Saturday, April 30, 2016

Macrocosm and Microcosm

Macrocosm and Microcosm

அண்ட-பிண்டங்கள் ஒரே தன்மை உடையன என்பது தத்துவ சாஸ்திரிகளின் கொள்கை; சோதிட சாஸ்திரங்களில் விஷேசமாய் சூரிய சித்தாந்தத்தில் அண்டத்தில் உள்ள நவக்கிரகங்களும் பிண்டத்தில் உள்ள உறுப்புகளுடன் ஒப்பிடப்பட்டிருக்கின்றன; அதாவது அண்டத்தில் உள்ள வான சோதிகளின் குணங்களை பிண்டத்திலுள்ள பல அங்கங்களும் வைத்திருக்கின்றன;

சூரியன் ஆத்மா என்றும் சந்திரன் தேகம், மனம் என்றும், சொல்லப்பட்டிருக்கிறது;

ஜென்ம லக்கனத்திற்கு ஐந்தாவது இராசி, புத்திரன், மனம் முதலியவைகளைக் காட்டும்; ஐந்தில் இருப்பவன் என்ன கிரகமோ அந்தக் கிரகத்தைக் கொண்டு, சாதகருடைய மனச் சுபாவத்தைச் சோதிடர்கள் சொல்லுவார்கள்;

மனதைக் குறிக்கும் சந்திரனுடன் பூமிகாரகன் செவ்வாய் கூடியிருப்பதால் பிருதிவியின் குணமாகிய லௌகிக விசயத்தில் மனம் செல்லும்; ஆகையினால்தான் மனதைப் பற்றிய நோய் என்று சோதிடர்கள் சொல்கிறார்கள்;

Lunatic என்றால் லத்தீன் மொழியில் Luna என்பது Moon; லூனாடிக் என்பதை விசரன் என்று சொல்கிறார்கள்; அனுபவத்தில், விசரர்களுக்கு Full Moon பௌர்ணமி காலத்து விசர் அதிகப்படுவதை பார்த்திருக்கலாம்; சந்திரனுக்கும் மனதுக்கும் தொடர்பு இல்லாவிடில், இவ்விதம் வருவதற்கு வாய்ப்பில்லை; மேலும், அமாவாசை, பௌர்ணமி காலங்களில் கடல் வற்று-பெருக்கும் என்பதையும் காண்கிறோம்;

சந்திரனை ஒட்டியே பெண்களுக்கும் புருஷர்களுக்கும் விவாகப் பொருத்தம் பார்ப்பார்கள்; சந்திரன் நிற்கும் நிலையையும் சந்திரன் சஞ்சரிக்கும் நட்சத்திரத்தின் நிலையையும் பெண்-ஆண் இவர்களுக்கு ஒத்துப் பார்க்கும்போது, இருவருடைய மனமும் ஒரே வகையானதாயும், அவர்கள் ஒரே மனத்தினராயும், லௌகிகத்தில் ஒற்றுமையாய் வாழ்வார்கள் என்று சோதிடர்கள் சொல்வார்கள்;
நன்றி: "சித்தகுமாரன்" நூலிலிருந்து
**

விதியும் விரோதியே!

தென்நாட்டில் சுவர்ணவதி என்னும் நகரில் பெரும் செல்வந்தரான வர்த்தமானன் என்ற வணிகன் இருந்தான்; அவனின் சுற்றத்தார், அவனைக் காட்டிலும் செல்வம் அதிகம் உடையவராய் இருந்தனர்; அதைப் பார்த்து, இவனும் அவர்களைவிட அதிகச் செல்வம் ஈட்ட வேண்டும் என்று ஆசை கொண்டான்;

"செல்வம் உடையவன் பிராமணனைக் கொன்றானாயினும் பெருமதிப்பு பெறுகின்றான்; செல்வம் இல்லாதவன் உயர்ந்த குலமுடையவனாயினும் இகழப்படுகின்றான்".

தான் வைத்திருக்கும் சொற்ப திரவியத்தைப் பெருந்திரவியம் என்று மதித்துத் தேடாமல் இருப்பனுக்கு விதியும் விரோதியே!

