Thursday, October 3, 2019

வைப்பாட்டி மகனுக்கு சொத்துரிமை



வீரப்பா  கவுண்டனும், சுந்தர கவுண்டனும் சகோதர்கள். இந்து கூட்டுக் குடும்பமாக வாழ்கிறார்கள். வீரப்ப கவுண்டன் 1866-ல் இறக்கிறார். அவருக்கு அம்மாச்சி என்று ஒரு வைப்பாட்டி உண்டு. அவளுக்கு மருதமுத்தா, பெரியண்ணன் என்று இரண்டு மகன்கள் வீரப்ப கவுண்டர் மூலம் பிறந்தவர்கள். வீரப்ப கவுண்டன் தம்பியான சுந்தர கவுண்டன் 1867-ல் இறக்கிறார். சுந்தர கவுண்டனுக்கு வீரம்மாள், மீனாட்சி என இரண்டு மனைவிகள்.
சுந்தர கவுண்டன் இறந்தபின்னர், அவரின் இரு மனைவிகளும், அவரின் சொத்துக்கள் சிலவற்றை அடமானம் வைத்து விடுகிறார்கள். ஆனால் வீரப்ப கவுண்டனின் வைப்பாட்டி மகன்களான மருதமுத்தா, பெரியண்ணன் இருவரும், இது பொதுக் குடும்பச் சொத்து என்றும், அதில் அவர்களுக்கும் பங்கு உண்டு என்றும் வாதம் செய்கிறார்கள்.
இந்தச் சொத்துக்கள் சுந்தர கவுண்டனின் சுய சம்பாத்திய சொத்தாக இருந்தால், அவர் இறப்புக்குப் பின்னர் அவரின் இரண்டு மனைவிகளுக்கும் அந்தச் சொத்துக்கள் போய்ச் சேரும் என்பதே அப்போதைய இந்து சாஸ்திரச் சட்டம்.
The only question, therefore, which it is and what interest, Virappa’s illegitimate sons have in the property in suit. வீரப்ப கவுண்டனின் வைப்பாட்டி மகனுக்கு இந்தச் சொத்தில் பங்கு உள்ளதா அல்லது இல்லையா என்பதே வழக்கின் கேள்வி.
இந்து மித்தாச்சரா சட்டப்படி, வைப்பாட்டி மகனுக்கு, தந்தையின் தனிச் சொத்தில் பங்கு உண்டு. இந்த வழக்கில் வீரப்ப கவுண்டன், கவுண்டர் ஜாதியைச் சேர்ந்தவர். இந்த ஜாதியில், வைப்பாட்டி மகனுக்கு, தந்தையின் தனிச் சொத்தில் பங்கு உண்டு என்பதே மித்தாச்சரா சட்டம் சொல்கிறது.
மித்தாக்சரா அத்தியாயம் 1, பிரிவு 12-ல் சமஸ்கிருத வார்த்தைகளில் இப்படிச் சொல்லப்பட்டுள்ளது. “தாசி & தாசி புத்திரன்” என்ற இரு வார்த்தைகளில் சொல்லபட்டுள்ளது. இதையே சரஸ்வதி விலாசா என்ற இந்து சட்டத்திலும் சொல்லப்பட்டுள்ளது.
தென் இந்தியாவில், பெண் அடிமைகள், பெண் அடிமைகளின் மகன்கள், இவர்களைப் பற்றி மித்தாச்சரா சட்டம் சொல்கிறது. வங்காளப் பகுதியில் நடைமுறையில் இருக்கும் இந்து தயாபாக சட்டத்திலும், “திருமணம் ஆகாத சூத்திரப் பெண்கள்” என்று சொல்லப்பட்டுள்ளது.
இங்கு கவனிக்க வேண்டியது என்னவென்றால், இந்து மித்தாக்சரா சட்டப்படி “வைப்பாட்டி” என்பவள் “தாசியா” என்ற கேள்வி எழுகிறது.
