Thursday, August 21, 2014

நினைவுகள்-39

என் எதிரி:
எத்தனையோ மனிதர்களை பிறக்கவைத்து, மனித வாழ்வின் உன்னதத்தையும், கேவலத்தையும் சந்திக்க வைத்திருக்கிறான் இறைவன். இவன் உயிர்களின் ஆன்மா மூலம், தான்  விரும்பியதைச் செய்து கொள்கிறான் போலும்! அப்படியென்றால், ஆன்மா இவனின் ஏஜெண்ட் போல! வேறு ஒருவனுக்கு ஏஜெண்டாக இருந்து கொண்டு, நமக்கு ஏதும் ஆதரவாக ஆன்மாவால் செய்யமுடியாது போல! 

ஆக, நம்மில் வேறு ஒருவன் வாழ்ந்து கொண்டிருக்கிறான். ஆன்மா வேறு ஒருவனின் சொத்து என்றால், நமக்கு நம் உடலும், மனமும் மட்டுமே சொந்தமா? அவை இரண்டும்கூட, பலசமயங்களில், ஆன்மாவின் கட்டளைப்படியே இருப்பதாகப் படுகிறது. ஆன்மா என்னும் எதிரியுடன் நாம் வாழ்ந்து கொண்டிருக்கிறோமா? வேறு வழியில்லையா? ஆன்மாவின் தயவு இல்லாமல் நம்மால் இயங்க முடியாதா? ஆன்மாவிடம் நாம் சரண்டைந்துவிட வேண்டுமா?  

இயங்க முடியும் என்றால், நாம் நினைத்த அனைத்தையும் நம்மால் ஏன் செய்ய முடியவில்லை? பெரும்பாலான மனிதர், தான் தோற்றபின், விதியை நோவதேன்?  ஆக, நம் உடல், மனம், உயிர், ஆன்மா இவைகள் நம் கட்டுப்பாட்டில் இயங்கவில்லை என்றே சொல்ல வேண்டும். நாம் இயக்காத ஒரு பொருள், வேறு யார் கட்டுப்பாட்டில் இயங்குகிறது? யாரோ ஒருவருக்காக இயங்கும் இந்த இயக்கத்தை, நான் ஏன் வாழவேண்டும்? நான் ஏன் சந்தோஷப் பட்டுக் கொள்ள வேண்டும்? நான் ஏன் துயரப் பட்டுக் கொள்ள வேண்டும்? எவனோ ஒருவனின் சந்தோஷம், துக்கம் இது! அப்படித்தானே! எனவே என்னை அது ஒன்றும் செய்துவிட முடியாது! இல்லையே, அது என்னைப் பாதிக்கிறதே! நான் செய்யாத செயல் என்னைப் பாதிக்கிறது என்று சொன்னால் யாரும் நம்ப மாட்டார்கள். ஆம், ஆன்மா என்ற என் எதிரியின் செயல் என்னைப் பாதிக்கத்தான் செய்கிறது.

இதற்கு ஒரே வழி, என் எதிரியை அடக்கிவிடுவது ஒன்றே! முடியுமா? அவன் வழியில் போய்விட்டு, நான் அடக்கி விட்டேன் என்று மார்தட்டிக் கொள்ளமுடியாது. உண்மையில் என் எதிரியை என் கட்டுப்பாட்டில் கொண்டுவர வேண்டும். வேறு ஒருவனின் கட்டுப்பாட்டில் நடந்து வரும் என் எதிரி, என் வழிக்கு எப்படி வருவான்? இல்லையில்லை, அவன் என் உடலில் வசிக்கிறான். என் உயிரில் மூச்சை விடுகிறான். என் மனதில் சிந்திக்கிறான். என்னிடமே வசிப்பவனை நான் கட்டுப்படுத்த முடியாதா? ஏன் முடியாது. என் மனம், உடல், உயிரைக் கட்டுப்படுத்தினால், என் எதிரி அடங்கத்தானே வேண்டும். எப்படியும் ஜெயித்து விடுகிறேன். அவனா? நானா? பார்த்துவிடலாம்!

.

Sunday, August 17, 2014

நினைவுகள்-38

சம்சார சாகரத்திலிருந்து உன்னை விடுவிப்பேன்!
(ஸம்சார ஸாகராத் ஸமுத்தர்தா)

"என்னையே நினைத்துக் கொண்டிருப்பவனின், பிறப்பு, இறப்பு என்னும் சம்சார கடலிலிருந்து, அவனைக் காப்பாற்றி என்னிடம் சேர்த்துக் கொள்வேன்."

யேது ஸர்வாணி கர்மாணி மயி ஸந்யஸ்ய மத்பரா;
அனன்யேனைவ யோகேன மாம்த்யாயன்த உபாஸதே
தேஷாமஹம் ஸமுத்தர்த்தா ம்ருத்யஸம்ஸார ஸாகராத்
பவாமி ந சிராத்பார்த்த மய்யா வேஷிதசேதஸாம்.

யே = எவனொருவன்;
து = ஆனால்;
ஸர்வாணி = ஒவ்வொன்றும்;
கர்மாணி = செயல்கள்;
மயி = என்னிடம்;
ஸந்யஸ்ய = துறந்து;
மத் பரா = என்னிடம் பற்றுக்கொண்டு;
அனன்யேன = பிறழாது;
ஏவ = நிச்சயமாக;
யோகேன = அத்தகைய யோகத்தால்;
மாம் = என்னிடம்;
த்யாயந்த = தியானத்துடன்;
உபாஸதே = வழிபாடு செய்கின்றானோ;
தேஷாம் = அவர்களில்;
அஹம் = நான்;
ஸமுத்தர்தா = நான் விடுதலை செய்கிறேன்;
மருத்யு ஸ்மஸார = பிறப்பு, இறப்பு என்னும் இந்தவாழ்க்கை;
ஸாகரத் = கடலிலின்றும்;
பவாமி = ஆகி;
ந சிராத் = வெகுநேரமல்ல;
பார்த்த = பார்த்தாவின் மைந்தனே (அர்ச்சுனா);
மயி = என்னிடம்;
ஆவேஷித = நிலைபெற்ற;
சேதஸாம் = அதுபோன்ற மனமுடையவர்களின்;

ஸ்ரீகிருஷ்ணன், நம்மை ஏன் இந்த வாழ்வைவிட்டு வரச் சொல்கிறார்? ஆன்மாவை இந்த உடலிலிருந்து விடுவிக்கச் சொல்வது எதனால்? இந்த ஆன்மா இந்த உடலில் இருந்து கொண்டு நல்லது கெட்டதை அனுபவித்தாலும், அது இறைநிலையில் தான் பேரானந்தம் அடையுமாம்! அந்த நிலை பிறப்பு, இறப்பு அற்ற பேரின்ப நிலை! அதற்காகத்தான் இவ்வளவு போராட்டங்களும். எனவே அதை அடையும் வழியை இறைவன் காண்பிக்கிறான். அதற்கான ஒரே வழி, நாம் நமது ஆன்மாவை அறிந்து கொண்டால் போதும்! அது வழியைத் தேடிக் கொள்ளும்.


.

நினைவுகள்-37


ராகங்களில் நான் ப்ருஹத் ஸாமம்

ஸ்ரீ கிருஷ்ணன், அர்ச்சுனனிடம் சொல்கிறார்;
"நான்  ராகங்களில் ப்ருஹத் ஸாமம்; கவிதைகளில் காயத்திரி; மாதங்களில் மார்கழி; பருவங்களில் வசந்தம்."

எல்லா உயர்வான விஷயங்களிலும் நான் உயர்ந்தவன் என்பதை ஸ்ரீகிருஷ்ணர் இப்படிக் கூறுகிறார்:

"ராகங்களில் இந்த ப்ருஹத் ஸாமம்  ஒரு இனிமையான ராகம்; இந்த ராகத்தை இரவில்தான் பாடுவார்கள்; கேட்க அவ்வளவு இனிமையாய் இருக்குமாம்; இது சாமவேதத்தில் உள்ளது; இதை இறைவனுக்காக தேவர்கள் இசைப்பார்களாம்;

அடுத்தது, மந்திரங்களில் நான் காயத்திரி என்கிறார்;
 மந்திரங்களிலேயே இது முக்கியமானது; இந்த மந்திரத்தின் ஆசிரியர் பிரம்மா; இந்த மந்திரத்தை ஜபிப்பதால் ஒருவன் சித்தி அடைந்து, இறை நிலையில் நுழைய முடியுமாம்.

அடுத்து, மாதங்களில் நான் மார்கழி என்கிறார்;
12 மாதங்களிலும், ஏன் இந்த மார்கழியை மட்டும் ஸ்ரீகிருஷ்ணர் தேர்ந்திருக்கிறார்? இந்தியாவில் மார்கழி மாதத்தில் பயிர்களெல்லாம் விளைந்து அறுவடை செய்யப்படுமாம். இந்த மாதமே வெப்பமும் இல்லாமல், கடுங்குளிரும் இல்லாமல் மித குளிர் உள்ள காலம்; நாம் காஷ்மீர், ஊட்டி போவது இந்த குளிரை அனுபவிக்கத்தான். அது நமக்கு வருடத்தில் ஒருமாதமான மார்கழியில் வருகிறது. உண்மையில் அந்த மாதத்தில் நாம் வீட்டை விட்டு வெளியே போய், வெட்டவெளியில் ஒருமுறையேனும் அந்த மார்கழிக் குளிரை அனுபவிக்க வேண்டும்.

அடுத்து, பருவங்களில் நான் வசந்தம் என்கிறார்;
இந்த மார்கழி போலவே, வசந்தமும் பருவகாலத்தில் சிறப்புப் பெற்றது. வசந்தகாலத்தில் தாவரங்கள் எல்லாம் பூக்கள் பூத்து குலுங்கும்; எல்லா தாவரங்களும் சந்தோஷமாக இருக்கும் காலமே இந்த வசந்தகாலம்; ஸ்ரீகிருஷ்ணனின் லீலைகள் இந்த வசந்தகாலத்தில்தான் நடந்தனவாம்; மகாகவி காளிதாஸ் இந்த வசந்தகாலத்தை தன் ருதுவம்சம் என்று நூலில் வெகு விமரிசையாகப் பாடியுள்ளார். வாய்ப்பு கிடைப்பவர்கள் படிக்கலாம்.

அந்த பகவத்கீதையின் பாடல்:
"ப்ருஹத்ஸாம ததா ஸாம்நாம் காயத்ரீ சந்தஸாமஹம்
மாஸானாம் மர்கசீர் ஷோ  (அ)ஹம்ருதூனாம் குஸூமாகர:"

ப்ருஹத்ஸாம = ப்ருஹத்ஸாமம் என்ற சாமவேதப் பாட்டு;
ததா = அதனுடன்;
ஸாம்நாம் = சாம வேதப்பாட்டு;
காயத்ரீ = காயத்ரி மந்திரம்;
சந்தஸாம் = கவிதை;
அஹம் = நான்;\
மாஸானாம் = மாதங்களில்;
மார்கசீர்ஷோ அஹம் = நான் மார்கழி;
ருதூணாம் = பருவ காலங்களில்;
குஸூமாகர = வசந்த காலம்;


.

நினைவுகள்-36

Estoppel எஸ்டாப்பல்
(முன்னர் சொன்ன சொல்லை, பின்னொரு நாளில் மறுக்கக் கூடாது-- இது ஒரு சட்டம். இதை "எஸ்டாப்பல்" என்பர்).

இந்தச் சொல்லை வாய்மொழியாகவும் உறுதி கூறியிருக்கலாம்; அல்லது சொல்லாமல் செய்கைகள் மூலம் தெரிவித்திருக்கலாம்.