அற்பம் அற்பமாகத் தேடித் திரவியத்தை வளர்த்தல் வேண்டும்; சிறிது சிறிதாக வீழும் மழைத்துளியினால் ஒரு குடம் நிறையவில்லையா?

பிறந்த இடத்திலேயே வசித்தல், விதிவசம் என்று இருத்தல், தன்னைக் குறைவில்லாதவனாக எண்ணுதல், முயற்சி இன்மை என்பன திரவியத்தை தேடுவதற்கு இடையூறு ஆகும்;

திரவியத்தை தேடவேண்டும்; தேடியதைக் காத்தல் வேண்டும்; காத்ததை வளர்த்தல் வேண்டும்; வளர்த்ததைத் தக்கார்க்குக் கொடுத்தல் வேண்டும்; இதுவே உலக நியதி;

இதை மனதில் கொண்ட அந்த வாணிகன், மேலும் வாணிகம் செய்ய துணிந்து, ஒரு வண்டியில் பலவித பொருள்களை நிறைத்துக் கொண்டு "சஞ்சீவகன், நந்தகன்" என்னும் இரண்டு மாடுகள் பூட்டிய வண்டியில் காசுமீரக தேசம் செல்கிறான்:

அவ்வாறு போகும்போது, காட்டுவழியில், சஞ்சீவகன் (வண்டியின் ஒரு மாடு) முழங்கால் ஒடிந்து விடுகிறது; இந்த மாட்டால் நடக்க முடியவில்லை; மூன்று கால்களில் நிற்கிறது;

"புத்திமான் எவ்வித முயற்சி செய்தாலும், விதியின் பயனே பயனாகி முடிகின்றது; எந்தச் செயலுக்கும் இடையூறாக உள்ள சந்தேகத்தைக் கைவிட்டு செயலுக்குறிய காரியங்களைச் செய்ய வேண்டும்" என்று அந்த வாணிகன் சிந்தித்து, அந்த சஞ்சீவகன் என்னும் ஒரு மாட்டை அங்கேயே காட்டிலேயே விட்டுவிட்டுப் போகிறான்;"

மூன்று கால்களுடன் சஞ்சீவகன் மாடு காட்டில் திரிகிறது:

"நூற்றுக்கணக்கான அம்புகள் தைத்தாலும் இறக்கும் காலத்திலன்றி ஒரு பிராணியும் இறக்க மாட்டாது; இறக்கும்காலம் சமீபித்ததாயின், தருப்பை நுனி தீண்டினும் இறந்தே விடும்."

முழந்தாள் ஒடிந்தும் சஞ்சீவகன் இறவாமல் அந்தக் காடுகளிலே இட்டப்படி திரிந்து, வேண்டும் உணவுகளை உண்டு, சரீரம் கொழுத்து திரிந்தது; ஒரு நாள் அது நீர் அருந்த பக்கத்தில் உள்ள ஓடைக்கு சென்று நீரை அருந்தும் போது, பெருத்த சத்தத்துடன் உங்காரம் செய்தது; அதை கேட்ட அங்கிருந்த சிங்கம் (இந்த சிங்கத்தின் பெயர் பிங்களகன்) பயந்து அச்சம் கொண்டு நீர் அருந்தாமல் தன் இடத்துக்கே திரும்ப ஓடிவந்துவிட்டது;

பிங்களகன் (சிங்கம்) இவ்வாறு பயந்து ஓடிவந்ததைக் கண்ட இரண்டு நரிகள் (தமனகன், கரடகன்) பார்த்து விட்டன;

அதில் ஒரு நரியான தமனகன், மற்றொரு நரியான கரடகனைப் பார்த்து, "ஏன் இந்த சிங்கம் திரும்ப ஓடிவந்து பயத்துடன் இருக்கிறது?" என்று கேட்கிறது;

"இந்த சிங்கத்தின் செயலை விசாரிப்பதால் ஆவது என்ன? நாம் ஒரு குற்றமும் செய்யமலேயே, இந்த சிங்கத்திடம் அவமானப்பட்டு துயரில் இருக்கிறோம்! அதற்கு சேவகம் செய்யும் நமக்கு சுகம் எப்படி வரும்? பிறருக்கு தொண்டு செய்து பொருள் பெற விரும்பும் மூடனுக்கு சரீர சுதந்திரம் ஏதும் இல்லை! அவன் குளிரையும், காற்றையும், வெயிலையும் அனுபவிக்கிறான்! அவர்களை நோக்கி, நில் என்றும், செல் என்றும், சொல் என்றும், சொல்லாதே என்றும், இப்படியாக தலைவர்கள் அடிக்கடி கட்டளை இடுகிறார்கள்!