இந்து தயாபாக சட்டம் நடைமுறையில் உள்ள வங்காளப் பகுதியில், ஒரு வழக்கான கல்கத்தா ஐகோர்ட் வழக்கில் (Narain Dhara v. Rakhal Gain, ILR Cal. 1) தாசி என்பது அடிமை பெண் என்றும், தொடர்ந்து ஒருவனிடம் வைப்பாட்டியாக இருப்பவள் இல்லை என்றும் சொல்லி உள்ளது.
சமஸ்கிருத வார்த்தையில் வைப்பாட்டி என்பவளை “அவருதா” Avaraudda என்றே குறிப்பிடுகிறது. தாசி என்பவள், ஒரு பெண், அடிமையாக இருப்பவள் என்று சொல்கிறது. இப்படிப்பட்ட பெண் அடிமைகளை சட்டம் 5/1843 சட்டத்தின்படி பழைய இந்து சாஸ்திரச் சட்டத்திலிருந்து நீக்கி விட்டது.
அடிமைப் பெண் அல்லது தாசி என்ற வார்த்தைகளை இந்து நாரதா சாஸ்திரத்தில் எப்படி குறிப்பிடுகிறார்கள்? நாரதா குறிப்பிடுவது என்னவென்றால்:  ஆண், பெண், அடிமைகளை 15 வகையாகச் சொல்கிறார்கள்.
1)      கிரகதாசன் (அதாவது தாசி பெற்ற பிள்ளை),
2)      பணத்துக்குப் பெற்றவன்
3)      தானத்துக்கு கொடுத்தவன்.
4)      தாசன் வழிமுறையில் வந்தவன்.
5)      பஞ்ச காலத்தில் உணவு கொடுத்து அவனைப் பாதுகாத்ததால் பின்னர் தாசன் ஆனவன்.
6)      அடமானமாகப் பெற்றதால், தாசன் ஆனவன்.
7)      கடன் கொடுக்க முடியாமல் போனதால், தாசன் ஆனவன்.
8)      போரில் அடிமைப் படுத்தப்பட்டவன்.
9)      போட்டியில் வெல்லப்பட்டு அடிமைப்படுத்தப் பட்டவன்.
10)   தானே வலிய வந்து தாசன் ஆனவன்.
11)   முற்றும் துறந்து தாசன் ஆனவன்.
12)   ஒரு குறிப்பிட்ட காலம் வரை தாசனாக இருக்கு ஒப்புக் கொண்டவன்.
13)   பக்தியினால், தாசன் ஆனவன்.
14)   தன் மனைவிக்காக, மற்றொருவருக்கு தாசன் ஆனவன்.
15)   தானே தன்னை விற்றுக் கொண்டு தாசன் ஆனவன்.
இந்து மித்தாக்சரா சாஸ்திர சட்டமும் இந்த 15 வகையான அடிமைகளை ஒப்புக்கொள்கிறது. தத்த மீமாம்சா சாஸ்திரம் பிரிவு 4, 16-ல் இவ்வாறு சொல்லப்படுகிறது. “ஒரு பெண்ணை, அவளுக்கான விலையைக் கொடுத்து வாங்கி விட்டால், அவளுடன் உடலுறவு கொண்டு வாழ்ந்து வந்தால்,  அவளை அடிமை என்று சொல்லலாம். அவளுக்குப் பிறக்கும் குழந்தையை தாசி புத்திரன் என்றும் சொல்லலாம்.”
மேலும், ஒருனை அல்லது ஒருத்தியை, தலையை மொட்டை அடித்து ஏற்றுக் கொண்டால், அவன் அல்லது அவள் அடிமை என்று தத்த மீமாம்ச சாஸ்திரம் பிரிவு 4, 40-ல் குறிப்பிடப்பட்டுள்ளது.