பைபிளில் ஒரு கதை உண்டு.
ஒருவன், தாய் மாமன் ஊருக்கு வருகிறான். அங்கு தாய்மாமனுக்கு இரண்டு பெண்கள். அதில் சிறியவள் மிக அழகாக இருப்பாள். பெரியவள் அவ்வளவு அழகில்லை. மாமனிடம், அவரின் சின்னப் பெண்ணை திருமணம் செய்து கொடுக்கும்படி கேட்பான். அவரோ, "மருமகனே! நீ, என் வீட்டில் ஐந்து வருடங்கள் ஆடு மேய்த்துக் கொண்டிருந்தால், என் சின்னப் பெண்ணை உனக்கு திருமணம் செய்து கொடுக்கிறேன்" என்று கூறுகிறார். இவனும் அதை நம்பி, 5 வருடங்கள் ஆடு மேய்க்கிறான். அன்று இரவில் இவனுக்குத் திருமணம் முடிந்தது. இரவில் ஒரு குடிசையில் மனைவியுடன் தனிமை. இருட்டில் ஒன்றும் தெரியவில்லை. விடிந்து பார்த்தால், அவள் சின்னப் பெண் இல்லை; மாமனாரின்  பெரியபெண். உடனே மாமனிடம் சென்று, "நீங்கள் என்னை ஏமாற்றி விட்டீர்கள்; நம்பிக்கை துரோகம் செய்துவிட்டீர்கள்; உங்களின் சின்னப் பெண்ணை திருமணம் செய்து கொடுப்பீர்கள் என்ற முழு நம்பிக்கையில்தான் நான் உங்களின் ஆடுகளை மேய்த்தேன்" என்ற புலம்புகிறான். மாமனோ, எதற்கும் கவலைப்படாமல், "மருமகனே! அதற்கென்ன, இன்னும் ஒரு ஐந்து வருடம் என் வீட்டு ஆடுகளை மேய்த்தால், சின்னப் பெண்ணையும் உங்களுக்கே திருமணம் செய்து கொடுக்கிறேன்; கவலைப் படாதீர்கள்" என்று சொல்லிவிட்டார். அவனும் அடுத்த 5 வருடத்திற்கு ஆடு மேய்கிறான்.... இப்படியாகப் போகிறது பைபிள் கதை.

"உனக்கு எனச் சொல்லிவிட்டு, பின், பேச்சை மாற்றக் கூடாது" என்பதைத்தான் எஸ்டாபெல்-Estoppel என்ற சட்டவிதி கூறுகிறது.

இதேபோல, 2009ல் லண்டனில் ஒரு வழக்கு:
டேவிட் என்பவர் பம்பரமாக வேலை செய்யும் ஒரு விவசாயி. 30 வருடங்களாக தன் பெரியப்பா மகனான பீட்டரின் பண்ணையில் வேலை பார்த்து வருகிறார். முழுப் பொறுப்பும் டேவிட்தான். சம்பளமெல்லாம் கிடையாது. பீட்டர் அவ்வப்போது, "எனக்குப் பின், இந்தப் பண்ணைக்கு நீதான் உரிமையாளன்" என்று டேவிட்டை குளிர்ச்சி ஊட்டிக் கொண்டிருப்பார். அதை நம்பிய டேவிட் மாடாக உழைத்தார். இப்படிச் சொல்லியே 2005ல் இறந்து விட்டார் பீட்டர். பீட்டர், உயிலும் எழுதி வைக்கவில்லை. பீட்டரின் இந்த உறுதிமொழியை வைத்து, வேலைபார்த்துவந்த டேவிட் இந்த சொத்துக்களை கேட்கிறார். உயிருடன் இருக்கும்போதே, எனக்குத் தான் சொத்து என்று சொல்லி என்னை நம்ப வைத்துள்ளார். எனவே எஸ்டபெல் சட்டவிதிப்படி எனக்குத் தான் சொத்து கிடைக்க வேண்டும் என்று வாதாடுகிறார். கீழ்கோர்ட் இவர் சொல்வது சட்டப்படி சரியே என்று இவருக்கு சொத்தை கொடுத்துவிட்டது. ஆனால் அப்பீல் கோர்ட் மறுத்து விட்டது. எனவே டேவிட், ஹவுஸ் ஆப் லார்டு கோர்ட்டுக்கு (House of Lords) அப்பீல் செய்கிறார். 

லார்டு கோர்ட், "பீட்டர், நேரடியாகச் சொல்லி இருந்தாலும், மறைமுகமாகச்  சொல்லியிருந்தாலும், இது எஸ்டாபெல் என்ற சட்டவிதியின் கீழ் வரும். எனவே டேவிட்டுக்குத்தான் அந்தச் சொத்து என்று தீர்ப்பு கூறிவிட்டது.
Lord Walker expressed his conclusions:
"...I am satisfied that … Peter was intending to indicate to David that he would be Peter's successor to Steart Farm, upon his death, and that David's understanding to that effect was correct . I find that this remark and conduct on Peter's part strongly encouraged David, or was a powerful factor in causing David, to decide to stay at Barton House and continue his very considerable unpaid help to Peter at Steart Farm, rather than to move away to pursue one of the other opportunities which were then available to him, and which he had been mulling over….."

.

Saturday, August 16, 2014

நினைவுகள்-35

தஞ்சம் (அடைக்கலம்)

இந்த வார்த்தையான "அடைக்கலம், தஞ்சம்" என்பன மிகக் கொடூரமான வார்த்தைகள். ஒரு மனிதனின் கடைசி மூச்சின் விநாடியில் கூட அவன் தனது தன்மானத்தை இழந்து இதை கேட்கக் கூடாது. ஆனாலும் இன்று உலகில் அந்த வார்த்தையை உபயோகிக்காதவர்கள் மிகக் குறைவே!

நாடுகடந்து போய், கனடாவில் வசிக்கும் ஒரு பெரியவர் இப்படிச் சொல்லியுள்ளார்,"ஒரு மனிதன், இந்த பூமியில் எது இல்லாமல் வேண்டுமானாலும் இருந்துவிடலாம். ஆனால் அவனுக்கென்று ஒரு நாடு இல்லாமல் இருப்பதைப் போல கொடுமையானது வேறு எதுவும் இல்லை." எவ்வளவு வருத்தமான வார்த்தைகள் அது.

கிழக்கு ஐரோப்பாவில் செர்பியா என்று ஒரு நாடு உள்ளது. அங்கு மைனாரிட்டியாக இருப்பவர்கள் 'ரோமோ' என்னும் ஒரு பிரிவினர். இந்த பிரிவைச்  சேர்ந்த ஒருவர் வேறு ஒரு மெஜாரிட்டி கூட்டத்தைச் சேர்ந்த பெண்ணைத் திருமணம் செய்து வாழ்ந்து வருகிறார். குழந்தைகளும் உள்ளனர். திடீரென்று இனப் பிரச்சனை வந்தது. இவர் ரோமோ இனம் எனத் தெரிகிறது. அந்தப் பெண்ணின் (மனைவியின்) அண்ணன் தம்பிகள் உறவினர்கள் சேர்ந்து கொண்டு இவரை அடித்து உதைத்து விரட்டி விடுகிறார்கள். மனைவியை இழந்து, குழந்தைகளை இழந்து, அந்த நாட்டைவிட்டு வெளியேறி,  திருட்டுத்தனமாக எப்படியோ இங்கிலாந்துக்கு வந்து சேருகிறார்.

இங்கிலாந்தில் அந்த அரசிடம் அடைக்கலம் கேட்டு நிற்கிறார். அடைக்கலச் சட்டம் 2002ன்படி அதைக் கேட்கிறார். (The Nationality, Immigration and Asylum Act 2002). சரியான காரணம் கூறவில்லை என்று அவரின் அடைக்கலக் கோரிக்கையை அரசு நிராகரிக்கிறது. அதன்மீது டிரிப்யூனல் கோர்ட்டுக்கு அப்பீல் செய்கிறார். அங்கே இவரின் வாதம் என்னவென்றால், "என்னை திரும்பவும் கொசாவா நாட்டுக்கு அனுப்பினால், என் மனைவியின் அண்ணன் தம்பிகள், என்னை அடித்தே கொன்று விடுவார்கள்; நான் பிறந்த மண்ணில் எனக்கு பாதுகாப்பே இல்லை" என்று கதறுகிறார். ஆனால் அரசாங்க வக்கீலோ, "அந்த இடத்தில் பாதுகாப்பு இல்லையென்றால், அதேநாட்டில் வேறு ஒரு இடத்தில் வசிக்கலாமே என்றும்; இவரின் நடை, உடை, பாவனைகள் ஏதும், இவர் அந்த இனத்தைச்  சேர்ந்தவர்  என்று சொல்வதற்கு போதுமான ஆதாரமாக இல்லை என்றும்" மறுப்பு தெரிவித்தது. இதனால், அவரின் கோரிக்கை நம்பும்படி இல்லை என்று நிராகரித்து விட்டது ட்ரிப்யூனல் கோர்ட்.

இவ்வாறு நிராகரித்து விட்டாலும், புதிய காரணங்கள் இருந்தால், மறுபடியும் தஞ்சம் கேட்டு மனுச் செய்யலாம் என அங்குள்ள சட்டம் சொல்கிறது.
'"When a human right or asylum claim has been refused or withdrawn or treated as withdrawn under paragraph 333C of these Rules and any appeal relating to that claim is no longer  pending, the decision maker will consider any further submissions and, if rejected, will then determine whether they amount to fresh claim. The submissions will amount to a fresh claim if they are significantly different from the material that has previously been considered."

 எனவே,மறுபடியும் புதிய காரணங்களுடன் மனுச்  செய்கிறார். மறுபடியும் அரசு விசாரிக்கலாமா என்பதில் சட்ட சிக்கல்! மனித உரிமை சட்டங்களின் படி, அரசு மறுபடியும் விசாரிக்கலாம் என்று வாதாடுகின்றனர். அதை ஏற்றுக் கொண்ட இங்கிலாந்து அப்பீல் கோர்ட் (The Lords of Appeal) அவரின் 2-வது மனுவை மறுபடியும் விசாரிக்கச் சொன்னது.

பாவம்! அவரை 'தஞ்சம்' ஏற்றுக் கொண்டதா? கைவிட்டதா? தெரியவில்லை!!!
என்னே, மனித வாழ்வின்  குரூரம்!!! மனித நாகரீகம் வளர்ந்தும், என்ன பிரயோஜனம்!!!

.

நினைவுகள்-34

தைத்தியரும், தானவரும்:
வாழ்கைக்கையில் சிலர் பிறப்பிலிருந்தே எல்லா வகையான சந்தோஷங்களையும் அடைந்து அனுபவித்துக் கொண்டிருக்கின்றனர். அது அவர்களின்  இறப்புவரை குறையாமலும் உள்ளது. வேறுசிலர் இதற்கு நேர்மாறாக பிறந்ததிலிருந்தே துன்பத்தையும், துயரத்தையும் அனுபவித்து அலைகழிந்து கடைசி மூச்சுவரை சந்தோஷத்தை பார்க்காமல் போனவர்கள் ஏராளம்.

இந்த சந்தோஷத்துக்கும், துயரத்துக்கும் அதை அனுபவிப்பவரின் புத்தியோ, அனுபவமோ காரணமாக இருக்க முடியாது. ஏனென்றால், யாரும் பிறந்தவுடன் புத்தியுடனும் அனுபவத்துடன் பிறந்து விடுவதில்லை.

அப்படியென்றால், அதை யார் கொண்டுவந்து கொடுத்தது? வரும்போது ஆன்மா கொண்டு வந்திருக்குமா? ஆன்மாவின் கட்டளைப்படிதான் இந்த வாழ்க்கை நகர்ந்து கொண்டிருக்கிறதா? நமது செயல் என்று இதில் ஏதுவுமே இல்லையா?  இல்லையில்லை; இந்த உலக அனுபவத்தை, இந்த உலக அறிவைக் கொண்டுதான், நாம் வாழ்ந்து கொண்டிருக்கிறோம். ஆன்மா கொண்டுவந்தது என்பதெல்லாம் நம்பமுடியாத கட்டுக்கதை. இயற்கையாகவே, வசதியான பெற்றோருக்குப் பிறந்த பிள்ளை வசதியாய் வாழ்கின்றன. கஷ்டப்படும் குடும்பத்தில் பிறந்த பிள்ளை கஷ்டத்துடன் வாழ்கிறது. ஆனால், அவர்கள் வாழ்ந்து வரும்போது, வசதியாக வாழ்ந்தவன், தன் திறமையின்மையால், ஏழ்மைக்குத் தள்ளப் படுகிறான். கஷ்டத்தில் வாழ்ந்தவனோ, தன் திறமையால் கொடிகட்டிப் பறக்கிறான். இதை எந்தக் கணக்கில் வைத்துக் கொள்வது?  எனவே வாழ்வின் வசதிக்கும், சிரமத்துக்கும் ஆன்மா காரணமில்லை என்பது ஒருசாரரின்  எண்ணம். இல்லையில்லை, ஆன்மாவின் ஆணைப்படிதான் நமது வாழ்க்கை என்கின்றனர் மற்றோரு சாரர்.