"சேவகர் மௌனமாய் இருப்பாராயின் மூடர் என்கின்றனர்;

சேவகர் பேசுவாராயின் பித்தர் என்கின்றனர்;

பயந்து நடப்பாராயின் பயந்தவர் என்கின்றனர்;

பக்கத்திலே நிற்பாராயின் வெட்கமில்லாதவர் என்கின்றனர்;

தூரத்தில் நிற்பாராயின் அகங்காரமுடையவர் என்கின்றனர்;

அவர், தாம் உயரும் பொருட்டு நம்மைத் தாழ்த்துவர்;

சீவனத்தின் பொருட்டு உயிரை விடுவர்;"

இதை கேட்ட மற்றொரு நரியோ,
"நம்முடைய சேவகம் இல்லாமல் அரசனுக்கு மகிமை எப்படி வரும்? என்றது;

"செய்யத்தகுந்த காரியங்களில் புகுதல் நல்லது;
செய்யத்தகாத காரியங்களில் பிரவேசிப்பவன் ஆப்பிழுத்த குரங்குபோல மரணம் அடைவான்!" என்றது;
**

Thursday, April 28, 2016

மோகனாங்கி

திருக்கண்ணபுரம்

இங்கு விஷ்ணுதலம் உள்ளது; இங்குதான் காளமேகப் புலவர் இருந்தார்; அவர் ஒரு காதலியை வைத்திருந்தார்; அவள் பெயர் மோகனாங்கி; இவரோ விஷ்ணு பக்தன்; அவளோ சிவ பக்தை;

காளமேகம், இந்த பெண்ணைத் தேடி அவள் வீட்டுக்கு வருகிறார்; அவள், கதைவை திறக்க மறுக்கிறாள்; எவ்வளவு கெஞ்சியும் கேட்பதாக இல்லை; இவருக்கோ அவள்மீது தீராத காதல்;

கடைசியாக, அவள், "நீர், விஷ்ணுவை பாடி வணங்கி வருவதால், நான் கதவைத் திறக்க மாட்டேன்" என்று மறுத்து விடுகிறாள்;

இவருக்கோ தர்ம சங்கடம்; விஷ்ணுவை எப்படி மறப்பது? இவளை எப்படி மறப்பது? விஷ்ணுவையும் பாட வேண்டும்; இவளையும் சமாதானப்படுத்தி கதவைத் திறக்க வைக்க வேண்டும் என்று நினைக்கிறார்;

இந்த முதல் அடியை எடுத்துப் பாடுகிறார்;
"கண்ணபுரமாலே கடவுளிலும் நீ அதிகம்...." என்று பாட ஆரம்பிக்கிறார்;

கண்ணபுரக் கடவுளைவிட நீ உயர்வானவள் என்று பாடியதைக் கேட்டவுடன் அவள் கதவைத் திறக்கிறாள்; இவரும் அவள் வீட்டுக்குள் காலடி எடுத்துவைத்து உள்ளே போய் விட்டார்; அவர் பாடிய பாட்டை முடிக்க வேண்டுமல்லவா!

