறார். எனவே அவரது மனுவை தேர்தல் அதிகாரி ஏற்றுக் கொள்ள முடியவில்லை. இதற்கிடையில், பூமாஜி பெயரும் தேர்தல் வேட்பாளர் பட்டியலில் அச்சிடப்பட்டு விடுகிறது.
நரசிம்ம ரெட்டி என்பவர் பொது வேட்பாளராக தேர்வு ஆகிறார். ரிசர்வடு வேட்பாளராக முத்தியால் ராவ் தேர்வாகிறார்.
இதற்கிடையில் தேர்தல் நடப்பதற்கு முன்னர், ஒரு புரளியைக் கிளப்பி விடுகிறார்கள். பூமாஜி மாற்றுக் கட்சி வேட்பாளரிடம் பணம் வாங்கிக் கொண்டு விலகி விடுவதாக இருந்தது. அதனால்தான் பூமாஜி அவரின் மனுவை வாபஸ் பெற இருந்தார். பணம் கைக்கு வந்து சேராததால், மனுவை வாபஸ் வாங்கவில்லை என்று பொது வெளியில் பேச்சை கசிய விட்டார்கள்.
தேர்தல் நாளான 4.3.1957-ல் வேட்பாளர் நரசிம்ம ரெட்டி ஓட்டுப் போடும் இடத்தில் இரண்டு காளை மாடுகளை கொண்டு வந்து நிறுத்தி விட்டார். வரும் வாக்காளர்களை, அதன் நெற்றியில் குங்குமம் வைத்து சத்தியம் செய்து போக வேண்டும் என்று கட்டாயப் படுத்தினர் என்றும், அவ்வாறு மாட்டின் நெற்றியில் குங்குமம் (Vermilion) வைத்தால் சத்தியத்துக்கு கட்டுப்பட்டு அவருக்கே ஓட்டுப் போடுவார்கள் என்று நினைத்து இதைச் செய்தார் என்றும் நரசிம்ம ரெட்டி மீது குற்றச் சாட்டை பூமாஜி வைக்கிறார். மேலும், தேர்தல் முறைகேடாக, ஓட்டுப் போடுபவர்களை வண்டி வைத்து அழைத்து வந்ததாகவும் குற்றச் சாட்டு. மேலும் பூமாஜி தேர்தல் பிரச்சாரத்துக்கு மேடை அமைத்து பேசும்போது, கலவரம் செய்து அதைக் கலைத்து விட்டார்கள் என்றும் குற்றச்சாட்டு.
மேலும், வென்ற வேட்பாளர் நரசிம்ம ரெட்டி ஒரு துண்டு பிரசுரம் விநியோகித்தார் என்றும், அதில் மற்றொரு கம்னியூஸ்ட் வேட்பாளரான ராமச்சந்திர ரெட்டியின் மனைவி வெளியிட்டது போல செய்து, அதில்  அவர் கம்னியூஸ்ட் கட்சியில் இருந்து ராமச்சந்திர ரெட்டியின் மனைவி விலகி விட்டதாகவும், எனவே அவரின் கணவருக்கு ஓட்டுப் போட வேண்டாம் என்றும் கூறி அந்த துண்டு பிரசுரத்தை வெளியிட்டார்கள் என்றும் குற்றச் சாட்டு.
மேலும் வெற்றி கொண்ட நரசிம்ம ரெட்டி ஏற்கனவே அரசின் PWD கான்டிராக்ட்டில் வேலை எடுத்துச் செய்வதாகவும் மற்றொரு குற்றச்சாட்டு.
இதை எல்லாம் கருத்தில் கொண்டு, தேர்தல் கோர்ட், வென்ற இருவரின் வெற்றியையும் ரத்து செய்கிறது. அதை எதிர்த்து ஐகோர்ட்டில் வழக்கு தாக்கல் செய்கிறார்கள்.
அதில், மாடுகளை கொண்டு வந்து நிறுத்தியது தேர்தலுக்கு மறுநாள் தான். எனவே அது தேர்தல் முறைகேட்டில் வராது என்று வாதம். ஒரே ஒரு சாட்சி மட்டும், “தேர்தல் அன்று சுமார் 70 கெஜ தூரத்தில் இரண்டு மாடுகளை கட்டி இருந்தார்கள் என்றும், அதில் இரண்டு மூன்று பேர் வந்து குங்குமப் பொட்டு வைத்துவிட்டுச் சென்றார்கள்” என்றும் கூறி இருக்கிறார்.  அவ்வாறு மாட்டின் நெற்றியில் குங்குமம் வைத்து விட்டு, அதை மீறி நடந்தால் பாவம் வரும் என்று அங்குள்ளவர்கள் நம்பி வருகிறார்கள் என்றும் கூறினார்.
தேர்தல் முறைகேடு நடந்ததாக சொல்பவரே அதை நிரூபிக்க வேண்டும் என்பது சட்ட விதி. வண்டி வைத்து வாக்காளரை கூட்டிக் கொண்டு வந்தார் என்பதில், அதனால் அவருக்கு விழ வேண்டிய ஓட்டு பாதித்தது என்றும் நிரூபிக்க வேண்டும். அப்படி என்றால்தான், The Representation of the People Act, Sec.100(D)(i) ன்படி அது தேர்தல் முறைகேடு ஆகும்.
PWD கான்டிராக்ட் விஷயம் என்னவென்றால், அவர் தேர்தலில் நிற்கும் முன்பே, அந்த கான்டிராக்ட்டை ரத்து செய்யும்படி லெட்டர் கொடுத்து இருக்கிறார்.  அவர் பெயரும் எடுக்கப்பட்டு உள்ளது. ஆனால் அத்துடன் எழுதிக் கொடுத்த பவர் பத்திரம் இன்னும் நடைமுறையில் உள்ளது. அதைக் கொண்டு புதுப்பித்துக் கொள்ளலாம் என்றும் கூறப்படுகிறது.
எனவே தேர்தல் அதிகாரி மொத்தமாக இரண்டு வேட்பாளர்களின் வெற்றியையும் ரத்து செய்தது சரி இல்லை. நரசிம்ம ரெட்டி வெற்றியை மட்டும் ஐகோர்ட் ரத்து செய்தது. ரிசர்வ்டு வேட்பாளர் முத்தயாலு ராவ் எந்த தேர்தல் முறைகேடும் இல்லாததால், அவரின் தேர்வை ரத்து செய்தது செல்லாது என்று ஐகோர்ட் அறிவித்தது.
**

No comments:

Post a Comment