குதிரைக்கு முன்னால் 'கேரட்' கட்டி இருந்தால், அதை தின்பதற்காக அதை முயற்சித்துக் கொண்டே வெகுதூரம் ஓடி வந்திருக்கும் அந்தக் குதிரை. அந்தக் குதிரைக்கே தெரியாது, தான் இவ்வளவு தூரம் ஓடி வந்திருக்கிறோம் என்று!

மனித வாழ்வும் இதைப் போன்றதே! ஆசை என்னும் கேரட்டை, இறைவன் நம் முன்னே கட்டிவிட்டிருக்கிறான். அதைப் பார்த்துக் கொண்டே வாழ்வின் வெகுதூரம் வந்துவிட்டோம். நாம் கடந்துவந்த வாழ்க்கை நாம் வாழ்ந்த வாழ்க்கையாக இருக்கவே முடியாது. இறைவன் காட்டி விட்ட பாதை அவ்வளவே! இறைவனின் பார்வையில் ஏன் இவ்வளவு ஏற்ற இறக்கம்! இதை கண்டுபிடிக்க முடியாமல்தான் 'அவனின் விளையாட்டு' என்று பொதுவாகச் சொல்லி இருக்கிறார்கள் நம் முன்னோர்.

இறைவனின் இந்தச் செயல்களை செய்வதற்காகவே படைப்பட்டவர்களே அசுரர்  (அரக்கர்) என்னும் மற்றொரு மானிட வர்க்கம்.

அசுரர்கள் (அரக்கர்கள் அல்லது ராக்ஷசர்கள்). இவர்கள் தேவர்கள், மனிதர்கள் இவர்களின் எதிரிகள்.  அசுரர்கள் இரண்டு வகையில் உள்ளனர்.  1. தைத்தியர். 2. தானவர். தைத்தியர் தேவர்களுக்கு தொந்தரவு கொடுப்பதற்காக கடவுளால் படைக்கப் பட்டவர் போல. அதுபோல, தானவர்களை, மனித இனத்துக்கு தொந்தரவு கொடுப்பதற்காக படைத்திருக்கிறார் இறைவன்.

1.தைத்தியர் : திதி என்பவள் , சந்தியாகாலம் என்னும் மாலைப் பொழுதில் காமம் அதிகமாகி கசியபனைப் புணர்ந்து அவன் மூலம் பெற்ற புத்திரர்கள் இரணியாக்ஷன், இரணியகசிபன். சந்தியா காலத்தில் கூடிப் பிறந்த புத்திரர்கள் என்பதால், இவர்கள் இருவரும் ராக்ஷசர்கள் ஆனார்கள்.

இரணியாக்ஷனை விஷ்ணு வாராக அவதாரத்திலும், இரணியகசிபனை விஷ்ணு நரசிங்க அவதாரத்திலும் கொன்றார்.

இந்த திதியின் வயிற்றில் மற்றொரு பெண் பிறந்தாள். அவள் பெயர் சிங்கிகை. இந்த புத்திரியின் வயிற்றில் பிறந்த ராக்ஷசர்கள் எல்லோரையும் 'தைத்தியர்' என்றே அழைப்பர். திதியின் வழிவந்தோர்.

2.மற்றொரு வகை அரக்கர்கள் (ராக்ஷசர்கள்) தானவர்கள் என்று பெயர்: இவர்கள் கசியபனின் புத்திரர்கள். இவர்களில் முக்கியமானோர்: அயோமுகம், ஏகசக்கரன், புலோமன், கபிலன், அந்தகன், அடிதானவன், அரிஷ்டன், தக்ஷசன், துவிமூர்த்தன், சம்பரன், ஹயக்கிரீவன், வபாவசன், சங்குசிரசு, சுவர்ப்பானன், விரூஷப்ரவன், விப்பிரசித்தி, ராகு, கேது, வாதாபி, இல்லவன், நமுசி, காலநாபன், வந்திரயோதி, திரியம்சன், சல்லியன், நபன், நரகன், பலோமன், கசிறுமன், அந்தகன், தூமிரகேது, விரூபாக்ஷன், துர்ச்சயன், வைசுவாநரன், தாபகன்.

நம் வாழ்வில் எத்தனையோ 'தானவர்களை' சந்தித்திருக்கிறோம், ஆனால் நமக்குத்தான் தெரியாது அவர்கள் "தானவர்கள்" தான் என்று.

.

Friday, August 15, 2014

நினைவுகள்-33

முன்கோபம் பொல்லாதது: (ஒரு லண்டன் வழக்கு)

லீட்ஸ் (Leeds) என்பது இங்கிலாந்தில் உள்ள ஒரு பெரிய நகரம். அந்த நகரில் சாமுவேல் என்றொரு அரசாங்க வெட்னரி டாக்டர். அவருக்கு ஒரு வீடு சொந்தம். அதை அவர் வாடகைக்கு விட்டிருக்கிறார். 2011ல் ஒரு அசம்பாவிதம் நடக்கிறது. டாக்டர் , காமராவையும், அதன் கம்யூட்டர் சிப்பையும் திருடிவிட்டார் என்று குற்றச்சாட்டு. அங்குள்ள மாஜிஸ்டிரேட் கோர்ட்டில் குற்றத்தை ஒப்புக் கொண்டார். அதனால் அவருக்கு 12 வார சிறைதண்டனை கொடுக்க வேண்டும். அதற்குப் பதிலாக 140 மணி நேரம் சம்பளம் இல்லாமல் வேலைசெய்ய வேண்டும் என்று கோர்ட் உத்திரவு இட்டது. இது இல்லாமல் 700 டாலர் அபராதமும் கட்ட வேண்டும். (நம்ம ஊரிலும் இதுபோலக் கொண்டுவரலாம்.)

ஆனால், அரசாங்கமோ, இவருக்கு மெமோ கொடுத்து அலுவலக விசாரனை Domestic Enquiry நடத்தி விசாரிக்க வேண்டும் என்று கேட்டது. விசாரனையில் இவர் செய்தது குற்றம்தான் என்று நிரூபிக்கப் பட்டால், இவர் இந்த அரசாங்க வேலையான வெட்னரி டாக்டராகத் தொடர்ந்து வேலை செய்ய முடியாது. வேலையை விட்டு நீக்கி விடுவார்கள். அந்த விசாரனையில் இவர் குற்றம் செய்தார் என அவர்கள் முடிவுக்கு வந்தால், அதாவது if the committee is satisfied …. என்ற வார்த்தை உள்ளதால், ஒரு குழப்பம் வந்துவிட்டது.

உண்மையில் அந்த திருட்டு சம்பவம் என்னவென்றால்:
டாக்டரின் பக்கத்து வீட்டுக்காரர்கள் மாலை நேரம் வீட்டுக்கு வருகிறார்கள். பக்கத்து வீட்டுக்காரர்கள் ஒரு பெண்ணும் ஒரு ஆணும். அவர்கள் வந்து பார்க்கும்போது, டாக்டரின் கட்டிட மேஸ்திரி பின்பக்கத்தில் உள்ள சுவரில் வேலை செய்து கொண்டிருக்கிறார். பக்கத்து வீட்டின் பக்கம் வரக்கூடாது என்று ஏற்கனவே அந்த மேஸ்திரிக்கு பக்கத்து வீட்டில் உள்ளவர்கள் கண்டிப்பாக சொல்லி இருந்தார்கள். இருந்தும், அந்த மேஸ்திரி இவர்கள் வீட்டிற்குள் வந்து வேலை பார்த்தார். அதை அந்த பக்கத்துவீட்டுப் பெண்மணி போட்டோ எடுத்தார். சாட்சி வேண்டுமல்லவா அதற்காக. அப்போதே அந்த டாக்டரையும் போட்டா எடுத்தார். அதைப் பார்த்த டாக்டர் அந்தப் பெண்ணைத் திட்டிக் கொண்டே வந்தார். டாக்டர் பிளான் வாங்காமல் அந்த கட்டிட வேலையை செய்கிறாராம். திடீரென்று பாய்ந்த டாக்டர், அவளின் காமராவை பறித்துக் கொண்டார். ரொம்ப வேலை காண்பித்தால், உன்னை அடிப்பதைத் தவிர வேறு வழியில்லை என்று டாக்டர் மிரட்டினார். அந்தப் பெண்ணுக்கு துணைக்கு வந்த அடுத்த வீட்டுக்காரரையும், ஒரு கட்டையை வைத்துக் கொண்டு மிரட்டினார், அந்த டாக்டர். உடனே 999 எண்ணுக்கு போலீஸை கூப்பிடுகிறார்கள். (நம்ம ஊரில் போலீஸூக்கு 100). 999 வேகமாக வந்தது.டாக்டரை அரெஸ்ட் செய்தது. பின்னர் நடந்ததெல்லாம் கோர்ட்டில்.

டாக்டர் சொல்கிறார், பக்கத்துவீட்டுக்காரி என்மேல் ஏற்கனவே கடுப்பாக இருந்தவர். எனவே பொய் சொல்கிறார் என்கிறார். வெகுகாலப் பகை. நாங்கள் அந்த பெண்மணி வீட்டுப் பக்கம் போகவில்லை. அவர்தான் எங்களைப் போட்டோ எடுத்தார். நான் எடுக்கவேண்டாம் என்று சொன்னேன். அவர் கேமராவில் உள்ள சிம்-கார்டை கழற்றி எடுத்து என்னைப் பார்த்து, அந்த சிம்கார்டு கையை ஆட்டிக் கொண்டு, "This is my evidence you black bastard." இதுதான் சாட்சி, கருப்பனே! என்று கத்தினார். அந்த நேரத்தில்தான் நான் உணர்ச்சி வசப்பட்டு, அந்த சிம் கார்டை அந்த பெண்ணின் கையிலிருந்து பறித்து விட்டேன். மற்றபடி நான் அவரை மிரட்டவில்லை. இந்த விஷயத்துக்கும் நான் டாக்டராக இருப்பதற்கும் என்ன சம்மந்தம். நான் டாக்டர் தொழிலில் ஏதாவது தவறு செய்தால், என்னை வேலையை விட்டு நீக்கலாம். ஆனால், இது என் வீட்டில் நடந்த ஒரு சம்பவம். இதற்காக, என்மீது தொழில் சார்ந்த குற்றம் Professional misconduct செய்ததாகச்  சொல்வது ஏற்கமுடியாது. சிம் கார்டை திருடிவிட்டேன் என்று சொல்கிறார்களே! அதை நான் என்ன பணத்துக்காகவா திருடினேன், அதைத் திருட்டு என்று சொல்வதற்கு?

டாக்டர் தொழிலில் இதுவரை அவர்மீது ஒரு குறையும் இல்லை. மிகநல்ல டாக்டர் என்று பெயர் எடுத்தவர். இந்த ஒரு சம்பவம் அவரை உணர்ச்சிவசப் படுத்திவிட்டது, அவ்வளவே! இனிமேல் இதுபோன்று நடக்காது என்று டாக்டரும் உறுதி கூறி இருந்தாலும், அவர் பொதுச்சேவை செய்பவர், இப்படி நடப்பது பொதுநலனைக் கருதிப்பார்த்தால் அவரின் செயல் சரியல்ல. எனவே வேலையை விட்டு தூக்குகிறோம் என்று கூறிவிட்டனர்.