"உன்னிலுமோ நான் அதிகம் ஒன்று கேள்; முன்னமே உன் பிறப்போ பத்தாம் உயர் சிவனுக்கு ஒன்றுமில்லை, என்  பிறப்பு எண்ணப் போகாதே"

என்று மட்டம் தட்டிவிட்டாராம்;

Sunday, April 24, 2016

திருசெந்தூர் முருகன்

17-ஆம் நூற்றாண்டு; மதுரையிலிருந்து நாயக்க மன்னர்கள் ஆட்சிபுரிந்த காலம்! டச்சு நாட்டுக் கடற்கொள்ளைக்காரர், கொள்ளையடிக்கும் நோக்கத்துடன் திருச்செந்தூர்க் கோயிலில் புகுந்து கற்சிலைகளை எல்லாம் உடைத்தனர்

தெற்கு முகம் நோக்கி வீற்றிருந்த பஞ்சலோகங்களால் உருவாக்கப்பட்ட ஆறுமுகப் பெருமானின் விக்கிரத்தை தங்கமென நினைத்து அதனைத் தூக்கித் தங்களின் கப்பலுக்குக் கொண்டு சென்றனர்; நாயக்க மன்னர்களிடமோ வலிமை மிகுந்த கடைப்படை இல்லை; கப்பல் புறப்பட்டு சிறிது தூரம் கழிந்திருக்கும்; திடீரென்று பெரும் புயல் அடித்தது; இடியும் மழையும் சேர்ந்து கொண்டது; கொள்ளையர்கள் பயந்துவிட்டனர்; முருகன் சிலைகளை கயிற்றில் கட்டி கடலில் இறக்கி விட்டுவிட்டனர்; புயல் நின்றது; கோயிலில் ஆறுமுகன் சிலையைக் காணாது பக்தர்கள் தவித்தனர்;

வேறு ஒரு நாள்; வடமலையப்ப பிள்ளை என்ற முருக பக்தரின் கனவில் கார்த்திகேயன் தோன்றி, தன் கடலுக்குள் இருக்கும் விபரத்தை தெரிவித்தார்; அங்கு ஒரு எலுமிச்சை பழம் நீரில் மிதந்து கொண்டிருக்கும்; அதுவே நான் கடலுக்குள் இருக்கும் இடம் என்று அடையாளம் காட்டினாராம்! அடையாளங்களைக் கொண்டு, முருகனை மீட்டு எடுத்து வந்தனராம்;

இது நடந்தது: கி.பி. 1653ம் ஆண்டு தை மாதம் 29-ம் தேதி வெள்ளிக் கிழமை அன்று கடலில் இருந்து எடுக்கப்பட்டதாக கல்வெட்டுகள் சொல்கின்றன; கடலுக்குள் சிலை கிடந்ததால், அதை மீன்கள் கொத்தியதாம்; எனவே முருகன் சிலையில் மீன்கள் கொத்திய தடங்கள் இன்னும் இருக்கின்றன;

(நன்றி: வை.அநவரதவிநாயகமூர்த்தி அருளிய "நக்கீரர் தந்த நன்முருகாற்றுப்படை" என்ற நூலிலிருந்து)


நக்கீரர் சிறையில்


கடைச்சங்கப் புலவர் நக்கீரர்; இவர் ஒருநாள் தீர்த்த யாத்திரைக்குப் புறப்பட்டார்; ஒரு குளத்தில் நீராடிவிட்டு அதன் கரையோரத்தில் உள்ள அரச மரத்தில் தங்கி இளைப்பாறினார்; பின்னர் சிவ வழிபாடு செய்யத் தொடங்கினார்; அந்த நேரத்தில் அந்த மரத்திலிருந்து ஒரு அரச இலை கீழே விழுந்தது;  

விழுந்த அந்த இலையானது, பாதி இலை குளத்து நீரிலும், மீதிப் பாதி இலை தரையிலுமாக விழுந்தது;

அந்த இலை அவ்வாறு விழுந்தவுடன், குளத்து நீரில் இருந்து மீன் ஒன்று அந்த இலையின் ஒரு முனையைப் பிடித்து இழுத்தது; தரையில் நின்று கொண்டிருந்த ஒரு பறவை, அந்த இலையின் மறுபகுதியைப் பிடித்து இழுத்தது; மீன் அந்த இலையை நீருக்குள் இழுக்கிறது, பறவை அதே இலையை தரைக்கு இழுக்கிறது; இது தொடர்கிறது;

இதைப் பார்த்த நக்கீரருக்கு வியப்பாக இருந்தது; இதனால் அவரின் சிவ வழிபாட்டுக்குத் தடை ஏற்பட்டது:

இந்த அரச மரத்தின் அடியில்தான், சிவ வழிபாட்டில் தவறு செய்தவர்களை ஒரு பூதம் பிடித்துச் சென்று அங்குள்ள குகையில் சிறை வைத்துவிடும்;

இப்போது, நக்கீரரின் சிவ வழிபாடும் தடைபட்டு விட்டதால், அந்த பூதம் வந்து, நக்கீரரையும் பிடித்துக் கொண்டுபோய் அந்த குகைக்குள் சிறை வைத்துவிட்டது;

அந்த சிறையில் இதுவரை 999 பேர் உள்ளனர்; நக்கீரருடன் சேர்த்து ஆயிரம் பேர் ஆகிவிட்டது; ஆயிரம் பேர்கள் சேர்ந்தவுடன் அந்த கரிய பேய் அவர்களை விழுங்கி விடுமாம்! எனவே இப்போது ஆயிரம் பேர் சேர்ந்து விட்டனர்; எனவே இவர்களை குகைக்குள் அடைத்துவிட்டு, நீராடப் போய்விட்டது அந்தப் பேய்;

உள்ளே இருந்த மற்றவர்கள், நக்கீரரைப் பார்த்து, "உங்களால்தான், நாங்கள் அந்தப் பேய்க்கு இன்று இரையாகப் போகிறோம்; நீங்கள் வராவிட்டால், அந்த ஆயிரமாவது ஆளுக்காக, அந்தப் பேய் தேடிக் கொண்டிருக்கும்; எங்கள் உயிரும் தாமதப் பட்டிருக்கும்" என்று கோபப்பட்டார்கள்;

சிவனின் அடியார்கள் இப்படிச் சிறையில் இருப்பது தகுமா? சிவ அடியார்களைக் காக்க நக்கீரர் முடிவெடுத்து, "முத்தமிழால் வைதாரையும் வாழ வைப்போன் அல்லவா நம் குருநாதன்" என்று நெஞ்சுருகப் பாடினார் திருமுருகாற்றுப்படையை;

பாமாலைக்கு வசப்படுவான் நம் பச்சை மயில் ஏறிவரும் பாலன் என்று பரவசமடைந்தார்;

நக்கீரரின், திருமுருகாற்றுப்படையின் பாமாலையைக் கேட்ட முருகன் தன் வேலாயுத்தை எடுத்து அந்த கரிய பூதத்தைக் கொன்று, நக்கீரர் உட்பட ஆயிரம் பேரையும் பூதத்தின் சிறையிலிருந்து விடுவித்தான்;

இந்த நிகழ்வை "திருச்செந்தூர் பிள்ளைத் தமிழில்" பகழிக் கூத்தர் இவ்வாறு சொல்கிறார்;
"ஏர் கொண்ட பொய்கைதனில் நிற்கு மொரு பேரரிசின்
           இலை கீழ் விழில் பறவையாம்
இது நிற்க நீர் விழில் கயலாம் இதன்றியோர்
           இலையங்கு மிங்குமாய்ப்
பார் கொண்ட பாதியும் பறவைதா னாகஅப்
           பாதியுஞ் சேல தாகப்
பார் கொண்டி ழுக்கது நீர் கொண்டி ழுக்கஇப்
           படிகண்ட ததிசய மென
நீர் கொண்ட வாவிதனில் நிற்கு மொரு பேழ்வாய்
         நெடும்பூதம் அதுகொண்டு போய்
நீர் கொண்ட வாவிதனில் நிற்கு மொரு பேழ்வாய்
          நெடும்பூதம் அதுகொண்டு போய்
நீள் வரை யெடுத்ததன் கீழ்வைக்கும் அதுகண்டு
          நீதிநூல் மங்கா மலே
சீர் கொண்ட நக்கீர னைச்சிறை விடுத்தவா
         செங்கீரை ஆடிஅரு ளே
திரையெறியும் அலைவாய் உகந்தவடி வேலனே

          செங்கீரை ஆடிஅருளே!"
______

Friday, April 15, 2016

Prison and World


Shakespeare's King Richard II (Act V. Sc.V. 1-9)

 I have been studying how I may compare
This prison where I live into to the world;
And for because the world is populous
And here is not a creature but myself,
I cannot do it; yet I'll hammer it out,
My brain I'll prove the female to my soul,
My soul the father; and these two beget
A generation of still-breeding thoughts
And these same thoughts people this little world.