மேல்ஜாதிப் பிரிவினரைப் பற்றிச் சொல்லும்போது பிகஸ்பதி பண்டிதர் குறிப்பிடுவது என்னவெ்ன்றால், திருமணம் ஆகாத சூத்திரப் பெண்ணுக்கு, ஒரு ஆண் மூலம் மகன் பிறந்தால், அந்த ஆணுக்கு வேறு வாரிசுகள் இல்லையென்றால், அவனின் சொத்துக்களை அந்த மகன் அடையலாம் என்று சொல்லியுள்ளது. மற்றொரு சாஸ்திர பண்டிதரான கௌதம பண்டிதரும் இதையே சொல்லி உள்ளார்.
காட்டாயனா பண்டிதரின் கூற்றுப்படி – “ஒரு அடிமைப் பெண்ணுடன் அவளின் எஜமான் உடலுறவு வைத்துக் கொண்டால், அதன் மூலம் அவளுக்குப் பிறக்கும் மகன், அந்த எஜமானின் சட்டபூர்வ மகன்கள். வளர்ப்பு மகன்கள் இவர்களுடன் சொத்துக்கு போட்டியிட முடியாது. ஆனால், ஒரு பெண்ணைத் தனித்து பல வருடங்களாக வைப்பாட்டியைப் போல வைத்துக் கொண்டிருந்து,  அவள் மூலம் மகன் பிறந்தால், அவன் தந்தையின் சொத்தில் பங்கு பெறலாம் என்று சொல்கிறது.
ஆக, அடிமையாக இருக்கும் பெண்ணுடன் உடலுறவு கொண்டு பிள்ளை பிறந்தால், அவனுக்கு தகப்பன் சொத்தில் பங்கு இல்லை. ஆனால், தனியே ஒருத்தியுடன், இவன் மட்டுமே உடலுறவு கொண்டு, அவள் மூலம் பெற்ற மகன் (அதாவது வைப்பாட்டியாக வைத்துக் கொண்டு அதன் மூலம் பெற்ற மகன்), தந்தையின் சொத்தில் பங்கு பெறுவான்.
மேலும், இந்து மித்தாச்சரா சாஸ்திர சட்டத்தில் சுலோகம் 288-ல் விவாகர காண்டத்தில், “அவருதா” & “பஞ்சியா” (Avarudda & Bunjya) என்று இருபிரிவு தாசிகளைப் பற்றிச் சொல்கிறது.
மேலும், ஸ்மிருதி சந்திரிகா சாஸ்திரத்தின் பண்டிதர், “இந்த கலியுகத்தில், எந்தத் திருமணம் செல்லாது என்று சொல்லும்போது, திருமணம் ஆகாத ஒரு சூத்திரப் பெண், ஒரு மேல்ஜாதி ஆணுடன் உடலுறவு கொண்டு, அதில் பெற்ற மகனுக்கு, தந்தையின் சொத்தில் பங்கு கேட்கும் உரிமை இல்லை என்று சொல்கிறது. மேல் ஜாதி என்பது இங்கு, பிராமணர், சத்திரியர், வைசியர், என்ற மூன்று பிரிவைச் சொல்வதாக மனு சாஸ்திரம் சொல்கிறது.
இது இவ்வாறு இருக்க –
இங்கு, தாசி என்பது அடிமை என்பது விளங்குகிறது. ஆனால் தொடர்ந்து தனியே ஒருவனுக்கு வைப்பாட்டியாக இருப்பவளைத் தாசி என்று சொல்லலாமா என்ற கேள்வி முன் வைக்கப்படுகிறது. Whether there is reason to hold upon the texts that an unmarried Sudra woman kept as a continuous concubine came within its scope of Dasi?