டாக்டர், அந்த முடிவை எதிர்த்து அப்பீல் போகிறார். அந்த அப்பீலில், டாக்டரின் வக்கீல், இனத்தைப் பற்றி (racial abuse) இருந்ததை, விசாரனை கமிட்டி கண்டுகொள்ளவில்லை என்று வாதாடினார். அப்பீல் கோர்டோ, 'டாக்டர் உணர்ச்சி வசப்பட்டது ஞாயமாக இருந்தாலும், அவர் நடந்து கொண்ட முறை சரியல்ல' என்று கருதியது. அதற்காக அவரை டாக்டர் வேலையை விட்டே தூக்கியது சட்டபூர்வமாக இல்லை. எனவே வழக்கை அந்த விசாரனைக் கமிட்டிக்கு திருப்பி அனுப்புகிறோம். மறுபடியும் விசாரித்து வேலையை தூக்காமல் வேறு தண்டனை வழங்க விசாரிக்க வேண்டும் என்று அப்பீல் கோர்ட் தீர்பளித்தது.
[Courtesy: www.Bailii.org case reference [2014] UKPC 13].

.

Thursday, August 14, 2014

நினைவுகள்-32


Robin Williams ராபின் வில்லியம்ஸ் - அமெரிக்காவின் மிகப் பிரபலமான சிரிப்பு நடிகர். இந்த ஆகஸ்டு 11ல் இறந்துவிட்டார். இயற்கை மரணம் இல்லை என்றும், சந்தேகத்துக்கிடமாக அவரின் வீட்டிலேயே மரணமடைந்தார் என்றும் கூறப்படுகிறது. அமெரிக்காவே சோகத்தில் மூழ்கியது. அவ்வளவுக்கு பிரபலமான சிரிப்பு நடிகர்.

இவர் ஏதோ பிரச்சனையால், 'மன அழுத்தத்தில்' இருந்து வந்ததாகவும், அதனால் தற்கொலை செய்து கொண்டிருக்கலாம் என்றும் சொல்லப்படுகிறது. இவருக்கு வயது 63. 1951 ஜூலை 21ல் பிறந்தவர். ஆஸ்கார் விருது பெற்ற நடிகர். சினிமாப் படங்களிலும், டிவி நிகழ்ச்சிகளிலும் நடித்தவர்.
எல்லோரையும் சிரிக்க வைத்தஇவரோ, மனஅழுத்தத்தில் இருந்தாராம். அமெரிக்காவில், சினிமா வாழ்க்கையில் இருந்த பலர் இந்த மன அழுத்தத்தால் தற்கொலை செய்து கொண்டவர்கள் ஏராளமாம்.

மன அழுத்தம்:
இன்றைய மனிதன், பொதுவாகவே மன அழுத்தத்துடனேயே வாழ்ந்து கொண்டிருக்கிறான். இவனின் பிரச்சனையை பகிர்ந்து கொள்ள நம்பிக்கையான ஆள் இல்லை. இவன் வாழ்விலும் வெளிப்படைத் தன்மை இல்லை. அதனால் இவனால் இவனின் பிரச்சனையை வெளியே சொல்லமுடிவதில்லை. பிரச்சனையின் முடிவுக்குப் பயப்படுகிறான். முடிவு, இவனை இவன் முடித்துக் கொள்கிறான்.

அமெரிக்காவில் ஒரு வருடத்திற்கு 38,000 பேர் தற்கொலை செய்து கொள்கிறார்களாம். தற்கொலைக்கான காரணம் Depression-மனஅழுத்தம். அழுத்துவதை வெளியே விட்டால் அழுத்தம் வராது. ஆனால் இவன் வாழ்வின் முன்னேற்றமே, அதை அழுத்தி வைத்ததால்தான். எனவே அதை அவனால் வெளியே விட முடியாது. ரகசியம் உட்பட.... தீர்வு? அவனாகவே அதிலிருந்து வெளியே வர இப்போதே முயற்சிக்க வேண்டும். கடைசி நிமிட முயற்சி, தோல்வியில்தான் முடியும்.

இந்தியாவில்:
நான் பார்த்த அளவில், இங்கு, தற்கொலை செய்து கொண்டவர்கள் கோழைகள் அல்ல. துணிச்சல் மிக்கவர்களும் அதை துணிச்சலுடன் செய்துள்ளார்கள். பலருக்கு யோசனை சொன்னவர்கள், அவர்களுக்கு யோசனை சொல்ல ஆள் வைத்துக் கொள்ளவேவில்லை. தன்னுடைய எல்லாச் செயல்களையும், (நல்லது, கெட்டது, கேவலமானது இவைகள் உட்பட) வேறு ஒரு நம்பிக்கையான நபருடன் பகிர்ந்து கொண்டால், இந்தப் பிரச்சனை தீரும் என்பது எனது அபிப்பிராயம்.
பணம் இல்லை என்று தற்கொலை செய்து கொள்பவர்களைக் காட்டிலும், பிரச்சனையை தீர்க்க முடியவில்லை என்று (பணம், உறவு, இழிசெயல்) தற்கொலை செய்து கொண்டவர்கள் ஏராளம். இவர்களாகவே "இவர்களைப் பற்றிய ஒரு நல்ல அபிப்பிராயம்" இவர்கள் வாழும் சமூகத்தில் உள்ளதாக நினைத்துக் கொள்கிறார்கள். ஏதாவது ஒரு சந்தர்பத்தில், இவர்கள் ஒரு இழி செயலைச் செய்யும் போது, அந்த சமூகம் இவரை ஏளனமாக பார்க்குமே, அதை நான் எப்படி எதிர்கொள்வேன் என்று நினைத்துக் கொண்ட கணமே, தற்கொலைதான் முடிவு என இவர்களின் மனம் சொல்லிக் கொடுக்கிறது. இது ஒரு இழிவே இல்லை என ஆறுதல் சொல்லும் ஆள் பக்கத்தில் இல்லாமல் போவதே, அதைத் தடுக்க முடியாமல் போவதற்கு முக்கிய காரணம்.

எனவே, இப்போதிருந்தே, நாம் நம் மனதைப் பழக்கி வைத்துக் கொள்ள வேண்டும். எப்படி? "நாம் ஒன்றும் முழு யோக்கியனில்லை; நாமும் மற்றவரைப் போலவே எல்லாத் தில்லுமுல்லுகளையும் செய்பவன் என்று நமக்குப் பின்னே நம்மை இந்த உலகம் சொல்லிக் கொண்டுதானிருக்கிறது; முடிந்தவரை நாம் நம் மனச்சாட்சிப்படி நடப்போம்" என நம்மைப் பற்றி ஒரு அபிப்பிராயத்தை வைத்துக் கொள்ளவேண்டும். அதுவே நம்மைப் பற்றி நமது சமுதாயமும் நினைத்துக் கொண்டிருப்பதாக நாம் கருதவும் வேண்டும்.

.

நினைவுகள்-31

டெலிபோர்டேஷன் என்னும் சாகாவரம்:
Teleportation - டெலிபோர்டேஷன்: (தொடர்ந்து நகரும், ஆனால் நகராது) Invincible teleportation.

ஒரு பொருள் நகரும்; ஆனால் நகருவது தெரியாது. நகருவது கண்களுக்குத் தெரியாது; உணரவும் முடியாது. மேஜிக் இல்லை. உண்மை விஞ்ஞானமே. இதைத்தான் டெலிபோர்டேஷன் என்கின்றனர் விஞ்ஞானிகள்.

இந்தப் பிரபஞ்சம் எப்படி இயங்க வேண்டும் என்று ஒரு வரைமுறை வைத்துக் கொண்டுள்ளதாம். புத்திசாலி மிருகமாகிய நாம் அதை ஒரளவு அறிந்து கொள்ள முடியும் என்ற நம்பிக்கையுள்ளது.  நாம் இப்போது செல்போனில் பேசுகிறோம், ஈமெயில் அனுப்பிக் கொள்கிறோம். இவை பதிவுகளாக ஆகாயத்தில் மிதக்கிறது. இதை, நமது முந்தைய தலைமுறைக்குச் சொன்னால், 'சுத்த பைத்தியக்காரத்தனம்' என்று காறி உமிழ்ந்திருக்கும். ஆனால் அது உண்மை என நாம் நம்புகிறோம். அதேபோலத்தான் இதையும் நாம் நம்ப வேண்டும். இது அடுத்த தலைமுறையின் செயல்பாடு. நமக்கோ, நம்பமுடியாத அதிசயம்.

இந்த வித்தையைச் செய்தவர் Michio Kaku.  இவர் பௌதீக ஆராய்சியாளர். String Theoryஐ கண்டுபிடித்தவர்களில் இவரும் ஒரு கூட்டாளிஇவரை "இன்றைய உலகின் ஐன்ஸ்டின்" என்கிறார்கள். இவர் ஒரு புத்தகத்தை எழுதியுள்ளார். அதன் பெயர் Physics of the Impossible. நம்பமுடியாத பௌதீகம். இதில், அவர், தற்போது நடக்கும் விஞ்ஞான உண்மைகளையும், இனி பௌதீக விதிப்படி நடக்கப் போகும் செயல்களையும், அடுத்து, இதெல்லாம் நடக்கவே நடக்காது என நாம் நம்பும் செயல்களையும் பட்டியலிட்டுச்  சொல்லியுள்ளார்.
இவர்தான் இந்த டெலிபோர்டேஷனை விளக்கி உள்ளார்.

ஒரு பொருள் அல்லது ஒரு சக்தி, ஒரு இடத்திலிருந்து மற்றொரு இடத்துக்கு மாறிப் போகும்போது, அவற்றின் இடையே உள்ள தூரத்தை அது கடந்து செல்லாது. (அதாவது, ஒரு பஸ், சென்னையிலிருந்து பெங்களூருக்குப் போகிறது. அது சென்னையில் கிளம்பும்போது பார்க்கலாம். பெங்களூர் போய் சேர்ந்ததைப் பார்க்கலாம், இடையில் அது ஓடியதை நாம் பார்க்க முடியாது.) இதைத்தான் எல்லா சினிமாவிலும், மேஜிக்கிலும் செய்திருக்கிறார்களே! ஆனால் அவை பொய்யாகச் செய்யப் பட்டவை. இங்கு உண்மையிலேயே அது நிகழ்கிறது. இதைத்தான் டெலிபோர்டேஷன் என்கிறார்கள்.

ஒரு பொருளை கண்ணுக்குத் தெரிந்து நகர்த்திக் கொண்டுபோனால் அது Transportation. அதையே கண்ணுக்குத் தெரியாமல் நகர்த்திக் கொண்டு போனால் அது Teleportation.

1980ல் ஒருசில விஞ்ஞானிகள், Photons போட்டான்களை (அணுவில் உள்ள ஒளிக் கற்றைகளை) இதேபோல் நகர்த்த முடியும் என்று கூறினார்கள். ஆனால் ஒருவரும் காதுகொடுத்துக் கேட்கவில்லை. 2004-ல் உள்ள விஞ்ஞானிகள் இதைச் செய்தபோது, விஞ்ஞானிகள் உலகமே ஆச்சரியத்தில் மூக்கில் விரலை வைத்தது.

இந்தக் கதை ஏன் தேவைப்படுகிறது என்றால்:-
இதைக் கொண்டு, நாம் 'சாகாவரம்' பெறலாம். நமது மூளையானது நியூரான்கள் என்னும் உணர்வு நரம்பால் ஆனது. இதைக் கொண்டே நாம் சிந்திக்கிறோம். அதில் பாயும் நியூரான்களை ஒரு கம்யூட்டர் சிப்பில் மாற்றி வைத்துக் கொண்டால், நமது ஆசைகள், கனவுகள், அனுபவங்கள் இவை எல்லாமே சேமித்து வைக்கப் பட்டுவிடும்.வேண்டும்போது உபயோகித்துக் கொள்ளலாம். இந்த பதிவுகளை உடலிலிருந்து வெளியே வைத்துக் கொள்கிறோம். அப்புறம் என்ன, உடல் இல்லாவிட்டாலும், நாம் நினைத்துக் கொண்டிருக்கும் வாழ்க்கையை வாழ்ந்து கொண்டுதானே இருக்கிறோம்? சந்தேகமென்ன? நமது மூளையிலிருந்து வெளிக் கம்யூட்டருக்கு இந்த டெலிபோர்டேஷன் முறையில் மாற்றிக் கொண்டு விட்டோம். அவ்வளவே!