ஷேக்ஸ்பியரின் "கிங் ரிச்சர்டு-2" என்ற நாடகக் கதையில் வரும் வார்த்தைகள் இது;

இதன் பொருளை, அவ்வளவு சீக்கிரத்தில் புரிந்து கொள்ள முடியாதாம்;

இதன் தத்துவார்த்த கருத்தை புரிந்து கொள்ள வேண்டுமானல், "ஜீவாத்மா அல்லது பிண்டம்" "பரமாத்மா அல்லது அண்டம்" என்ற இரண்டு ஆத்மாக்களை அல்லது இயல்புகளை நினைவில் கொள்ள வேண்டுமாம்; மனிதனிடம் இருப்பது ஜீவாத்மா; அது இறைவனை அடையும் போது, இறைவனிடம் இருப்பது பரமாத்மா;


இங்கு ஷேக்ஸ்பியரின் வார்த்தைகளில் 'Prison' என்று சொல்லப்பட்டுள்ளதை 'ஜீவாத்மா' அல்லது ‘பிண்டம்’ என்று கருதிக் கொள்ள வேண்டுமாம்; "World" என்று சொல்லப்பட்டுள்ளதை "பரமாத்மா" அல்லது ‘அண்டம்’ என்று கருதிக் கொள்ள வேண்டுமாம்; மற்ற வார்த்தைகளை இயல்பான பொருளிலேயே எடுத்துக் கொள்ள வேண்டுமாம்;
_______...________

Thursday, April 7, 2016

13 மாதங்கள்!

