Wednesday, July 1, 2020

மாதங்களில் நான் மார்கழி

மாதங்களில் நான் மார்கழி

சிவனை முழுமுதற் கடவுளாக வணங்கும் சைவர்கள், மார்கழி மாதம் திருவாதிரை நட்சத்திரத்தில் சிவனின் திருநடனத்தைத் சிதம்பரத்தில் காண்பர். இந்த தினத்துக்கு பத்து நாட்களுக்கு முன்னர் உள்ள நாட்களில் திருமணம் ஆகாத பெண்கள் தமக்கு சிவபக்தி நிறைந்த கணவர் வேண்டும் என்று விரதம் இருந்து வழிபடுவர். இந்த விரதமே “திருவெம்பாவை நோன்பு” என்பர். 21 இனிய பாடல்களை மாணிக்கவாச்சகர் உருவாக்கி உள்ளார். “ஆதியும் அந்தமும் இல்லா அரும் பெரும் சோதியை யாம் பாடக் கேட்டேயும் வாள் தடங்கண் மாதே வளருதியோ? என்று தொடங்குகிறார்.

திருமாலை (விஷ்ணுவை) வழிபடும் வைணவரும் இந்த மார்கழி மாதத்தில், ஆண்டாள் கண்ணனை எண்ணிப் பாடிய திருப்பள்ளி எழுச்சியை, திருமணமாகாத பெண்கள் திருமாலைப் போற்றிப் பாடுவர்.

கண்ணன், “மாதங்களில் நான் மார்கழியாக இருக்கிறேன்” என்று கீதையில் சொன்னதாக வியாச முனிவர் கூறியுள்ளார். மார்கழி மாதத்தில் அமாவாசைக்குப் பின்பு வரும் 11-வது நாளான வைகுண்ட ஏகாதசி நாளை, திருமால் இருக்கும் வைகுண்டம் எனப்படும் இடத்தின் வாசல் கதவுகள் திறந்து அவரின்  பக்தர்கள் அடையும் நாளாகக் கருதப்படும் என வைணவ புராணமான பாகவதம் சொல்கிறது.

ஆரிய மதக் கோட்பாட்டின்படி, இந்த மார்கழி மாதத்தில்தான், தேவர்களின் இரவுப் பொழுது முடிந்து, விடியற்காலை அல்லது வைகறை ஆரம்பிக்கிறதாம்.

மகாபாரதக் கதையில், போரில், பீஷ்மர் இறக்கும் நேரம் நெருங்கி விட்டது என்பதை அவர் அறிந்து கொண்டார். தேவர்களின் இரவு நேரத்தில் அது நடந்து விடக் கூடாது என்ற கருதிய பீஷ்மர், தன் தவ வலிமையால் அதைத் தடுக்க விரும்பினார். அர்ச்சுனனை அம்புப் படுக்கை அமைக்க வைத்து, அதில் பீஷ்மர் படுத்துக் கொண்டார். அதிலேயே காலம் தள்ளிக் கொண்டு வந்து, தேவர்களின் வைகறையில் (மார்கழியில்) அவர் இறந்தார் என்கிறது மகாபாரதக் கதை.

**


No comments:

Post a Comment