சிந்தனையும், அனுபவமும் நம்மிடமே இருந்தால், உடல் இல்லாவிட்டால் என்ன? நாம் வாழ்ந்து கொண்டுதானே இருக்கிறோம். சித்தர்களைப் போல! அது சாகாவரம்தானே?

.

நினைவுகள்-30

அந்தச் சிலேட்டும், இந்தச்  சிலேட்டும்:

1950-க்கு முன்னர் பிறந்தவர்கள் மிகக் கொடுத்து வைத்தவர்கள் என்றே சொல்ல வேண்டும். இந்த நூற்றாண்டில் நிகழ்ந்த எல்லா விஞ்ஞான மாறுதல்களையும் கண்ணால் கண்டு, அதை அனுபவித்த பாக்கியத்தை பெற்றவர்கள் என்றே சொல்ல வேண்டும். இதற்குமுன்,எந்த நூற்றாண்டிலும் வாழ்ந்த, எந்தத் தலைமுறையும் இப்படிப் பட்ட அனுபவத்தைப் பெற்றிருக்க முடியாது.

இந்தத் தலைமுறை மனிதன், கோவணம் கட்டிய அனுபவமும், மண்ணில், சிலேட்டில் பல்பம் என்னும் சிலேட்டுக் குச்சியைக் கொண்டு எழுதிய அனுபவமும், காலில் செருப்பு இல்லாத நடை கொண்ட அனுபவமும் கொண்டவன். அவனே, இன்றைக்கு, ஜீன்ஸ் பேண்ட் சகிதம், லாப்-டாப் (laptop), டேப் (Tab), ஷூ போட்டு, விமானப்பயணம், இன்டர்னெட் தொடர்பு போன்ற எண்ணிறைந்த அனுபவங்களை கொண்டிருக்கிறான்.

பழைய பேப்பரில் கடிதம் (கடுதாசி) எழுதிப் பழகியவன், இன்று ஈமெயில் அனுப்பி ரசிக்கிறான். என்னே அவன் அனுபவம்!! 

வேறு எந்தத் தலைமுறைக்கும் இப்படிப்பட்ட ஒரு இனிய அனுபவம் கிடைத்திருக்காது. 1960-70க்கு பின் பிறந்தவர்கள் இதில் இன்றைய விஞ்ஞான முன்னேற்றதை மட்டுமே பார்த்து வளர்ந்து, உபயோகித்து வருபவர்கள். அவர்களுக்கு சிலேட்டு பலகை தெரியாது. ஆனால் இன்றைய Slate தெரியும். இந்த சிலேட்டும் அந்த சிலேட்டும் தெரிந்தவர்கள் கடவுளின் செல்லப் பிள்ளைகள் தானே!!!

.

நினைவுகள்-29

ஸ்டிரிங் தியரி (String Theory)
இந்த உலகம் எங்கிருந்து வந்தது, நாம் எங்கிருந்து வந்தோம் என்பது இன்னும் கேள்விகளாகவே உள்ளன.  இந்தக் கேள்விகளுக்கெல்லாம், இந்த ஸ்டிரிங் தியரி (ஸ்டிரிங் தத்துவம்) விடை கொடுக்கும்.

அணுக்கள் தான் அடிப்படை என்று ஒருகாலம் நினைத்தோம். பின்னர், அந்த அணுக்களிலுள்ள எலெக்ட்ரான், புரோட்டான், நியூட்ரான் என்ற மூன்று பொருள்கள்தான் அடிப்படை என்று நினைப்பை மாற்றிக் கொண்டோம்.

ஆனால், இப்போது இந்த ஸ்டிரிங் தத்துவம் வந்துவிட்டது. இதன்படி வேகமாகச்  சுற்றும் எலெக்ட்ரான்களில் லெப்டான்கள் (leptons) உள்ளன. புரோட்டான், எலெக்ட்ரான் இவைகள் 'குவார்க்' (quarks) என்ற மூலப் பொருள்களால் ஆனது என கண்டறிப்பட்டுள்ளது. இவை தலா ஆறு ஆறு குவார்க்குகளால் ஆனது. (இப்போதைக்கு இந்த குவார்க்குகள் தான் ஆரம்ப, அடிப்படை பொருள் என்று கருதிக் கொண்டிருக்கிறோம்.)

இந்த குவார்க்குகளின் கட்டுமானத்தில்தான் அணுவின் புரோட்டான்களும், எலெக்ட்ரான்களும் உள்ளன. இந்தக் குவார்க்குகள் ஆறுவிதமான 'செங்கல்களைக்' கொண்டு கட்டப்பட்டுள்ளது. இந்தக் குவார்க்குகளுக்கு ஆறுவித பெயர்களும் உண்டு. UP, Down, Charm, Strange, Bottom and Top. இதில் ஒவ்வொரு புரோட்டானும் இரண்டு மேல் குவார்க்குகளையும் ஒரு கீழ் குவார்க்குகளையும் கொண்டிருக்கும்.

மீதியுள்ள ஆறு குவார்க்குகளும் எலெக்ட்ரானுக்கு சம்மந்தப் பட்டவை. இதை லெப்டான் (leptons)என்கின்றனர். இதில் 2 குவார்க்குகளை "மீயான் (Muon)" என்பர், ஒரு குவார்க்கை "டாவான் (Tauon)" என்பர், மூன்று குவார்க்குகளை "நியூட்ரினோஸ் (Neutrinos)" என்பர்.

எலெக்ட்ரானுக்கு உருவமே இல்லை, வெறும் ஒளிக் கற்றைகளால் ஆனது. அது ஓடிக் கொண்டிருக்கும். எனவே நாம் மைக்ராஸ்கோப் வழியே பார்த்தால், ஒளிக்கோடாகவே தெரியும்.  இந்த ஓட்டம் மேல், கீழ், தெளிவு, தெளிவுகுறைவு, அழுத்தம், உச்சி, ஆழம் இவைகளாகவே ஓடும். எல்லாமே இப்படியான ஓட்டங்கள், ஒளி ஓட்டங்கள். இதைத்தான் ஸ்டிரிங் தியரி அல்லது கயிறு போன்ற ஓளி ஓட்டம் என்பர்.
அப்படிப் பார்த்தால், இந்த பிரபஞ்சம் முழுதுமே இப்படிப்பட்ட ஸ்டிரிங் ஒளிகளால் ஓடிக் கொண்டிருக்கும் பொருள்களால் ஆக்கப்பட்டுள்ளது, அல்லது கட்டப்பட்டுள்ளது.

இனிவரும் காலங்களில், இதற்கும் உள்ளே வேறு ஏதாவது மூலப் பொருள் இருக்கிறது என்ற உண்மையை இதைப் படைத்த கடவுள் காட்டிக் கொடுக்கக்கூடும். நமது அடுத்த தலைமுறை இதை அறியும்படி செய்வான் அந்த இறைவன்.

.

நினைவுகள்-28

 எரியும்கட்சி, எரியாக் கட்சி:
இந்த பிரபஞ்சம் எதனால் கட்டப்பட்டுள்ளது? மிக நுண்ணிய அணுக்களால் (Atoms) கட்டப்பட்டுள்ளது என்று ஒருகாலக் கட்டம் வரை நினைத்திருந்தனர். அணுக்கள்தான் அடிப்படை மூலப் பொருள் என்று நினைத்தனர். அதுக்கும்கீழே, ஒருபொருள் இல்லை என்றே நினைத்தனர்.
பின்னர், அணுவையும் உடைக்க முடியும் என்று விஞ்ஞானம் வளர்ந்தது. ஒவ்வொரு பொருளும் அணுக்களால் ஆனது, அந்த ஒவ்வொரு அணுவும் மூன்று மூலப் பொருள்களால் ஆனது என்றும் கண்டுகொண்டனர். அந்த மூன்று மூலப் பொருள்களே, 1. புரோட்டான் (Proton), 2. நியூட்ரான் (Neutron), 3. எலெக்ட்ரான் (Electron). இதில் புரோட்டானும், நியூட்ரானும் சேர்ந்த ஒரு கலவையைத்தான்  'நியூக்கிளியஸ்' (Nucleus)என்கிறோம்.
இதுக்குக்கீழே வேறு மூலப் பொருள் இல்லை என்றே நினைத்திருந்தோம். அதாவது கடவுள் படைத்தது இந்த மூன்று மூலப் பொருளைத்தான் என்று நினைத்திருந்தோம்.
இந்த மூன்று மூலப் பொருள்களில் உள்ள ஆச்சரியமிக்க ஒருவித விநோதம் என்னவென்றால், இந்த உலகத்திலுள்ள எல்லாப் பொருள்களுமே இந்த மூன்று மூலப் பொருள்களில்தான் அடங்கி உள்ளது என்றாலும், இதன் ஒவ்வொரு பொருளும் எந்த விகிதத்தில் ஒன்று சேர்ந்து உள்ளதோ, அப்போது அது வேறு பொருளைப் போலத் தெரிகிறது. அதாவது, ஒரு புரோட்டானும், ஒரு நியூட்டிரனும் இருந்தால் அது ஹைட்ரஜன் (Hydrogen);  இரண்டு புரோட்டான்களும், இரண்டு எலெக்ட்ரான்களும் சேர்ந்து இருந்தால் அது ஹீலியம் (Helium). 6 இருந்தால் கார்பன், 8 இருந்தால் ஆக்ஜிஸன் (Oxygen);  26இருந்தால் இரும்பு; 47 இருந்தால் வெள்ளி; 79 இருந்தால் தங்கம். இப்படியாக  ஒன்று முதல் 118 வரை பொருள்கள் உண்டு. புரோட்டானின்  எண்ணிக்கையின்  வரிசைப்படி கூடிக் கொண்டே 118 வரை செல்கிறது. அப்படிப் பார்த்தால், மூன்றின் மூலப் பொருள்கள் மாறி மாறி சேர்ந்து வேறு வேறு குணமுள்ள பொருளாக (தங்கமாகவும், தகரமாகவும், சதையாகவும், பேப்பராகவும், இரும்பாகவும், நீராகவும், இப்படியாக) பலவேறு பொருள்களாக ஆகி உள்ளது. இந்தக் கண்ணோட்டதில் பார்த்தால், இந்த பிரபஞ்சம் முழுவதும் இந்த அடிப்படையான மூன்று மூலப் பொருள்களால் மட்டுமே ஆக்கப் பட்டுள்ளது. இந்த மூன்றும் இல்லாமல் இந்தப் பிரபஞ்சம் இல்லை.
ஆரம்பகாலத்தில், இங்கு நம் மூதாதையர்கள் கூட, இந்தப் பிரபஞ்சம் எதிலிருந்து உருவானது என்று தத்துவ-விவாதங்கள் நடத்திவந்தனர். அவர்களில் ஒரு கட்சியை 'எரியும் கட்சி' என்றும் மற்ற கட்சியை 'எரியாக் கட்சி' என்றும் குறிப்பிடுவர். இவர்களின் வாதப்படி, இந்தப் பிரபஞ்சமானது ஒரே ஒரு மூலப் பொருளில் இருந்துதான் உருவானது என்பது ஒருசாரரின் தத்துவ விளக்கம். மற்றவர்களோ, 'ஒரு மூலப் பொருளில் இருந்து ஏதும் உருவாகவே முடியாது, இரண்டு மூலப் பொருள்கள் இருந்திருக்க வேண்டும், இரண்டும் சேர்ந்தால்தான் வேறு ஒரு பொருளை உருவாக்கவே முடியும் என்றும், ஒரே மூலப் பொருள் இன்னொன்றை உருவாக்கவே முடியாது' என்றும் வாதம்.
இந்த தத்துவ-வாதங்கள் எல்லாம் Theoretical வாதங்களே. எனவே வாதங்களாகவே தொடர்ந்தன.
இப்போது, இதையும் தாண்டி, மேற்சொன்ன மூன்று மூலப் பொருள்களும், அடிப்படை மூலப் பொருள்கள் இல்லை. அவைகள் எல்லாம் வேறு வேறு மூலப் பொருள்களால் ஆனவை என்று ஒரு பெரிய ஆச்சரியத்தை விஞ்ஞானிகள் உண்டாக்கி உள்ளனர். இதுவரை இருந்துவந்த தத்துவ-விளக்கங்கள் மாறிவிட்டன.