வருடத்திற்கு 365 நாட்கள்; மாதத்துக்கு 30 நாட்கள், 31 நாட்கள், 28, 29 நாட்கள் என பல வகைகளில் பிரிந்து அதை 12 மாதங்களாக ஏற்படுத்தி உள்ளனர்; எப்படி கணக்குப் போட்டு பிரித்தாலும், ஒரு வருடத்திற்கு ஒரு கால்-நாள் மீதி வருகிறது; அதாவது பூமி, சூரியனின் வட்டத்தைச் சுற்றி முடித்து, அது தொடங்கிய இடத்துக்கு வர 365-1/4 நாட்கள் ஆகி விடுகின்றது; இந்தக் குழப்பத்தை சரி செய்வதற்கு கண்டுபிடிக்கப்பட்டது தான் “லீப் ஆண்டு” அதாவது நீண்ட ஆண்டு அல்லது நீட்டிக் கொண்டிருக்கும் ஆண்டு; இது இந்த பூமியில் உள்ள மக்கள், தங்கள் வசதிக்காக ஏற்படுத்திக் கொண்டது;
இதை இப்போது ஒருவர் வேறு மாதிரி யோசித்து வைத்துள்ளார்; ஒவ்வொரு மாதமும் 28 நாட்கள்தான்; ஒவ்வொரு வாரமும் ஏழு நாட்கள் தான்; 1ம் தேதி ஞாயிற்றுக் கிழமையில் ஆரம்பிக்கும்; எல்லா மாதத்தின் கடைசி தேதியான 28ம் தேதி சனிக்கிழமையில் முடியும்; எல்லா மாதமுமே இப்படித்தான்; எந்த மாதத்தின் 28-ம் தேதியும் சனிக்கிழமை தான்; அதில் மாற்றமே இருக்காது;
இப்படிக் கணக்குப் போட்டால், வருடத்திற்கு 13 மாதம் வருகிறது; அந்த 13-வது மாதத்துக்கு ஒரு புதுப் பெயர் வைத்துவிடலாம்; இந்தக் கணக்கு நன்றாகவே இருந்தாலும், இதிலும் ஒரு சிறு குழப்பம் வருகிறது; அதாவது 28 X 13 = 364 நாட்கள் தான் வருகிறது; மீதி அந்த ஒரு நாளை என்ன செய்வது? அதற்கும் அவரே வழி சொல்லி உள்ளார்; அந்த ஒரு நாளை கணக்கிலேயே எடுத்துக் கொள்ளாமல் ஜீரோ நாளாக வைத்துக் கொண்டு, அதை புதுவருடப் பிறப்பாக கொண்டாடி விடுவது; அதற்கு அடுத்த நாளை புதுவருடத்தின் 1-ம் தேதி ஞாயிற்றுக் கிழமை என்று எடுத்துக் கொள்வது; இது நல்ல யோசனையாகத்தான் தெரிகிறது;
அப்படி என்றால் அந்த ஒரு நாளை எந்தக் கணக்கில் சேர்க்க முடியும்? அது ஒரு கிழமை இல்லாத நாள்! ஒரு தேதி இல்லாத நாள்! அதாவது பெயர் வைக்காத நாள்! ஒரு அடையாளமும் இல்லாத நாள்!
ஒவ்வொரு நாளுக்கும் ஒரு பெயர் இருக்கிறது; அந்த ஏழு நாட்களுக்கும் ஒரு குணம் இருக்கிறது; அதாவது, ஞாயிறு என்றால் சூரியனின் நாள்; திங்கள் என்றால் சந்திரனின் நாள்; அதே போல் மற்ற கிரகங்களின் பெயரான செவ்வாய், புதன், குரு (வியாழன்), சுக்கிரன் (வெள்ளி), சனி;  
அப்படியென்றால், இன்று திங்கட்கிழமை என்று இருந்தால், இது சந்திரனின் நாள்; இன்று சந்திரனின் நாள்தான் என்று எதைக் கொண்டு கணிப்பது; காலண்டர் மட்டுமே திங்கள் என்று சொல்கிறது; திங்கள் கிழமையும், அடுத்து வரும் எல்லா நாட்களும் ஒரே மாதிரியான குணங்களைக் கொண்டுதான் வருகிறது; அதன் இயல்பிலோ, செயல்பாட்டிலோ ஒரு நாளுக்கும் மற்றொரு நாளுக்கும் எந்த வேறுபாடும் கண்டுபிடிக்க முடியவில்லை; ஆனால் உலகம் முழுவதும் இதில் ஒற்றுமையுடன் இருந்திருக்கிறது; வாரத்துக்கு ஏழ நாட்கள்தான் என்று வகுத்து விட்டார்கள்; எப்படி இந்த ஒற்றுமை வந்திருக்கும்? நாட்கள் ஏழு குணம் கொண்டது என்பதை எப்படி, எதை வைத்து அடையாளம் காண்பது என்று தெரியவில்லை! காலண்டரை விட்டுவிட்டால், இன்று என்ன கிழமை என்று எவராலும் சொல்ல முடியாது;
ஆனாலும் புதுக் காலண்டர் நன்றாகவே இருக்கிறது; ஆனால் அதிலும் ஒரு குழப்பம் வருகிறது; ஒரு வருடத்தில் மீதி உள்ள “கால் நாள்” கணக்கு மீதியாகியே வந்து, ஒரு நான்கு வருடங்களில் ஒரு முழு நாளாக மாறிவிடும்; அந்த கொசுறு நாளை என்ன செய்யலாம்? அதையும் வருடப்பிறப்பு நாளுடன் சேர்த்து ஐந்து வருடங்களுக்கு ஒருமுறை “இரண்டு நாட்கள் புதுவருடம்” கொண்டாடலாம்! ஆனால், அந்த நாட்களை அடையாளப்படுத்த என்ன செய்யலாம்? புதுவருட ஒரு நாளை ஜீரோ என்று சொல்லி விடலாம்; ஐந்து வருட கொசுறு நாளை பதுவருட “டபுள் ஜீரோ நாள்” என்று கம்யூட்டர் முதலியவை அடையாளம் காட்டும்;
இந்தமாதிரி மண்டையைப் பிய்த்துக் கொள்வதற்காகவே கடவுள் இவ்வளவு குழப்பமாக நாட்களை வைத்திருக்கிறார்; அல்லது பூமி சுற்றுவதை ஒரு சரியான கணக்குக்குள் அடங்காமல் வைத்திருக்கிறார்;
_______