Showing posts with label மௌனமும் ஒரு பொய்யே!. Show all posts
Showing posts with label மௌனமும் ஒரு பொய்யே!. Show all posts

Friday, July 25, 2014

நினைவுகள்-18

மௌனமும் ஒரு பொய்யே!
சொத்தின் விற்பனையில், அந்தச் சொத்தைப் பற்றிய குறைகள் இருந்தால், அதை வாங்குபவரிடம் முன்னரே சொல்லிவிட வேண்டும். இல்லையென்றால், அவர் பொய் சொன்னதாகக் கருதி அதற்குறிய நஷ்டத்தை ஈடுசெய்ய நேரிடும்.

எவையெல்லாம் சொத்தைப் பாதிக்கும் குறைகள் (Material defects) என்றால், "அந்த குறைகள் நேரடியாக அந்த சொத்தின் மதிப்பை குறைக்கும் அல்லது அந்த சொத்துக்கு நஷ்டத்தை உண்டாக்கும் குறைகள் எல்லாம்" (அதாவது அதிலுள்ள கடன்கள், வரிபாக்கிகள், வழக்குகள், போன்றவை) 'சொத்தைப் பாதிக்கும் குறைகளே (material defects).

இந்தியாவில் உள்ள சொத்துரிமை மாற்றுச் சட்டத்திலும், பிரிட்டன், அமெரிக்கா உட்பட பல நாடுகளில் உள்ள சொத்துரிமை மாற்றுச் சட்டங்களிலும் இதே நிலைதான். "வாங்குபவர்தான் உஷாராக இருக்க வேண்டும் (Purchasers Beware)" என்ற பொதுவிதி இங்கு சொத்து வாங்கும் விஷயத்தில் செல்லாது.

வேடிக்கையும், பரிதாபகரமும் கொண்ட ஒரு வழக்கு அமெரிக்க பெனிசில்வேனியா சுப்ரீம் கோர்ட்டில் சமீபத்தில் வந்தது.

பெனிசில்வேனியா மாகாணத்தில் ஒரு நகரில் (Philadelphia) உள்ள ஒரு குடியிருக்கும் வீடு விற்பனைக்கு வந்தது. அதை ரியல் எஸ்டேட் புரோக்கர்கள் மூலம் அந்த வீட்டுக்காரர் விற்பனை செய்தார். அந்த வீட்டின் முன் உரிமையாளர், அவரின் மனைவியை துப்பாக்கியால் சுட்டுவிட்டு தானும் அதே துப்பாக்கியால் தற்கொலையும் செய்து கொண்டார். அந்த விஷயம், அந்த வீட்டை சமீபத்தில் வாங்கியவருக்கு தெரியவருகிறது. உடனே அவர் அந்த வீட்டை ரிப்பேர் செய்து, பெயிண்ட் அடித்து, வேறு ஒருவருக்கு விற்கிறார். அந்த வீட்டில் இதற்குமுன், ஒரு கொலையும், தற்கொலையும் நடந்துள்ளது என்று வாங்கியவரிடம் சொல்லவில்லை. புதிதாக வீட்டை வாங்கியவர் வேறு ஊரைச் சேர்ந்தவர் என்பதால் அவருக்கும் இந்த விபரமும் தெரியாது. வீட்டை வாங்கி, இங்கு குடிவந்தவுடன், பக்கத்து வீட்டுக்காரர் அந்த கதையைச் சொல்கிறார். வீட்டை வாங்கிய பெண்மணி, சமீபத்தில் அவரனி கணவரை இழந்தவர். தன் குழந்தைகளுடன் அங்கு வசிப்பதில் பயம் வந்துவிட்டது. இந்த சொத்தை விற்றவர், அங்கு நடந்த கொலையையும், தற்கொலையும், வீடுவாங்குவதற்கு முன், என்னிடம் சொல்லாமல் மறைத்துவிட்டார். அவ்வாறன செயல்கள் 'சொத்தில் உள்ள குறைகளே (material defects). எனவே சொத்து மாற்றுச் சட்டப்படி, சொத்தில் உள்ள குறைகளை மறைத்து என்னிடம் விற்றது  ஒரு மோசடியே! அவ்வாறு முன்னரே  என்னிடம் சொல்லி இருந்தால், நான் அந்த சொத்தை வாங்கலாமா, வேண்டாமா என்பதை முன்னரே முடிவெடுத்திருப்பேன். என்னைக் கண்ணைக் கட்டி, விற்பனை செய்த வீட்டின் முன் உரிமையாளரும், அந்த ரியல் எஸ்டேட் புரோக்கரும் இந்த மோசடிக் குற்றத்தை செய்தவர்களே என்று கோர்ட்டில் வழக்குத் தொடுத்தார்.

மாவட்ட கோர்ட்டானது, "கொலை, தற்கொலைகள், ஒரு சொத்தில் நடப்பது போன்றவை, சொத்தின் குறைகள் என்று சொல்ல முடியாது" என தீர்ப்பு வழங்கியது. அதை எதிர்த்து மாகாண சுப்ரீம் கோர்ட்டில் அப்பீல் செய்தனர். அங்கு, இந்த விவரங்களை வாங்குபவரிடம் சொல்லாதது அவரின் மனநிலையை பாதிக்கும் என்பதால், அது சொத்தின் குறையே என முதலில் தீர்ப்பு வழங்கியது. ஆனால், அதன் மீது மறுபரிசீலனை என்னும் ரெவியூ (Review) மனுவின் மீதான விசாரனையில் அது சொத்தின் குறையாக கருதமுடியாது என சொல்லி விட்டது.

ஒரு சொத்தில் அசம்பாவிதமான சம்பவம் நடந்திருந்தால் (தூக்குப் போட்டு தற்கொலை, கொலை, தீக்குளிப்பு தற்கொலை, பேய்நடமாட்டம்) அதை வாங்குபவருக்கு தெரிவிக்க வேண்டிய அவசியம் இல்லை என சட்டம் சொன்னாலும், அது மனதை பாதிப்பதுடன், அந்த சொத்தின் விலையையும் பாதிக்கவே செய்யும். சொத்தின் விலையை பாதிக்கும் எந்த செயலும் "சொத்தின் குறையாகவே" கருத வேண்டும் என்பதே எனது எண்ணமும்.

.