.

Tuesday, August 12, 2014

நினைவுகள்-27 ஆன்மாவின் அறிவு

இப்பிறவியின் ஆன்மாவின் அறிவு:

இங்கு இந்தப் பிறவியில் நாம் தேடிக் கொள்ளும் அறிவு எல்லாம் என்ன ஆகும்? கூடவே அடுத்த பிறவிக்கு வருமா? இல்லை, இந்தப் பிறவியிலிலேயே இந்த உடம்புடனே இங்கேயே அழிந்து விடுமா?
இங்கேயே அழிந்துவிடும் என்றால், அதற்கு எதற்காக இவ்வளவு அறிவை தேடித் தேடி தேடிக் கொள்ள வேண்டும்.

இங்கேயே அழிந்துவிடுவதில்லை என்றே நினைக்கத் தோன்றுகிறது. சிறுவயதிலேயே மிகப் பெரிய சாதனை செய்தவர்கள் பலர் உண்டு. அவர்கள் அனைவருமே ஆன்மா வழியே அறிவை கொண்டு வந்தவர்களாகவே இருப்பார்கள் போலத் தெரிகிறது. அவர்கள், நிச்சயம் இங்கு தேடிய அறிவாக இருக்க முடியாது.

ஆன்மா, உருவமுள்ள பொருள் இல்லையாம். உடம்பு இல்லை, மனம் இல்லை. பின்? உயிர் உள்ள பொருள்களில், உயிர் உடலுடன் இருக்கும் போது, அந்த உடலும், மனமும் அனுபவிக்கும் அனுபவத்தைச் சேர்த்து வைத்துக் கொள்ளும் இந்த ஆன்மா. எனவே உடலும், உயிரும் இல்லாதபோது, அது பயணத்தை தொடங்கி விடுகிறது. அடுத்த உடல், உயிர் தேடுகிறது. இதுவே 'ஜீவாத்மா.' இது வந்த வேளையை முடிக்காமல் 'பரமாத்மாவுடன் சேராது போல!'

பிறக்கும்போது, கருவில் முதலில் உடல் உருவாகிறதா, இல்லை உயிர் உருவாகிறதா? தெரியவில்லை. பின், எப்போது இந்த ஆன்மா உயிருள்ள உடம்பில் சேர்கிறது? தெரியவில்லை.

ஆன்மா வரும்போது அறிவுடன் தான் வருகிறது.
ஜெர்மன் விஞ்ஞானி சொல்கிறார். (Dr. Kant). ஒரு பசுமாடு, கன்றுக் குட்டியை ஈனும்போது, அந்தக் கன்றுக் குட்டி வெளியே வந்தவுடன், சிறிதுநேரம் தன் கால்களில் நிற்க முடியாமல் தள்ளாடி, பின் சமாளித்து நின்று கொள்கிறது. இன்னும் சிறிது நேரத்தில், ஆச்சரியப்படும் வகையில், அந்த கன்றுக் குட்டி, தன் தாயின் கால்களுக்கு நடுவில் இருக்கும் மடுவை தன் முகத்தால் முட்டி, வாயால் பாலைக் குடிக்கிறது. இது இயல்பு. இந்த இயல்பை, அந்தக் கன்றுக் குட்டிக்கு யார் கற்றுக் கொடுத்தது? தாய் கற்றுக் கொடுக்கவில்லை. கன்றுக் குட்டிக்கு, தன் தாயின் மடுவில் பால் குடிக்க வேண்டும் என்றும், அந்தத் தாயின் மடு, அதன் கால்களுக்கு நடுவில்தான் உள்ளது என்றும் அந்தக் கன்றுக் குட்டிக்கு யார் சொல்லிக் கொடுத்து அனுப்பி வைத்தார்கள்?

அதன் ஆன்மாவில் ஏற்கனவே பதியப்பட்டுள்ள நினைவுகளின் அடிப்படையில் இது நிகழ்கிறதோ? அப்படியென்றால், ஆன்மாவில் ஏற்கனவே நிகழ்வுகள் பதியப் பட்டே அவை இங்கு வருகின்றன என்று நினைக்கலாமா?

மகாபாரதத்தில், அம்பையை, பீஷ்மர் மணக்க மறுத்த கோபத்தில், அவரை கொல்வேன் என சபதம் செய்து, இப்பிறவியில் (ஒரு ஆணோ, பெண்ணோ) அவரைக் கொல்ல முடியாதாம் என்ற நிலையில் தீக்குளித்த அம்பை, மறுபிறப்பில் அதே நினைவில் ஒரு ஆணுமற்ற, பெண்ணுமற்ற நிலையில் பிறந்து பீஷ்மரைக் கொன்றாள். அவளின் ஆன்மா, முன்பிறப்பின் நிகழ்வை மறக்காமல் வைத்திருந்தது. அதற்கான வழியைத் தேடித்தந்தது.


இப்பிறவியில் நாம் அடையும் எல்லா அனுபவங்களும் நமக்குத் தேவையே! இவைகள் அடுத்த பிறவியின் அடித்தூண்கள்!
.

Sunday, August 10, 2014

நதிகள் யாருக்குச் சொந்தம்?

நதிகள் அரசுக்கு சொந்தமா?
ஓடும் தண்ணீர் யாருக்கும் சொந்தமில்லை; யார் வேண்டுமானாலும் அள்ளிக் கொள்ளலாம்; உபயோகிக்கலாம்;  எனவே நதிகள் யாருக்கும் சொந்தமில்லை, அரசுக்கும் சொந்தமில்லை,என்பது வெகுகாலமாக இருந்துவந்த பொதுஜன அபிப்பிராயம். 

ஒருவேளை, ஒரு நதியானது ஆரம்பித்து, கடலில் கடக்கும்வரை அரசாங்க நிலத்திலேயே ஓடினால், அது அரசாங்கத்துக்குச் சொந்தம். ஓடும் நதியின் இருகரைகளைகளில் உள்ள நிலங்களும் அரசுக்குச் சொந்தமாக இருந்தால், நதியும் அரசுக்குச் சொந்தம்; அல்லது அந்த சொந்த நதியில் படகு போக்குவரத்து இருந்தாலும், தொடர் வெள்ள ம் ஏற்பட்டாலும் அது அரசுக்குச் சொந்தம்.

கரையோர மக்கள் இந்த நதியை உபயோகிக்க உரிமையுண்டு. நதியின் தண்ணீர் வரை நிலத்தை வைத்திருப்பவர் அதை உபயோகிக்கும் உரிமை உள்ளவர். இதை வரைமுறைப் படுத்தும் வகையில் பிரிட்டீஸ் அரசு சட்டம் கொண்டு வந்தது.

பிரைவி கவுன்சில் வழக்கு in PC Appeal No.34 of 1931.
கோதவரி கலெக்டர் vs. சன்னிதிராஜா சுப்பராயுடு மற்றவர்கள்.
கோதாவரி நதியின்  ஒருகிளை ஆறு சிலப்ப கால்வாய் (Chilapa Kalva). இதை ஒட்டி வாதிக்கு நிலங்கள் உள்ளன. நதியை ஒட்டி நிலம் இருந்தால் அதை Riparian rights ரிபேரின் உரிமை என்பர். நீர் எடுக்கும் உரிமை இயற்கையாகவே உண்டு. ஆனாலும் கோதவரி மாவட்ட கலெக்டர் வாதியின் நிலங்களுக்கு தண்ணீர் வரி (Water Cess)போடுகிறார். (As per Madras Irrigation Cess Act 7 of 1865).
இந்த சட்டம் ஏன் வந்தது என்றால், "பிரட்டீஸ் அரசு, நீர்பாசன வசதிகளை அதிகச் செலவில் செய்து கொடுத்துள்ளதால், அதை சரிக்கட்டும் விதமாக இந்த புதுவித வரியைப் போட்டதாம்."

Whenever water is supplied or used for purposes of irrigation from any river, stream, channel, tank, or work belonging to or constructed by Government, it shall be lawful for the Govt before the end of the Revenue year succeeding that in which the irrigation takes place to levy at pleasure on the land so irrigated a separate cess for such water, and the Govt may prescribe the rules …..
ஜமின்தார், இனாம்தார் நிலங்களுக்கு இந்த வரிவிதிப்பிலிருந்து சலுகை --
Provided -- that where a zamindar or inamdar or any other description of land-holder not holding under ryotwari settlement is by virtue of engagements with the Govt entitled to irrigation free of separate charge, no cess under this Act……..

இந்த வழக்கில் சுப்புராயுடு போன்றவர்கள், இந்த நதியை நாங்கள் மூதாதையர் காலத்திலிருந்து அனுபவித்து வருகிறோம் என்று வழக்காடுகிறார்கள். பிரிட்டீஸ் அரசோ, நதியில் போக்குவரத்து இருந்தாலும், கரை புரண்ட வெள்ளம் வந்தாலும் அந்த நதி அரசுக்குச்  சொந்தம் என்றும், அதனால் நீர் எடுக்கும் உரிமை கொண்டாட முடியாது என சொல்கிறது.
ஐகோர்ட், பிரைவி கவுன்சில் வரை செல்கிறார்கள்.
"The result is that in this case the river only belongs to the govt if the river is both tidal and navigable."
அப்படியென்றால், கரையோர மக்கள் நிலை? அவர்கள் domestic உபயோகம் மட்டும் செய்து கொள்ளலாம்.

.

கரந்தை ஜெயக்குமார்: சோழ மண்ணில்

கரந்தை ஜெயக்குமார்: சோழ மண்ணில்: நண்பர்களே, மனம் மகிழ்ச்சியால் நிரம்பி வழிந்து கொண்டிருக்கிறது. எனது அழைப்பினை ஏற்று, கடும் வெயிலையும் பொருட்படுத்தாமல், எங்களுடன் இண...

ஆனா.ரூனா.கானா.செட்டியார்

ஆனா. ரூனா.கானா. செட்டியார் (Ana. Roona. Laina. Chetty)

லஷ்மணன் செட்டி என்பவர் மதராஸ் மாகாண த்தில் உள்ள வட்டித் தொழில் செய்யும் செட்டியார். இவருக்கு மிகப் பெரிய வட்டித் தொழில் பர்மா நாட்டில் பல இடங்களில் நடக்கிறது. ஏற்கனவே இவருடன் மேலும் இரண்டு பார்ட்னர்கள் இருந்தனர். அந்த வியாபாரத்துக்குப் பெயர் "ஆனா. ரூனா. லேனா. செட்டி" என்று பெயர், (A.R.L. Chetty). அதில் ஒருவர் காலமாகி விட்டார். மற்றவர் வியாபாரத்திலிருந்து விலகிக் கொண்டார். லஷ்மணன் செட்டி மட்டுமே சொந்த தொழிலாக இதைச் செய்கிறார். வியாபாரங்களைப் பார்க்க ஆளில்லை. இவர் மதராஸில் தங்கிவிடுவதால், பர்மாவில் ரங்கூனில் உள்ள வட்டிக் கடைகளை நடத்தி வருவதற்காக, ராமசாமி என்பவருக்கு பவர் பத்திரம் 24.10.1904 தேதியில் எழுதிக் கொடுக்கிறார். ஏஜெண்டும், "ஆனா.ரூனா.லேனா. ராமசாமி செட்டி" என்று வியாபரத்தை மேனேஜ்மெண்ட் செய்து வருகிறார். அவராலும் கவனிக்க முடியாமல், அவருக்கு ஒரு துணையாக சொக்கலிங்கம் செட்டி என்பவருக்கு பவர் கொடுக்கிறார். அவர்தான், பர்மாவில் உள்ள எல்லா இடங்களிலும் இவர்களின் வட்டித் தொழிலை கவனித்து வருகிறார்.