ஒருத்தியை அடிமையாக வைத்திருந்தால், அவளுக்குப் பிறக்கும் குழந்தை, தந்தையின் சொத்தில் பங்கு பெற முடியாது. ஆனால் ஒருத்தியை தொடர்ந்து தன் மனைவி போலவே நடத்தி வந்து, திருமணம் மட்டும் செய்து கொள்ளாமல், அவள் மூலம் குழந்தை பெற்றிருந்தால், அந்த குழந்தை, தன் தந்தையின் சொத்தில் பங்கு பெறலாம்.
இந்து மித்தாச்சரா சட்டம் என்ன தெளிவுபடுத்திகிறது என்றால், வைப்பாட்டியின் மகன், பூர்வீகச் சொத்தில், மற்ற சட்டபூர்வ மகன்களுடன் சரிசமமாகப் போட்டி போட்டு பங்கு பெற முடியாது. தந்தையின் பாகத்தில் மட்டுமே அவன் வைப்பாட்டி மகன் என்ற முறையில் (அதாவது அவரின் மகளின் மகன் பங்கு பெறுவதைப் போல) பங்கு பெற முடியும், அதுவும் அவன் சூத்திரப் பெண்ணுக்கும், சூத்திர ஆணுக்கும் பிறந்தவனாக இருக்க வேண்டும்.
இந்து கோபார்சனரி கூட்டுச் சொத்து என்பது சபிண்டா உறவுகளுக்கு மட்டுமே, அதுவும், சட்டபூர்வ திருமணம் மூலம் பிறந்த மகன்களில் மட்டுமே.
இந்த வழக்கில் உள்ள சொத்து வீரப்ப கவுண்டன் தம்பி சுந்தர கவுண்டன் சொத்து என்று சொல்லப்படுகிறது. அப்படி இருக்கும் போது, வீரப்ப கவுண்டனின் வைப்பாட்டியின் இரண்டு பிள்ளைகளும், சித்தப்பன் சொத்தில் பங்கு பெற இந்து கோபார்சனரி உரிமை உண்டா என்பதும் கேள்வியாகிறது.
தத்த சந்திரிகா சாஸ்திரம் பிரிவு 5, 22-ல் பழைய இந்து சாஸ்திரப்படி, மகன்கள் எத்தனை வகை என்று சொல்கிறது. அதாவது, சொத்து உரிமை பெறும் மகன்களின் வகைகள் சொல்லப் பட்டுள்ளது. அதில் சட்டபூர்வமற்ற மகன் ஒரு வகை. அவன் நேரடி வாரிசாக முடியாது என்றும், மகளின் மகனுடன் சேர்ந்தும் பங்கு பெறும் தகுதியும் இல்லை என்றும் சொல்கிறது. ஏனென்றால், சட்டபூர்வமற்ற மகன் என்பவன் சட்டபூர் திருமணத்தில் பிறந்தவர்களுடன் சேர்ந்து பங்கு பெற தகுதி உடையவன் அல்லன்.
எனவே வைப்பாட்டி மகன், அவனின் தந்தை சொத்தில் பங்கு பெறலாம். ஆனால், அவன் சித்தப்பா சொத்தில் பங்கு பெற உரிமை கிடையாது, ஏனென்றால், அவன் கோபார்சனர் இல்லை. சட்டபூர்வ திருமணத்தில் பிறந்தவர்களே கோபார்சர்கள் ஆவர் என்று சென்னை உயர்நீதிமன்றம் தீர்ப்பு கூறி, வைப்பாட்டி மகன்களுக்கு சித்தப்பன் சொத்தில் பங்கு இல்லை என்று சொல்லி விட்டது.
இந்த வழக்கு Krishnaayyan and others v. Muttusami, (1883) ILR 7 Mad 407 என்ற வழக்காகும். இதன் தீர்ப்பு Justice C.A.Turner Kt. & M.Muthusamy Ayyar ஆகிய ஐகோர்ட் நீதிபதிகள் 26 ஏப்ரல் 1883-ல் வழங்கி உள்ளனர்.
**

No comments:

Post a Comment