இதற்கிடையில், ஹாசன் இப்றாகீம் என்பவர், இந்த சொக்கலிங்கம் செட்டியாருக்கு அறிமுகம் ஆகிறார்.  இப்றாகீமுக்கு பணம் தேவைப்படுகிறது. பேங்க் ஆப் பெங்கால் (Bank of Bengal) என்ற பாங்கில் வட்டிக் கடையின் ஜாமீனில் சொக்கலிங்கம் கையெழுத்துச் செய்து ரூ.50,000/- பாங்க் கடன் வாங்கிக் கொடுக்கிறார். பாங்கில், ஆனா.ரூனா.லேனா வட்டிக் கடைதான் ஜாமின் என்று சொக்கலிங்கம் பவர் ஏஜெண்டாக கையெழுத்தை செய்கிறார். இப்றாகீம், பாங்கில் மொத்த பணத்தையும் வாங்கிக் கொண்டு, கம்பி நீட்டிவிட்டார். தலைமறைவு. இப்றாகிம் சொத்துக்களை கடனாளி சொத்துக்கள் என அரசாங்கம் Official Assignee அதிகாரி மூலம் கைப்பற்றி வைத்துள்ளது.

பாங்கும் ஜாமீன் கொடுத்த ஆனா.ரூனா.லேனா. சொக்கலிங்கம் வட்டிக் கடையை பணம் கேட்டு வழக்குப் போடுகிறது. ஆனால், சொக்கலிங்கத்துக்கு, இந்த வட்டிக்கடை பேங்க்கில் கடன்வாங்கும் அதிகாரத்தை எப்போதும் கொடுக்கவில்லை எனவே அவர், பேங்க்குக்கு எழுதிக் கொடுத்த ஜாமீன் பத்திரம் செல்லாது என வாதாடுகிறது. கீழ்கோர்ட், பேங்குக்கு சாதகமாகத் தீர்ப்பை வழங்குகிறது.

அப்பீல் கோர்ட்டான, Chief Court of Lower Burmah, பேங்க்குக்கு எதிராக தீர்ப்புக் கூறுகிறது. அப்பீல் கோர்ட்டில் செட்டியாருக்கு சாதகமாக தீர்ப்பு, அதாவது 1-வது பவர் ஏஜெண்ட், வேறு ஒரு ஏஜெண்டை நியமிக்க அதிகாரம் இல்லை என முடிவு.

ஆனால் பிரைவி கவுன்சிலோ தீர்ப்பை மாற்றி விட்டது.
சொக்கலிங்கம் தான் வியாபாரத்தை பார்த்துக் கொண்டு வந்துள்ளார். இப்ராஹீமுக்கு வாங்கிக் கொடுத்த பணத்திலும் கமிஷன் வாங்கிக் கொண்டார். அந்தக் கமிஷன் கணக்குப் புத்தகத்தில் உள்ளது. இவரே வெகுகாலமாக பணம் கொடுக்கல் வாங்கல் செய்திருக்கிறார். செட்டியார்களுக்கும், செட்டியார் அல்லாதவர்களுக்கும் கடன் கொடுத்து வசூலும் செய்திருக்கிறார். அப்படி இருக்கும்போது, இந்த ஒரு விஷயம் மட்டிலும் அவருக்கு அதிகாரம் இல்லை என்று சொல்லிவிட முடியாது என்று பேங்க்குக்கு சாதகமாக தீர்ப்பை வழங்கி விட்டது.

Ref: The Bank of Bengal vs Ramanathan Chetty and others.
Privy Council Appeal No.42 of 1915
Judgment on 16.12.1915.
வழக்குகள் நடந்து கொண்டிருக்கும்போதே லஷ்மணன் செட்டியார் இறந்துவிடுகிறார்.

.

பெற்றமனம் பித்துத்தான்!

Privy Council Appeal 23 of 1914
Mrs. Anne Besant -- Appellant/defendant
Vs.
G.Narayaniah and his two children J.Krishnamurthy and J.Nityananda-- Respondents/ Plaintiff.
Judgment delivered by PC on 25.5.1914.
அன்னி பெசன்ட் அம்மையார் வளர்த்த ஜே.கிருஷ்ணமூர்த்தி - ஜே.நித்யானந்தா இவர்களை பெற்ற தகப்பன்  திரும்பக் கேட்ட சுவாரஸ்யமான பாச வழக்கு.
***
நாரயணையாவுக்கு இரண்டு மகன்கள்; 1. ஜே.கிருஷ்ணமூர்த்தி; 2.ஜே.நித்தியானந்தா. நாராயணையா மதராஸில் வசிக்கும் ஒரு இந்து.  வசதியில்லாத பிராமணர். வருட வருமானமோ ரூ.160/-க்குள். இவர் தியோசபிகல் சொசைட்டியில் (Theosophical Society) பல வருடங்களாக இருந்துவரும் ஒரு உறுப்பினர். இவருக்கு 2 மகன்கள். 1. ஜே.கிருஷ்ணமூர்த்தி (11.5.1895ல் பிறந்தவர்); 2.ஜே.நித்யானந்தா (30.5.1898ல் பிறந்தவர்).
எனவே அன்னிபெசண்ட் அம்மையார், இந்தக் குழந்தைகள்மீது இரக்கப்பட்டு, இவர்கள் இருவரையும் இங்கிலாந்தில் உள்ள ஆக்ஸ்போர்டு பல்கலைகழகத்தில் (The University of Oxford) படிக்கும் செலவை ஏற்றுக் கொள்கிறார்.
(அப்போது உள்ள வழக்கப்படி - ஒரு பிராமணர் வெளிநாட்டிற்கு சென்று விட்டால், அவரைத் தன் ஜாதியை விட்டு ஒதுக்கி வைத்துவிடுவர்.)
இருந்தாலும், இந்த உதவியை ஏற்று, தந்தை ஒரு கடிதத்தை அன்னி பெசண்ட் அம்மையாருக்கு எழுதுகிறார். அந்த லெட்டர் 6.3.1910ல் எழுதப் பட்டது. இதில் அம்மையாராகிய நீங்களே இந்தக் குழந்தைகளுக்கு கார்டியனாக இருந்து பாதுகாத்து வரவும் சம்மதிக்கிறேன் என்று எழுதப் பட்டுள்ளது.
இந்துமத வழக்கம்:
இந்துமதவழக்கப்படி, தகப்பன் உயிருடன் இருக்கும் வரை அவரே அவரின் மைனர் குழந்தைகளுக்கு இயற்கை கார்டியன்.  அவர் உயிருடன் இருக்கும்வரை, அவர் இடத்தில், வேறு ஒருவரை கார்டியனாக நியமிக்க முடியாது.
ஆனாலும் இங்கு, குழந்தைகளின் படிப்பைக் கருதி, வேறு ஒருவரிடம் தன் இரண்டு குழந்தைகளையும் ஒப்படைத்து அவரை கார்டியனாக அங்கீகரித்துள்ளார். கல்வி முடிந்தவுடன் அதை ரத்து செய்து இவரே கார்டியனாக மாறிக் கொள்ள முடியும்.
ஆனால், இந்தியாவிலுள்ள பிரிட்டீஸ் முறைச் சட்டம், "மைனர்களுக்கு யார் யார் கார்டியனாக இருக்க தகுதி உடையவர் என்பதை கோர்ட் மூலம் அரசாங்கம்தான் முடிவு செய்யும்" என உள்ளது. (The Court exercising the jurisdiction of the Crown over infants, to create associations or give rise to expectations on the part of the infants which it would be undesirable in their interests to disturb or disappoint, such Court will interfere to prevent its revocation. Lyons vs. Blenkin, Jac.245.)
ஒப்புக்கொண்டபடி, அம்மையாருடன் இரண்டு சிறுவர்களும் பிப்ரவரி 1912ல் இந்தியாவை விட்டு கிளம்பிச் சென்றனர். சில காலம் சிசிலியிலும் (Sicily), சிலகாலம் இத்தாலியிலும், கடைசியாக இங்கிலாந்திலும் இருந்தனர். பின்னர், அம்மையார், இந்த இரண்டு சிறுவர்களையும் அங்குள்ள திருமதி. ஜாக்கப் பிரைட் (Mrs. Jacob Bright) என்பவரின் பாதுகாப்பில் விட்டுவிட்டு, செலவுக்கு பணமும் கொடுத்து ஆக்ஸ்போர்டு பல்கலைகழகத்தில் சேர்க்கும்படி சொல்லிவிட்டு வந்தார்.

ஆனால், விதியோ, பெற்ற பாசம் என்ற பெயரில் விளையாடியது.
சிறுவர்களின் தந்தை, மறுபடியும் ஒரு கடிதத்தை 11.7.1912ல் அம்மையாருக்கு எழுதி, அதில், "நான் ஏற்கனவே உங்களுக்கு முன் கடிதமான மார்ச் 1910ல் கொடுத்திருந்த கார்டியன் அதிகாரத்தை ரத்து செய்கிறேன்; எனக்கு என் குழந்தைகள் வேண்டும்" என்று கேட்கிறார். அம்மையாரோ, படிப்பு வீணாகி விடும் என மறுக்கிறார். தந்தையோ, செங்கல்பட்டு மாவட்ட கோர்ட்டில், "மகன்கள் என் பொறுப்பில் வேண்டும் (for the custody of his children)" என வழக்குப் போடுகிறார். தகப்பனிடம் குழந்தைகளை கொடுத்துவிடும்படி செங்கல்பட்டு மாவட்ட கோர்ட் தீர்ப்பு.

மதராஸ் ஐகோர்ட்டில் அப்பீல்:
செங்கல்பட்டு கோர்ட் தவறுதலான முடிவை எடுத்துள்ளதாகவும், "குழந்தைகளுக்கு கார்டியனை நியமித்துக் கொடுத்துவிட்ட பின்னர், தந்தைக்கு என்ன உரிமை இருக்கிறது அதை திரும்பப் பெற", என்ற கேள்வியை வைக்கிறது. மற்றும் The Guardians and Wards Act 1890ன்படி செங்கல்பட்டு கோர்ட் இதில் தலையிட உரிமையில்லை என்றும் சொல்கின்றனர். ஏன் என்றால், அந்தச் சட்டப்படி, செங்கல்பட்டு ஏரியாவுக்குள் இருக்கும் மைனர் குழந்தைக்கு மட்டுமே அந்த கோர்ட் உத்திரவுகள் பிறப்பிக்க முடியும். இங்கிலாந்தில் வாழும் குழந்தைகளுக்கு எப்படி செங்கல்பட்டு கோர்ட் உத்தரவிட அதிகாரம் (Jurisdiction) உண்டு என்றும் கேள்வி எழுப்பினர்.
ஆனால், பெற்ற தகப்பனுக்கு அந்த உரிமை எப்போதும் உள்ளது என வாதாடினார்.  வழக்கில் வேறு பல சட்ட சிக்கல்களும் இருந்ததால், Habeas Corpus மனுமூலம் "குழந்தைகளை இங்கிலாந்திலிருந்து இந்தியா கொண்டு வந்து, இங்குள்ள கோர்ட் உத்தரவுப்படி தந்தையிடம் ஒப்படைக்கவும்" என் ஐகோர்ட் கூறியது.
மறுபடியும் ஒரு குழப்பம்:
ஒருவேளை, அந்தக் குழந்தைகள் வர மறுத்தால்? ஒருவேளை அவர்கள் இங்கிலாந்து படிப்பை உதறிவிட்டு வர தயாராய் இருந்தால்?
இங்கு குழந்தைகளின் நன்மையை மட்டுமே கோர்ட் கருத்தில் கொள்ள வேண்டும் (இந்த வயதில் அவர்களுக்கு என்ன வேண்டும் என்ற நன்மையை) என்றும், குழந்தைகளின் தனிப்பட்ட விருப்பத்தையும் தெரிந்து கொள்ள வேண்டும் என்றும், ஒரு முடிவுக்கு வருகின்றனர்.
  1. மூத்த பையன் இன்னும் சில மாதங்களில் மேஜர் வயதை அடைந்துவிடுவான். (ஜே.கிருஷ்ணமூர்த்தி).
  1. As per sec.3 of The Indian Majority Act 1875 and Sec.52 of the Guardians and Wards Act 1890 - மைனருக்கு கோர்ட் கார்டியன் நியமித்தால், அந்த மைனர் 18 வயது முடிந்தவுடன் மேஜர் ஆகிவிட முடியாது. அவனின் 21வயதுவரை காத்திருக்க வேண்டும். எனவே மாவட்ட கோர்ட் இதில் தலையிடாமல், ஐகோர்ட்டு வழக்கை அனுப்பி அங்கு உள்ள சிறப்பு அதிகாரத்தின் மூலம் பிரச்சனையை தீர்த்துக் கொள்ளலாம்.
  2. பிரைவி கவுன்சில் போர்டில் உள்ள லார்டுகள் (நீதிபதிகள்) அந்த மைனர் குழந்தைகளை நேரில் அழைத்து பேசியதில், 'அந்தச் சிறுவர்கள் படிப்பை பாதியில்விட்டு இந்தியா திரும்ப விரும்பவில்லை' என்று தெரிகிறது.
  3. இங்கிலாந்தில் வசிக்கும் குழந்தைகளை, இங்குள்ள அரசர் கோர்ட் (His Majesty's High Court of Justice in England) உத்தரவு இல்லாமல் இந்தியாவுக்கு அழைத்துச் சொல்ல முடியாது. அதற்கு வேண்டுமானால் தந்தை மனுச் செய்யலாம்.  
இதுதான் பிரைவி கவுன்சில் தீர்ப்பு.

இந்த தீர்ப்புக்குப்பின், தந்தை என்ன செய்தார் என தெரியவில்லை. ஏழ்மையிலும் பாசம் பெரிதுதான் போல!!!

.

வடகலை, தென்கலை வழக்கு

வடகலை, தென்கலை -வழக்கு
வைஷ்ணவ கோயில்களில் யாருடைய மந்திரத்தை சொல்வது என்பதில் பலகாலப் பிரச்சனை இருந்து வந்தது. லண்டனில் உள்ள பிரைவி கவுன்சில் கோர்ட் தீர்வு கொடுக்கிறது.
பிரைவி கவுன்சில் வழக்கு PC Appeal No.33 of 1943
His Holiness பெரிய கோயில் கேள்வியப்பன் திருவேங்கட ராமானுஜ பெரிய ஜீயங்காருலு வாரு -- அப்பீல் செய்தவர்.
-எதிர் பார்ட்டி-
பிரதிவாதி பயங்கரம் வெங்கடசாருலு மற்றும் பலர். -- எதிர்பார்ட்டிகள்.

இந்து மதக் கோட்பாட்டின்படி, இறைவன்  மூன்று நிலைகளில் இருக்கிறான்.
பிரம்மா, உருவாக்குபவர்;
விஷ்ணு, காப்பவர்;
சிவன், அழித்துச் சரிசெய்பவர்.
The Deity manifests Himself in three aspects as Brahma, the Creator, Vishnu, the Preserver, and Siva, the Destroyer and Renovator.
இதில் விஷ்ணுவை வழிபாடு செய்துவருபர்கள் வைஷ்ணவர்கள். 

தென்னிந்தியாவில் விஷ்ணுவுக்கு பலகோயில்கள் உள்ளன.  2500 வருடங்களுக்கு முன்பிருந்தே சமஸ்கிருத (Sanskrit) வேதங்களும், மந்திரங்களும் விஷ்ணு வழிபாட்டுக்காக இருந்து வருகின்றன. இதுபோலவே தென்னிந்தியாவில் 4000 பிரபந்தங்கள் தமிழில் உள்ளன. இவைகளை விஷ்ணு பக்தர்களான ஆழ்வார்கள் பாடிச்  சென்றுள்ளனர்.

விஷ்ணு வழிபாட்டு முறைகளை வகுத்துச் சென்ற ஆச்சாரியர்களில் முக்கியமானவர்கள்:
கி.பி. 1017 - 1137ல் வாழ்ந்த ராமானுஜர்.
கிபி 1268-1369ல் வாழ்ந்த  வேதாந்த தேசிகர்.
கிபி 1370-1443ல் வாழ்ந்த மணவாள மகாமுனி.
ஆச்சாரியர்கள் 'ஸ்தோத்திர பதங்கள்' என்றும், ஆள்வார்கள்  'பிரபந்தங்கள்' என்றும் இறைவனை போற்றிப்பாடும் பாடல்கள் இயற்றி, அவைகளை வழிபாட்டு முறையாக உபயோகித்து வந்துள்ளனர்.

14-வது நூற்றாண்டில் இந்த வைஷ்ணவர்களுக்குள் இந்த வழிபாட்டு முறையில் கருத்து வேறுபாடு ஏற்பட்டது.
ஒரு கூட்டம், வேதாந்த தேசிகரின் சமஸ்கிருத வேதத்தை பின்பற்றி வழிபாடு செய்தது. இவர்களை 'வடகலை' என்று அழைத்தனர். மறுகூட்டம், ஆள்வார்களின் பிரபந்தத்தை வழிபாட்டு முறையாக கொண்டது. இவர்கள் மணவாள மாகமுனியை பின்பற்றியவர்கள். எனவே இவர்கள் 'தென்கலை'.

மதராஸ் பிரசிடென்சியில் உள்ள சித்தூர் மாவட்டத்தில் உள்ள மொத்தம் 18 விஷ்ணு கோயில்களில், 5 கோயில்கள் திருமலை சேர்ந்தது, 13  கோயில்கள்  திருப்பதி சேர்ந்தது. இவைகள் அனைத்தும் 'அடயபாகம்' என்ற தலைமையின் கீழ் இயங்கியது. அதன் தலைவர் 'பெரிய ஜீயங்கர்.' இவர் தென்கலை. இவருக்கு துணையாக இருப்பவர்கள் 4 ஏகாங்கிகள், மற்றும் சில சின்ன சின்ன ஆச்சாரிய புருஷர்கள். இவர்களை எல்லோரையும் சேர்த்தே 'அடயபாக கோஷ்டி' என்பர்.
வழிபாட்டு முறையில் குழப்பம்:
தென்கலை முறை:
பெரிய ஜீயங்கர் இந்த பூஜையை ஆரம்பித்து வைப்பார். அப்போது 'சாதித் அருளா' என்று சொல்லி ஆரம்பிப்பார். இதை தொடர்ந்து 5 பாடல்கள் (மந்திரங்கள்) பாடுவர். இது தென்கலை முறைப்படி 'ஸ்ரீ சைலேசா தயாபத்ரம்' என்று தெடங்கும். அதில் தென்கலை குருவான மணவாள மகாமுனியின் பாடல்கள் இருக்கும்.
வடகலை முறை:
 இதில் வழிபாட்டின் முதல் பாடல், 'ராமானுஜ தயாபத்ரம்' என்று தொடங்கும். இதில் வடகலை குருவான வேதாந்த தேசிகரின் பாடல்கள் இருக்கும்.
மீதி உள்ள 4 பாடல்கள் இறைவனை வணங்கும் பொதுவான பாடல்களே. வழிபாட்டு முடிவில், இறைவனுக்கு 'வாழி' பாடுவர். இதற்கு 'வாழி திருநாமம்' என்று பெயர். இது மொத்தம் 9 பாடல்கள். இதில் முதல் நான்கு பாடல்கள் பொது. மீதி 5 பாடல்களில்தான் பிரச்சனையே.
இந்த கடைசி 4 வாழி பாடல்கள் பாடும்போது தென்கலை பாடல்களை பாடுவர். வடகலை ஆச்சாரியர்கள் அமைதியாக இருக்க வேண்டும்.  ஆனால் அப்போது வடகலை ஆச்சாரியர்களும் சேர்ந்து அவர்களின் வாழி பாடல்களை பாடுவர். இது வேண்டுமென்றே பாடப்படுவதால், ஒரு குழப்பமாக இருந்துவிடும்.
வழக்கு:
வடகலைக்கு இப்படியொரு பழக்கம் இல்லை என்றும், இதை அவர்கள் கோயிலில் பூஜையில் பாடக் கூடாது என்றும், மற்ற நேரங்களில் பாடிக் கொள்ளலாம் என்றும், எதிர்த்து வட ஆற்காடு சப்-கோர்ட்டில் வழக்கு. பழைய பழக்க-வழக்கங்களை கோர்ட் ஆராய்ந்து தென்கலை முறையே சரி என்றது. அதை எதிர்த்து மதராஸ் பிரசிடென்சி ஐகோர்ட்டுக்கு அப்பீல் வழக்கு. அங்கும்  "திருமலையிலும், திருப்பதி கோயில்களிலும் வடகலை ராமானுஜ தயாபத்ரத்தை'  அனுஷ்டிப்பதில்லை. காலங்காலமாக திருச்சானூர், திருமலை, திருப்பதி கோயில்களில் இந்த தென்கலை முறையே பின்பற்றப் பட்டு வந்திருக்கிறது என்று மதராஸ் ஐகோர்ட் கூறிவிட்டது.
லண்டன் பிரைவி கவுன்சில் அப்பீல்:
இதற்கு முன் 1887-1893ல் திருச்சானூர் கோயிலில் இதுபோல் ஒரு வழக்கு வந்தது. அதில் திருச்சானூர் கோயிலில் முழுக்க முழுக்க தென்கலை மந்திரமே சொல்லப்பட்டு வருகிறது என்றும், திருச்சானூர் பழக்கமே, திருமலையிலும் திருப்பதியிலும் பின்பற்றப் படுகிறது என்றும் தீர்ப்பு உள்ளது.
மற்றொரு வழக்கில் (Krishnasami v. Krishnama, 1882 ILR 5 Mad 313) காஞ்சிபுரத்திலுள்ள பெரிய கோயிலில் தென்கலை முறையே உண்டு. வடகலை முறையை தடைசெய்ய இந்த வழக்கு வந்தது. அதில் முழுக்க முழுக்க தென்கலை முறையே சரி என்று தீர்ப்பு.
மற்றொரு வழக்கில் (Srinivasa Thathachariar v. Srinivasa Aiyangar, 1899, 9 Mad LJ 355)  இதில் திருநெல்வேலி கோயிலில் தென்கலை மந்திரமே சொல்லவேண்டும் என்றும் வடகலை மந்திரத்தை சொல்ல உரிமையில்லை என்றும்,  வாழி மந்திரம் சொல்லும் போது, வடகலை ஆச்சாரியர்கள் அதை அவர்கள் வேண்டுமென்றே சேர்ந்து உச்சரிக்கக் கூடாது என்றும் ஐகோர்ட் தீர்ப்பு உள்ளது.
இவ்வாறு பல தீர்ப்புகளை ஆராய்ந்து, பிரைவி கவுன்சில், முடிவாக:
  1. தென்கலை முறையே சரி; 'சாதித் அருளா' சொன்னவுடன் தென்கலை மந்திரங்களே தொடங்க வேண்டும்.
  1. வடகலை மந்திரங்களை  திருப்பதியில் 'தர்மபுரி, கோடிகன்னிகாதானம், தோமாலை' (Dharmapuris, Kotikannikadanams and Thomalais) இவைகளில் தவிர வேறு எங்கும் சொல்லக் கூடாது.
  1. வாழி திருநாமம் எப்போது சொன்னாலும், தென்கலை மந்திரத்துடனேயே சொல்லவேண்டும்.
  1. திருமலை சேர்ந்த திருப்பதி, திருச்சானூர் வாழும் தென்கலை பண்டிதர்கள் எப்போதும் தென்கலை மந்திரம் சொல்ல உரிமையுண்டு. அதில் வடகலை மந்திரம் சொல்லி குழப்பக் கூடாது.
  2. பெரிய ஜீயங்கர் தலைமையில் இவை நடக்க வேண்டும்.
*****
தன் மகன்/மகள் என்பதில் தாய்க்கும் தந்தைக்கும் பிரச்சனையேயில்லை; ஆனால், '"அவன்/அவள், என் சொல்படிதான் கேட்பான்/கேட்பாள்" என்று நினைப்பதில்தான் பிரச்சனையே.

"இந்த மகா விஷ்ணு, யார் பிள்ளையோ, தெரியவில்லை!"

.